Pages

Showing posts with label அர்த்தநாரீ. Show all posts
Showing posts with label அர்த்தநாரீ. Show all posts

Monday, March 18, 2013

ரமணர் -2 அர்த்தநாரீ



காசியிலிருந்து புறப்பட்ட தேவி காஞ்சி வந்தடைந்தாள். மணலால் சிவலிங்கம் அமைத்து பூசித்தாள். பாப விமோசனமாயிற்று என்று அவள் திருப்தி அடைந்தவுடன் அங்குள்ள பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அங்கே காமாக்ஷியாக ரூபம் கொண்டு ப்ரசித்தமானாள்.  

அதன் பின் வ்ருஷப வாஹனத்தில் ஏறிக்கொண்டு இந்த அருணாசலத்துக்கு புறப்பட்டு வந்தாள். முதலில் இங்கே பவளக்குன்றின் அடிவாரத்தில் இருக்கும் கௌதமர் ஆஸ்ரமத்துக்கு வந்தாள். கௌதமரின் புத்திரரான சதானந்தர் அம்பாளைப்பார்த்து பக்தி பரவசமடைந்து 'அம்மா, வா, வா' என்றழைத்து அர்க்ய பாத்யங்களால் உபசரித்தார். "என் தந்தை தர்பை, சமித்துகள் கொண்டு வரக் காட்டுக்கு போயிருக்கிறார். நான் போய் அழைத்து வருகிறேன். நீ இங்கேயே இரு" என்று சொல்லிவிட்டு ஓடிச்சென்றார்

இதற்குள் கௌதமரே காட்டில் இருந்து புறப்பட்டு நடுவழியில் பிள்ளையை எதிர்கொண்டார். அவரைப்பார்த்ததும் சதானந்தர் பரம ஆனந்தத்துடன் "அம்மா வந்திருக்கிறாள், தேவி வந்திருக்கிறாள்" என்று கூச்சலிட்டார். இமைப்பொழுதில் அங்கிருந்த செடி கொடிகள் எல்லாம் துளிர்த்து புஷ்பமும் பழங்களுமாக நிறைந்து சொரிந்தன. கௌதமர் ஆச்சரியப்பட்டு அருகில் வந்து "அம்மா யாரடா?" என்று கேட்டார். சதானந்தர் தழு தழுக்கும் குரலில் "அம்மா பார்வதியே வந்திருக்கிறாள்!” என்றார். கௌதமர் புளகாங்கிதமடைந்து ஆஸ்ரமத்துக்கு ஓடோடி வந்து தேவியை தரிசித்து பூஜித்தார்.  

அதன் பின் கௌதமர் சொன்ன படி அம்பாள் நெடுந்தவம் செய்தாள். மஹாதேவன் ப்ரத்யக்ஷமாகி வரம் கேள் என்றார். தேவி மிக வினயமாக "ஸ்வாமி! தாங்கள் இவ்வளவு ப்ரஸன்னராகி (gracious) இருந்தால் தங்கள் தேகத்தில் பாதிபாகத்தை எனக்குத்தர வேண்டும். இனித் தங்களை விட்டு தனி சரீரத்துடன் என்னால் வாழ முடியாது. வேறு சரீரத்தில் இருந்தால் இதே போல இன்னொரு தவறை செய்து உங்களை பிரிந்து அல்லல் பட வேண்டி இருக்கும். ஆகவே அனுக்ரஹிக்க வேண்டும்" என்று ப்ரார்த்தித்தாள். பரமேஸ்வரரும் அம்பாளின் வேண்டுகோளுக்கு இணங்கி அப்படி அனுக்ரஹித்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார். ஜகன் மாதா அர்த்தாங்கினி ஆன கதை இதுதான்.

இப்படி கதை சொல்லும் போது பல இடங்களில் பகவான் கண்களில் நீர் நிறைந்தது; குரலும் கம்மியது; உடல் நடுங்கியது; கதை சொல்லி முடித்த பின் பகவான் ஆழ்ந்த மௌனம் கொண்டார் என்று இதை எழுதிய சூரி நாகம்மா எழுதுகிறார்.
 

Sunday, March 17, 2013

ரமணர் -1 அர்த்தநாரீ



ரமணர் குறித்த சில புத்தகங்கள் படித்து வருகிறேன். ஆச்சரியமான சுவையான தகவல்கள் கிடைக்கின்றன. மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் வாழ்ந்து காட்டி இருக்கிறார். ஆங்காங்கே சில மிகவும் பிடித்த விஷயங்களை பதிவாக்கப்போகிறேன். புத்தகங்களை வாங்கிப்படியுங்கள்.

ஒரு நாள் ஜகதீஸ்வர சாஸ்த்ரி என்பவர் பகவானுடன் அருணாசல மகிமை பற்றி பேசிக்கொண்டு இருந்த போது "சிவன் பார்வதிக்கு பாதி சரீரத்தை எதற்காக கொடுத்தார்” என்று கேட்க பகவானும் உற்சாகமாக கதை சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு முறை சிவன் கைலாயத்தில் சுகமாக உட்கார்ந்து இருந்த போது பார்வதி விளையாட்டாக அவர் பின்னாலிருந்து வந்து அவர் கண்களை பொத்தினாள். உடனே ஈஸ்வரனின் இரு கண்களான சூரிய சந்திரர்கள் ஒளி இழக்கவே லோகங்கள் எல்லாம் இருளில் மூழ்கின. ப்ரஜைகள் அல்லற்பட்டார்கள். தேவர்கள் "ஹே ஈஸ்வரா, இதென்ன அகால ப்ரலயம்” என்று முறையிட்டார்கள். உடனே சிவன் சமயோசிதமாக நெற்றிக்கண்ணை திறந்து ப்ரகாசம் உண்டாக்கி ப்ரஜைகளின் கஷ்டத்தை நீக்கினார். பார்வதி பயந்து போய் கைகளை அகற்றினாள். பரமேஸ்வரர் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் தேவி நடுங்கினாள். ஸ்வாமி நயத்துடன், “தேவீ, இது நமக்கு வேடிக்கையே தவிர என் கண்களை மூடினதால் ப்ரஜைகள் எவ்வளவு தவித்துப்போனார்கள் பார்த்தாயா? நமக்கு ஒரு க்ஷணம்தானே என்றாலும் ப்ரஜைகளுக்கு ஒரு யுகமல்லவா? இது என்ன காரியம்?” என்று பிரியத்துடன் கடிந்து கொண்டார். 

பரமேஸ்வரனின் அந்த நயமான கண்டனத்தை கேட்ட பார்வதி தன் அபராதத்தை உணர்ந்து வெட்கி "இந்த பாபத்துக்கு பரிஹாரமாக தவம் செய்ய வேண்டும். அனுமதி கொடுங்கள்” என்று வேண்டிக்கொண்டாள். “நீ ஜகன்மாதா. உனக்கு பாபமேதுமில்லை. நீ தவம் செய்யத்தேவையில்லை” என்றார் பரமேஸ்வரன். அவளுக்கு த்ருப்தி ஏற்படவில்லை. உலகத்துக்கு வழி காட்டியாய் நான் தவம் செய்கிறேன் என்று ப்ரார்த்தித்து அனுமதி பெற்று தவம் செய்ய தென் முகமாக புறப்பட்டாள்.

அப்போது காசியில் மழையில்லாமல் பஞ்சமேற்பட்டு ஜனங்கள் உணவின்றி கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார்கள். அந்த வழியே வந்த தேவி அதைப்பார்த்து கருணை கொண்டு, நினைத்த மாத்திரத்தில் ஒரு மாளிகையை எழுப்பி, அன்ன பூர்ணா என்ற பெயரில் அங்கே அக்ஷய பாத்திரத்துடன் ஆயிரக்கணக்கில் ஜனங்களுக்கு அன்ன தானம் செய்து கொண்டு இருந்தாள். சில நாட்களிலேயே அவர் கீர்த்தி எல்லா திக்குகளிலும் பரவிவிட்டது. காசி ராஜா தன் பண்டாரத்தில் எல்லா தான்யங்களும் தீர்ந்து போன நிலையில் தவித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பெண் இப்படி அன்ன தானம் செய்வது தெரிய வந்தது. நம்மால் முடியாதது எப்படி இந்த பெண்ணால் சாத்தியமாகிறது என்றூ ஆச்சரியப்பட்டு, சோதித்து பார்க்கலாம் என்று ஒரு ஆளை அனுப்பி கொஞ்சம் அரிசி கடனாகத்தர வேண்டும் என்று கேட்கச்சொன்னார். தான்யம் கொடுப்பதற்கில்லை; வந்தால் அன்னமிடுகிறேண் என்று பதில் வந்தது.

சரி நாமே போய் பார்க்கலாம் என்று மந்திரிமார்களுடன் மாறு வேஷத்தில் போய் அவள் மாளிகையில், பந்தியில் உட்கார்ந்தார்கள். எவ்வளவு பறிமாறினாலும் குறையாமல் வளர்ந்துகொண்டிருந்த போஜன வகைகளை பார்த்த ராஜா, விவேகியானதால் இது மனிதர்களால் முடிகிற காரியமில்லை; இவள் ஒரு தேவதையே என்று தீர்மானித்தான். சாப்பாடு முடிந்ததும் அவளை பக்தியுடன் நமஸ்கரித்து, "தாயே நீ எங்களுடனேயே இருந்து எங்களை கடை தேர்த்த வேண்டும்" என்று பிரார்த்தித்தான். அம்பாள் அவனது பக்தியை கண்டு மகிழ்ந்து, “அப்பனே உன் பக்திக்கு மகிழ்ந்தேன். நான் இத்தனை நாட்கள் உன் நாட்டில் வசித்ததால் மழை இல்லாத குறை தீர்ந்து போகும். இப்போது மழையும் பெய்யும். இனி இங்கு பஞ்சமிராது. நான் இனியும் இங்கு தாமதிக்க முடியாது. தென் திசை நோக்கிப்போய் தவம் செய்ய வேண்டும். நீ சுகமாக ஜனங்களை பரிபாலித்து வா” என்றாள். ராஜா "எங்கள் பூஜையை ஏற்கத்தக்கவாறு இங்கேயும் அம்பாள் சாந்நித்தியம் கொள்ள வேண்டும்" என்று வேண்டினான். தேவியும் சரி என அனுக்ரஹித்து விட்டுப்போனாள். உடனே மழை பெய்து தேசம் சுபிட்சமானது. அம்பாள் தங்கி இருந்த இடமே இப்போழுதும் அன்னபூர்ணாலயம் என்று சொல்லப்படுகிறது....
(தொடரும்)