Pages

Thursday, December 29, 2011

கடவுள்...


ஒரு சீடன் புகார் செய்தான். “நீங்கள் கதைகள் சொல்லுகிறீர்கள். அனால் அவற்றின் பொருளை சொல்வதில்லை!”
"உனக்கு ஒருவர் பழம் கொடுக்கிறார். உனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதுவே அவர் அந்த பழத்தை கடித்து மென்று உன்னிடம் கொடுத்தால் எப்படி இருக்கும்?”

சீடர்களிடம் கடவுளைப்பற்றி நிறைய கேள்விகள் இருந்தன.
குரு சொன்னார். கடவுளை யாரும் முழுமையாக அறிய முடியாது. அவரைப் பற்றி யார் எதை சொன்னாலும் அது நிறைவற்றே இருக்கும்.
சீடர்களுக்கு அதிர்ச்சி! "பின்னே ஏன் அவரைப் பற்றி பேசுகிறீர்கள்?”
குரு கேட்டார் “குயில் ஏன் பாடுகிறது?”

அறிஞர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவேண்டும். ஞானிகள் சொல்வதை சும்மா கேட்க வேண்டும்: மரங்களிடை மிரலும் காற்று போல; ஒடையின் சலசலப்பு போல; பறவையின் பாடல் போல. அது உனக்குள் புகுந்து சொல்ல முடியாத ஏதோ ஒன்றை விழிக்கச் செய்யும்.

ஏன் முன்னேயே சொல்லலை?

ஜட்ஜ்மென்ட் டே ன்னு சொல்லி கடவுளை கூப்பிட்டாங்க. இவரும் போய் சொர்கத்துல உக்காந்தார். செத்துப்போன எல்லாரும் தீர்ப்புக்கு ரெடி. கடவுள் ஒரு தேவதையை கூப்பிட்டு பத்து கட்டளைகளையும் ஒவ்வொண்ணா படிக்கச் சொன்னார். முதல் கட்டளையை படிச்சதும் இது படி நடந்துக்காதவங்க நரகத்துக்கு போகட்டும் என்றார். அப்படியே ஆயிற்று. அடுத்த கட்டளை படிக்கப்பட்டு அடுத்து இன்னும் பலர் நரகத்துக்கு போயிட்டாங்க. இப்படியே போய் ஏழாவது கட்டளையை படிச்சு முடிக்கிறப்ப சொர்கத்துல ஒரே ஒரு ஆசாமிதான் மிஞ்சினார். கடவுள் பாத்தார். ஒரே ஒரு ஆசாமிதான் மிச்சமா? பாவம் தனிமையில கஷ்ட படுவானே! சரி சரி, போனாப்போறது. எல்லாரையும் மன்னிச்சுடறேன். எல்லாரும் திரும்பி சொர்கத்துக்கு வாங்க ன்னார். மிஞ்சின ஆசாமி எழுந்து கத்தினார். இது ரொம்ப மோசம்! இப்படி எல்லாரையும் மன்னிச்சுடுவேன்னு ஏன் முன்னேயே சொல்லலை?

Wednesday, December 28, 2011

அன்பு


ஜானியெட் என்று ஒரு சாது. பார்க்க பிச்சைக்காரன் போல் இருப்பார். மெக்காவில் ஒரு முடிதிருத்தும் கடைக்கு போனார். பெரும் பணக்காரர்கள் காத்திருக்க நாவிதர் இந்த பிச்சைகாரனுக்கு முடிவெட்டி விட்டார். கட்டணம் வசூல் செய்யாதது மட்டுமல்லாமல் கொஞ்சம் பைசாவையும் கொடுத்து அனுப்பினார்.
சாதுவுக்கு பரம சந்தோஷம். இன்று என்ன பொருள் கிடைக்கிறதோ அதை அப்படியே இவருக்கு கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தார்.
ஜானியெட்டை தெரிந்த பெரும் பணக்காரர் அன்று அவரை சந்தித்து நிறைய தங்க நாணயங்கள் கொண்ட பணமுடிப்பு ஒன்றை வழங்கினார். வெகு சந்தோஷத்துடன் உடனே போய் அதை நாவிதரிடம் கொடுத்தார்.
ஏன் என்று நாவிதரிடம் சொன்ன போது நாவிதர் கத்தினார், “ என்ன மாதிரி சாது நீங்கள்? அன்புடன் செய்த ஒரு செயலுக்கு இப்படி ஒரு வெகுமதி தரப்பார்க்கிறீர்கள்?”

Tuesday, December 27, 2011

பஞ்சதஶீ, 1- 16


ஸத்த்வஶுத்³தா⁴விஶுத்³தி⁴ப்⁴யாம்° மாயா'வித்³யே ச தே மதே | மாயாபி³ம்போ³வஶீக்ரு«த்ய தாம்° ஸ்யாத்ஸர்வஜ்ஞ ஈஶ்வர​: || 16||

  சுத்த சத்வமான ப்ரக்ருதி மாயை எனப்படும். அசுத்தமாக ரஜஸ் தமஸ் குணங்களை உடையதாக உள்ளபோது அது அவித்யை எனப்படும். மாயையில் பிரதிபலிக்கும் ப்ரஹ்மன் ஈஸ்வரன் எனப்படுவான். அவன் அனைத்தும் அறிந்தவன். எல்லாம் வல்ல மாயையை கட்டுப்படுத்த வல்லமை உடையவன்.

Friday, December 23, 2011

பஞ்சதஶீ 1- 15


சிதா³நந்த³மயப்³ரஹ்மப்ரதிபி³ம்ப³ஸமந்விதா |
தமோரஜ​:ஸத்த்வகு³ணா ப்ரக்ரு«திர்த்³விவிதா⁴ ச ஸா || 15|| 
சிதானந்த மயமான; சத்வ ரஜோ தமோ குணங்களை சம நிலையில் கொண்ட ப்ரஹ்மத்தின் கண்ணாடி பிம்பம் போல உள்ளது ப்ரக்ருதி. இதில் இரண்டு விதம். 
 

உரத்த சிந்தனைகள், மன்யு - 5


அப்ப நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிருக்கும்! கோபத்தை வென்ற பிறகு செய்ய வேண்டியது அதை கையாள தெரிஞ்சுக்கிறது. உள்ளே கோபம் இல்லாம கோபத்தை காட்டவும் பழகணும். இததான் ரௌத்திரம் பழகு ன்னு பாரதியார் சொன்னது போல இருக்கு!

நம்மோட முயற்சி ஒரு பக்கம் இருக்க, பகவானே, கோபத்தை என்கிட்டேந்து நீக்கு ன்னு வேண்டிக்கலாம். வேதம் பயின்றவர்கள் "காமோ காரிஷீன்" ன்னு துவங்கற வேத மந்திரத்தை ஜபம் செய்யலாம். அதிகாரம் இல்லைன்னா?

எனக்கு கோபமான கோபம் வரும். ஹிஹிஹி! ஆமாம். துர்வாசர் ன்னே பேர் வாங்கி இருந்தேன். மேலே சொன்ன கோத்திரங்களில ஒண்ணுதான். என் வழிகாட்டி ஒத்தர்கிட்டே பிரார்த்தனை செய்து கொண்டேன், கோபத்தை நீக்குங்கன்னு. திருக்களர் போய் ஆராதனை அபிஷேகம் செய்து வான்னு சொன்னார். திருத்துறைப்பூண்டி - ராஜ மன்னார்குடி சாலையில இருக்கற லூப் ரோடில திருக்களர் இருக்கு. லூப் ரோட்? அதாங்க ஒரு மெய்ன் ரோடில ஆரம்பிச்சு உள்ளே கிராமங்கள் எல்லத்தையும் ஒரு சுத்து சுத்தி திருப்பி மெய்ன் ரோடிலேயே முடியும். இந்த ரோடில மன்னார்குடி முனையிலேந்து சுமார் 4 கிலோ மீட்டர். பெரிய சிவன் கோவில். அழகான பெரிய குளம். ஆள் நடமாட்டமே இல்லாம அருமையா இருந்தது.

அர்ச்சகர் சிரத்தையோட ஸம்ருத்தியான அபிஷேகம், பூஜை செய்தார். நானும் ருத்ரம்-சமகம் சொல்ல அவருக்கு ஏக குஷி. புத்தகம் தருவித்துக் கொடுத்து, த்ரிசதி படியுங்க, அர்ச்சனை செய்கிறேன் என்று அர்ச்சனை செய்தார். முதல் சுற்றிலே சிவனுக்கு வலது பக்கமா முருகன் இருக்கார். அவருக்கு நேர் எதிரே துர்வாசர் சிரிச்ச -கவனிங்க - சிரிச்ச முகத்தோட இருக்கார். அபிஷேகம் சிவனுக்குத்தான். பிள்ளையார், அம்மன் உள்பட எல்லோருக்குமே பூஜை. துர்வாசர்? ஆமாம். இந்த தலத்திலேதான் துர்வாசர் முருகனோட அருளால கோபத்தை நீக்கிக்கொண்டாராம். அப்படி ஸ்தல வரலாறு. எனக்கு இந்த இடத்திலே நல்ல பலன் கிடைச்சது. நான் சொல்லி சிலர் போய் அவங்களுக்கும் நல்ல பலன் கிடைச்சது. முயற்சி செய்து பார்க்கலாம்.
- இந்த தொடர்  நிறைவுற்றது  -

Thursday, December 22, 2011

உரத்த சிந்தனைகள் - மன்யு -4


சில சமயம் சாய்ஸ் இருக்கறதில்லை. இருந்தாலும் கூடிய வரை கோபம் வரும் போது கொஞ்சம் கொயட்டா இருந்துட்டு அப்புறம் எதிர் வினையை பாத்துக்கலாம். புத்தியால விஷயங்களை விசாரிச்சுத்தான் கோபங்கள் மறையும். ஆசை படுவது பின்னால நிறைவேறாம போய் கோபம் வரக்கூடும்ன்னு முன்னாலேயே விசாரிச்சு வெச்சுட்டா, கோபம் வராம போயிடலாம். இப்படி நடக்காம போகலாம்ன்னு முன்னேயே எதிர்பார்த்ததுதானேன்னு விட்டுட்டு போயிடுவோம்.

நாம் எதிர் பார்க்கிற மாதிரி மத்தவங்க நடந்துக்கலையா? என்ன செய்யறது? நமக்கு கொடுத்து வெச்சது அவ்வளோதான். எல்லாராலேயும் எல்லாம் செய்ய முடியாது. கோபம் வரக்கூடாதுன்னு நமக்கே தெரியுது. ஆனா கோபப்படாமலா இருக்கோம்? அப்ப நம்மால சில விஷயங்கள் முடியலைன்னு ஒத்துக்க வேண்டி இருக்கு! நம்மால முடியாததை மத்தவங்க மட்டும் செய்யணும்ன்னு ஏன் எதிர்பார்க்கறோம்? இப்படி முன்னாலேயே யோசிச்சு வெச்சுட்டா நாம் கோபப்படுவது கொஞ்சம் கொஞ்சமா குறையும்.

கோபம் வராம இருக்கிறதும் பிரச்சினைல முடிஞ்சுடலாம் ன்னு சிலர் கவலைப்படுறாங்க. கோபப்படாம சாதுவா இருக்கறவங்களை மத்தவங்க தூக்கிப்போட்டு மிதிச்சுடுவாங்கன்னு ஒரு பயம்!

தயானந்த ஸ்வாமிகளை ஒரு அன்னிய நாட்டவர் கேட்டாராம். "ஸ்வாமி சாதுன்னா என்ன?”
இவரும் விளக்கம் சொன்னார்.
"அப்ப சாதுக்களுக்கு கோபமே வராதா?”
"ஆமாம், வரக்கூடாது.”
"நீங்க ஒரு சாதுவா? அப்ப நான் உங்களை அடிக்கலாமா?”
"அடித்தால் கோபம் வரும் என்று இல்லை. ஆனால் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவேன்!”
இதான் அத்து மீறுகிறது என்கிறது!

ஒரு சன்யாஸி ஒரு நாள் ஒரு கிராமத்தில் தங்கினார். மூன்று நாட்கள் தங்கி மக்களுக்கு உபதேசங்கள் செய்தார். நாலாம் நாள் சன்யாஸ தர்மப்படி கிராமத்தை விட்டு கிளம்பிட்டார். கிளம்பும்போது சாமி எந்த ஊருக்கு அடுத்து போறீங்க? ன்னு கேட்டாங்க. இவரும் சொன்னார். சாமி அதுக்கு காட்டு வழி குறுக்கு வழியானாலும் அந்த பக்கமா போகாதீங்க! அங்க வழில ஒரு பாம்பு இருக்கு. அது போற வரவங்களை எல்லாம் கடிக்குது. ஆடு மாடு மேய்க்க போற பசங்கள் எல்லாரும் கஷ்டப்படுறாங்க ன்னு சொன்னாங்க. அடப்பாவமே! அப்படியா? சரின்னு சொல்லிட்டு சன்யாஸி காட்டு வழியாவே போனார். வழியில பாம்பையும் பார்த்தார். நீ ஏன் இப்படி எல்லாரையும் கடிச்சு துன்புறுத்தறே? உன் இரையை நீ தேடிக்கோ. இரை அல்லாததை சும்மா கடிக்கக்கூடாது ன்னு சொன்னார். சரி சாமி அப்படியே ஆகட்டும் ன்னு அதுவும் சொல்லித்து.
கொஞ்ச நாள் கழிச்சு ஆடு மாடு மேக்கிற பசங்க அங்கே போனப்ப பாம்பு தொல்லை காணலையேன்னு ஆச்சரியப்பட்டாங்க. அதோட நிக்கலை. ரெண்டு நாள் கழிச்சு அது எங்கேன்னு தேடி கண்டு பிடிச்சாங்க. கடிக்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சு கொடுத்த பாம்பு இப்ப ஓடி ஒளிய திண்டாட வேண்டி இருந்தது! ஓடர நாயை கண்டா என்ற ரீதியில பசங்க துரத்தி துரத்தி கல்லால அடிச்சு ஒரே கலாட்டா. இதனால பகல்ல பாம்பு வெளியே வரவே வராம ஒளிஞ்சு இரை தேடக்கூட முடியாம கஷ்டப்பட்டது.
சில வாரங்கள் கழிச்சு அதே சன்னியாசி திரும்பும் வழியில அதே காட்டு வழியா வந்தார். பாம்பு இருக்கிற இடம் வந்ததும் அதை நினைவு கொண்டு நண்பனே எங்கே இருக்கிறாய் ன்னு கூப்பிட்டார். பாம்பும் சன்னியாசி குரலை கேட்டு மறைவிடத்துலேந்து வெளியே வந்து வணங்கியது.
"என்னப்பா இப்படி ஏதோ குத்துயிரும் குலையுயிருமா இருக்கே? இளைச்சு போயிட்டயே!" ன்னு கரிசனத்தோட கேட்டார். பாம்பும் கடிக்கறதை விட்ட பிறகு மக்கள் தன்னை தேடித்தேடி அடிக்கறதை சொல்லித்து. சன்னியாசி சொன்னார், "பாம்பே! நீ நான் சொன்னதை கொஞ்சம் தவறா புரிஞ்சு கொண்டே! நான் கடிக்காதேன்னுதானே சொன்னேன்? சீறாதேன்னு சொன்னேனா?"
அப்புறம் பாம்பு சீற ஆரம்பிச்சது. ஜனங்களும் பழைய படி அதுக்கு பயந்து அதை சீண்டறதை விட்டுட்டாங்க.
  

Wednesday, December 21, 2011

உரத்த சிந்தனை - மன்யு 3


 நாம் அனாவசியமா கோபப்படுகிறோம் ன்னு புரிஞ்சுக்கிறதே முதல் படி. அதில லாபம் இல்லை, மாறா நஷ்டம்தான் இருக்குன்னு புரியறது இரண்டாம் படி.

இப்பல்லாம் எல்லாத்துக்கும் ஜீன்ஸ் (genes) -மரபணுவை திட்டறது பேஷன். திருட்டு புத்தியா, பாவம் அவன் என்ன பண்ணுவான்? அவன் ஜீன்ஸ் அந்த மாதிரி.... இதை ஒத்துக்கிறாப் போலத்தான் இருக்கு நம்ம பெரியவங்க சொல்லறதும்.... ஸ்ரீ வத்ஸ கோத்திரக்காரர்கள் பெரிய கோபக்காரங்களாம். கதை கதையா அப்படி சொல்லியிருக்கு. இவங்களுக்கு பெரிய நண்பன் அக்னியாம். கோபம் இருக்காதா பின்னே? :-)) இன்னும் கௌசிக கோத்திரம் விஸ்வாமித்ர கோத்திரம் சேர்ந்தவங்க எல்லாம் கோபக்காரங்களாம். ஏன்னு கேட்க வேண்டியதில்லை!

அது சரி, அதுக்காக கோத்திரத்தை மாத்த முடியுமா? இல்லை அப்படி மாத்தினாத்தான் கோபம் போகுமா? கோபம் ரிப்லக்ஸ் ன்னு பாத்தோம். அதனால அதை கட்டுப்படுத்தறது கஷ்டம். சரி அப்படின்னா என்ன செய்யலாம்? தயானந்தர் எடுத்த ஒரு வொர்க் ஷாப்பில இத நிறைய விசாரிச்சார்.

கோபம் வருதா? பரவாயில்லை. அது ரிப்லக்ஸ். அதுக்கு நீ ஒண்ணும் செய்ய முடியாது. ஒரே ஒரு விஷயம் கவனத்தில வெச்சுக்கோ. கோபத்தில எதையும் செய்யாதே! (Anger is a reflex. A reflex means you have no control over it. So what to do? Only, dont act in anger) கோபப்படுகிறது ஒரு பக்கம் இருக்க, கோபத்தோட நாம் செய்கிற செயல்கள்தான் நிறைய பிரச்சினைகளை உருவாக்கும்.

 பின்ன? கொஞ்ச நேரம் கொடு. ரிப்லக்ஸ் உடனடியா மனசை கிளறிவிடுது. புத்தி கொஞ்சம் மெதுவாத்தான் வேலை செய்யும். அதுக்கு அவகாசம் கொடுத்தாப்போதும். அது எப்படி எதிர்வினை இருக்கணும்ன்னு திட்டம் போட்டு கொடுக்கும். அப்படி செய்யறது அனேகமா சரியாகவே இருக்கும்.

 பையன் ஸ்கூல்லேந்து வந்தான். முகம் எல்லாம் வீங்கிப்போய்... சண்டை போட்டு இருக்கான்னு தெரிஞ்சது. அப்பா கேட்டார்.
என்னடா, சண்டை போட்டியா?
 ஆமாம்.
 ஏன்?
 ராமு ப்ரவோக் பண்ணான்.
 நான் சொல்லி இருக்கேன் இல்லையா? கோபம் வந்தா பத்து எண்ணனும், அப்புறம்தான் செயல் படணும்ன்னு?
 ஆமாம்ப்பா. ஆனா அவன் பத்து எண்ணலையே?

 

Tuesday, December 20, 2011

பஞ்சதஶீ, 1-14


தஸ்ய ஹேது​: ஸமாநாபி⁴ஹார​: புத்ரத்⁴வநிஶ்ருதௌ | 
இஹாநாதி³ரவித்³யைவ வ்யாமோஹைகநிப³ந்த⁴நம் || 14||
மேலே சொன்ன உதாரணத்தில் மகனின் குரல் அடையாளம் காணப்பட இடையூறு மற்றவர்களின் குரல்களாகும். ஆக இருப்பு தவறாக காட்டப்பட காரணம் அனாதியான அவித்யை ஆகும். 

உரத்த சிந்தனை -மன்யு - 2


கோபம் நல்லதா கெட்டதா என்பதை அதன் விளைவுதான் தீர்மானிக்கணும். கோபம் நம்மோட அறிவை மறைக்கும்ன்னா அது நிச்சயம் கெட்டதே. அதன் விளைவு அனேகமாக நல்லதாய் இராது.

கோபத்தை தூண்டுகிற செயலுக்கு அறிவோட எதிர்வினை இருக்குமானால் அது சரியாகவே இருக்கும். அதுக்காக சில அடிதடி காரியங்களில இறங்கினாக்கூட அதை நல்லது கெட்டது சொல்ல முடியாது. அந்த மாதிரி செயல்களும் உலகத்தில சில சமயம் வேண்டி இருக்கு.

சிலதை அடைய நினைக்கிறோம். சிலது இப்படி இப்படி இருக்கணும்ன்னு நினைக்கிறோம். அது காமம். அது அப்படி நடக்காம போனால் நமக்கு 'ப்ரஸ்ட்ரேஷன்' - நிராசை - உண்டாகிறது. அதற்கு காரணமா இருந்த நபர் மேலே கோபம் வருகிறது. ஆரம்பநிலையிலேயே காமம் இல்லைன்னா நடக்காத விஷயத்தால மன பாதிப்பும் வராது; கோபமும் வராது. அதனால ஆசையே கோபத்துக்கு காரணம் என்கிறது உறுதி. நம்மை கோபப்பட வைக்கிறதே சிலருக்கு பொழுது போக்கு. சென்சிடிவ்வா இருக்கிற நபரை வேணும்ன்னு கிளப்பி விட்டுக்கொண்டு இருப்பாங்க. எது அவரை தூண்டிவிடும்ன்னு அவங்களுக்கு நல்லாத்தெரியும். 'ட்ரிகர் பாய்ன்ட்' என்பாங்க. கொளுத்திவிட்டு அவங்க பாட்டுக்கு போயிட்டே இருப்பாங்க. இவரோ நாள் முழுக்க பொங்கிகிட்டு இருப்பாரு. கோபப்பட வைக்கிறவங்களை என்ன செய்யறது? நாம கோபப்படாம இருக்கிறதுதான் அவங்களுக்கு நல்ல தண்டனை! அவங்களோட எதிர்பார்ப்பை முறிக்கிறோம் இல்லையா?

ம்ம்ம்ம் ..... சமீபத்திய உதாரணம் ஒண்னு சொல்லறேன். ஒரு குழுவிலே ஒத்தர் தவறுதலா மத்தவங்களுக்கு அனுப்பற அஞ்சல் ஒண்ணை காபி போட்டுடறார். இங்கே தமிழ் வாசல்லே அங்கே போய் நான் எழுதின கட்டுரையை படிங்கன்னு இங்கே இலவச விளம்பரம் ..... பாத்தீங்களா இப்பதானே கோபப்படறது தப்புன்னு பேசிகிட்டு இருக்கோம்?.... போடறோமே அப்படிக்கூட இல்லை.
அதுக்கு லூசுத்தனமா இன்னொருத்தர் பொதுவா மட்டுறுத்தருக்கு புகார் மடல் அனுப்பறார். சம்பந்தமில்லாம குழு மடல் போடறாங்க பாருங்க, கண்டிங்க ன்னு. என்னோட போதாத நேரம் சும்மா இருக்காம, "ஏன்யா, மாடரேடருக்குன்னு குறிச்சு மடல் எழுதினா அதை மாடரேட்டருக்கு அனுப்ப வேண்டியதுதானே? இங்கே பொதுவா ஏன் போடறீங்க? தப்பா போட்டுட்டீங்கன்னா அதேதான் அவரும் செஞ்சு இருக்காரு" ன்னு எழுதிட்டேன். கோபம் பொத்துகிட்டு வந்துச்சு போல! கட்ட பொம்மன் ஸ்டைலிலே அர்ச்சனை செய்து தனி மடல் அனுப்பினார். அதிலே எழுதி இருந்த ஒரே பதில் சொல்லக்கூடிய விஷயம் மாடரேட்டருக்கு மெய்ல் ஐடி இருக்கா என்கிறதுதான். "யாரு மாடரேட்டர்ன்னு கூட தெரியாம ஒரு குழுவிலே இருக்கீங்களா?" ன்னு பதில் எழுதினேன். மத்த விஷயங்களை கண்டுக்கலை.

என்னைப்பத்திய விவரங்களை வலையிலே நல்லா தேடி இருப்பாரு போல இருக்கு. "நீ போலி. என் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேங்கிற" ன்னு இன்னொரு தாக்குதல்! "உங்களை மாதிரி பெரியவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல நேரம் இல்லை. என்ன வேணா நினைச்சுக்குங்க, எனக்கு பிரச்சினை இல்லை" ன்னு பதில் போட்டேன். அத்தோட சமாசாரம் க்ளோஸ்! அந்த மகானுபாவன் செஞ்ச ஒரே நல்ல விஷயம் என்னை திட்டி தனிமடலா அனுப்பினது! அதையே பொதுவா அனுப்பி இருந்தா எனக்கு "வேண்டியவங்களோ" அவருக்கு "எதிரிகளோ" நாலு பேர் இந்த பக்கம் வாதாட, நாலு பேர் அந்தப்பக்கம் வாதாட டிஎன்ஏ பத்திய ஆராய்ச்சி எல்லாம் நடந்திருக்கும்! சூழ் நிலையே இன்னும் கெட்டுப்போயிருக்கும்!

விடுங்க! கவனிக்க வேண்டியது என்ன ப்ரொவொகேஷன் -தூண்டுதல் - வந்தாலும் எதிர்வினையை சரியாக கையாளுவது என்கிறதுதான். நடக்கிற விவாதங்களில -குறிப்பா வலையில - எனக்குத் தெரிஞ்சு என்னிக்கும் யாரும் எதையும் "ஆமாய்யா, நீ சொல்லறது கரெக்டு" ன்னு தன் நிலைப்பட்டை மாத்திண்டதா தெரியலை. வாதம் எல்லாம் பிடிவாதம்தான். தன்னோட புத்திசாலித்தனத்தை காட்டத்தான் பலரும் விரும்புகிறாங்க. தான் சொல்கிற தப்புன்னு தெரிஞ்சாலும், ஒண்ணு அதை கண்டுக்காம அடுத்த சண்டை பாய்ண்டுக்கு போயிடுவாங்க, இல்லை புதுசா ஆரம்பிச்சுடுவாங்க! அப்படி இல்லாம இருக்கிறவங்க அபூர்வமாகத்தான் தென்படுறாங்க!

அப்படி ஒத்தர் சமீபத்தில தென்பட்டார். அவர் ஏதோ தப்பா எழுதிட இன்னொருத்தர் அதை கண்ணியமா சுட்டிக்காட்டினார். இவரும் "ஆமாம், நான் தப்பா எழுதிட்டேன்" ன்னு ஒத்துகொண்டார். மேலே விவாதம் தொடர்ந்தது. எனக்கு ஆச்சரியம். இவருக்கு பாராட்டி தனிமடல் போட்டேன்! "ஆமாம், ஒரு தப்பை பண்ணிட்டு சரி செய்யாம அதோட என் மீதி வாழ்கையை எப்படி வாழுவேன்?” ன்னு பதில் போட்டார். இவங்க மனுஷங்க! இந்த லெவலுக்கு நாம் போயிட்டா பிரச்சினையே இராது. அப்படி நாம போகலியே? என்ன செய்யிறது?
(தொடரும்)

Monday, December 19, 2011

உரத்த சிந்தனை - மன்யு

நமஸ்தே ருத்ர மன்யவ ... என்று ஆரம்பிக்கிறது ஸ்ரீருத்ரம். ருத்திரனுடைய கோபத்துக்கு நமஸ்காரமாம்! ருத்திரனுக்கு இல்லை! பலரும் மற்றவர்களுடைய கோபத்துக்குத்தான் பயப்படுகிறார்கள். என் தியேட்டர் உதவியாளர்களும் என் கோபத்துக்குத்தான் பயப்படுகிறார்கள். ஒரு வேலையை சரியாக செய்து விடுவோம் என்று தோன்றுவதில்லை. சரியா செய்துடுவோம்; இல்லைன்னா இவன் வந்து கத்துவான் என்றே வேலை செய்கிறார்கள். சரியாக ஒரு வேலையை செய்வது தன் கடமை, அல்லது இயல்பாக இருக்க வேண்டியது என்று தோன்றுவதில்லை. :-( மற்றவரின் கோபத்துக்குக்காக செய்கிறார்கள். கோபித்துக்கொள்ளும் நபர் இல்லை என்றால் சில நாட்களிலேயே வேதாளம் முருங்கை மரம் ஏறிடும்! கோபம் நல்லதா கெட்டதா? இது கெட்டது என்றே பலருடைய அபிப்ராயம்! ஆனால் இதுக்கு பயன் இருக்குன்னு சொல்கிறவர்களும் இருக்காங்க! பாருங்களேன், மேலே சொன்ன உதாரணத்தையே! நல்ல விதமாக சொல்லியும் பாத்தாச்சு. வேலை ஒழுங்காக நடக்கிறதில்லை. ஒரு கத்து கத்தினா அப்புறம் வேலை ஒழுங்காக நடக்கிறது. கோபப்படலாமா வேண்டாமா என்கிறது நம்ம சாய்ஸ்லேயா இருக்கு? மத்தவங்களே அதை நிர்ணயிக்கிற மாதிரி இருக்கு! கோபம் ஒரு ரிப்லக்ஸ்! அனிச்சை செயல். யாரும் கோபப்படணும்ன்னு கோபப்படறதில்லை. அது தானா வருது. அதை தூண்டுகிற விஷயங்கள் இருக்கு. நபர்கள், செய்கைகள், சூழ்நிலைகள்.... சிலரை பாத்தாலே கோபம் பொத்துகிட்டு வருது! அவரை பார்க்கிறப்ப வேற சில நினைவுகளும் தூண்டப்படறதே காரணம். சிலரோட செய்கைகள் கோபத்தை தூண்டுது. அதாவது அவரை சாதாரணமா பார்க்கிறப்ப நாம் சிரிச்சு பேசாட்டாலும் சும்மா இருப்போம். ஆனா அவரோட செய்கைகள் நமக்கு கோபத்தை வர வழைச்சுடும். இந்த கோபத்துக்கு காரணம் என்ன? இச்சை - காமம் என்பதே காரணம். நமக்கு இது இது இப்படி இப்படி நடக்கணும் என்று ஒரு இச்சை இருக்கும். அது சரியா தப்பா என்கிறது இப்ப முக்கியமில்லை. பலருக்கும் righteous anger என்பது உண்டு. ஒரு ஆசாமி தான் செய்ய வேண்டிய வேலையை செய்யவே இல்லை என்றாலோ அல்லது ஒழுங்கா செய்யாட்டாலோ மேலாளருக்கு கோபம் வருகிறது நியாயம்தானே? அந்த வேலையை செய்து வாங்க வேண்டியது அவருடைய பொறுப்பு இல்லையா? சிலருக்கு தர்மத்தின் மீது அலாதி பற்று இருக்கிறது. அதை மீறி நடப்பவரை கண்டால் கோபம் வருகிறது. நீ செய்யறது சரியில்லைன்னு அவங்ககிட்டே சண்டைக்கு போவாங்க. உனக்கு என்ன ன்னு அவங்க திருப்பி கேட்க சண்டை வளரும். ஸ்ரீ ராம க்ருஷ்ணரை பார்க்க அவரோட பல சீடர்களும் வருவாங்க. ஒரு நாள் கங்கையை கடக்கும் படகு ஒன்றில அடிதடி பிரச்சினை நடந்ததாக கேள்விப்பட்டார். அவரை பார்க்க வந்த சீடர் ஒத்தர்தான் அதிலே முக்கிய நபர். அவர் வந்து வணங்கிய பிறகு அவரை படகிலே ஏதோ அடிதடி நடந்ததாமே ன்னு கேட்டார். ஆமாம், சிலர் ஒரு பெண்ணை வம்புக்கு இழுத்தார்கள். அவர்களை போட்டு புரட்டி எடுத்துவிட்டேன் ன்னார். அவங்களை அடிக்க தண்டிக்க நீ யார்? அதற்காக அதிகாரிகள் இருக்கிறார்கள். அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவங்க கடமை. நீ ஏன் அதை செய்கிறாய்? என்று கடிந்து கொண்டார். அவர் போன பிறகு அதே படகில் பயணம் செய்த இன்னொருவர் வந்தார். அடிதடி பற்றி அவரிடம் விசாரித்தார். ஒரு பெண்ணிடம் சிலர் வம்பு செய்யப்போக ஒரே அடிதடி ரகளை ஆகிவிட்டது. இரண்டு கோஷ்டியாக பிரிந்து அடித்துக்கொண்டார்கள் என்றார். "நீ என்ன செய்தாய்?” "நான் என்ன செய்ய இயலும்? சும்மாயிருந்தேன்.” "அதெப்படி? கண் முன் ஒரு அநியாயம் நடக்கிறது; நீ பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாயா? நீயும் கண்டித்து இருக்க வேண்டாமா?” என்று கடிந்து கொண்டார். என்னய்யா இது? ஏறுக்கு மாறா இருக்கேன்னு ஆச்சரியப்பட்டா, ஆமாம், அன்னைக்கு அவர் கூட இருந்து இதை பார்த்தவங்களும் அப்படித்தான் நினைச்சு குழம்பினாங்க! விளக்கத்தை அப்புறம் பார்க்கலாம். கோபம் நல்லதா கெட்டதா என்பதை அதன் விளைவுதான் தீர்மானிக்கணும். (தொடரும்)

Wednesday, December 14, 2011

பஞ்சதஶீ, 1-13


ப்ரதிப³ந்தோ⁴'ஸ்தி பா⁴தீதி வ்யவஹாரார்ஹ வஸ்துநி |
 தம்° நிரஸ்ய விருத்³த⁴ஸ்ய தஸ்யோத்பாத³நமுச்யதே || 13||

 வியகாரத்தில் வஸ்துக்கள் '" இருக்கின்றன" ,  'காட்டுகின்றன'. இதற்கு இடையூறு உத்பாதனம் எனப்படும். இந்த இடையூறு வஸ்துக்களை இல்லாததாகவும், காட்டவில்லை என்றும் தோற்றம் அளிக்கச்செய்கிறது.


 

Friday, December 9, 2011

பஞ்சதஶீ, 1-12


அத்⁴யேத்ரு«வர்க³மத்⁴யஸ்த² புத்ராத்⁴யயந ஶப்³த³வத் | 
பா⁴நே'ப்யபா⁴நம்° பா⁴நஸ்ய ப்ரதிப³ந்தே⁴ந யுஜ்யதே || 12|| 

ஒரு தந்தை தன் மகன் பலருடன் சேர்ந்து வேத அத்யயனம் செய்யும் போதும் அடையாளம் கண்டு கொள்கிறார். ஆனால் அந்த அத்யயனத்தில் உள்ள சிறு விசேஷங்களை மற்றவர் செய்யும் அத்யயனத்தால் அறியாமல் இருக்கிறார். அது போலவே ஆநந்தமும். அறியப்பட்டும் அறியப்படாமல் இருக்கிறது.

Thursday, December 8, 2011

அன்பு...


கணவன்: ஏன் நான் செய்த தப்பை எல்லாம் இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறாய்? எல்லாம் மன்னிச்சு மறந்தாச்சுன்னு நினைச்சேனே?
மனைவி: மன்னிச்சு மறந்தாச்சுதான். ஆனா நான் அப்படி மன்னிச்சு மறந்தாச்சுன்னு நீ மறக்கக்கூடாது. அதான்...


பிரார்த்தனை செய்பவன்: கடவுளே, நான் செய்த பாபங்களை எல்லாம் மறந்துடு!
கடவுள்: எந்த பாபம்? அதெல்லாம் அப்பவே மறந்துட்டேன். நினைவு படுத்து பார்க்கலாம்.....

Tuesday, December 6, 2011

பஞ்சதஶீ, 1 - 11


அபா⁴நே ந பரம்° ப்ரேம பா⁴நே ந விஷயஸ்ப்ரு«ஹா | 
அதோபா⁴நே'ப்யபா⁴ததா'ஸௌ பரமாநந்த³தாத்மந​: || 11|| 

ஆத்மாவின் பரம ஆநந்தம் அறியப்படவில்லை எனில் அதன் மீது அன்பு இராது இல்லையா? (ஆனாலும் அன்பு இருக்கிறது.) அதை அறியவில்லையானால் உலக பொருட்கள் மீது ஈர்ப்பு இராது. (அதுவும் நமக்கு இருக்கிறது) ஆகவே இந்த ஆநந்த நிலையானது வெளிப்படுத்தப்பட்டாலும் உண்மையில் சரியாகச் சொல்லப்போனால் வெளிப்படுத்தப்படாதாக சொல்கிறோம். 

Monday, December 5, 2011

பஞ்சதஶீ 1 -10


 
 இத்த²ம்° ஸச்சித்பராநந்த³ ஆத்மா யுக்த்யா ததா²வித⁴ம் |
 பரம்° ப்³ரஹ்ம தயோஶ்சைக்யம்° ஶ்ருத்யந்தேஷூபதி³ஶ்யதே || 10|| 

இப்படியாக யுக்த ரீதியாக தனி ஆத்மாவே (ஜீவாத்மாவே) இருப்பு, அறிவு, ஆநந்தம் என நிரூபிக்கப்படுகிறது. இதே போலத்தான் பரமாத்மாவும். இந்த இரண்டின் அடையாளமும் உபநிஷத்துக்களில் கற்பிக்கப்படுகின்றன.

Friday, December 2, 2011

பஞ்சதஶீ 1-9

 
 தத்ப்ரேமாத்மார்த²மந்யத்ர நைவமந்யார்த²மாத்மநி | 
அதஸ்தத்பரமந்தேந பரமாநந்த³தாத்மந​: || 9||

 தனக்காக (ஆத்மாவுக்காக) பிறர் மீது அன்பு செலுத்தப்படுகிறது. ஆனால் தன் மீது வைக்கும் அன்பு பிற எதற்கும் இல்லை அல்லவா? ஆகவே ஆத்மா மீது வைக்கும் அன்பே மிக உயர்ந்தது. ஆகவே தான் (ஆத்மா) என்பது ஆநந்தத்தின் உச்சம்.

வினாக்களும் அதை ஒட்டிய உரத்த சிந்தனைகளும்..

உரத்த சிந்தனையை ஒட்டிய வினாக்களும் அதை ஒட்டிய உரத்த சிந்தனைகளும்..
 //எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையும் தரலாம்: இந்த நிலை மனது ஏற்று கொள்ள மன பக்குவம் வேண்டும் .எப்படி மன பக்குவம் வரும் திவா சார்? //

 மனசுக்கும் புத்திக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சஞ்சலம் ஆகிறது மனசு. ஸ்திரமா இருக்கிறது புத்தி. புத்தியால விசாரிச்சு எது வேணுமானா எப்படி வேணுமானா நடக்கும்ன்னு புரிந்த பிறகு மனசு இந்த மாதிரி நிலை வரும் போது ஏத்துக்கும். எதிர்பார்ப்பாலதான் - அது இப்படித்தான் நடக்கனும் என்று நினைக்கறதால்தான்- ப்ரஸ்ட்ரேஷன் வருகிறது.

 // அப்புறம் நாம் என்று நம்மை மற்றவர்கள் நினைப்பதே நமது நடை ,உடை பாவனைகள் மற்றும் நமது எண்ணம் சொல் செயல்கள் தானே திவா சார்? //

 ம்ம்ம்ம் அப்படி இல்லை. நாம்ன்னு மத்தவங்க நினைக்கிறது அவங்களோட இன்டர்ப்ரடேஷன். கவர்ச்சிகரமா உடை அணிகிற ஒத்தரை பார்க்கிறப்ப விகாரமா தோணுவது சரி. சாதாரணமா உடை அணிஞ்சாலும் அப்படி தோணினா? அழகா உடை அணிஞ்சா ஒத்தர் நல்லா இருக்குன்னு நினைக்க்லாம். ஒத்தர் நம்மை கவரத்தான் இப்படின்னு நினைக்கலாம். இன்னொருத்தரை கவரன்னு இன்னொருவர் நினைக்கலாம். அதனால பார்க்கிற பார்வையே முக்கியம்.

 // இதை எப்படி ஒழுங்கு படுத்துவது ?அல்லது எப்படி இருந்தால் சிறப்பாக இருக்கும் ?//
 எண்ணம் சொல் செயல்ன்னு நீங்க சொன்னதால இப்படி பார்க்கலாம். சாதாரணமா எதை எண்ணுகிறோமோ, அதை சொல்லுகிறோமோ, அதை செய்கிறோம் என்கிறாங்க்க. வேதமும் இப்படியே சொல்லுது. யத் மனசா த்யாயதி, தத் வாசா வததி, தத் கர்மணா கரோதி... இது நல்லவங்களைப்பத்தி சொன்னது. நடைமுறையில நிறையவே வித்தியாசம் இருக்கு. எதை நினைக்கிறோமோ அத அப்படி சொல்லறதில்லை. எப்படி சொன்னா எபக்டிவ்வா இருக்கும் யோசிச்சு அப்படி சொல்லறோம். சொன்னதை அப்படியே செய்யறோமா? அதுவும் இல்லை. இந்த இடை வெளியை நீக்கினா நாம உருப்படலாம். அகத்தின் அழகுன்னு சொன்னபடி எப்ப நம்ம மனசு சுத்தமாக இருக்கோ அது நம்மோட நடை உடை பாவனைகளில நல்லாவே வெளிப்படும். பாக்கிறவர் மனசால அது அதிகம் பாதிக்கப்படாது. நல்ல சாதுக்கள் எல்லாரையும் இப்படித்தான் கவருகிறாங்க. மேலே கேளுங்க. யோசிக்கலாம்.

Wednesday, November 30, 2011

நீ இப்படித்தான் இருக்கணும்....


 நாம எப்படி இருக்கணும் நினைக்கிறதை விட மத்தவங்க எப்படி இருக்கணும்ன்னு சொல்கிறவர்களே அதிகமா இருக்காங்க! எந்த பஸ், பதிவு பாத்தாலும் இதுவே அதிகமா இருக்கு.
ஏன் இப்படி?
அட்வைஸ் எப்பவுமே சுலபம்; கடைப்பிடிக்கறதுதான் கஷ்டம்!
அதனால எப்பவும் அட்வைஸ் வாரிவழங்கறோம். நாம என்ன செய்யணும்ன்னு யோசிக்கிறதில்லை. அது கஷ்டமாச்சே!
முகம் தெரியாத ஆளைக்கூட ஒரு கட்டம் கட்டி இப்படித்தான் இருப்பார்ன்னு ஒரு கற்பனையை வளத்துக்கிறோம். அந்த கற்பனைக்கு எதிரா நிதர்சனம் இருந்தா அதை ஜீரணிக்க முடியறதில்லை. வலை உலகத்திலே இதோட தாக்கம் அதிகமாகவே இருக்கு. ஒருவர் தன்னை எப்படி காட்டிக்க நினைக்கிறாரோ அப்படியேத்தான் மத்தவங்களும் நினைக்க வேண்டி இருக்கு. உண்மையா இல்லையான்னு யார் கண்டார்கள்?

கொஞ்சம் நல்ல பையனா இருக்கறது ரொம்பவே கஷ்டம்.

ஆரம்பத்தில நல்ல பையன்னா கிண்டல் வரும். பெரிய இவரு... ன்னு எல்லாம். நாளாக ஆக நாம் அப்படியே நிலைச்சு விட்டா "சரி, இந்தப்பய உருப்பட மாட்டான், இப்படித்தான் இருப்பான்"னு ஒரு புள்ளி குத்திடறாங்க. இப்படி புள்ளி குத்தினப்பறம் கொஞ்சம் இப்படி அப்படி நகந்தா போச்சு! நீ இப்படி பண்ணலாமா?ன்னு ஆட்சேபணை வரும்!

ஏண்டான்னு கேட்டா இல்லை இல்லை நீ இப்படித்தான் இருக்கணும் ன்னு அட்வைஸ் வரும்!

யாருமே எப்போதுமே ஒரே மாதிரி இருக்கிறதில்லை. நாளுக்கு நாள்- ஏன் ஒரே நாளிலே கூட மணிக்கு மணி- மாறிட்டேத்தான் இருக்கிறோம். இந்த மாற்றம் என்கிறது நல்லதுக்குத்தான் இருக்கணும்ன்னும் ஒண்ணுமில்லை. ஹாஸ்டல்லே இருந்தப்பக் கூட மத்தவங்களை பொருட்படுத்தாம சந்தியாவந்தனம் செய்து கொண்டு இருந்தவரை 10வருஷம் கழிச்சு பார்த்தப்ப ஷாக்தான் மிஞ்சினது!

மாற்றமே இயற்கை. இந்த மாற்றத்தை நல்லதா இருக்கப் பண்ணுவதுதான் நாம் செய்யக்கூடியது. அப்ப அதை வளர்ச்சின்னு சொல்லலாம்.

சரி நம்மைப் பொருத்தவரை அப்படி செய்துடலாம்; மத்தவங்க சமாசாரம் என்ன?

எப்பவும் ஒவ்வொருத்தரையும் இருக்கிறபடியே பார்த்து பழகறதே உத்தமம்.

குழப்புதா?

ஒத்தர் இப்படின்னு வெளிக்காட்டிக்கொள்கிறார். சரி, அப்படியே இருக்கட்டுமே? மத்தபடி தெரிய வராத வரைக்கும்! அப்படியே நம்பச்சொல்லலை. நம்பிக்கைக்கு கேள்வி வராத வரை அதைப்பத்தி யோசனை வேண்டாம்.
ஆனா நம்ம மனசு அப்படி இருக்கறதில்லை. இவர் இப்படின்னு ஒரு கணிப்பு, ஒரு வட்டம் வரைஞ்சு உள்ளே போட்டுவிடும். அதுதான் அதோட இயற்கை குணம். அப்படி ஒரு வரைகோட்டுப் படமாவது இல்லாம அதால வேலை செய்ய முடியாது. சொல்லவே தேவை இல்லாமல் இந்த மாதிரி கணிப்புகளும் அநேகமா இருக்கும். ஐம்பது பேர் இருந்தா ஐம்பத்தோரு கணிப்பு இருக்கும்! அத்தனையிலும் எது உண்மைக்கு கிட்டே வருதுன்னு பாத்தா சொல்லறது ரொம்ப கஷ்டம். அனேகமா எல்லாமே தப்புதான்.
ஏன் தப்பு?
மனிதன் மாறிகிட்டே இருக்கறதால தப்பு.
இதுக்குத்தான் உள்ளதை உள்ளபடி பார்க்கணும்ன்னு சொன்னது.
இவர் இன்ன மாதிரி சமயத்துல எப்படி நடந்துப்பார்ன்னு சில சமயம் நமக்கு தெரிய வேண்டி இருக்கு. ஏன்னா நம்மோட நடத்தையை அதை வைத்து நிர்ணயிக்க வேண்டி இருக்கு. உதாரணமா, இவர்கிட்டே இன்ன உதவி கேட்கணும்; எப்போ எப்படி பேசினால் அது வெற்றிகரமா முடியும்? அவர் ஜம்முன்னு சாப்டு, பீடா போட்டுகிட்டு இருக்கறப்பவா? பூஜை முடிச்சு வரப்பவா? ஆபீஸ் வேலை எல்லாம் முடிச்சு அப்பாடான்னு நிம்மதியா வீட்டில இருக்கறப்பவா? இதை முடிவு செய்ய அவரைப்பத்தின இமேஜ்தான் உதவும்.
அனேகமா இப்படி நடந்துப்பார், இப்படி பேசினா சரிப்படும்ன்னு புத்தி ஒரு திட்டம் போடும். இப்படி திட்டம் போடறப்பவே இந்த 'அனேகமா' என்கிறதை நல்லாவே நினைவு வைத்துக்கொள்ளணும்! அதாவது அப்படி நடக்கலேன்னாலும் ஆச்சரியப்படக்கூடாது!

நாம மாறிகிட்டே இருக்கோம்ன்னு நல்லா புரிஞ்சவங்களுக்கு இது புரியும். இல்லைன்னா "அவளா சொன்னாள்? இருக்காது, அப்படி ஒன்றும் நடக்காது, நடக்கவும் கூடாது.... நம்ப முடியவில்லை" ன்னு பாடிகிட்டே இருக்க வேண்டியதுதான். இன்ன தேதிக்கு இவர் இப்படி இருக்கார். சரி அடுத்து என்ன செய்யலாம் ன்னு யோசிக்கிறவங்களுக்கு அதிகம் பிரச்சினை இராது.
சுருக்கமா சொல்ல "இப்படித்தான் நடக்கும்ன்னு எதிர்பார்க்காதீங்க! நடந்தா நல்லது, இல்லைன்னா அடுத்ததை பார்க்கலாம்.”
கீதையும் இதைத்தான் சொல்லித்தோ? எங்கேயோ ஆரம்பிச்சு ரிலேட்டடா வேற எங்கேயோ போயிடுத்து. போகட்டும். அதானே உரத்த சிந்தனை?!

Tuesday, November 29, 2011

எப்படி இருக்கணும்?


அரபு ஆன்மீக பெரியவர் சாடி சொன்ன கதை.
ஒரு மனிதன் காட்டின் வழியே போய்க்கொண்டிருந்தான். அங்கே ஒதுக்குப்புறத்தில் ஒரு நரியை பார்த்தான். அதற்கு இரண்டு கால்கள் இல்லை. இது எப்படி உயிர் வாழ்கிறது என்று அதிசயித்தான்.
அப்போது இரையை வாயில் கவ்வியபடி ஒரு புலி வந்தது. மனிதன் பதுங்கிக்கொண்டான். புலி இரையை கீழே போட்டுவிட்டு வயிறார சாப்பிட்டுவிட்டு மீதியை நரிக்கு விட்டுவிட்டுப் போய்விட்டது. நரி இந்த மீதியை உண்டு பசியாறியது.
இதை பார்த்த மனிதன் "எனக்கு பெரிய உண்மை புரிந்துவிட்டது; யார் எங்கிருந்தாலும் ஆண்டவன் உணவிடுகிறான். நானும் இந்த நரி போல் சும்மா இருப்பேன். எனக்கும் உணவு கிடைக்கும்" என்று நினைத்தான்.
ஒரு மரத்தடியில் சும்மா படுத்துக்கிடக்கலானான். பசி கொடுமையால் தவித்தான். உணவேதும் கிடைக்கவில்லை. விடாப்பிடியாக சும்மாவே கிடந்தான்.
பின் பசி பொறுக்காமல், “கடவுளே, ஏன் எனக்கு உணவிடவில்லை?” என்று கத்தினான். அசரீரி கேட்டது: “முட்டாளே! ஏன் நரி போல இருக்க நினைக்கிறாய்? புலி போல இரு!”

Monday, November 28, 2011

பஞ்சதஶீ, 1-8


இயமாத்மா பராநந்த³​: பரப்ரேமாஸ்பத³ம்°யத​: | 
மா ந பு⁴வம்° ஹி பூ⁴யாஸமிதி ப்ரேமாத்மநீக்ஷ்யதே || 8|| 

இந்த பேரறிவே ஆத்மா ஆகும். இது பரம ஆநந்தத்தில் இருக்கிறது. ஏனெனில் இது அன்பின் இலக்காக இருக்கிறது. சாதாரணமாகவே மனிதர் யாவரும் தன் மீது அன்பு கொண்டுள்ளனர். தான் முடிவில்லாமல் இருக்க வேண்டும்; எப்போதும் இருக்க வேண்டும் என்று யாவரும் நினைக்கின்றனர். 
 

ஏன் இன்னும் உரை?


ஒரு இறை அடியார் ஒரு ஊருக்கு வந்து சேர்ந்தார். முதலில் அவரது உரையை கேட்க பெரிய கூட்டம் கூடியது. நாளாக ஆக கூட்டம் குறைந்து யாரும் வருவதே நின்று போயிற்று.

இருந்தாலும் அவர் தன் தினசரி பிரசங்கத்தை நிறுத்தவில்லை.

இதை கவனித்த ஒரு யாத்ரி அவரை கேட்டார். ஏன் இன்னும் உரை நிகழ்த்துகிறீர்கள்? யாரும் வருவதில்லையே? இறை அடியார் சொன்னார், “முதலில் நான் மக்களை மனம் மாற்ற உரை ஆற்றினேன். இப்போது அவர்கள் என்னை மனம் மாற்றாமலிருக்க உரை ஆற்றுகிறேன்!”

"யார் கூட இருக்கோம்ன்னு ஜாக்கிரதையா இருக்கணும்ப்பா!"

Thursday, November 24, 2011

பஞ்சதஶீ 1 - 7


மாஸாப்³தா³யுக³கல்பேஷு க³தாக³ம்யேஷ்வநேகதா⁴ | 
நோதே³தி நாஸ்தமேத்யேகா ஸம்°விதே³ஷா ஸ்வயம்°ப்ரபா⁴ || 7|| 

மாதம், வருடம், யுகம், கல்பம், இறந்த காலம், எதிர் காலம் எல்லா காலத்திலும் அறிவு இருக்கவே இருக்கிறது. அது உதிப்பதுமில்லை; அஸ்தமிப்பதுமில்லை. எப்போதும் தானே ஒளிர்வதாக இருக்கிறது. 

Wednesday, November 23, 2011

கதை - மீண்டும்


கொஞ்ச நேரம் யோசித்து எழுதியது. யோசிக்க யோசிக்க இன்னும் தோன்றலாம்!
-------------
ஒரு பெரிய பண்டிதர் ஆன்மீக குரு ஒருவரை தேடி வந்தார்.

"நீங்கள் நூல்களில் இல்லாத பெரிய விஷயங்களைக்கூட காட்டிக்கொடுக்கிறீர்களாமே?”

குரு புன்னகைத்தார். (பெரியவர்கள் பல விஷயங்களை வெளியில் காட்டிக்கொள்வதில்லை.)

பண்டிதர் விடவில்லை. "எனக்கு நீங்கள் கட்டாயமாக ஏதேனும் காட்டிக்கொடுக்க வேண்டும்.” (ஒரு குருவிடம் பாடம் கேட்கும் முறை இதுவல்ல.)

"சரி, இப்போது மழைக் காலமில்லையா? இன்று மழை வரும் போல இருக்கிறது. மழை பெய்யும் போது மைதானத்தில் சென்று கைகளை உயர தூக்கிக்கொண்டு நில். ஏதேனும் புரியலாம்.”

(ஏனிப்படி செய்யசொன்னார்? இயற்கையோடு இயைந்து வாழ கற்க வேண்டும். சொல்லுவதை செய்கிறாரா என சோதிக்கவும் இருக்கலாம்.)

அடுத்த நாள் பண்டிதர் வெகு கோபமாக வந்தார்.

"என்ன ஆயிற்று?”
"நீங்கள் சொன்னது போல மழையில் நேற்று மாலை நின்றேன்.”
"ம்?”
"முழுக்க நனைந்து போனேன். எல்லாரும் சிரித்தார்கள். நான் என்னை ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!”
(ஆன்மீகத்தில் கவனம் செலுத்தவேண்டுமானால் முதலில் கரும்பலகையை துடைக்கவேண்டும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை சரி செய்து கொள்ளவேண்டும். படிப்பது எல்லாம் ஒருவனை ஞானியாக்காது. இது வரை கற்றதெல்லாம் ஆன்மீகத்துக்கு உதவாமல் போகலாம் என்று புரிய வேண்டும். )
"பரவாயில்லையே? முதல் நாளே பெரிய விஷயம் புரிந்துவிட்டதே!”
(ஆன்மீகத்தை புரியாதவன் கற்றும் கற்றவனல்ல. )

Tuesday, November 22, 2011

பஞ்சத³ஶீ 1 -6


ஸபோ³தோ⁴ விஷயாத்³பி⁴ந்நோ ந போ³தா⁴த் ஸ்வப்ந போ³த⁴வத் |
ஏவம்° ஸ்தா²ந த்ரயே'ப்யேகா ஸம்°வித்தத்³வத்³தி³நாந்தரே || 6||

சுசுப்தியில் அறிவு என்பது அஞ்ஞானத்தில் இருந்து வேறானது. ஆனால் கனவில் அது தனித்து நின்று கனவை காண்பது போல தன்னிலிருந்து வேறானது அல்ல. ஆகவே அறிவானது கனவு முதலிய முக்காலத்திலும் இருக்கிறது.