Pages

Thursday, November 16, 2017

இறப்பு - 4 - மறு பிறப்பு






நேத்தைய பதிவு சில விசாரங்களை கிளப்பிவிட்டது. மகிழ்ச்சி!
இந்த ஆன்மா ஜீவன் சமாசாரம் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கு.
அத்வைத பார்வையில இந்த ஆன்மா/ ஆத்மா ஒண்ணேதான். அது 'பரமாத்மா'வைத்தான் குறிக்கும்.
த்வைத பார்வையில் இது ஆத்மா இறைவன்னு போயிடுத்து.
பரமாத்மாவின் சின்னஞ்சிறிய துணுக்கு அகங்காரம் என்கிறதுக்கு ஆட்படுதுன்னு வெச்சுக்கலாம். இப்படி பல துணுக்குகள் இருக்கும். அகங்காரம் என்கிறது நான் என்கிற உணர்வு. இது எல்லோருக்கும் இருக்கு. நானில்லைன்னு யாருமே சொல்ல மாட்டாங்க. ஆனா இந்த நான் யாருன்னு கேள்வி கேட்கப்போனா பதில் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். பகவான் ரமணர் இந்த வழியைத்தான் காட்டறார். நீ யார்ன்னு விசாரம் பண்ணு நாளடைவில எல்லாம் தெரிய வரும்.
இந்த நான் என்கிறதுதான் நான் 'பரமாத்மாவின் சின்ன துணுக்கு'ன்னு உணருவதை தடுக்கிறது. இந்த அகங்காரத்துக்கு கட்டுப்பட்ட ஆத்மாவைத்தான் ஜீவன் அல்லது ஜீவாத்மான்னு சொல்கிறோம்.
க்ளாசிகல் உதாரணம் பார்க்கப்போனா..
ஒரு குடம் இருக்கு. அது திறந்த வெளியில இருக்கு. இந்த வெளி - ஸ்பேஸ்- ஐ ஆகாசம் என்கிறாங்க. குடத்துக்குள்ள இருக்கிற ஸ்பேஸ் வேற சுற்றி மீதம் இருக்கிற ஸ்பேஸ் வேறயா? ஒண்ணுதான். ஆனாலும் அப்படி ஒரு கற்பனை அந்த குடம் இருக்கும் வரை இருக்கும், இல்லையா? குடம் உடைந்து போனா? ஸ்பேஸ் ஸ்பேஸோட சேர்ந்துடுமா? :-) எனிவே இப்ப குட ஆகாசம்ன்னு சொல்ல எதுவுமில்லை. அது போல இந்த அகங்காரம் ஒண்ணு மட்டுமே ஆன்மாவை ஜீவாத்மா பரமாத்மான்னு பிரிக்கிறது. அகங்காரம் அழிய இரண்டும் ஒண்ணாயிடும்.
ஆனால் இந்த அகங்காரம் அழியறது மிக மிக அரிது. அப்படி ஒரு அழிவு வரும் வரைக்கும் அந்த ஜீவனானது இருப்பதுக்கு ஒரு உடல் தகுதி இல்லாம போனா இன்னொரு உடலை பிடித்துக்கொள்ளும். இப்படி பிடிச்சுக்கும் போது அகங்காரம் கன்மம் மாயை மூணு மட்டுமே அடுத்த உடலுக்கு போகிறது. நினைவுகள் இருக்கிற மனசு போகிறதில்லை. இது அந்நியாயமா இருக்குன்னு நினைச்சா... யோசிச்சு பாத்தா இது எவ்வளவு பெரிய வரம்! இந்த ஒரு வாழ்க்கையில் நினைவு தெரிஞ்சது முதலான எத்தனை மனக்குறைகளை சுமந்து கொண்டு வலம் வரோம்! சின்ன வயசில நாம செஞ்ச தப்ப வாத்தியார்கிட்ட கோள் மூட்டிவிட்ட பையனில் இருந்து ஆரம்பிச்சு அவன் எனக்கு இப்படி செஞ்சான், இவன் எனக்கு அப்படி செஞ்சான்னு எவ்வளோ குப்பை விஷயங்களை பாரமா மனசில சுமந்துகிட்டு நம் வாழ்க்கையை நாமே நாசமாக்கிகிட்டு இருக்கோம். இந்த அழகுக்கு போன ஜன்மத்து நினைவுகள் வேற சுமக்கணுமா?
மிக அரிதா சிலருக்கு சில காலம் போன பிறவியின் நினைவுகள் இருக்கலாம். அகங்காரம் என்பதும் மனசு என்பதும் ஒரே அந்தகரணத்தின் வெவ்வேறு ரூபங்கள். எப்போதாவது கொஞ்சமே கொஞ்சம் மனசு அகங்காரத்துக்கூட ஒட்டிண்டு போகும் போலிருக்கு! இது நல்லாவே டாக்குமெண்ட் பண்ணப்பட்ட விஷயம்தான்னாலும் சில விஷயங்கள் குழப்பறது. காலக்கணக்கு ஒத்து வரதில்லை. எட்டு வயசு பையன் ரெண்டு வருஷத்துக்கு முன் செத்துப்போன ஆசாமியோட மறுபிறவி போல தோணும். அதுதான் மாயை!

//உலகம்ன்னு ஒண்ணை உருவாக்கி நாம் அதில அழுந்தி இன்ப துன்பங்களை அனுபவிக்க வழி செய்வது.// எதுக்கு உருவாக்கி நம்மை அதிலே ஆழ்ந்து போக வைக்கணும்! அதைச் செய்யாமல் இருந்துட்டா?
இப்படி ஒருகேள்வி. அதை செய்யாமல் இருந்தா நீங்களும் நானும் இருக்க மாட்டோம்! ஆனா இருக்கோமே.
ஏன் இப்படின்னு கேள்வி கேட்கறதில் பயனில்லை; இதை நீக்கிக்கற வழிகளை சொல்லி இருக்காங்க. அதை எல்லாம் பயன் படுத்தி வெளியேறப்பாரு என்கிறதுதான் பெரியவர்கள் சொல்கிற பதில்.

என்ன நடக்கிறதுன்னா ஜீவன் ஒரு கீழ்நிலை பிறவியாத்தான் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு பிறவியிலும் கொஞ்சம் பாடம் கத்துக்கொண்டு முன்னேறுகிறது.
புல்லாகிப் பூண்டாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங் களாய்
வல் அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்,
அப்படின்னு மாணிக்க வாசகர் பாடினார் இல்லையா? ப்ரயன் வீஸ் (brian weiss) எழுதின மெனி லைவ்ஸ் மெனி மாஸ்டர்ஸ் இதைப்பத்தி சொல்லுகிற சுவையான புத்தகம்!
நன்கு முன்னேறினாக்கூட முக்தி கிடைச்சுடும் என்கிறதுமில்லை. அந்த ஜீவன் மஹர் லோகத்தில் நிலை பெறலாம். பல காலம் அங்கே இருந்து கடைசியில் மஹா ப்ரலயம் ஏற்படும் போது எல்லா ஜீவன்களுடனும் ப்ரம்மத்தில் ஐக்கியமாயிடும். அடுத்த சிருஷ்டி உண்டாகும் போது மீண்டும் பிறக்கும்! இதைப்பத்தி எல்லாம் முன்னேயே எழுதி இருக்கேன். எங்கேன்னுதான் நினைவில்லை!

No comments: