Pages

Monday, November 23, 2015

கிறுக்கல்கள் - 67


மாஸ்டர் சொன்னார்: ஞானம் என்கிறது விழிப்படைவது. இப்போது நீங்க எல்லாரும் தூங்கிகிட்டு இருக்கீங்க; கனவு காண்கிறீங்க. ஆனா அது கனவுன்னு உங்களுக்கு தெரியலை!

உதாரணத்துக்கு ஒரு கதை சொன்னார்.

சமீபத்தில புதுசா திருமணம் ஆன ஒரு பெண்மணி என்னை பார்க்க வந்தாங்க. கணவனோட குடிப்பழக்கம் பத்தி புகார் சொல்லி அழுதாங்க.

அவன் குடிப்பான்னு தெரிஞ்சு ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?”

அவர் குடிப்பார்ன்னு தெரியாது. ஒரு நாள் ராத்திரி குடிக்காம வீட்டுக்கு வந்தாரு; அப்பதான் தெரிஞ்சது!

Friday, November 20, 2015

கிறுக்கல்கள் - 66


 ஸ்வாமி நெஜமா சொல்லுங்க. ஞானம் என்கிறது என்ன?

உள்ளதை உள்ளபடி பார்க்கிறது.

பின்ன நாங்கள்ளாம் எப்படி பார்க்கிறோமாம்?

நீங்க என்ன இருக்குன்னு நினைக்கிறீங்களோ அதைத்தான் பார்க்கறிங்க.

என்ன பெரிய வித்தியாசம்?

புயல் அடிக்கறப்ப கடல்ல மாட்டிண்டு மூழ்கறா மாதிரி நினைச்சுக்கறத்துக்கும் சுத்துமட்டுல இருபது கிலோமீட்டருக்கு நீர்நிலையே கிடையாது; அதனால் நாம மூழ்க முடியாதுன்னு அறிஞ்சு இருக்கறதுக்கும் உள்ள வித்தியாசம்!

Thursday, November 19, 2015

கிறுக்கல்கள் - 65


பறவைகளின் தொல்லை மிக அதிகமாகிவிட்டது. குடியானவர்கள் சிலர் சேர்ந்து பல பறவைகளை சுட்டு வீழ்த்தினர்.

வயலில் வீழ்ந்து கிடந்த ஏராளமான பறவைகளை பார்த்த சீடன் ஜீசஸின் வாக்கியத்தை முணுமுணுத்தான்:  “ஒரு பறவை கூட தந்தையின் ஒப்புதல் இல்லாமல் விழுவதில்லை”. மாஸ்டரிடம் கேட்டான் : “இதுக்கு எதாவது அர்த்தம் வருதா?”

அழகான அர்த்தம் இருக்கு; ஆனா அதை பார்க்க வேண்டிய கோணம் வேற. லட்சக்கணக்கில பறவைகள் உருவாகி தொல்லையா மாறுகிற பின்புலத்தில அதை நீ பார்த்தா அதன் அழகு புலப்படும்.

Wednesday, November 18, 2015

கிறுக்கல்கள் - 64


மாஸ்டருக்கு முல்லா நசருதீன் கதைகள் மிகவும் பிடிக்கும். அவருக்கு மிகவும் பிடித்த கதை இது:

ஓரிரவு முல்லா தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தார். அவரது மனைவி,” தூங்குங்களேன், என்ன பிரச்சினை?” என்றார்.

எதிர்வீட்டு அப்துல்லாவுக்கு நாளை ஆறு வெள்ளி காசு திருப்பிக்கொடுக்கணும்; எங்கிட்ட காசு இல்லே. அதான்!

மனைவி எழுந்தார். வாசலுக்குப்போய் அப்துல்லா அப்துல்லா!”  என்று கத்தினார்.

அப்துல்லா வெளியே வந்து, ”என்ன விஷயம்?” என்று கேட்டார்.

தோ பாருங்க; முல்லாகிட்ட இப்ப காசு இல்லே. அதனால நாளைக்கு உங்களுக்கு கடனை திருப்பித்தர முடியாது.

அத்துடன் திரும்பி வந்தார். நசருதீன் இப்ப நீ நிம்மதியா தூங்கு, அப்துல்லா தூக்கம் வராம அவஸ்தை படட்டும்!

அத்துடன் மாஸ்டர் சொல்லுவார்: யாராவது பணம் இல்லாம இருக்கணும். அதுக்கு யாரும் அவஸ்தை படணுமா என்ன?”

Tuesday, November 17, 2015

கிறுக்கல்கள் - 63


இன்னொரு சீடன் நேரடியாக கேட்டான்.

இறப்புக்கு பிறகு வாழ்க்கை இருக்குன்னு நீங்க நம்பறீங்களா, இல்லையா?

நீ ஏன் அதையே போட்டு உழப்பிட்டு இருக்கேன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.

அதில என்ன ஆச்சரியம்?

ஜன்னலுக்கு வெளியே கை காட்டி சொன்னார்: தோ பார்! இது அருமையான வசந்த கால மாலை! இதை அனுபவியேன்! அதை விட்டுட்டு இதை வெச்சுண்டு கொழப்பிக்கறயே! இது எப்படி இருக்குன்னா, சாப்பிடுன்னு அருமையான திண்பண்டங்கள் தன் எதிரே வெச்சு இருக்கறப்ப இதெல்லாம் நாளைக்கு கிடைக்குமா இல்லையான்னு ஒரு குழந்தை கேட்டுண்டு சாப்பிடாம இருந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு! நீ பட்டினியா இருக்கே; முதல்ல சாப்பிடு.

Monday, November 16, 2015

கிறுக்கல்கள் - 62


சிலர் இறப்புக்கு பின்னே வாழ்கை இல்லை என்கறாங்க!


அப்படியா? என்றார் மாஸ்டர்.

ஆமாம். அப்ப இறப்பு ரொம்ப கொடுமையானது இல்லையா? பார்க்க முடியாம, பேச முடியாம, உணர முடியாம....

அது கொடுமையா தோணுதா? இப்ப நிறைய பேர் உயிரோட இருக்கறப்பவே அப்படித்தானே இருக்காங்க?

Thursday, November 12, 2015

கிறுக்கல்கள் - 61


சமயம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்த ஒருவர் மாஸ்டரை சந்தித்து ஏதேனும் சிந்தனை ரத்தினத்தை சொல்லுமாறு வேண்டினார்.

மாஸ்டர் சொன்னார்: சிலர் ஒரு வாழ்கைக்கு சம்பாதிக்க எழுதுகிறார்கள். சிலர் தங்களது சிந்தனைகளை வெளிப்படுத்தவோ படிப்பவரது மனதை யோசனையில் ஆழ்த்தவோ எழுதுகிறார்கள். இன்னும் சிலர் தன் ஆன்மாவை புரிந்து கொள்ள எழுதுகிறார்கள். இது எதுவும் நீண்ட காலம் தாக்குப்பிடிக்காது…… எழுதாவிட்டால் தலை வெடித்துவிடும் போல யார் உணர்கிறார்களோ அவர்களது எழுத்தே காலத்தை தாண்டி நிற்கும்……. அவர்கள் எதைப்பற்றி எழுதுகிறார்கள் என்பது முக்கியமில்லை. எதை எழுதினாலும் அதில் தெய்வீகம் வெளிப்படும்!

Wednesday, November 11, 2015

கிறுக்கல்கள் - 60


சட்ட திட்டங்கள் கடவுளின் புனித எண்ணம். அதனால் அவற்றை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்றார் அந்த பிரசங்கி.
மாஸ்டர் காதில் இது விழுந்தபோது அவர் சொன்னார்: என்ன முட்டாள்தனம்! சட்ட திட்டம் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டிய கொடுமை! எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதை வெட்டிப்போட வேண்டும். சட்ட திட்டத்தை பிடிக்கும் என்று சொல்லும் ஆசாமியை காட்டு; ஒரு முட்டாள் கொடுங்கோலனை நான் காட்டுகிறேன்.

பின் ஒரு கதையை சொன்னார். அவருடைய சகோதரி தன் குழந்தைக்கான தள்ளுவண்டியை தள்ளி தள்ளி களைத்து அலுத்துவிட்டார். அதனால் aதில் ஒரு சின்ன மோட்டாரை  பொருத்திக்கொண்டார்.
அதன் பின் போலீஸ் வந்தது. இந்த மோட்டார் தள்ளு வண்டி மணிக்கு மூன்று மைல் வேகத்தில் செல்லக்கூடியது. அதனால் அது மோட்டார் வாகன சட்டங்களுக்கு கட்டுப்பட்டது.
சரி, அதனால்?
அதனால் அதற்கு ரிஜிஸ்தர் செய்து நம்பர் பலகை பொருத்த வேண்டும்; விளக்குகளும் ப்ரேக்கும் இருக்க வேண்டும்; ஓட்டுவதற்கு லைசென்ஸ் வாங்கியாக வேண்டும்!

இதை ஒட்டியே இன்னொரு கதை சொன்னார். மாஸ்டரை பார்க்க ஒரு விண்வெளி வீர் வந்தார். அவர் விண்கலத்தில் 500 முறை பூமியை வலம் வந்தார்.
அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டார்கள்.
களைத்துபோய் விட்டேன். எத்தனை முறை காலை, மதிய, மாலை வழிபாடுகளை என் மதம் சொல்லிய படி செய்வது?

Tuesday, November 10, 2015

கிறுக்கல்கள் - 59


இயற்கையின் வாயிலாக இறைத்தன்மை எப்படி கசிந்தோடுகிறது என்பதை சொல்லுவது மாஸ்டருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பூங்காவில் அமர்ந்து இருந்த போது திடீரென்று சொன்னார்:
அதோ பார்; அந்த நீலப்பறவையை. அந்த மரத்தின் கிளையில் மேலும் கீழும் மேலும் கீழும் ஊசலாடிக்கொண்டு தன் நிலை மறந்து பாடிக்கொண்டு இருக்கிறது. தன்னைத்துறந்து  உலகத்தை தன் இசையால் நிறைக்கிறது; மகிழ்ச்சியில் கொஞ்சம் கூட குறைவில்லை. ஏன் எனில் அதற்கு நாளை என்பது கிடையாது!

Monday, November 9, 2015

கிறுக்கல்கள் - 58



ம்அந்த பிரசங்கியின் சொல் திறம் பிரசித்தியானது, ஆனாலும் அவர் தன் நண்பர்களிடம் மாஸ்டரின் அலங்காரமில்லாத சுருக்கமான பேச்சின் தாக்கம் தன் பேச்சில் இருப்பதில்லை என்று நண்பர்களிடம் குறை பட்டுக்கொண்டார்.

மாஸ்டருடன் ஒரு வாரம் தங்கிய பின் அவருக்கு ஏன் என்று புரிந்தது. “மாஸ்டர் பேசும் போது அவரது பேச்சு மௌனமே உருவானது போல இருக்கிறது; என்னுடையது எண்ணங்களே உருவானது போல இருகிறது!” என்றார்.

Friday, November 6, 2015

கிறுக்கல்கள் - 57


ஒரு பார்வையாளர் கேட்டார்: உங்க மாஸ்டர் உலகத்தில இருக்கற கெட்டதுகள் பத்தி என்ன சொல்லறார்?
ஒரு சீடன் சொன்னான்: அவர் அது பத்தி ஒண்ணும் சொல்லறது இல்ல. அதை ஒழிக்க ஏதாவது செஞ்சுகொண்டு இருப்பார்.
இன்னொரு சீடன் சொன்னான்; மக்கள் எப்பவும் உலத்தோட சண்டை போட்டுக்கொண்டோ அலுத்துக்கொண்டோ இருக்கிறார்கள். ஆனால் மாஸ்டருக்கு எப்பவும் அவர் பார்க்கிறது எல்லாமே ஆழங்காண முடியாத, அற்புதமான, வியக்கத்தகுந்த சமாசாரங்கள்.


Thursday, November 5, 2015

கிறுக்கல்கள்! - 56


மடாலயத்துக்கு பக்கத்தில் இருந்த காட்டில் காட்டுத்தீ பற்றிக்கொண்டு நிறைய மரங்கள் அழிந்து போயின.
இந்த செய்தி கிடைத்தவுடன் மாஸ்டர் தன் சீடர்கள் எல்லாரையும் வரச்சொல்லி செய்தி அனுப்பினார். “சீக்கிரம், செடார் மரங்களை மீண்டும் நட வேண்டும்!”
செடார்? இந்த வகை செடார் மரங்கள் முழுக்க வளர 200 வருஷங்கள் ஆகாது?
ஓஹோ! அப்படியானால் இன்னும் ஒரு வினாடி கூட தாமதிக்க முடியாது!


Wednesday, November 4, 2015

கிறுக்கல்கள்! - 55


ஒரு தாய் மாஸ்டரை கேட்டாள். என் குழந்தைக்கு எப்போது எதையும் கத்துக்கொடுக்க ஆரம்பிக்கணும்?
மாஸ்டர் கேட்டார், குழந்தைக்கு என்ன வயது?
அஞ்சு!
உடனே ஆரம்பி! ஏற்கெனெவே அஞ்சு வருஷம் லேட்!

Tuesday, November 3, 2015

கிறுக்கல்கள்! - 54



ஒரு கல்லூரி மாணவனிடம் அவனது நண்பன் கேட்டான்: அந்த மாஸ்டரிடம் ஏன் போகிறாய்? சம்பாதித்து வாழ கற்றுக்கொடுக்கிறாரா?

இல்லை. ஆனா சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் எப்படி வாழ வேணும்ன்னு கத்துக்கொடுக்கிறார்.
 

Monday, November 2, 2015

கிறுக்கல்கள்! - 53



மாஸ்டர் சொன்னார்: பெரும்பாலான குருமார்கள் உங்களைப்போலவே குழப்பமும் குருட்டுத்தனம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் ஏதேனும் பிரச்சினையை சொன்னால் புத்தகத்தில் இருந்தது ஒரு பதிலை கொடுப்பார்கள். ஆனால் வாழ்கை ஒரு புத்தகத்தில் அடங்காது!
உதாரணத்துக்கு ஒரு கதை சொன்னார்.
ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன் ஒரு ஆசாமியை வழி மறித்து மிரட்டினான். மரியாதையா உன்கிட்ட இருக்கிற பணத்தை எல்லாம் கொடுத்துடு. இல்லாட்டா….
இல்லாட்டா என்ன?
யோவ்! குழப்பாத! இதான் என் முதல் கொள்ளை!