Pages

Friday, October 29, 2010

மோக்ஷம்:



विवेकख्यातिरविप्लवा हानोपायः ।।26।।

விவேகக்²யாதிரவிப்லவா ஹாநோபாய​: || 26||

விவேகக்²யாதி: = ப்ரக்ருதி சம்பந்தமில்லாத புருஷனை சாக்ஷாத்கரிப்பது; அவிப்லவா = (மித்யாக்ஞான வாசனையால்) தடை செய்யப்படாத; ஹாந உபாய​: = மோக்ஷத்துக்கு காரணமாகிறது.
ப்ரக்ருதி வேறு புருஷன் வேறு என்று அறிவதே விவேகக்யாதி. இது சாஸ்திர அப்யாஸத்தால் உண்டாகும். இருப்பினும் வெகு கால பழக்கத்தால் இது நாசமாக வாய்ப்பு இருக்கிறது. ஆகவே விவேக க்யாதி ஏற்பட்டதும் இதை அடிக்கடி மனனம் செய்து நிலைநாட்டி விட்டால் எல்லா விஷயங்களிடத்திலும் வைராக்கியம் ஏற்படும். புருஷன் பால் ஈர்க்கப்பட்ட சித்தம் அதையே ஆவ்ருத்தி செய்து வளர்த்துவரும். இந்த த்யான மகிமையால் இயங்கு சக்தியான புருஷ பிரதி பிம்பத்தை அனுபவிக்கலாம். இது வாசனைகளால் ஏற்படும் பொய்யறிவை நாசமாக்கும். பிராரப்தமான சரீரம் தொலைந்து போகும். இனி துக்கமே ஏற்படாத மோக்ஷம் கிடைக்கும்.

Thursday, October 28, 2010

ஹேயத்தின் ஹானம் என்கிற மோக்ஷம்:



तदभावात् संयागाभावे हानं तद्दृशेः कैवल्यम् ।।25।।

தத³பா⁴வாத் = ஸம்°யாகா³பா⁴வே ஹாநம்° தத்³த்³ரு«ஶே​: கைவல்யம் || 25||

தத³பா⁴வாத் = அது நிகழ்வதால் (வாசனையுடன் கூடிய அவித்யை நாசமாவதால்) ஸம்°யாக³= புத்தி புருஷன் சம்பந்த ரூபமான ஹேயத்துக்கு; அபா⁴வ: = நாசம்; ஹாநம்° தத்³ = அந்த ஹானமே த்³ரு«ஶே​: = புருஷனுக்கு; கைவல்யம்= முக்தி ஆகிறது.

வாசனையுடன் கூடிய அவித்யை விவேக - க்யாதியால் நாசமடைகிறது. அவித்தையால் ஏற்பட்ட புத்தி சம்பந்தமும் விலகிவிடுகிறது. அப்போது புருஷன் எத்தகைய சம்பந்தமும் இன்றி தன் சொரூபத்தில் இருப்பான். இதுவே கைவல்யம் என்கிற முக்தி.

Wednesday, October 27, 2010

ஸம்யோகத்துக்கு காரணம்:




  तस्य हेतुरविद्या ।।24।।

தஸ்ய ஹேதுரவித்³யா || 24||

தஸ்ய =அதன் (முன் சொன்ன த்ருச்ய-த்ரஷ்டா ஸம்யோகத்தின்) ஹேது = காரணம்; அவித்³யா = அஞ்ஞானம்.
அந்த காரணம் என்னவென்றால் அஞ்ஞானம்.
புருஷனுக்கும் ப்ரக்ருதிக்கும் நான் என்ற வேறுபாடு தோன்றும் போது அது பிரமை (பிரமம்)[பிரம்மம் இல்லை!] ஆகிறது. இந்த பிரமை உள்ள சித்தம் ப்ரலய காலத்தில் ப்ரக்ருதியில் ஒடுங்கும் (லயமாகும்). சிருஷ்டி காலத்தில் வெளிப்பட்டு புருஷனின் நுகர்பொருள் (போக்யம்) ஆகிறது. இப்படி ஸம்யோகம் ஆகும்போது அவிவேகிக்கு பந்தம் ஏற்படுகிறது. அவித்தை விலகி, அதனால் ஏற்பட்ட ஸம்யோகமும் விலகின விவேகிக்கு பந்தம் ஏற்பட காரணம் இல்லை. அதனால் முக்தி அடைகிறான். அவிவேகிக்கு பந்தம் உள்ளதால், அவித்யையின் வாசனை இருப்பதால் ப்ரக்ருதியில் லயமானாலும் முக்தி ஏற்படாது. விவேகக்யாதி, தர்மமேக ஸமாதி ரூபத்தை அடையும் போதுதான் சித்தம் வறுபட்ட விதை மீண்டும் முளைக்காதது போல வாசனைகள் நீங்கி வளர்ச்சி அடைதலை நீங்கும். அப்போது புருஷன் மட்டுமே இருப்பதால் அந்நிலை மோக்ஷம் ஆகும்.

Tuesday, October 26, 2010

ஸம்யோகம்



स्वस्वामिशक्त्योः स्वरूपोपलब्धिहेतुः संयोगः ।।23।।

ஸ்வஸ்வாமி ஶக்த்யோ​: ஸ்வரூபோபலப்³தி⁴ ஹேது​: ஸம்°யோக³​: || 23||

ஸ்வ (சக்தி) = த்ருஷ்யமாக இருக்கும் தன்மை; ஸ்வாமி ஶக்த்யோ​: = த்ரஷ்டாவாக இருக்கும் தன்மை (இவற்றுக்குரிய யோக்யதை உடைய); ஸ்வரூப = பற்பல வடிவமான புத்தியின் த்ருஷ்ய சொரூபம் , ஸ்வாமியின் த்ரஷ்டா சொரூபம்; உபலப்³தி⁴ = போகம், முக்தி (அபவர்க்கம்) இரண்டின் தோற்றத்துக்கு; ஹேது​: = காரணமாக இருப்பது; ஸம்°யோக³​: = ஸம்யோகம் ஆகும்.

இதுவே பலவாறாக ஸ்வ-ஸ்வாமி பாவம், த்ருஷ்யமாயும், த்ரஷ்டாவாயும் இருத்தல்; போக்யமாயும்- போக்தாவாகவும் இருத்தல் எனப்படுகிறது.

ப்ரக்ருதிக்கோ அதனால் ஏற்பட்ட புத்திக்கோ சுயமாக யோக்யதை ஏதுமில்லை. அவை ஜடமாகும். புருஷன் தன் அருகில் உள்ள புத்தியால் காண்பிக்கப்படும் விஷயங்களை பிரகாசப்படுத்துகிறான். (வெளிச்சம் போட்டுக்காட்டுகிறான்) அதனால் அவற்றுக்கு ஒரு யோக்யதை உண்டாகிறது. அவை நுகர் பொருட்கள் (போகம்) ஆகின்றன. இவற்றால் - இந்த போகங்களால், புருஷன் நுகர்வோன் (போக்தா) ஆகிறான். எப்படி எனில் நுகர்தல் (போகம்) ஏற்பட்டதே புருஷனின் சக்தியால்தான். இப்படி பரஸ்பரம் ஒரு யோக்யதை உண்டாக்கப்படுகிறது. இப்படி எது உண்டாக்குகிறதோ, அந்த காரணமே ஸம்யோகம் ஆகும்.

Friday, October 22, 2010

ஒருவன் முக்தி அடைந்துவிட்டால் ...



कृतार्थ प्रति नष्टमप्यनष्टं तदन्यसाधारणत्वात् ।।22।।
க்ரு«தார்த²ம் ப்ரதி நஷ்டமப்ய நஷ்டம்° தத³ந்ய ஸாதா⁴ரணத்வாத் || 22||

த்ருஷ்யமானது, க்ருதார்த்தம் =முக்தி அடைந்த ஒருவனைக்குறித்து; நஷ்டமபி = நாசமானாலும்; தத³ந்ய = அவனைவிட வேறான; ஸாதா⁴ரணத்வாத் = சாமான்யர்களுக்கு; அநஷ்டம்° = நாசமாகாமல் ஆகும்.

த்ரஷ்டா இருப்பதால்தான் த்ருஷ்யம் இருக்கிறது என்றால் ஒருவன் முக்தி அடைந்துவிட்டால் அவன் பார்த்த பொருட்கள் எல்லாம் அழிந்துவிடும் என்றில்லை. ப்ரக்ருதி ஒன்றுதான் என்றாலும் சீவர்கள் அனேகர். எவன் அனுபவிக்க வேண்டியதை எல்லாம் அனுபவித்துவிட்டானோ, எவன் முக்தியை அடைந்து விட்டானோ அவனுக்கு ப்ரக்ருதியால் ஆக வேண்டியது ஏதுமில்லை. அதனால் அவனைப்பொறுத்த வரை மட்டுமே அவை நாசமாகின்றன. மற்றவர்களுக்கு அவை இருக்கவே இருக்கும். அவர்களுக்கு ப்ரக்ருதி செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருக்கும். முக்தனை பொறுத்த வரை அதனால் பிரயோசனம் ஒன்றுமில்லை.

Thursday, October 21, 2010

த்ருஷ்யம்



तदर्थ एव दृश्यस्याऽऽत्मा ।।21।।
தத³ர்த² ஏவ த்³ரு«ஶ்யஸ்யா''த்மா || 21||

த்³ரு«ஶ்யஸ்ய = த்ருஶ்ய வஸ்துவினுடைய; ஆத்மா = சொரூபம்; தத்= த்ரஷ்டாவின்; அர்த² ஏவ = அபவர்க்கத்தையும் போகத்தையுமே பிரயோஜனமாக உடையது.
த்ரஷ்டாவான புருஷனுக்கு போகம், அபவர்க்கம் என்ற முக்தி ஆகியவற்றை ப்ரக்ருதி உண்டு பண்ணுகிறது. பார்க்கிறவன் இல்லாமல் பார்க்கப்படும் பொருளுக்கு பிரயோசனம் இல்லை. ஆகவே த்ரஷ்டா (பார்க்கிறவன்) இருப்பதால்தான் த்ருஷ்யம் (பார்க்கப்படும் பொருள்) இருக்கிறது.

Wednesday, October 20, 2010

த்ரஷ்டா



द्रष्टा दृशिमात्रः शुद्धोऽपि प्रत्ययानुपश्यः ।।20।।
த்³ரஷ்டா த்³ரு«ஶிமாத்ர​: ஶுத்³தோ⁴'பி ப்ரத்யயாநுபஶ்ய​: || 20||

த்³ரஷ்டா = காண்பவன் (புருஷன்); த்³ரு«ஶி மாத்ர​: = ஞான ஸ்வரூபமாக மட்டும் (உள்ளான்); ஶுத்³தோ⁴'பி =(எந்த மாறுதலும் இல்லாமல்) சுத்தனாக உள்ளான்; ப்ரத்யய =(இருப்பினும்) புத்தியை; அநு பஶ்ய: =அனுசரித்து பார்க்கிறவன் (ஆகிறான்.)

புருஷன்தான் த்ரஷ்டா. இவன் ஞான சொரூபன்; அதாவது புருஷனின் தர்மம், ஞானம் என்று இல்லை; அவனேதான் ஞானம். இவனுக்கு மாறுதல் (பரிணாமம்) இல்லை என்றாலும் புத்திக்கு அவை உள்ளன. சப்தம் முதலான விஷயங்கள் புத்திக்கு எட்டாது போனால் நாம் அவற்றை அறியமாட்டோம். விதிவிலக்காக ஏதோ ஒரு சமயம் மட்டும் ஸம்பிரக்ஞாத ஸமாதியின் காலத்தில் உள்ள ஸூக்ஷ்ம விஷயங்களையும் ஸமாதி கலைந்து எழும் (வ்யுத்தான) காலத்தில் உள்ள ஸ்தூல விஷயங்களையும் புருஷன் அறிவான். ஆகவே புருஷன் வேறு, புத்தி வேறு.
மேலும் புத்தி கர்மம், க்லேசம், வாசனை, இந்திரியம் ஆகியவற்றுடன் சேர்ந்துகொண்டு புருஷார்த்தத்தை உண்டு பண்ணுகிறது. ஆகவே புத்தி பிறருக்காக ஏற்பட்டது, பரார்த்தம் எனப்படும். புருஷன் வேறு யாருக்காகவும் ஏற்படவில்லை. சாந்தம், கோரம், மூடம் என புத்தி முக்குணங்களாக உள்ளது. ஆனால் இந்த புத்தியின் விருத்தியில் புருஷன் பிரதி பிம்பமாக பிரகாசப்படுத்துவானே தவிர அவன் புத்தியைப் போல விஷயத்தை ஒட்டி எந்த மாறுதலையும் அடைய மாட்டான். ஆனால் அந்த விஷய வடிவமாக இருப்பதாக தோற்றம் அளிக்கிறான். இதுதான் 1-4 இல் "வ்ருத்தி ஸாரூப்யம் இதரத்ர" எனப்பட்டது. இருந்தாலும் நடைமுறை சௌகரியத்துக்காக புருஷனை காண்பவனாக (த்ரஷ்டாவாக) பல இடங்களில் சொல்லப்படும்.

Monday, October 18, 2010

லயக்கிரமம்



லயக்கிரமம்: உத்பத்தி ஆன அதே கிரமத்தின் நேர்மாறான கிரமத்தில் லயம் உண்டாகும். அதாவது எது எங்கிருந்து வந்ததோ அதிலேயே லயமாகிவிடும். அதாவது நிலம் நீரிலும்; நீர் அக்னியிலும்; அக்னி வாயுவிலும்; வாயு ஆகாசத்திலும் லயமாகும். ஆகாயம் அது வந்த தமோ குண பிரதானமான அஹம் தத்துவத்தில் லயமாகும்.
இதே போல இந்திரியங்கள் ஒன்றில் ஒன்று லயமாகி அவை வந்த ரஜோ குண பிரதானமான அஹம் தத்துவத்தில் லயமாகும்.
மனசு அது வந்த சத்வ குண பிரதானமான அஹம் தத்துவத்தில் லயமாகும். இந்திரியங்கள் மனதில் லயமாகி அது அஹம் தத்துவத்தில் லயமாகும் என்றும் சிலர் அபிப்பிராயப் படுகிறார்கள்.
அஹம் தத்துவம் மஹத் இலும், அது ப்ரக்ருதியிலும் லயமாகும். இந்த ப்ரக்ருதி நிலையே இயற்கையானதால் இதுவே நித்யம். அதிலிருந்து வருபவை அவற்றின் வேலை முடிந்தபின் லயமாகி விடும் என்பதால் அவை அநித்தியம்.
எந்த நிலையானாலும் முக்குணங்களும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே இவற்றுக்கு உத்பத்தியும் இல்லை நாசமும் இல்லை.
ஒருவர் பல பசு மாடுகளை வைத்து இருக்கிறார். சௌகரியமாக இருக்கிறார். இப்போது இவருக்கு ஏழ்மை இல்லை. பசுக்கள் எல்லாமே ஒரு வேளை நோய் தாக்கி இறந்து போனால் அவர் ஏழ்மை அடைவார். அவரை ஏழை என்பர். ஆனால் அவர் அப்படியேதானே இருக்கிறார்? ஏழ்மை என்பது பசுக்களின் இருப்பை பொறுத்ததே தவிர அவரை பொறுத்ததில்லை. இதே போல குணங்கள் உத்பத்தி ஆகவும் இல்லை: அழியவும் இல்லை. அவை வெளிப்படும்; அல்லது சூக்ஷ்மமாக இருக்கும். அதனால அதன் தற்கால பாதிப்பை பொருத்து ஒருவரது குணம் அழிந்ததாகவோ உத்பத்தி ஆனதாகவோ சொல்கிறோம்.
இப்படி கிரமமாக ஒன்றிலிருந்து ஒன்று தத்வ ரூபமாக மாறுதல்களை அடைகின்றன. கடைசியில் கிடைத்த விசேஷங்கள் 16 உம் அதற்கு மேல் தத்வ மாறுதல் அடையா. ஆனால் அவற்றின் சொரூபம் தர்மம் லக்ஷணம் அவஸ்தை என மாறுதல் அடையும்.

Saturday, October 16, 2010

உத்பத்தி...




  विशेषाविशेषलिङ्गमात्रालिङ्गानि गुणपर्वणि ।।19।।
விஶேஷாவிஶேஷ லிங்க³மாத்ராலிங்கா³நி கு³ணபர்வணி || 19||

விஶேஷ = ஐந்து மஹா பூதங்கள், பத்து இந்திரியங்கள், மனது ஆகிய 16 விகாரங்கள்
அவிஶேஷ = பஞ்ச தன் மாத்திரைகள் + அஸ்மிதை
லிங்க³மாத்ர = மஹத் தத்துவம்
அலிங்கா³நி = பிரதானம் என்கிற ப்ரக்ருதி
கு³ணபர்வணி = ஸத்வம் முதலான குணங்களின் வேறு உருவங்களாக ஆகின்றன.
லிங்கம் என்பது குறி. குறிப்பில்லாமல் ப்ரக்ருதி இருக்கிறது. இதில் முக்குணங்களும் சமமாக இருக்கும். அதை இன்னது என்று குறித்து காட்ட முடியாதில்லையா? அதனால் அது அலிங்கம்.
இந்த ப்ரக்ருதியில் இருந்து உண்டாகிறது மஹத் தத்வம். மஹத் தத்துவத்துக்கு கொஞ்சமாவது அடையாளம் காட்டலாம். சத்வ குணம் மேலோங்கி மற்றவை அதற்குள் அடங்கி இருக்கும். அதற்கு மேல் அதை விளக்க முடியாது. ஆகவே அது லிங்க மாத்ரம்.
மஹத்தத்வத்திலிருந்து அஹம் தத்வம் உற்பத்தி ஆகும். அதில் இருந்து பஞ்ச தன்மாத்திரைகளும் அஸ்மிதையும். இவை அதிகம் விசேஷமாக பாகு படாதவை. ஆகவே அவிசேஷம். இவற்றில் இருந்து என்னென்ன உற்பத்தி ஆகும்? ஐந்து மஹா பூதங்கள், பத்து இந்திரியங்கள், மனது ஆகிய இவை நன்கு பாகுபட்டவை. ஆகவே விசேஷம்.

உத்பத்தி கிரமம்: உயர்வு தாழ்வில்லாத குணங்கள் உள்ள ப்ரக்ருதி.
அதிலிருந்து மஹத் தத்துவம். அதிலிருந்து அஹம் தத்துவம். இதில் எந்த குணமும் மற்றவற்றில் அடங்கி இருக்கலாம்.
இந்த அஹம் தத்துவத்தில் இருந்து தமோ குணம் பிரதானமான (முக்கியமான) போது சப்த தன் மாத்திரை உண்டாகும்.(முதல் பாதம் 45 வது சூத்திரத்திலே கொஞ்சம் பார்த்தோம் இல்லையா? ஸூக்ஷ்மமானவை எவைன்னு பார்க்கும் போது) இந்த சப்த தன்மாத்திரைக்கு அசாதாரணமான லக்ஷணம் சப்தம். (இதே போல பெயரை ஒட்டி அதன் அதன் அசாதாரணமான லக்ஷணத்தை அறியலாம்.) ஒவ்வொன்றிலிருந்து எது வருகிறது எனப்பார்க்கலாம். சப்த தன்மாத்திரை> ஸ்பர்சம் > ரூபம் > ரஸம் >கந்தம். தமிழில் சொல்ல ஒலி>தொடுதல்> வடிவம்>சுவை>மணம்.
இந்த வரிசையில் பின்னோக்கிப் பார்க்க ஒன்றில் மற்றவற்றின் குணங்கள் இருக்கும். அதாவது மணத்தில் சுவை, வடிவம், தொடுதல், ஒலி ஆகிய குணங்கள் இருக்கும். சுவையில் மணம் நீங்கலாக வடிவம், தொடுதல், ஒலி ஆகிய குணங்கள் இருக்கும். வடிவத்தில் மணம், சுவை நீங்கலாக தொடுதல், ஒலி ஆகிய குணங்கள் இருக்கும். தொடுதலில் மணம், சுவை,வடிவம் நீங்கலாக ஒலி மட்டும் இருக்கும். ஒலியில் மற்ற குணங்கள் இருக்காது.
இவை அவிசேஷங்கள். ஸூக்ஷ்மமானவை.
இவற்றிலிருந்து பருப்பொருளான (ஸ்தூலமான) ஆகாசம்; அதிலிருந்து வாயு; அதிலிருந்து அக்னி: அதிலிருந்து நீர்; அதிலிருந்து நிலம் ஆகியன உண்டாகும்.
சத்வ குண பிரதானமான அஹம் தத்துவத்திலிருந்து மனசு உண்டாகிறது.
ரஜோ குண பிரதானமான அஹம் தத்துவத்திலிருந்து இந்திரியங்கள் (கர்ம, ஞான) உண்டாகின்றன.
அடுத்து லயக்கிரமம்.

Thursday, October 14, 2010

காணப்படுவதின் சொரூபம்.





  प्रकाशक्रियास्थितिशीलं भूतेन्द्रियात्मकं भोगापवर्गार्थं दृश्यम् ।।18।।
ப்ரகாஶக்ரியாஸ்தி²திஶீலம்° பூ⁴தேந்த்³ரியாத்மகம்° போ⁴கா³பவர்கா³ர்த²ம்° த்³ரு«ஶ்யம் || 18||

ப்ரகாஶ க்ரியா ஸ்தி²தி ஶீலம்° பூ⁴த இந்த்³ரிய ஆத்மகம்° போ⁴க³ அபவர்க அ³ர்த²ம்° த்³ரு«ஶ்யம்

த்ருஷ்யம் எனப்படுவது..
புத்தியின் வளர்ச்சி (வ்ருத்தி) மூலமான பிரகாசத்தையும்; ப்ரயத்னம் (முயற்சி), சேஷ்டை ஆகிய செயல்கள் (க்ரியா) இவற்றையும்; இவ்விரண்டையும் தடை செய்யும் விஷயத்தையும் இயல்பாக உடையது.
மேலும் ஸ்தூல பஞ்ச பூதங்கள்; ஸூக்ஷ்மமான பஞ்ச தன் மாத்திரைகள்; ஞான கர்ம இந்திரியங்கள்; ஆத்மா இவற்றின் சமூகமாகவும், விஷய சுக துக்க மோக்ஷங்களின் பலன் தருவதாகவும் ஆகிறது.
புத்தி வ்ருத்தியால் உண்டாகின்ற பிரகாசம் ஸத்வ குணத்தின் இயல்பு (தர்மம்). க்ரியா ரஜோ குணத்தின் இயல்பு. இவற்றை தடை செய்வது தமோ குணத்தின் இயல்பு - தர்மம். போகமும் மோக்ஷமும் புத்தியால் அறியப்படுவன. ஆகவே அதையே சார்ந்தவை. ஒரு அரசனின் படை பெறும் வெற்றி தோல்வி அரசனையே சார்வது போல புத்தி அறிகிற விஷயங்கள் அதன் எஜமானனான புருஷனை சார்கிறது. உண்மையில் புருஷன் அசங்கன்; போக மோக்ஷத்துக்கு சம்பந்தம் இல்லாதவன்.
முக்குணங்கள் சேர்ந்து சரீரத்தை உண்டாக்கும் போது சத்வ குணம் மிகுந்தால் அது தேவ சரீரமாகும். தமோ குணம் மிகுந்தால் தாவர மிருக சரீரமாகும். இந்த மூன்று குணங்கள் இல்லாத ஜீவன் ஏதும் ப்ரக்ருதியில் இருந்து உண்டான லோகம் எதிலும் இல்லை.

Wednesday, October 13, 2010

ஸம்சாரத்தின் காரணம்:



द्रष्टृदृश्ययोः संयोगो हेयहेतुः ।।17।।
ஸம்சாரத்தின் காரணம்:
த்³ரஷ்ட்ரு«த்³ரு«ஶ்யயோ​: ஸம்°யோகோ³ ஹேயஹேது​: || 17||

த்ரஷ்டாவுக்கும் த்ருஷ்யத்துக்கும் சேர்க்கையானது வரவுள்ள துன்பத்திற்கு (காண்பவனுக்கும் காணப்படுவதற்கும் உள்ள சேர்க்கையானது ஹேயத்துக்கு) காரணமாகிறது.

புருஷனே த்ரஷ்டா (காண்பவன்). ப்ரக்ருதி புருஷனை விட வேறானது. ப்ரக்ருதியின் வடிவம் சுகம், துக்கம், மோஹம் ஆகியவை. ப்ரக்ருதியும் அதன் எல்லா காரியங்களும் த்ருச்யம் (காணப்படுவது) ஆகும். இவை அனத்துமே புத்தி மூலமாக அறியப்படுவதால் புத்தியையே காணப்படுவது எனச்சொல்லலாம். ஆகவே புருஷனுக்கும் புத்திக்கும் ஏற்படும் சேர்க்கையே ஸம்ஸாரத்துக்கு காரணமாகும்.
புத்தி புருஷனுக்கு வெகு அருகில் இருக்கிறது. காந்தக்கல் இரும்பை இழுப்பது போல புத்தி புருஷனை இழுக்கப்பார்க்கிறது. புருஷனின் நிழல் போன்ற ஒன்றை இழுத்தும் விடுகிறது. தான் வேறு, புருஷன் வேறு அல்ல என்பதாக இது காட்டுகிறது. பிரதிபிம்பமான புருஷனுக்கு இந்த புத்தி மூலம் புலப்படும் அத்தனையும் போக விஷயங்கள் ஆகின்றன. இதனால் புத்தி பார்க்கப்பட்ட விஷயமாயிற்று. உண்மையில் எதனுடனும் சேராது இருக்கும் புருஷன் த்ரஷ்டாவாகிறான். இப்படியாக ஒரு சேர்க்கை அவித்தையால் ஏற்படுகிறது. அவித்தை அனாதி - துவக்கமில்லாதது; ஆகையால் இந்த சேர்க்கையும் அனாதியே.
பிரலய காலத்தில் கூட க்லேசங்களும் கர்மமும் வாஸனைகளும் அந்தக்கரணத்துடன் ப்ரக்ருதியில் ஒடுங்குகின்றன. கோடை காலத்தில் மண்ணோடு மண்ணாக கலந்த விதைகள் மழைக்காலத்தில் மீண்டும் முளைப்பது போல சிருஷ்டி காலத்தில் இவை மீண்டும் வெளிக்கிளம்புகின்றன.
துக்கத்துக்கு காரணமான இந்த சேர்க்கையை யோக சாதன அனுஷ்டானத்தால் போக்க முடியும். செருப்பு மாட்டிக்கொண்டு நடப்பவன் காலில் முள் தைக்காததைப்போல சேர்க்கையான காண்பவன், காணப்படுவது, காணப்படும் செயலான சம்யோகம் ஆகிய மூன்றும் வெவ்வேறு என அறியும் யோகி இவை ஒன்று சேர்வதை தவிர்க்கும் வழிகளை கடைபிடித்து துக்கத்தை தொலைக்கிறான். மாறுதல் அடையும் சித்தமே தாபம் அடையும்; ஆன்மா தாபமடையாது. சித்தத்தில் பிரதி பலித்த ஆன்மாவின் நிழலே தாபமடைந்தது போல தோன்றுகிறது.
அடுத்து காணப்படுவதின் சொரூபத்தை பார்க்கலாம்.

Tuesday, October 12, 2010

ஹேயம்:



हेयं दुःखमनागतम् ।।16।।
ஹேயம்° து³​:க²மநாக³தம் || 16||

அனாகதம் துக்கம் ஹேயம்.
வரப்போகின்ற துக்கமானது ஸம்ஸாரம் எனப்படும்.
துக்கம் எது என்று பார்த்தோம். அதை உண்டாக்குவது எது, வரப்போகிற துக்கத்துக்கு காரணம் என்ன? அதை நீக்குவது எபப்டி என்றும் பார்க்கப்போகிறோம்.
துக்கத்தில் மூன்று வகை. முன்பே பார்த்தது போல கடந்தது அதீதம். நிகழ்வது வர்த்தமானம். வரப்போகிறது அனாகதம்.
அனுபவிக்கப்பட்ட துக்கம் முடிந்து போனது; அது பிரச்சினை இல்லை. நிகழ்வது அதற்கான நீக்கும் உபாயம் அறிந்து நீக்கினால் போய்விடும்; அறிவதற்கு முன்னே கூட நடந்து முடிந்துவிடலாம். எனவே வரப்போகும் துக்கத்தை நீக்குவதைப்பற்றிதான் சாதகன் யோசிக்க வேண்டும்; அதுவே முக்கியம். வரப்போகின்ற துக்கமானது ஸம்ஸாரம் எனப்படும்.
இந்த ஸம்ஸாரத்துக்கு காரணம் என்ன?

Monday, October 11, 2010

விவேகிக்கு துக்கம்!



परिणामतापसंस्कारदुःखैर्गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ।।15।।
பரிணாம தாப ஸம்°ஸ்கார து³​:கை²ர் கு³ண வ்ரு«த்தி விரோதா⁴ச்ச து³​:க²மேவ ஸர்வம்° விவேகிந​: || 15||

{गुणवृत्ति =गुणवृत्य கு³ண வ்ரு«த்தி -கு³ண வ்ரு«த்தய - பாட பேதம்.}

(பரிணாமம்) துக்க வடிவான ராகத்தின் மாறுதல் ரூபமாகவும்; (தாபம்) துக்கத்தையோ துக்க சாதனத்தையோ எண்ணும்போது த்வேஷ ரூபமாகவும்; (ஸம்ஸ்காரம்) சுகானுபவத்திலிருந்து சித்தத்தில் உண்டாகும் வாசனா ரூபமாகவும், மூவகையாக உள்ள துக்கங்களுடன் சேர்ந்திருப்பதால், குணங்களுக்கிடையே விரோதம் ஏற்படாததால் (திருஷ்ட அத்ருஷ்டமாக உள்ள விஷய சுகங்கள் ) எல்லாமே யோகத்தில் பிரவேசம் செய்த விவேகிக்கு துக்கமாகவே ஆகிறது.
ஆசை இல்லாமல் சுகத்தை நாடுவதில்லை. ஒரு விஷயத்தில் உண்டாகுமாசையே அது கிடைத்த போது சுகமாக பரிணாமிக்கிறது - மாறுகிறது. அது கிடைக்கவில்லையானால் தாபம் உண்டாகிறது. கிடைக்காமல் செய்தவரிடம் துவேஷம் உண்டாகிறது
ஒரு போதும் இந்திரியங்களின் ஆசையை பூர்த்தி செய்ய இயலாது. அனுபவிப்பதால் இன்னும் வேண்டும் என்ற எண்ணம் உண்டாகுமே தவிர போதும் என்று தோன்றாது. அதனால் அனுபவித்து ஆசையை தீர்க்க முடியாது. அது எரிந்து கொண்டிருக்கும் பெரு நெருப்பை நெய் கொட்டி அணைப்பது போலாகும். ஒரு விஷயத்தை அனுபவித்து உண்டாகும் சுகம் மேன் மேலும் அதை விரும்பி தேட வைக்கிறது. ஆகவே விஷய சுகம் என்பது நாம் அடைந்த காரியம் ஆனாலும், அதற்கும் ஆசை என்கிற துக்க வடிவ காரணத்துக்கும் வித்தியாசம் இல்லை.
ஆகவே உண்மையில் விஷயங்களில் இந்திரியங்கள் போகாமல் திருப்புவதே சுகம்; ஆசையை முன்னிட்டு இந்திரியங்கள் விஷயங்களில் செல்லுதலே துக்கம்.


Friday, October 8, 2010

விபாகம்:



ते ह्लादपरितापफलाः पुण्यापुण्यहेतुत्वात् ।।14।।
விபாகம்:
தே ஹ்லாத³பரிதாபப²லா​: புண்யாபுண்யஹேதுத்வாத் || 14||

தே =அவை; ஹ்லாத³=சுகம்; பரிதாப =துக்கம்; ப²லா​: = பலன்கள்; புண்ய அபுண்ய ஹேதுத்வாத் = புண்ணியங்கள் புண்ணியங்கள் அல்லாதன இவற்றை காரணமாக உடையதால்.
அந்த ஜாதி ஆயுள் போகம் ஆகியன புண்ணியம் பாபம் இவற்றை ஹேதுவாக உடையதால் சுக துக்கங்களை தருகின்றன. புண்யம் ஆனாலும் பாபமானாலும் அவை அவற்றுக்கு தகுந்த ஜாதி ஆயுள் போகம் ஆகியவற்றை உண்டாக்க முயற்சி செய்கின்றன. இரண்டையுமே விலக்க முயற்சி செய்ய வேண்டும்.

Thursday, October 7, 2010

க்லேசங்கள் செய்யக்கூடியது:



सति मूले तद्विपाको जात्यायुर्भोगाः ।।13।।
க்லேசங்கள் செய்யக்கூடியது:
ஸதி மூலே தத்³விபாகோ ஜாத்யாயுர்போ⁴கா³​: || 13||

ஸதி மூலே தத்³விபாகோ ஜாத்யாயுர்போ⁴கா³​:
க்லேச ரூபத்தில் உள்ள காரணமானது உள்ளபோது அவற்றின் பலன் உண்டாகிறது. அவை பிறப்பு, ஆயுள், போகம் ஆகியனவாகும்.
க்லேசங்கள் நீங்கி விட்டவனுக்கு கர்ம வாசனையும் அதன் பலன்களும் ஏற்படுவதில்லை. ஆசை இல்லாதவன் கர்ம பலனை அனுபவிக்கவும் இச்சை இல்லாதவனாகிறான். பயமில்லாததால் சோகமும் இராது. விவேக க்யாதி என்ற அக்னி இருப்பின் அது க்லேசங்கள் என்ற விதைகளை வறுத்துவிடும். வறுத்த நெல் முளைக்காதது போல க்லேசங்கள் இல்லாவிடில் கர்மவாசனை பலன் தராது.
கர்ம வாசனையால் ஏற்படுவது:
1.பிறப்பு: தேவ ஜென்மமா, மனுஷ்ய ஜென்மமா, விலங்கா தாவரமா என்பன. 2. ஆயுள்: எவ்வளவு காலம் தேகம் - இந்திரியங்களின் சேர்க்கை நீடிக்கும் என்பது. 3.போகம் என்பது இந்திரியங்களால் கிடைக்கும் சுக அனுபவங்கள்.
மரணம் ஏற்படும்போது வளர்ச்சியை அடைந்த அநேக கர்மங்கள் சேர்ந்தே பிறப்பை கொடுக்கின்றன. அந்த ஒரே உடலால் விசித்திரமான போகம் ஏற்படும். மேலும் கர்மங்கள் தனித்தனியாக பிறப்பு, ஆயுள், போகம் இவற்றை தனித்தனியாகவோ, சேர்ந்தோ கொடுக்கவும் கூடும்.
கர்மா மூலம் உண்டாகும் ஜென்மங்கள் பற்றி சில கேள்விகள் உள்ளன.
ஒரு கர்மம் ஒரு ஜென்மத்தை மட்டும் உண்டுபண்ணுமா அல்லது பல ஜென்மங்களை உண்டு பண்ணுமா?
இல்லை அநேக கர்மங்கள் சேர்ந்து ஒரு ஜென்மத்தை உண்டாக்குமா?
அல்லது அவை அநேக ஜென்மங்களுக்கு வழி செய்கின்றனவா?
ஒரு கர்மம் ஒரு பிறப்பை மட்டுமோ அல்லது அநேக பிறப்புக்களையோ தராது. நம் கர்மாக்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு ஜன்மம் அல்லது பல ஜென்மங்களை தருமானால் பெரிய காத்திருப்பு பட்டியல்தான் தேவை. ஆகவே அநேக கர்மாக்கள் சேர்ந்து ஒன்றோ பலவோ ஜென்மங்களை தருகின்றன. ஒரு ஜன்மத்தில் பலன் தரும் கர்மாக்களில் பிரதானமாக ஒன்று இருக்கும். அது அப்போதே பலன் தருவது, மற்றவை இதனுள் அடங்கும். இந்த கர்மாக்களே ஆயுளையும் நிர்ணயிப்பதாக கண்டோம் அல்லவா? மரண காலத்தில் கர்மாக்கள் நேரத்தை நிர்ணயித்ததுடன் பலனை கொடுத்து தீராததால் அடுத்த ஜன்மாவையும் தருகின்றன. இதே கர்மாக்களால் அவன் அடுத்த ஜென்மத்தின் போகங்களையும் அனுபவிக்கிறான்.
பிரதான கர்மா பலமாக இருக்க மற்றவை அதற்கு எதிராக பலன் தர வேண்டியிருப்பின் தடை உண்டாகி வெகு காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். கர்மா சரியாக உருவாகாமல் நாசம் ஆகவும் செய்யலாம். பிரதான கர்மாவுக்கு விரோதமாக இல்லாமல் இருப்பின் நடு நடுவே தன் பலனை கொடுத்து விடலாம். அதற்கு ஒத்துப்போனால் சேர்ந்தேவும் கொடுத்துவிடலாம்.
"புண்யே பாபம் அபநுததி" என்ற படி புண்ணியத்தால் பாபத்தின் விளைவை தடுத்துக்கொள்ளலாம்.
சில கர்மாக்கள் -ஜ்யோதிஷ்டோமம் போன்ற யாகங்களில் புண்ணியமும் பாபமும் கலந்தே வருகின்றன. யாகங்களால் சுவர்க்க வாசம் கிட்டினாலும் தேவர்களாலும் கஷ்டம் அனுபவிக்க நேருகிறது.
வரும் ஜன்மத்தில் நிச்சயமாக பலன் தரும் கர்மங்கள் மரணப்பிரகாசகம் எனப்படும். இவை இப்போது பலன் தரத்தொடங்கிவிட்ட கர்மாக்கள். மரணத்தை தருவதுடன் அடுத்து அனுபவிக்க வேண்டியவைகளுக்கு தகுந்த சூழ்நிலையையும் இவை உண்டு பண்ணிக்கொள்ளும்.
இதனாலேயே கர்மாவானது இன்ன பலன் இப்போது தரும் என்று நிச்சயித்து சொல்ல முடியாமல் இருக்கிறது.

Wednesday, October 6, 2010

கர்மாசயம்:



क्लेशमूलः कर्माशयो दृष्टादृष्टजन्मवेदनीयः ।।12।।
கர்மாசயம்:
க்லேஶமூல​: கர்மாஶயோ த்³ரு«ஷ்டாத்³ரு«ஷ்டஜந்மவேத³நீய​: || 12||

க்லேஶ மூல​: கர்மாஶயோ த்³ரு«ஷ்ட அத்³ரு«ஷ்ட ஜந்ம வேத³நீய​:
(அவித்யையை) க்லேசங்களை காரணமாக உடைய (சித்தத்தில் உள்ள) கர்ம வாசனைகள் பார்க்கக்கூடிய இந்த ஜன்மத்திலும், பார்க்க முடியாத அடுத்த ஜன்மங்களிலும் அனுபவிக்கத்தக்கவை ஆகின்றன.
அவித்தை, அஸ்மிதை, ராகம், த்வேஷம், அபிநிவேஷம் ஆகியவற்றிலிருந்து கர்ம வாசனைகள் உண்டாகின்றன. இந்த வாசனைகள் அடுத்த பிறப்பை உறுதி செய்கின்றன. ஆயுள், போகம், இவற்றையும் தருகின்றன. அவித்தை, அஸ்மிதை ஆகிய க்லேசங்களையும் தருகின்றன.
இவற்றை விலக்குவது எப்படி?
தீவிரமாக செய்யப்பட்ட மந்திர ஜபம், தபஸ், ஸமாதி இவற்றாலோ; ஈஶ்வரன், தேவதை, மகரிஷி, மற்ற மகான்கள் இவர்களின் ஆராதனத்தாலோ புண்ய கர்ம வாசனை உண்டாகின்றது. இது அதே ஜன்மத்தில் பலன் தர ஆரம்பிக்கும். இதே போல் தீவிர வேகத்தில் பயந்தவன், வியாதியஸ்தன், ஏழை, நம்பியிருப்பவன், மஹான்கள், தபஸ்விகள் ஆகியோருக்கு செய்யப்படும் அபசாரத்தால் உண்டாகும் பாப கர்ம வாசனைகளும் அதே ஜன்மத்தில் பலனை தரும். இது போலத்தான் நந்திகேஸ்வரர் செய்த புண்ணியத்தால் மனித சரீரம் விடுத்து தேவ சரீரம் அதே ஜன்மத்தில் பெற்றார். நகுஷன் அத்ரி மகரிஷிக்கு செய்த அபசாரத்தால் அதே ஜன்மத்தில் மலைப்பாம்பானான்.
க்லேசமற்ற யோகிக்கு அடுத்த ஜன்மத்தில் பலன் தர கர்ம வாசனை இராது. அதே போல் நரகத்தின் வேதனையை அனுபவிக்கும் பிராணிக்கு புண்யம் பாபம் தரும் கர்ம வாசனை இராது.

Tuesday, October 5, 2010

க்லேசத்தை முற்றிலும் போக்க:




  ध्यानहेयास्तद्वृत्तयः ।।11।।
க்லேசத்தை முற்றிலும் போக்க:
த்⁴யாநஹேயாஸ்தத்³வ்ரு«த்தய​: || 11||

த்⁴யாந ஹேயாஸ் = (புருஷனின்) த்யானத்தினால் முற்றிலும் விலக்கத்தக்கவை (ஆகின்றன); தத்³வ்ரு«த்தய​: =(க்ரியா யோகத்தால் தேயும்படி செய்யப்பட்ட க்லேசங்களின் ஸ்தூல) வ்ருத்திகள்.
துணியில் அழுக்கு படிந்தால் அதை உதறி அலசுகிறோம். நிறைய அழுக்கு இதில் போய்விடும். அப்போதும் போகாத அழுக்கை நீக்க சோப்பு தூள் போட்டு துவைக்கிறோம். ஆனாலும் அழுக்கு முழுவதும் போவதில்லை. மீதம் உள்ள அழுக்கு அந்த துணி நாசமாகும் போதுதான் போகும்.
அது போல க்லேசத்தை நீக்க மைத்ரீ போன்ற சித்த பரிகர்மங்களாலும், மிகும் ஸ்தூல க்லேசங்கள் கிரியா யோகத்தாலும் போனாலும், மிச்சம் உள்ள ஸூக்ஷ்ம க்லேசங்கள் புருஷ த்யானத்தால் அஸ்மிதையில் லயப்படுத்துவதால் மட்டுமே போக்க முடியும்.

Monday, October 4, 2010

க்லேசத்தை போக்க:



ते प्रतिप्रसवहेयाः सूक्ष्माः ।।10।।

க்லேசத்தை போக்க:
தே ப்ரதி ப்ரஸவஹேயா​: ஸூக்ஷ்மா​: || 10||

அந்த ஸூக்ஷ்மமான க்லேசங்கள் தனது காரணத்தில் லயம் செய்வித்தால் போக்கத்தக்கவை.

சித்தத்தை அஸ்மிதையில் லயம் செய்ய ஸூக்ஷ்ம நிலையிலுள்ள க்லேசங்கள் விலகிவிடும். பலனைத் தரக்கூடிய க்லேசங்கள் கிரியாயோக அனுஷ்டானத்தாலும் மைத்ரீ போன்ற சித்த பரிகர்மத்தாலும் விலகும் என்று முன்னமேயே சொல்லிவிட்டார்.

இப்போது மீண்டும் ஏன் இந்த பேச்சு வந்தது?

மண்ணெண்னையை ஊற்றி வைத்த பாத்திரத்தில் அதை உடனே காலி செய்தாலும் அதன் வாசனை விடாது. அதை நெருப்பில் இட்டால்தான் வாசனையும் போகும். அது போல க்லேசங்கள் ஸ்தூலமாக இருந்து அவற்றை நீக்கிக்கொண்டாலும் அவை இன்னும் ஸூக்ஷ்மமாக இருக்கும். அவையும் விலக சித்தத்தை அதன் காரணமான அஸ்மிதையில் லயப்படுத்த வேண்டும்.
அஸ்மிதை அவித்தைதான். ஆனாலும் அதில் ஒரே அவித்தை புருஷனுக்கும் புருஷ நிழலுக்கும் உள்ள வேற்றுமையை அறியாமையே. இந்த நிலையில் இந்திரியங்கள் முதலானவை கட்டுப்பட்டாகிவிட்டது. ஆகவே சித்தம் இந்த நிலைக்கு செல்ல சூக்ஷ்ம க்லேசங்கள் விலகிவிடும்.

Saturday, October 2, 2010

அபிநிவேசம்:



स्वरसवाही विदुषोऽपि तथारूढ़ोऽभिनिवेशः ।।9।।

ஸ்வரஸவாஹீ விது³ஷோ'பி ததா²ரூஃ‌டோ⁴'பி⁴நிவேஶ: || 9|| 

{பகுத்தறிவு இல்லாத ப்ராணிகளுக்கு எப்படியோ} அப்படியே சாஸ்திரங்களின் அனுமானங்கள் மூலம் பின்னால் வரும் முக்தியையும் முன்னால் உள்ள பந்தத்தையும் நன்கு அறிந்தவர்களுக்கும் கூட முந்தைய ஜன்மத்தின் அனுபவத்திலிருந்து உண்டாகும் வாசனையை ஒட்டி ஏற்படுவது அபிநிவேசம் ஆகும்.
முந்தின ஜன்மங்களில் ஏற்பட்ட மரண துக்கத்தை அனுபவித்ததில் ஏற்பட்ட வாசனையின் கூட்டம் ஸ்வரஸம் எனப்படும். இதுவே பண்டிதர் முதல் பாமரன் வரை எல்லாஒரையும் இனி எனக்கு மரணம் வேண்டாம் என நினைக்க வைக்கிறது. இந்த ஸ்வரஸத்தை ஒட்டி உண்டாவதே அபிநிவேசம்.
க்லேசங்களையும் அவற்றை நீக்கும் உபாயங்களை உபதேசித்தார். இவற்றை தேய்க்க கிரியா யோகங்களும் மைத்ரீ முதலிய சித்த பரிகர்மங்களுமே.

Friday, October 1, 2010

துவேஷம்:



दुःखानुशयी द्वेषः ।।8।।

து³:கா²நுஶயீ த்³வேஷ: || 8|| 

மோஹத்தின் காரணமாக அனுபவிக்கப்படும் துக்கம் அல்லது அதன் சாதனம் – இவற்றால் உண்டாகும் சித்த விருத்தியானது த்வேஷமாகும்.

ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறோம். அது கிடைக்காமல் போகிறது. இன்னொருவருக்கு கிடைத்து விடுகிறது. அதனால் தடையாக இருந்ததின் மீதும் அதை அடைந்த மற்றவர் மீதும் த்வேஷம் உண்டாகலாம். ராகமே த்வேஷதிற்கு வித்து.
அனுபவித்த துக்கத்தின் நினைவும் தோன்றலாம்; துக்க சாதனம் பார்க்கக்கூடியதாக இருக்கலாம், அல்லது அத்ருஷ்டமாகவும் இருக்கலாம். நம்மை ஹிம்சித்தது மிருகமோ, விரோதியோ, நோயோ, விபத்தோ, மற்ற வேதனைகளோ இருக்கலாம். இந்த நினைவுகளே நம்மை மீண்டும் அவற்றை அனுபவிக்க வைக்கின்றன. த்வேஷத்தை உருவாக்குகின்றன.
இப்படி உண்டாகும் த்வேஷத்தை விலக்குவது எப்படி? தன்னைப்போல மற்ற மனிதர்களையும் பிராணிகளையும் துக்கப்பட விடக்கூடாது என்ற கருணையே த்வேஷத்தை நீக்கி சித்தத்தை தெளிய வைக்கும்.