Pages

Monday, May 4, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 18


ஒரு முறை மீனாட்சி சாந்தம்மாளிடம் தன் குறைகளை சொல்லி அழுதார்.
அதற்கு சாந்தம்மாள் நீ இப்படி இருந்தா எப்படி? சுத்தமா முகம் கழுவி, பொட்டு வெச்சு, தலையை சீவி, பூ வெச்சுக்கோ. முருகனார் தனியா இருக்கும்போது அவர் காலை பிடிச்சுண்டு உன் கஷ்டத்தை சொல்லி அழு! அவர் மனமிரங்குவார்.” என்றார்.
அப்பாவி மீனாட்சியும் அதே போல செய்யத் தயாரானாள். முருகனார் கிரி ப்ரதக்‌ஷிணம் செய்ய போயிருப்பதை அறிந்து கோவிலில் கம்பத்திளையனார் மண்டபத்தில் காத்திருந்தாள். முருகனார் வந்ததும் அவர் கால்களை பிடித்துக்கொண்டு நமஸ்கரிக்க அவர் கால்களை விடுவித்துக்கொண்டு ஸ்கந்தாஸ்ரமத்துக்கு போய்விட்டார்.
மறுநாள் பகவான் “முருகனார் எங்கே?” என்று கேட்க காணவில்லை, அவர் பலாக்கொத்திலும் இல்லை என்றார்கள்.
மீனாட்சி நடந்ததை கூறினாள். பகவான் அவா சொன்னா, இவா சொன்னான்னு இப்படியெல்லாம் செஞ்சா அவர் ஊரை விட்டு போயிடுவார். அப்ப என்ன பண்ணுவே? இப்பவாவது அவரை கண்ணால பாக்க முடியறது. இது மாதிரி செஞ்சா அதுவும் போயிடும்!” என்றார்.
மீனாட்சி தன் துயரைச்சொல்லி அழுதாள்.
பகவான் மீனாட்சி, இந்த சத்தில்லாத சம்சாரத்திலே என்ன இருக்கு? இதுக்கு ஏன் இவ்வளோ விசனப்படறே? உன் தகப்பனாருக்கு பத்து குழந்தைகள். இப்போ அவரை யாரு பாத்துக்கறது? உனக்கு கடைசி வரை தங்க இடமும் உடுத்த உடையும் சாப்பிட சாப்பாடும் குறையில்லாம கிடைக்கும். போ என்று தேற்றினார்.

பகவான் மலையில் இருந்த காலத்தில் தினசரி நடவடிக்கை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. காலை எட்டு மணிக்கு கிடைக்கும் பழைய சாதத்தை எல்லோரும் பகிர்ந்து கொள்வார்கள். பின் சுதந்திரமாக அவரவர் விருப்பமானதைச் செய்வார்கள்.
பகவான் நாள் முழுதும் மலையில் சுற்றிக்கொண்டு இருப்பார். பிற்காலத்தில் என் கால் படாத இடமே இந்த மலையில் கிடையாது; இந்த மலை என் உள்ளங்கை மாதிரி என்பார். ஒரு முறை இஷ்டப்படி சுற்றிக்கொண்டு இருக்கையில் ஒரு கிராமத்துப்பெண்மணி வழியில் காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்து இருந்தாள். காலைத்தாண்டிக்கொண்டு போவது மரியாதை இல்லை என பகவான் தயங்கிக்கொண்டு அவள் எதிரில் நின்றார்.
அந்த பெண்மணி பகவானைப்பார்த்து உன்னை பாடையிலே வைக்க! சிவனேன்னு ஒரு இடத்தில இருக்காம ஏன் இப்படி சுத்திக்கொண்டு திரியறே!” என்று திட்டினாள்.
பகவான் தப்புதான் என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்.
அந்த பெண்மணி உடனே மறைந்துவிட்டாள்.

ஒரு நாள் பிற்பகல் மூன்று மணிக்கு வந்த ஒரு பெண் ஸ்வாமி எனக்கு ஒரு கோரிக்கை. எனக்கு மோக்‌ஷம் வேணும்என்றார்.
பகவானும் அப்படியாஎன்று கேட்டு விட்டு சும்மாயிருந்தார்.
அந்தப்பெண்மணி மீண்டும் ஸ்வாமி! எனக்கு வேறேதுவும் வேண்டாம். மோட்சம் ஒண்ணு கொடுத்தாப்போறும் என்றார்.
பகவான் வேறெதுவும் வேண்டாம்ன்னு இருந்துட்டா அதுவே மோக்‌ஷம்தானே? அதை கேட்பானேன்? ஒத்தர் கொடுப்பானேன்? எப்பவுமே இருக்கிறதுதான் மோக்‌ஷம்!” என்றார்.


No comments: