Pages

Monday, May 22, 2017

ஆன்மீக விசாரம் - 10





அடிப்படையில ஆன்மீகம் மனசை கையாளுவதுதான். மனசுன்னு ஒரு திரை முன்னே இருக்கும் வரை உள்ளே இருக்கிற தெய்வீகம் ஒளி விடறது இல்லை. அஹங்காரம் இருக்கிற வரை 'ஜீவன்'னும் அஹங்காரம் போய்விட்டதை 'பரம்'ன்னும் சொல்கிறோம். அதாங்க ஜீவாத்மா பரமாத்மா. ஜீவன் நான்னு நினைச்சுண்டே இருக்கும் வரைதான் பிரச்சினைகள் எல்லாம். நான் போய் விட்டா பலதும் சரியாகப்போயிடும். இதுக்குத்தான் ரமணர் எப்பவும் கேள்வி கேக்கற நீ யாரு? என்கிற ரீதியில பதில்களை கொடுப்பார்.
ஆனா அது அவ்வளவு சுலபமாவா இருக்கு?
இமாலயத்துல சாது ஒத்தர் யாத்திரை போனார். போகிற வழி எல்லாம் சிவோஹம் சிவோஹம்ன்னு சொல்லிண்டே போனாராம். மேலே போகப்போக குளிர் தாங்கலை. சிவோஹம்ன்னு சொல்லிண்டு இருந்தவர் இப்ப ஜீவோஹம் ஜீவோஹம்ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாராம்!
ரொம்ப முன்னேறினவர்களுக்கே இந்த கதிதான்.
ஸோ என்ன செய்யலாம்?
முதல் படியா மனசை மடை மாத்தி விடக்கத்துக்கலாம். எப்பவுமே வெளி உலகத்தையே சுத்தி வந்துகிட்டு இருக்கும் இந்த மனசை பகவான் பக்கம் செலுத்தி விடலாம். கோப தாபங்கள் நம்மை அவ்வளோ சுலபமா விட்டு போகிற மாதிரி இல்லை. ஆசாபாசங்கள் எப்பவும் இருக்கவே இருக்கு. ரைட். இது எல்லாத்தையும் பகவான் பக்கமே திருப்பிடுவோம். இது பக்தி மார்க்கம். சண்டை போடணுமா? பகவான் கூட சண்டை போடு. எனக்கு இப்படி ஏன் நடக்கலை அப்படி ஏன் நடக்கலை, இது ஏன் கிடைக்கலைன்னு இருக்கற எல்லா தாபங்களையும் அவன்கிட்டேயே சொல்லு. (கொடுத்தாலும் கொடுத்துடுவான், ஜாக்கிரதை! அது நம்ம நல்லதுக்கு இல்லாம இருக்கலாம்.) சின்ன வயசில ஒரு சினிமா பார்த்தது. ரங்காராவ் பெருமாள்கிட்ட 'இன்னைக்கு மாடு கன்னு போட்டுது' ரீதியில எல்லாத்தையும் ரிபோர்ட் பண்ணுவார். அது போல! என்ன படம்ன்னு கேக்கறீங்களா? யாருக்கு நினைவு இருக்கு? சினிமா எக்ஸ்பெர்ட் கீக்காவுக்கு இருக்கலாம்.
ஏதோ ஒரு ஸ்டேஜ்ல ச்சே! இப்படி எல்லாமா பகவான்கிட்ட கேக்கறதுன்னு தோணலாம். அப்புறம் நாம் கேக்கற விஷயம் மாறிப்போகலாம். சுய நலம்ன்னு இல்லாம பொது நலத்துக்கு கேட்கலாம். மெதுவா அதுவும் குறைஞ்சு போய் 'அவனுக்குத்தெரியாதா என்ன எப்போ வேணும்ன்னு' அப்படின்னு தோணிப்போய் கேக்கறதையே நிறுத்திடலாம். அவன் பக்கம் கவனத்தை திருப்பிட்டாப்போதும்; காலப்போக்கில மெதுவா நாம முன்னேறிடுவோம். என்ன கிடைக்கறதோ அது பகவத் ப்ரசாதம்ன்னு ஏத்துண்டு இருப்போம். இது ஒரே ஜன்மாவிலேயும் நடக்கலாம்; சில ஜன்மாக்கள் ஆனாலும் ஆகலாம். அவரவர் கர்மாவை பொருத்தது.
வேற என்ன செய்ய முடியும்?

No comments: