Pages

Thursday, June 29, 2017

அந்தணர் ஆசாரம் - 19 ஹோமங்கள்- 6





ஹோமங்களை விட்டுட்டு வைதீகரின் நிலைக்கு போயிட்டோம்.
வேதோக்த ஹோமங்களை பார்த்துவிட்டோம். சாஸ்த்ரோக்த ஹோமங்கள் என்கிறார்கள். எந்த சாஸ்திரங்கள்ன்னா தர்ம சாஸ்திரம் என்கிறார்கள். தர்ம சாஸ்திரம் எங்கிருந்து வந்ததுன்னு பார்க்கப்போனா அது புராணங்கள் இதிஹாஸங்களில இருந்துதான் வந்திருக்கு. பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கறப்ப சொன்ன தர்மோபதேசத்தில இருந்து நிறையவே வந்திருக்குன்னு இதை ஆராய்ச்சி செஞ்சவர் சொல்லறார். சூத்திர ரிஷிகள் சொன்னது இல்லாம கூடுதலா இவையும் சேர்ந்து இருக்கு.
அப்ப தாந்த்ரீகம்? இந்த ஹோமத்தை ஆரம்பிக்கற ப்ரொசீஜரும் முடிக்கற ப்ரொசீஜரும் நிலையானவை. வைதீகத்தில இது ஸ்தாலீபாகத்தை ஒட்டினது. தாந்த்ரீகத்துல தனி. இதுல ஆகம சாஸ்திரங்களில இருந்து வந்திருக்கும் ப்ரொசீஜர். எதை எதை எல்லாம் அக்னில போடலாம் எதை கூடாது என்கிறதுல எல்லாம் இரண்டுத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. உதாரணமா தாந்திரீகத்தில மங்கள அக்ஷதை, புஷ்பங்கள், துணி எல்லாம் அக்னில போடுவாங்க. வைதீகத்தில செய்வதில்லை.
இப்பல்லாம் இதுல நிறையவே குழப்பங்கள் இருக்கு. வைதீகமும் தாந்த்ரீகமும் கலக்காம அது அது அததன் வழியிலேயே செய்யறதுதான் நல்லது. ஆனால் நடைமுறையை பார்க்கிறப்ப நிறைய கலவை தெரிகிறது. வைதீகமா ஆரம்பிச்சுட்டு முக்கிய ஹோமத்தில வைதிகத்தில விலக்கப்பட்ட த்ரவ்யங்களை உபயோகித்து செய்யறாங்க. ஸமித் அன்னம் ஆஜ்யம்தான் வழக்கமா வைதீகத்தில. மத்ததெல்லாம் அவ்வளவு சிலாக்கியம் இல்லை. இன்னும் உள்ளே போனா குழப்பம்தான் மிஞ்சும்!
பொதுவா ஹோமத்துக்கு முந்தைய நாள் ப்ரம்மச்சர்யத்தோட இருக்கணும். பலகாரம்தான் சாப்பிடணும் என்பார்கள். அப்படி சொல்லிவிட்டு அரிசி சோறு இல்லாமல் டிஃபன் ஏதாவது ஒரு பிடி பிடிப்பார்கள். அது அப்படி இல்லை. ஃபல் ஆகாரம் அதாவது பழங்கள் மட்டுமே ஆகாரம். சரி சரி நான் ஒரே ஒரு பலாப்பழம் சாப்பிட்டுக்கறேன்னு சொல்றவங்களை ஒண்ணும் பண்ண முடியாது!
தாத்பர்யம் என்னன்னா அடுத்த நாள் ஹோமத்தில உக்காந்துட்டா டாய்லெட் போகும் அவசியம் வரக்கூடாது அவ்ளோதான். அதற்கு தகுந்தபடி சாப்பிட்டு காலையில் வயிறு குடல் எல்லாத்தையும் காலி பண்ணிடுங்க! காலை முதலே ஒன்றும் சாப்பிடாமல் இருப்பதே உத்தமம். (இக்காலத்தில் சில வாத்தியார்கள் காஃபி பரவாயில்லை என்பார்கள். ஏன்னா அவங்களுக்கு அது வேணுமே!) பழக்கமில்லாதவர்கள் உப்பு சேர்க்காத எதையாவது சாப்பிடலாம். இந்த காலத்தில் காலை நேர மருந்து சாப்பிடலாமா இல்லையான்னு ஒரு கேள்வி எழும். சிலது ஒரு வேளை ஸ்கிப் பண்ணா ஒண்ணு பெரிசா ஆகிடாது. சிலதுக்கு பிரச்சினை வரும். மருத்துவர் யோசனை படி செய்க.
சாதாரணமாக இப்போதெல்லாம் யாருக்கும் ஹோமங்கள் செய்து பழக்கமில்லை என்பதால் சங்கல்பம் செய்து, பிள்ளையாருக்கு பூஜை செய்துவிட்டு பவர் ஆஃப் அட்டார்னி வாத்தியார் கையிலே கொடுக்கறதாயும் ஹோமத்தை அவர் செய்யறதாகவும் இருக்கு. அப்பாடா வேலையை அவருக்கு கொடுத்தாச்சுன்னு பேப்பர் படிக்கவோ வாட்ஸாப் மேயவோ அழைத்திருக்கும் நண்பர்களை பார்த்து பேசவோ போவது உசிதமில்லை. உண்மையில் வேறு யாரையும் அழைக்காமல் இருப்பதே உசிதம். சற்று தள்ளி அமர்ந்து ஹோமத்தை பார்த்துக்கொண்டும் மந்திரங்களை கேட்டுக்கொண்டு இருக்கலாம். செய்பவர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். எஜமானன் பாட்டுக்கு அந்தண்டை போய்விட்டா செய்யறவருக்கு என்ன உற்சாகம் இருக்க முடியும்? ஹோமம் எல்லாம் முடிந்த பிறகு யதோக்த தக்‌ஷிணையை தர வேண்டும். அது என்ன யதோக்த? யதா உக்த - அதாவது சொல்லப்பட்ட - முன்னேயே எவ்வளவு என்று பேசி வைத்துக்கொண்டு இருக்கிறோம் அல்லவா? ஆதாற்கு கொஞ்சமும் குறைக்காமல் தர வேண்டும். அப்போதுதான் வர வேண்டிய முழு பலன் வந்து சேரும்.
அடுத்து ஹோமத்தில என்ன செய்யக்கூடாதுன்னு பார்க்கலாஆமா வேணாமா? கொஞ்சம் யோசனையா இருக்கு. இக்னரன்ஸ் ஈஸ் ப்லிஸ்!

No comments: