Pages

Thursday, August 17, 2017

மனீஷா பஞ்சகம் - 9





இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் இத்தகைய ஞான அனுபவம் எவனுக்கு இருக்கிறதோ அவன் விஷயத்தில் வர்ண விபாகம் ஒரு பொருட்டல்ல என்றுதான் ஆசார்யர் சொல்லியிருக்கிறாரே தவிர ஞானம் என்றால் என்ன என்றே
புரியாதவர்களுக்கோ அல்லது வீம்புக்கு தனக்கு ஞானம் இருப்பதாகச்
சொல்லிக்கொள்பவர்களுக்கோ வர்ண விபாகம் தேவையில்லை என்று ஆசார்யர்
கூறவேயில்லை. உலக விவகாரம் இருக்கும் வரையில் அவரவர்களது வீடு நிலம்
சொத்து இதுதான் என்றும் அவரவர்களது கணவன் மனைவி மக்கள் குடும்பம்
இன்னார்தான் என்றும் வ்யவஸ்தை எப்படி அவசியமோ அப்படி அவரவர்களது பிறப்பு இந்த குலத்தில்தான், அதன் ஸ்வதர்மம் இன்னதுதான் என்ற வ்யவஸ்தை அவசியம் வேண்டும்.

வர்ண விபாகம் யாரையும் மட்டம் தட்டும் நோக்கத்தில் ஏற்பட்டதல்ல. மாறாக
அவரவர்களது நன்மை எதில் உள்ளது என்ற கரிசனமே மஹர்ஷிகள் இதனை
ஏற்படுத்தியதற்குக் காரணம். “உயர்ந்த” வர்ணங்களாக கருதப்படும் வர்ணங்களில் பிறந்தவர்களுக்கு அத்தகைய “உயர்ந்த” ஸ்தானத்திற்கேற்ப நடந்து கொள்ளவேண்டும் என்ற பெரிய கசப்பான கடமை உண்டு. வெறுமனே அவர்களுக்கு உயர்ந்த ஸ்தானம் கொடுத்துவிடவில்லை. முந்தைய காலத்தில் இவ்வாறு உரிய குணங்களோடு நடந்துகொள்ளாமல் இருந்தவர்களை அந்தந்த வர்ணத்தவர்களே தள்ளிவைத்தனர். பிற்காலத்தில் பல காரணங்களால் இது மாறிய நிலையில், தமது தர்மப்படி நடந்துகொள்ளாமல் தனது பிறப்பை மட்டும் முன்னிட்டு தனக்கு கௌரவம் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த பிறகே மற்ற வர்ணத்தவர்களுக்கு இந்த வர்ணத்தவர்கள் பேரில் மனக்கசப்பு ஏற்பட்டது. இன்றும் தமது ஸ்வதர்மப்படி நடந்துகொள்ளும் அந்தந்த வர்ணத்தவர்களை மற்ற வர்ணத்தவர்கள் இயற்கையாகவே மதிக்கவே செய்கிறார்கள்.

ஆகவே வர்ண விபாகமே தேவையில்லை என்ற கூற்று ஆதாரமற்றது, மேலும் ஆசார்யரது கருத்தும் அவ்வாறே என்ற கூற்று அதைவிட ஆதாரமற்றது.
--
அடுத்து எனது சில வார்த்தைகளுடன் தொடர் முடிவுறும்.

No comments: