Pages

Tuesday, June 30, 2009

ஞானி ஈசனுக்கு ஒப்பு!




34.
ஆரூடர்களிலும் சிலர் சமாதி முதலியன செய்வதென்ன என வினா +அதற்கு உத்தரம்

உத்தம குருவே யாரூடமா யொருதொழி லற்றவருள்
சித்தமடங்கு தியானாதிகள்சிலர் செய்குவதென் னெனெறால்
இத்தலமருவும் பிராரத்தப் பிரிவெப்படி யப்படியே
முத்தரும்வெகு விதமாவ ரென்பதுமுன்னே சொன்னேனே

உத்தம குருவே, ஆரூடமாய் ஒரு தொழில் அற்றவர் உள் சித்தம் அடங்கும் தியானாதிகள் (தியானம் முதலியன) சிலர் செய்குவது என்ன என்று கேட்டால், இத்தல (இவ்வுலகில்) மருவும் (பற்றும்) பிராரத்தப் பிரிவு எப்படி அப்படியே. முத்தரும் வெகு விதமாவர் என்பது முன்னே சொன்னேனே.
[முந்தைய படலத்தில் ஜீவன் முத்தரும் பிராரப்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது]

ஞானிகளோட விவகாரங்கள் எல்லாமெ உலக உபகாரத்தை கருதிதானே தவிர அவற்றால அவனுக்கு ஒரு பிரயோசனமும் கிடையாது. ஏன்னா அதெல்லாம் அவன் எந்த பலனை கருதியும் ஆசையோட செய்வதில்லை. அதனால அவனுக்கு துன்பமும் கிடையாது. இது எப்படிருக்குன்னா ஈஸ்வரன் சிருட்டிக்கிறான், காக்கிறான், சம்ஹாரமும் செய்யறான். இதனால அவனுக்கு பாபம் புண்ணியம் ஒண்ணும் இல்லையே! ஞானிக்கு உலக உபகாரமா யாரும் கேட்டா அவங்களுக்கு போதனை செய்யறதும்; அவனோட உடம்பு விழும் வரை உடம்பு காப்பாத்தப்படணும் என்கிறதால அதுக்கு ஆகாரம் போடறதும் மட்டுமே விவகாரம். இதுவும் அவன் சத்துவத்திலேயே நிக்கிறதால அவனுக்கு எந்த வேலையும் செய்கிற பாவமும் இல்லை; அதனால எந்த கர்மாவும் அவனுக்கு ஒட்டாது.

35.
வேறொரு பிரகாரம் த்ருஷ்டாந்தம் பூர்வகம் விடை

நல்லவனேகே ளுலகுபகாரம் ஞானிகள் விவகாரம்
அல்லதுவே றொருபெறுபேறும் மிலையதனாற்பிணியுமிலை
வல்லசிருட்டி முதற்பல தொழிலால் வரு புண்ணிய பாவம்
எல்லவருக்கு மநுக்கிரகஞ் செயு மீசனடைந்திலனே

நல்லவனே கேள். ஞானிகள் விவகாரம் உலகு உபகாரம் அல்லாது வேறொரு பெறு பேறும் இல்லை. அதனாற் பிணியும் இல்லை. வல்லசிருட்டி முதல் பல தொழிலால் வரு புண்ணிய பாவம், எல்லவருக்கும் (எல்லா உயிர்களுக்கும்) அநுக்கிரகம் செய்யும் ஈசன் அடைந்திலனே.
[ஈசனும் தொழில் செய்கிறான். ஆனால் அவனுக்கு புண்ணிய பாவங்கள் சேர்வதில்லை அல்லவா? ஞானி பிராரத்தம் தீரும் வரை உடல் இருப்பதால் அதன் போஷனை பொருட்டு உண்ணல் ஆகியன செய்வான். ஆனால் அவனது உள்பார்வையில் எந்த தொழில் செய்வதாயும் அவன் உணர்வதில்லை. அவன் மனம் சத்துவ குணத்தில் மட்டும் நிற்பதால் அவனுக்கு எந்த கர்மமும் உண்டாவதில்லை.]

அட ஞானி ஈஸ்வரனுக்கு சமம்ன்னா சொல்லறீங்க? அது எப்படி?
எப்படின்னா ரெண்டு பேருக்குமே நான், என்னுது ன்னு ஒண்ணுமேஇல்லை.
ஞானிதான் ஈசன், பல ஜீவர்கள், உலகம் எல்லாமே! அப்படித்தான் அவனோட பாவனை இருக்கும்!

36.
ஞானவான் ஈசனுக்கு எப்படி ஒப்பாவான்?
ஈசனுமா யருவாயுருவாகி யெழுந்தரு ளுங்குருவே
ஈசனுஞானியு மொப்பென்றீரே யெப்படியொப் பென்றால்
ஈசனுஞானியு மமதையகந்தை யிகந்ததினாலொப்பாம்
ஈசனுமாம் பலசீவருமா முலகெல்லா மிவனாமே

ஈசனுமாய் அருவாய் உருவாகி எழுந்தருளும் குருவே, ஈசனும் ஞானியும் ஒப்பென்றீரே, எப்படி ஒப்பு என்றால், ஈசனும் ஞானியும் மமதை (என்னுடையது என்ற எண்ணம்) அகந்தை (நான் என்ற எண்ணம்) இகழ்ந்ததினால் ஒப்பாம். ஈசனுமாம் பலசீவருமாம் உலகெல்லாம் இவனாமே. ("நான், என்" போனதால் ஈசன், உலகு, பல சீவர்கள் எல்லாவற்றையும் தான் என்றே உணர்கிறான்)


ம்ம்ம்ம்ம்.. அப்படின்னா இவர் முக்தி அடைஞ்சா மத்த எல்லாருமே முக்தி அடையணுமே! அப்படி நடக்கிறதில்லையே!
(அட அதானே!)

சமாதி 2 வகை



33.
கிருத கிருத்திய ஞானிக்கு விவகாரம் தீருங்காலமும் அவன் யாதொரு தொழிலும் செய்வதில்லை எனவுங் கூறல்:

தெரிதரு மகனேயாரம் பத்தொடுதீரும் விவகாரம்
உரியதியானமும் விவகாரங்களு முள்ள தொழிலன்றோ
துரியபரம்பொரு ளானவர் வேறொருதொழில் செய்வதுமுண்டோ
அரியசமாதிகள் பழகுவனே லவனாரூடனுமன்றே

தெரிதரு (அறிவுள்ள) மகனே! ஆரம்பத்தொடு தீரும் விவகாரம். [ஆரம்பித்துவிட்ட பிராரப்த கர்மம் ஒழியும் வரை விவகாரம் இருக்கும்] உரிய தியானமும் விவகாரங்களும் உள்ளத்தின் (அந்தக்கரண) தொழிலன்றோ? துரிய [நிலை அடைந்து] பரம்பொருளானவர் வேறொரு தொழில் செய்வதும் (செய்யத்தேவையும்) உண்டோ? [அப்படி] அரியசமாதிகள் பழகுவனேல் அவன் ஆரூடனும் அன்றே.

சமாதி 2 வகை. 1. சவிகற்ப சமாதி 2. நிர்விகற்ப சமாதி.
விகற்பம் ன்னா பேதம் வேறுபாடு. சவிகற்ப சமாதின்னா கொஞ்சம் வேறுபாடு இருக்கிற சமாதி.
சவிகற்ப சமாதியில் ஆன்மா அணு அணுவாக அனுபவிக்கப்படிகிறது. இதில் பார்ப்பவன், பார்த்தல், பார்க்கப்படுபவன் என பேதம் உண்டு. (திரிபுடி என்பது இதுவே -ஞாத்ரு, ஞானம், ஞேயம் [subject - object - action] ).

நிர்விகற்ப சமாதி கொஞ்சம் கூட வேறுபாடு இல்லாத சமாதி. இதுல திரிபுடி ஒழிஞ்சு விடும். அகண்டாகாரமான சாக்ஷாத்கார நிலை.

தானாய் தன் மனமே யல்லாலொன்றைத்
தலையெடுக்க வொட்டாது தலைப்பட் டாங்கே
போனாலும் கற்பூர தீபம் போலும்
போயொளிப்ப தல்லாது புலம்வேறி ன்றாம்
ஞானாகா ரத்தினொடு ஞேய மற்ற
ஞாதுருவு நழுவா னழுவி நிற்கும்
ஆனாலு மிதன் பெருமை யெவர்க்கார் சொல்வா
ரதுவானா லதுவாவ ரதுவே சொல்லும்
தானாய் தன் மனமே அல்லால் ஒன்றைத் தலையெடுக்க ஒட்டாது தலைப்பட்டு ஆங்கே
போனாலும் கற்பூர தீபம் போலும் போய் ஒளிப்பது அல்லாது புலம் வேறு இன்றாம்
ஞானாகாரத்தினொடு ஞேயமற்ற ஞாதுருவு நழுவா நழுவி நிற்கும் ஆனாலும் இதன் பெருமை எவர்க்கு யார் சொல்வார்? அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும்
(தாயுமானவர்)

முதல்ல சவிகற்ப சமாதிதான் ஒத்தருக்கு கிடைக்கும். அப்புறமா இருக்கிற கொஞ்சம் வித்தியாசமும் போய் நிர்விகல்பம் ஆகிடும்.

இதெல்லாம் இல்லாம சகஜ சமாதின்னு ஒண்ணு உண்டு. நிர்விகற்ப சமாதியோட கனவு போல சாப்பிடுகிறது முதலியத செய்து கொண்டு சதா நிஷ்டையில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஆரூடர் விவகாரங்களை செய்தாலும் அவை செயல் ஆகாது. ஏன்னா அவை அவர்களோட பார்வையில விவகாரத்தோட கூடிய சம்பந்தம் இல்லாதவை. அவர்களுக்கு ஞானமும் செய்கையும் பரஸ்பரம் விரோதமில்லை. அவங்களோட விவகாரத்துக்கு அனுபவம் விரோதமில்லை. அவங்களோட அனுபவத்துக்கு விவகாரம் விரோதமில்லை.

பின்னே சீவன் முக்தரா இருக்கிற சிலர் ஏன் இந்த தியானம் முதலானதெல்லாம் செய்கிறாங்கன்னு கேட்டா.....
முன்னேயே சொன்ன விஷயம் ஒண்ணு நினைவு இருக்கா பிராரத்தப்படி பல விதமா இவங்க இருப்பாங்கன்னு சில காரியங்கள் நடக்கும்ன்னு? அதுவும் அதை சேர்ந்ததுதான்.
மாதவம் செய்யினும் செய்வர் வாணிபம் செய்யினும் செய்வர் ன்னு முன்னே பாத்தோம்.
(தத்துவ விளக்கம் பகுதி - 97. )

"பிரம வித்துக்கள் இப்படி நான்கு விதமாக இருப்பானேன்?

பேதகர் மத்தால்வந்த பிராரத்த நாநாவாகும்
ஆதலால் விவகாரங்க ளவரவர்க் காவவாகும்
மாதவஞ் செயினுஞ்செய்வார் வாணிபஞ் செயினுஞ்செய்வார்
பூதலம் புரப்பாரையம் புகுந்துண்பார் சீவன்முத்தர்."

ஆரூட தசை அடையு முன்னே யார் இந்த தியானம் முதலானதை செய்கிறாங்களோ அவங்களையே கிரியை அற்றவன்னு சொல்ல முடியாது. ஆரூட தசை அடைஞ்சாச்சுன்னா அவர் கிரியை அற்றவரே கிருத கிருத்தியரே.

Monday, June 29, 2009

திருப்பியும்...ஞானி தொழில் செய்கிறானா இல்லையா?




32
ஆனாலையா குருவே காண்ப தசத்திய மென்றாலும்
நானாவிவ காரந்துய ரலவோஞான சுகந்தருமோ
போனாலன்றோ நன்றா நிட்டை புரிந்திடல் வேண்டாவோ
தானாநிட்டை புரிந்தாற் செய்கை தவிர்த்தவனெப்படியோ

ஆனால் ஐயா குருவே காண்பது அசத்தியம் என்றாலும் நானா விவகாரம் துயரலவோ? ஞான சுகந்தருமோ?[இரண்டற்ற அகண்டாகார அனுபவத்தால் உண்டாகும் ஞான சுகம் அப்போது இருக்குமோ?] [விவகாரம்] போனால் அன்றோ நன்றா நிட்டை புரிந்திடல்? (நிற் விகற்ப சமாதியில் இருத்தல்) அது வேண்டாவோ? தானா நிட்டை புரிந்தால் செய்கை தவிர்த்தவன் எப்படியோ? [ஒரு இடத்தில் அமர்ந்து தேக சேட்டையை நிறுத்தி மனதை ஒடுக்கி நிஷ்டை பழகுவதும் ஒரு தொழில்தானே? அப்படி இருக்க எப்படி தொழிலற்றவன் என்று சொல்லலாம்?]

ஞானி தொழில் செய்கிறானா இல்லையா ந்நு உறுதி செய்துக்க திருப்பியும் கேட்கிறான் சீடன். சரி உடம்பு இருக்கிற வரை ஏதாவது விவகாரம் இருக்கும்ன்னு சொல்லறீங்க. நாம கண்ணால பாக்கிறதெல்லாம் அசத்தியம்ன்னா அதோட விவகாரங்களில சம்பந்தமானா துன்பம்தானே. இரண்டற்ற அகண்டாகார அனுபவத்தால் உண்டாகிற பிரம்ம ஆனந்தம் - ஞான சுகம் அப்போது இருக்குமா என்ன? அது வேணுமானா நிஷ்டை பழகணும்தானே? அப்படி நிஷ்டையில உக்காந்தா அது தொழில்தானே?
அதாவது சும்மா மனசை அடக்கி உட்காருகிறது கூட வேலைதானே என்கிறான் சீடன்.

அப்பா, பிராரப்த கர்மா கழிகிற வரை விவகாரம் இருக்கத்தான் இருக்கும். அப்படி இல்லாட்டா அது தீர முடியாது. தியானம், சமாதி எல்லாம் நிச்சயம் வேலைதான். சந்தேகமில்லை. அதெல்லாம் அந்தக்கரணத்தால செய்கிற வேலைதான். துரிய நிலையை அடைஞ்ச சாக்ஷாத்காரத்தை அடைஞ்சவங்களுக்கு செய்கிற வேலைன்னு ஒண்ணும் கிடையாது. அப்படி செய்தா அவங்க சீவன் முக்தன் இல்லை. இப்படி சர்வ நிச்சயமா சொல்கிறார் குரு.......

Saturday, June 27, 2009

தேவ் சார் கேள்வி



/ஒரு ஜீவந்முக்தருக்கு ஸ்தூல தேஹம் தவிர, லிங்க தேஹம், காரண சரீரம் இரண்டுமே அழிந்து
விடுகின்றன என்று பொருள் கொள்ள வேண்டுமா ?
மனம் மாய்ந்து விடுகிறது என்றால் அதை ஒட்டிய அனத்துமே இல்லை என்றாக வேண்டும் அல்லவா?//
நல்ல கேள்வி கேட்டார் தேவ் சார்!
இது வரை பாத்ததின் பின்னணியிலே கொஞ்சம் இதை பாக்கலாம்.
நாம் ஒரு ஜீவன் ஞான சாதனை செஞ்சு மேலே மேலே போகிறதை பாத்து கொண்டு இருக்கோம்.
ஒரு பெரிய திருப்பு முனை ஞானம் உதிக்கிறது. ( அது புதுசா ஒண்ணும் உதிக்கலை. மாயை போய் உண்மை நிலை தெரியுது அவ்வளோதான்.) சாதகன் சந்தேகம், விபரீதம் போல இருக்கிற அபாயங்களை எல்லாம் தாண்டி ஸ்திரப்பட்டாச்சு. இது ஜீவன் முக்த நிலை. ஞானம் வந்தாச்சு; ஆனா இன்னும் இந்த ஸ்தூல சரீரம் விழலை. எப்போ விழும்? ஞானத்தீயிலே சஞ்சித ஆகாமி கர்மாக்கள் எரிஞ்சு போச்சு. மீதி இருக்கிற ஏற்கெனெவே ஆரம்பிச்சு விட்ட பிராரத்த கர்மா முடிஞ்சதும் சரீரம் விழுந்துடும்.
அது வரை?
சூக்கும சரீரம் கொஞ்சம் இருக்கும். அந்தக்கரணம் போச்சு. அதனால்தானே அஞ்ஞானம் போகும்? பிரம்மத்தையும் கூடஸ்தனையும் பிரிக்கிறது அதுதானே? பிராணன்கள், ஞான கர்மேந்திரியங்கள் இருக்கும். அதனாலதானே இன்னும் இந்த உடம்பு சிலதை "உணர்கிறது" ,"நடக்கிறது” "சாப்பிடுகிறது”.....?
ஆனா அந்தக்கரணம் போன பிறகு எதோட ஆதீனத்திலே இவை இருக்கும்? ரஜசும் தமசும் அழிஞ்சு போன நிலையிலே சத்துவ மனசு மட்டும் எஞ்சி இருக்கும் இல்லையா? அதோட ஆதிக்கத்திலே இருக்கும். அதான் மனசோட சொரூப நாசம்.
இந்த சத்வ மனசு பிரம்மத்தை தனித்தனியா அணு அணுவா பார்க்கும் நிலையிலே இருக்கிறது. இது சவிகற்ப சமாதி.
இதை சத்வ மனசோட ஆதீனம்ன்னு சொல்லாம ஈஸ்வரனோட ஆதீனத்திலேன்னும் சொல்கிறங்க. அந்தக்கரணம் போயிடுத்து. ஜீவாத்மா பரமாத்மாவோட ஐக்கியம் ஆயிடுத்து. ஆனா இந்த உடம்பு விழணுமே? அது வரை விவகாரம் நடக்கணுமே? ஒரு சைதன்யம் (தேவ் சார் இதைப் பத்தி இன்னும் மின்தமிழிலே எழுதலையே?!) - இயங்கு சக்தி - இல்லாம ஜடப்பொருள் எப்படி இயங்கும்? அதனால அது ஈஸ்வரனோட சக்தியிலே இயங்கும். அப்ப அது ஈஸ்வரனோட விளையாட்டுப்படி இயங்கும். சேஷாத்ரி ஸ்வாமிகள் மாதிரி சாப்பிடக்கொடுத்ததை வீசி எறிஞ்சாலும் எறியும்; பகவான் ரமணர் மாதிரி எல்லாத்தையும் மௌனமா சாட்சியா பாத்து கொண்டு இருந்தாலும் இருக்கும்; ஜட பரதர் போல மலத்திலேயும் சேற்றிலேயும் இருந்தாலும் ஒண்ணும் தெரியாம இருந்தாலும் இருக்கும். பல ஜீவன் முக்தர்கள் - இவங்க ஜீவன் முக்தர்ன்னே தெரியாமலே இருக்கிறவங்க – எப்படி இருந்தாங்களோ அதே போல வேஷம் போட்டுகிட்டு இருந்து நாடகம் ஆடிட்டுப்போனாலும் போகும்!
ஆச்சு. பிராரத்த கர்மா ஒருவழியா அனுபவிச்சு முடிஞ்சு போச்சு. மத்த கர்மா ஏற்கெனெவே போயிடுத்து. அந்தக்கரணம் போனப்பவே ஆணவமும் போச்சு. சரீர விவகார நடைமுறைக்கு கனவு போல எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச மாயையும் போயிடும். இப்படி காரண சரீரம் அழிஞ்சு போனதாலே சூக்கும சரீரத்தை அடுத்த பிறவிக்கு கொண்டு போகிற ஏஜென்ட் இல்லாம சூக்கும சரீரம் எங்கிருந்து வந்ததோ அங்கேயே போய் ஒடுங்கிடும்.
பிரமத்தை தனித்தனியா அனுபவிச்ச சவிகற்ப சமாதி போய் விகற்ப சமாதியும் வந்துடும். அவ்வளோதான். ஜீவன் பிரம்மத்தோட கரைஞ்சு போகிற ப்ராசஸ் முழுமை ஆகிடும்.

இப்படித்தான் நான் புரிஞ்சு கொண்டு இருக்கேன்.
விமர்சனங்களை வரவேற்கிறேன்!


Thursday, June 25, 2009

ஞானியும் பூர்வ வாசனையால்......



"சரி ஐயா. இன்னொரு சந்தேகம். தத்துவ ஞானிகூட மத்தவங்க மாதிரி நான் பாத்தேன், போனேன், செய்தேன்னு சொல்கிறங்களே! அப்படி சொல்லலாமா? இவருக்குத்தான் எல்லாம் போச்சே! நான் போயே போயிடுத்தே. நான் போகலைனா அவர் சீவன் முத்தரே இல்லையே! அப்புறம் என்ன நான் போனேன் வந்தேன்?" என்கிறான் சீடன்.....

அப்பா நீ சொல்கிறது சரிதான். ஞானிக்கு நான் இருக்க முடியாது.

நாம் ஒரு கனவு காண்கிறோம். முழித்து கொண்ட பிறகு அதைப்பத்தி மத்தவர்கிட்டே சொல்கிறோம். "நேத்து ஒரு கனா கண்டேன். தெருவிலே நடந்து போய் கொண்டு இருந்தேனா? அப்போ அங்கே ஒரு ஆனை வந்தது. என்னை துதிக்கையால அப்படியே தூக்கித்து" ன்னு கதை சொல்கிறோம். அப்படி ஒண்ணுமே நிச்சயம் நடக்கலை. அது நமக்கும் தெரியும்; கேட்கிறவருக்கும் தெரியும்.

இதே போலத்தான் ஞானியும் பூர்வ வாசனையால போனேன், வந்தேன் ன்னு சொல்லுவாங்க. இருந்தாலும் அவங்களுக்கு அது பொய்ன்னு நிச்சயமா தெரியும். அவனுக்கு ஜீவ பாவமே இல்லை. பிரம்ம சொரூபம் தான் என்கிற அனுபவமே இருக்கு. உடல் கீழே விழுகிற வரை அவன் அப்படித்தான் இருப்பான்.

ஒரு ராஜா கனவு கண்டு விட்டு "நான் ஒரு பிச்சைக்காரனா இருந்தேன்; பிச்சை எடுத்தேன்" ன்னு சொன்னாலும் அவன் பிச்சைக்காரனா உணருகிறதில்லை. தான் ராஜா என்கிறது சர்வ நிச்சயமா அவனுக்கு தெரியும். அது போல பிரம்ம ஞானிக்கும் தான் பிரம்மமென்ற அனுபவமே இருக்கும். "தான்"ன்னு சொன்னாக்கூட அது அவன் மனசை பாதிக்காததே. அப்போதைக்கு அப்போது அதெல்லாம் கனவு போல போயிடும். சாதாரண மக்களுக்கோ தான், செய்தது, போனது போன்ற எல்லாம் நினைவிலேயே நிக்கும்.

30.
விவகாரம் நீங்கிய சீவன் முத்தருக்கு எப்படி விபரீதமுண்டாகும்?

ஐயாகேளீர் தத்துவஞானியு மஞ்ஞானிகள் போலே
செய்யாநின்றேன் கண்டேனுண்டேன் சென்றே னெனலாமோ
பொய்யாம்விபரீதங்க ளவற்க்குப்போயின வென்றீரே
மெய்யாம் பிரமவிகாரமி தன்றேவெளியா வுரையீரே

ஐயாகேளீர்! தத்துவ ஞானியும் அஞ்ஞானிகள் போலே செய்யா நின்றேன், கண்டேன், உண்டேன், சென்றேன் எனலாமோ? பொய்யாம் விபரீதங்கள் அவற்க்குப் போயின என்றீரே? மெய்யாம் பிரம விகாரம் இதன்றே? வெளியா (வெளிப்படையாக) உரையீரே.

31.
விவகாரம் பொய்யானால் அவை நீங்க வேண்டாவா?

ஓய்ந்தகனாவிற் கண்டபழங் கதையோ துவன் வாதனையால்
ஆய்ந்தறி வுற்றவ னப்படிசெப்புவ னாபாசனு மாகான்
மாய்ந்தத னுடல் வேமளவும் விண்ணவன் மனிதனெனப் படுவான்
வீய்ந்தசிதா பாசன்போமளவும் விவகாரந் தொடரும்

ஓய்ந்த கனாவில் கண்ட பழங் கதை வாதனையால் (பூர்வ வாசனையால்) ஓதுவன் (சொல்வான்) [போல்] ஆய்ந்து அறிவுற்றவன் அப்படி செப்புவன் [ஆனாலும்] ஆபாசனும் ஆகான். மாய்ந்த தன் உடல் வேகும் அளவும் விண்ணவன் (தேவன்) மனிதன் எனப் படுவான். வீய்ந்த சிதாபாசன் போம் அளவும் (விதேக முத்தி வரை) விவகாரம் (செய்தேன் எனல் முதலிய விவகாரம்) தொடரும்.

[கனவு கண்டவன் கண்ட கனவை கூறுகையில் அது கனவுதான் என்ற அறிவு இல்லாமல் போகவில்லை, அது போல பிரமம் நான் என்று அறிந்த ஞானியும் பூர்வ வாசனையால் "சென்றேன், உண்டேன் என சொல்லும்போதும் அவனுக்கு ஜீவ பாவமில்லை. அஞ்ஞானி அப்படி சொல்லும்போது நான் என்ற பாவம் இருக்கிறது. அவனுக்கு விவகாரங்கள் மனதில் தங்கிவிடும். ஞானிக்கு தங்காது. கனவு போல் அப்போதைக்கப்போது போய்விட அவன் பிரம சொரூபமாகவே இருப்பான். ]


Wednesday, June 24, 2009

சீவன் முத்தருக்கு சிரவணாதி தேவையில்லை



28
சீவன் முத்தருக்கு சிரவணாதி தேவையில்லை என்றது உறுதிபட வினா

குரவர்சிகா மணியேகேளீர் நீர்கூறிய வழியொக்கும்
பரமுடனிகமு மிழந்தவரன்றோ பழகுவர் மெய்ஞானம்
விரவு முயற்சியின் மீண்டவரதை யினிவேண்டுவரோ வேண்டார்
சிரவணமனனா திகள்வேண்டாவோ சித்த முறைத்திடவே

குரவர் சிகாமணியே கேளீர்! நீர் கூறிய வழி ஒக்கும் (ஒத்துப்போகும்). பரமுடன் இகமும் (இச்சை) இழந்தவர் அன்றோ மெய்ஞானம் பழகுவர்? [இகபரதொழில் சனன மரணம் தருவது என கருதி அதிலிருந்து] விரவு முயற்சியின் மீண்டவர் அதை இனி வேண்டுவரோ? வேண்டார். சித்தம் உறைத்திடவே (ஆத்ம சொரூபத்தில் மனது திடப்படும் பொருட்டு) சிரவண மனனாதிகள் (அவர்களுக்கு) வேண்டாவோ?

இத கேட்டு குருவுக்கு ரொம்ப சந்தோஷம்.

ஒளிருகிற மகனே கேளுப்பா! யார் ஞானத்தை தேடி பயிற்சி செய்யறாங்களோ அவங்களுக்குத்தான் இதெல்லாம் செய்ய தேவை இருக்கு. தான் பிரமம்ன்னு உணராதவங்கதான் கேட்டல் செய்யணும். யாருக்கு சந்தேகம் இருக்கோ அவங்கதான் மனனம் செய்யணும். யாருக்கு விபரீதப்பேய் என்கிற மலினமான வாசனை இருக்கோ அவங்கதான் நிதித்யாசனம் செய்யணும். ஆனா பிரம்ம சாக்ஷாத்காரம் அடைஞ்ச ஞானிக்கு இதெல்லாம் ஒண்ணுமே வேண்டாம்.

29.
உத்தரம்:
கிளர்மகனேகேள் தத்துவமறியார் கேட்டல்செயக் கடனே
தளர்வறு சிந்தித்தலின் முயல்வார்சிலர் சந்தேகங்களுளார்
தெளிதலினிற்பார் விபரீதப் பேய்தீரா வாதனையோர்
வெளியுருவா யறிவாய் நிறைவாயினர் வேண்டுவதொன்றுண்டோ

கிளர் மகனே (ஒளிரும் மகனே) கேள். [தான் பிரமம் என்று] தத்துவம் அறியார் (உணராதவர்) கேட்டல் செயக் கடனே. (சிரவணம் செய்தல் முறையே). தளர்வு அறு சிந்தித்தலில் முயல்வார் சிலர் (அவர்கள்) சந்தேகங்கள் உள்ளவர். விபரீதப் பேய் தீரா வாதனையோர் (காமம் முதலிய வாசனைகளால் சீவேஸ்வர ஜகத் ஆகிய பிசாசம் நீங்காத விபரீத பேத புத்தி நீங்காதவர்கள்) தெளிதலில் நிற்பார். (நிதித்யாசனம் செய்வர்). வெளியுருவாய் (பரா ஆகாசமாக) அறிவாய், நிறைவாயினர் (பரி பூரணமாக உள்ளவர்) வேண்டுவது ஒன்றுண்டோ? [இல்லை]

"சரி ஐயா. இன்னொரு சந்தேகம். தத்துவ ஞானிகூட மத்தவங்க மாதிரி நான் பாத்தேன், போனேன், செய்தேன்னு சொல்கிறங்களே! அப்படி சொல்லலாமா? இவருக்குத்தான் எல்லாம் போச்சே! நான் போயே போயிடுத்தே. நான் போகலைனா அவர் சீவன் முத்தரே இல்லையே! அப்புறம் என்ன நான் போனேன் வந்தேன்?" என்கிறான் சீடன்.


Tuesday, June 23, 2009

கிருத கிருத்தியன்



இன்னும் சந்தேகம் போகலை. கர்ம வினையால இந்த உடம்பு கிடைச்சு இருக்கு. பிராரத்தப்படி செயல்களை செய்கிறார்; உலக மக்களுக்கு தேவையானதை செய்யறார் ன்னா எல்லாத்தையும் செஞ்சு முடிச்சவர்ன்னு அவரை சொல்லறாங்களே, அதெப்படி?

26. கிருத கிருத்தியன் இலக்கணம் தெரியும் பொருட்டு வினா

மெய்யும் கொண்டு பிராரத்தத் தருவிதிவழி நின்றிடவும்
உய்யுங்கன்மிகளுக் கநுகுணமா வுறுதொழில் செய்திடவும்
செய்யுஞ்செய்கை முடிந்தவனென் றுரைசெப்புவதெப்படியோ
நையுந்துன்ப மகற்றிய குருவே நலமாவருள்வீரே.

மெய்யும் (உடலையும்) கொண்டு பிராரத்தம் தரும் விதி வழி நின்றிடவும், உய்யும் கன்மிகளுக்கு அநுகுணமாய் (அநுகூலமாய்) உறு தொழில் (பொருந்தும் கர்மாக்களை) செய்திடவும், செய்யும் செய்கை முடிந்தவன் (ஞானியானவன் கிருத கிருத்தியன்) என்று உரை செப்புவது எப்படியோ? நையும் துன்பம் அகற்றிய குருவே நலமாய் அருள்வீரே. [தொழில் உண்டாக்கும் தேகமும் பிராரத்த கர்மமும் உள்ள சீவன் முத்தர் விவகாரம் செய்ய எப்படி அவரை கிருத கிருத்தியன் எனலாம்?]

உலகத்தில மக்கள் அஞ்ஞானத்தில இருந்துகொண்டு செய்கிற செயல்கள் மூணு. முதல்ல உலக போகங்களை அனுபவிக்க உழவு, வியாபாரம், சேவகம் முதலியதை செய்கிறது. அவை லௌகீக தொழில்கள். ரெண்டாவது பரலோக போகங்களுக்காக செய்கிற தரும கைங்கரியங்கள், யாகங்கள், யக்ஞங்கள் முதலானவை. மூணாவதா ஞானத்தை விரும்பி செய்கிற சாத்திரங்கள் கேட்டல் மனனம் செய்தல் போன்றவை.

இதிலே முதல் இரண்டும் இந்த உலகத்திலேயும் அடுத்த உலகத்திலேயும் மகிழச்சியோட இருக்க செய்கிறவை. இதெல்லாம் மண், பெண், பொன் மேல ஆசை வெச்சவங்களுக்குதானே. நான், என்னுது என்கிற நினைப்பு இருக்கிறவங்களுக்குதானே. ஞானிக்கு இதால ஒரு பிரயோசனமும் இல்லை.
மூணாவதா பாத்ததோ எல்லாமே ஞானத்துக்காக செய்கிறது. இவனுக்குத்தான் ஞானம் வந்தாச்சே. அப்புறம் அதால என்ன பயன்?

27.
விடை:
ஆடவர் செய் தொழின்மூவகை யாகுமவித்தை வசத்துறுநாள்
ஏடணைமமதை யகந்தையுளார்க்கே யிகபர விவகாரம்
வீடணுகுவமெனு மிச்சையுள்ளார்க்கே வித்தை படிப்பதெல்லாம்
பாடன்மிகுந் தொழிலாற் பலனுண்டோ பரிபூரணமானால்

ஆடவர் செய் தொழில் (உழவு முதலியன, யாகம் முதலியன, கேட்டல் முதலியன) என மூவகையாகும். அவித்தை வசத்துறு (பொருந்தியுள்ள) நாள் (காலத்தில்) ஏடணை (ஆசை) மமதை அகந்தை உள்ளார்க்கே இக (உழவு முதலிய), பர (யாகம் முதலிய) விவகாரம். வீடு அணுகுவம் எனும் இச்சை உள்ளார்க்கே வித்தை படிப்பது (கேட்டல் முதலிய தத்துவ ஞானம் சம்பாதித்தல்) எல்லாம். பாடம் மிகுந் தொழிலால் (சிரவணாதி மோட்ச செய்கைகளால்) பலனுண்டோ பரிபூரணமானால்?

அது சரி! ஐயா, யாருக்கு இக பர போகங்களில விரக்தி வந்தாச்சோ அவங்க மெய் ஞானத்தை தேடறதாலே அவங்களுக்கு முதல் ரெண்டு வேலையும் வேண்டாம்தான். ஆனா ஞானம் வந்தாச்சுன்னா இவர் பிரம்ம அனுபவத்தில சித்தம் நிலையா இருக்க கேட்டல், (சாஸ்திர விசாரம்) மனனம், நிதித்யாசனம் எல்லாம் செய்ய வேண்டாமா? (அப்படி செய்தால் தொழில் இல்லாதவன் ஆக மாட்டானே)


Sunday, June 21, 2009

மாகர்த்தன், மாபோகி, மாதியாகி




24.
மா கர்த்தன் இலக்கணம்:
செய்கையுஞ் செய்விக்கையு மற்றிருக்குங் காந்தச் சிலைமலைமுன் னிரும்புகள்சேட் டிக்குமாபோல்
செய்கையுஞ் செய்விக்கையு மற்றிருக்கு மென்முன் சடமான வுலகெல்லாஞ் சேட்டை செய்யும்
மெய்கலந்த விந்திரிய விகாரரூப விவகார விருத்திக்கும் விருத்திதானா
மெய்கலந்த சமாதிக்குஞ் சாட்சியேநான் வெயில் போலென் றுறைத்தவனே விபுமாகர்த்தன்.

செய்கையும் செய்விக்கையும் அற்றிருக்கும் காந்தச் சிலை(கல்) மலை முன் இரும்புகள் சேட்டிக்குமா (நகருதல்) போல், செய்கையும் செய்விக்கையும் அற்றிருக்கும் என் முன் சடமான உலகெல்லாம் சேட்டை செய்யும் (தானே இயங்கும்). மெய் கலந்த இந்திரிய விகார ரூப விவகார விருத்திக்கும், விருத்தி தானாம். (சத்துவ விருத்திக்கும்) மெய்கலந்த (லயமான) சமாதிக்கும் சாட்சியே நான். வெயில் போல் (சூரியன் உலக விவகாரத்துக்கும் விவகாரம் இன்மைக்கும் சாட்சியாய் உள்ளது போல) என்றுறைத்தவனே விபுமாகர்த்தன்.

அமேரிக்காவிலே ஒரு இடம். அங்க குறிப்பிட்ட இடத்தில பூமியோட ஈர்ப்பு வித்தியாசமா இருக்கும். பக்கத்து பக்கத்துல நிக்கிறவங்க சாய்ஞ்சுகிட்டு இருக்கிறதா தெரியும். அந்த இடத்து காந்த தன்மை அப்படி. அது முனைஞ்சு மக்களை சாய்கணும்னா சாய்குது? அது பாட்டுக்கு அது இருக்கு. பக்கத்துல போற மத்தவங்கதான் பாதிக்கப்படறாங்க.
இப்படி காந்த மலை தான் தானா இருக்க மத்த இரும்பு பொருள் எல்லாம் தானா ஈர்க்கப்பட்டு நகருகிறா மாதிரி; சீவன் முக்தன் தான் செயலில்லாம செய்விக்கையும் இல்லாம இருக்க உலக விவகாரங்கள் பாட்டுக்கு தானா நடக்குது.

சூரியன் பாட்டுக்கு குஷியா கிழக்கே உதிக்கிறார். இந்த கோடையில எல்லாரும் திட்டி தீர்க்க காய்ஞ்சுட்டு நிதானமா அஸ்தமிக்கிறார். யாரையும் வருத்தனும்னு அவர் நினைக்கிறதில்லை. காலையில அவரை பாக்கிற தாமரை சந்தோஷமா மலருது. மத்த செடிகளில இருக்கிற பூக்களும் மலருது. ஆனா தரையில கிடக்கிற பூ வாடிப்போகுது. புல்லு மேல இருந்த பனி காணாமப்போகுது. ஈரம் காயுது. தண்ணி ஆவியா போகுது. சூரியனை பொருத்த வரை இப்படி நடந்தா என்ன? நடக்காட்டா என்ன? எப்படி இருந்தாலும் அதனால அவருக்கு தாக்கம் ஒண்ணுமில்லை. தன் சந்நிதான விசேஷத்தால உலகத்தில இருக்கிற பொருட்கள் நாநா விகாரங்களை அடைஞ்சாலும் தான் தாக்கமில்லாம சூரியன் சாட்சி மாத்திரமாய் இருக்கிறாப்போல; தேக சம்பந்தமான இந்திரிய விஷயங்களோ, மனசு சம்பந்தமான விஷயங்களோ, இல்லை பிரம்ம சமாதியோ எல்லாத்துக்கும் சாட்சியா மட்டும் இருக்கிறதாக திட அநுபவத்தில இருக்கிறவன் மாகர்த்தன் ஆவான்.

காட்டில தீ பிடிச்சுக்குது. அது என்ன இது புளிய மரம், இது சந்தன மரம், இது எட்டி மரம், இது காஞ்ச மரம், இது பச்சை மரம் ன்னு பாக்கிறதா? எல்லாத்தையும்தான் எரிக்குது. அத போல சாப்பிடுற பொருள்ல இது சுத்தம், இது அசுத்தம், இது குற்றம் உள்ளது, இது குற்றம் இல்லாதது, இது காரம், இது சுவையானது ன்னு பிரிச்சு பாக்காம பொறுமையோட கிடைச்சதை சாப்பிடுகிறவன் மாபோகி.

சின்னது, பெரிசு, தன்னோடது, மத்தவங்களுது ன்னு வித்தியாசம் பார்க்காம நல்லது, கெட்டது எது வந்தாலும் எதிலும் தாக்கமில்லாம இருக்கிறவனே மாதியாகி.

இப்படி மாகர்த்தன் மாபோகி மாதியாகியா இருக்கிறவரே மோக்ஷத்தை உடையவர் ஆவார்.

25.
மாபோகி மாத்தியாகி இலக்கணம்:
அறுசுவையின் குணங்குற்ற மசுத்தங்சுத்த மபத்தியம் பத்தியமென வூணாய்ந்திடாமல்
பொறுமையுடன் கிட்டினதைக் காட்டுத்தீப்போற் போகங்கள் புசிப்பவன் மாபோகியாகும்
சிறிதுபெரிது கடனதந்நி யங்கணன்மை தீமைகள் சேரினும்படிகச் செயல்போற்சித்தம்
வெறிதிருக்கு மவனேமாத்தி யாகியாவான் விரதமிம்மூன் றுடையவரே வீடுளோரே.

அறுசுவையின் குணம் குற்றம் அசுத்தம் சுத்தம் அபத்தியம் பத்தியம் என ஊண் ஆய்ந்திடாமல் பொறுமையுடன் கிட்டினதைக் காட்டுத்தீப்போல் போகங்கள் புசிப்பவன் மாபோகியாகும். சிறிது பெரிதுகள், தனது அந்நியங்கள், நன்மை தீமைகள் சேரினும் ஸ்படிகச் செயல் போல் சித்தம் வெறித்திருக்கும் (பற்று அற்று இருக்கும்) அவனே மாத்தியாகி ஆவான். விரதம் இம்மூன்று உடையவரே வீடுளோரே.

Friday, June 19, 2009

அகண்ட மாகர்த்தன்



23.
அகண்ட மாகர்த்தனாக சீவன் முத்தர் கர்த்தத்வம் வராதபடி பிராரர்த்த போகம் புசித்தல் 3 வகை.

தேகந்தன லனாகியகர்த் தனாகிச் சீவனின்றிப் பிரமமாய்த் தெளிந்தமுத்தன்
போகத்தை யுண்பனென்றாக் கருத்தாவாமே பூரணமாம கர்த்தனுக்குப் போகமுண்டோ
சோகத்தை யறுத்தருளுங் குருவேயிந்தத் துகளறுக்க வேண்டுமென்று சொன்னாயாகில்
மாகர்த்தன் மாபோகி மாத்தியாகி வகை மூன்றா யவரிருக்கு மகிமை கேளாய்.

தேகந்தன் அலன் (தேகம் தான் இல்லை என) ஆகி அகர்த்தனாகிச் சீவன் இன்றிப் பிரமமாய்த் தெளிந்த முத்தன் போகத்தை உண்பன் என்றால் கருத்தாவாமே (செயல் செய்பவனாகுமே) பூரணமாம் அகர்த்தனுக்குப் போகமுண்டோ? சோகத்தை அறுத்தருளும் குருவே இந்தத் துகளறுக்க (சந்தேகத்தை நீக்க) வேண்டுமென்று சொன்னாயாகில், மாகர்த்தன் மாபோகி மாத்தியாகி வகை மூன்றாய் அவர் இருக்கும் மகிமை கேளாய்.

இன்னும் சமாதானம் ஆகலை. அதெப்படி? தேகம் நானில்லை ன்னு ஆகி எதுவும் செய்யாதவன் சீவன் அல்லன் பூரணன்னு ஆன அப்புறம், எதுவும் செய்யாதவனுக்கு விஷய அனுபவம் - கர்ம பலம் அனுபவிக்கிறது - இருக்கும் ன்னு கேட்க நினைக்கிறாய்.

சீவன் முக்தன் உடம்பு சம்பந்தமான அபிமானம் இல்லாதவன். அதாவது தனக்கு ஸ்தூல சூக்கும காரண தேகங்களின் சம்பந்தம் இருக்கிறதாகவோ தான் இந்த ஜாதியை சேர்ந்தவன் ன்னோ உணர்வு இல்லாதவன்.

அவன் தொழிலற்றவன். அதாவது நான் இதை செய்யறேன் ன்னு உணர்வு இல்லாதவன். தான் சீவன் இல்லை பிரம்மம் ன்னு தெரிஞ்சு எப்பவும் பிரமத்தை சாக்ஷாத்கரிச்ச நிலையில நிக்கிறவன். அப்படிப்பட்டவன் போகங்களை அனுபவிக்கிறான்னா போக்தாவாகவும் தொழில் செய்யறான்னா கர்த்தாவாகவும் ஆயிடுவானே? பரிபூரண பிரம்மத்துக்கு பிராரப்த போகம் ஏது?

இப்படி கேக்க நினைக்கிறாய். அப்படின்னா சீவன் முத்தர் மாகர்த்தன் மாபோகி மாத்தியாகி ன்னு இருக்கிற சமாசாரம் கேளு.


Thursday, June 18, 2009

விவகாரம் செய்கையில் சமாதியில் இருத்தல் எப்படி?



22
சத்துவ மனம் பிராரர்த்த கர்மப்படி விவகாரம் செய்கையில் சமாதியில் இருத்தல் எப்படி?

விவகார வேலையெலாஞ் சமாதியென்றால் விகற்பமன்றோ மனமலைந்து விடாதோ விட்டால்
அவதான நழுவுமன்றோ வென்றாயாகி லதற்கொருதிட் டாந்தங்கே ளாசை கொண்டு
நவமாகப் பரபுருடன் றன்னைகூடி நயந்தசுக மநுபவித்த நாரி நெஞ்சந்
தவமாக மனைத்தொழில்கள் செய்யும்போதுந் தழுவியநு பவித்தசுகந் தனைவிடாதே.

"விவகார வேலை எலாம் சமாதியென்றால் விகற்பம் (விரோதம்) அன்றோ? மனமலைந்து விடாதோ? விட்டால் அவதானம் (சொரூபம் நாமென்னும் ஞான நிச்சயம்) நழுவுமன்றோ?” என்றாயாகில் அதற்கொரு திட்டாந்தம் கேள். ஆசை கொண்டு நவமாகப் பரபுருடன்தன்னை கூடி நயந்த சுகம் அநுபவித்த நாரி நெஞ்சம் தவமாக மனை தொழில்கள் செய்யும்போதும் தழுவி அநுபவித்த சுகந்தனை விடாதே. (அது போல என அறிவாய்) [சுத்த சத்துவம் சொரூபானந்தத்தில் அழுந்தியிருப்பதால் விவகாரம் செய்யும்போதும் சமாதியிலேயே இருக்கும்]

" பிரம்மத்தில லயமாகி சமாதில இருப்பார்ன்னு நினைச்சா, நீங்க பாட்டுக்கு வியவகாரம் செய்வார் என்கிறீங்க. இது விரோதமா இருக்கே. வியவகாரம் னா மனசு அதில ஈடுபடாதா. ஈடுபட்டா மனசு அலையாதா? அப்படி ஏக்காக்கிர சித்தம் இல்லாம மனசு அலைந்தா அது சமாதி இல்லையே?” என்கிறான் சீடன்.

மனசு ஒரு இடத்தில இருக்க உடம்பு பாட்டுக்கு வேற வேலையை பாக்கிறது நமக்கு ஒண்ணும் புதுசு இல்லையே! அந்த காலத்தில அப்படி இருந்ததோ என்னமோ? பூஜைன்னு உட்காந்து ஆரம்பத்தில ரொம்ப கவனத்தோட ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்தில ஆபீஸ்/ வீட்டு பிரச்சினை ன்னு மனசு வேற எங்கோ போயிடுது. கை கால் பாட்டுக்கு தானியங்கியா பூஜைக்கான படிகளை சரியா செஞ்சுகிட்டே போகுது. கடைசில கொஞ்சம் கூட மனசு ஈடுபடாம பூஜையை முடிச்சு எழுந்திருக்கிறதும் உண்டு. இது வருத்தத்திலேயே இருந்து கொண்டு காரியம் செய்கிற விஷயம்.

வீட்டிலே டிமிக்கி கொடுத்துட்டு இரவு காதலனை சந்திச்சு சல்லாபிச்சுட்டு அடுத்த நாள் மனசு அந்த சுகத்திலேயே இருக்க தானியங்கியா வீட்டு வேலைகளை செய்கிற பெண் போலன்னு உதாரணம் கொடுக்கறார் ஸ்வாமிகள்.
என்ன இப்படி எல்லாம் ஒரு உதாரணமா என்கறீங்களா? கொஞ்சம் நிரடலா இருந்தாலும் அது ரொம்பவே பொருத்தமான உதாரணம். உடல் இன்பமே இப்படி ஒரு நிலையை கொடுக்கும்னா பிரம்ம ஆனந்தம் ஏன் தராது?

சொல்ல வந்தது மனசு ஒரு இடத்தில இருக்க காரியம் பாட்டுக்கு செய்ய முடியும் என்கிறதுதான். அதாவது பிரம்மத்தில சித்தம் இருக்க வியவகாரங்களையும் செய்யக்கூடும்.
"தாதி விளையாடி இருகை வீசி வந்தாலும் தாதி மனம் நீர்க்குடத்தேதான்” என்கிறார் பட்டினத்தார்.

கொந்தவிழ் மலர்ச்சோலை நன்னீழல் வைகினுங்
குளிர்தீம் புனற்கைஅள்ளிக்
கொள்ளுகினும் ........
சந்ததமும் நின்னருளை மறவா வரந்தந்து
தமியேனை ரட்சைபுரிவாய்
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.11.
- தாயுமானவர்.

இப்படி தொழில் செய்கிற சீவன் முக்தன் ஒரு சாட்சியாக மட்டுமே இருக்கிறான். அட! ஒரு சாதாரண மனுஷனே சில காரியங்களை ஒரே நேரத்திலே செய்கிறாங்க. மெய்ல் பாத்துகிட்டே சாட்டறாங்க. வேலை பாத்துக்கிட்டே ப்ளாக் போஸ்ட் பண்ணறாங்க.

இப்படி இருக்க சீவன் முக்தருக்கு இது பெரிய காரியமா?

ஒருவன் ஒரு பெரிய ஏரிக்கரை மேலே இருக்கிறான். ஒரு பக்கம் பாத்தா ஏரியிலே தண்ணி; விசாலமா, பிரிவில்லாம ஒண்ணா இருக்கிறது. அவனே வெளிப்பக்கம் பாத்தா வீடு ரோடு, மிருகங்கள், பல மனிதர்கள், இன்ன பிற துன்பம் தருவன  எல்லாம் தெரியுது.

இதே போல சீவன் முக்தன் உள்ளே பாக்கும்போது களங்கமில்லாத, சலனமில்லாத, ஏகமானதாக, அகண்டாகாரமா ஆன்மாவை பாக்கிறான்.
இவனே பகிர் முகமா பாக்கிறப்ப நானா ரூபமா நாம ரூப பிரபஞ்சத்தை பாக்கிறான். ஆனா இந்த உலக விவகாரங்களிலே வெறும் சாட்சியா இருக்கிறதே அவனோட இயல்பா இருக்கு. நமக்கு எப்படி "நான் செய்கிறேன்" என்கிறது இயல்பா இருக்கோ அதே மாதிரி இவருக்கு சாட்சியா இருக்கிறது இயல்பா இருக்கு.


Wednesday, June 17, 2009

மனோ நாசம் இருவிதம்




மனசு இல்லாம போகிறது என்கிறது ரெண்டு விதம் அப்பா. ஒண்ணு மனசோட சாதாரண இயல்பு -சொரூபம்- கெட்டு போகிறது. சீவன் முக்தருக்கு இப்படி கெட்டு போகும். இததான் சொரூப நாசம் என்பாங்க. மத்தது மனசு மொத்தமா காணாம செத்துப்போகிறது. அது அரூப நாசம். விதேக முக்தருக்கு (உடல் இறந்து போன முக்தருக்கு) இப்படி இருக்கும்.

20.
மனோ நாசம் இருவிதம் என பதில்

மனநாசஞ் சொரூபமென்று மரூபமென்றும் வகுத்துரைப்பா ரிருவகையா வருமிவற்றில்
வினவாத சீவன்முத்த ரிடத்திலொன்றும் விதேக முத்த ரிடத்திலொன்று மேவுங்கண்டாய்
தனதான சத்துவமாய் மனஞ்சே டித்துத் தமசுரசசு கணசித்தல் சொரூப நாசம்
அனகாசத் துவந்தானு மிலிங்க தேக மடங்கும்போ தடங்குதலே யரூப நாசம்.

மனநாசஞ் சொரூபமென்றும் அரூபம் என்றும் வகுத்துரைப்பார். இரு வகையாய் வருமிவற்றில் வினவாத (கற்க வேண்டியது இல்லாத) சீவன் முத்தர் இடத்தில் ஒன்றும், விதேக (தேகம் இல்லா அரூப) முத்தர் இடத்தில் ஒன்றும் மேவும் (பொருந்தி இருக்கும்) கண்டாய். தனதான (தன் சுபாவமான) சத்துவமாய் மனம் சேடித்து (மிஞ்சி) தமசு ரசசுகள் நசித்தல் சொரூப நாசம். அனகா (குற்றமில்லா) சத்துவம் தானும் இலிங்க (சூக்ஷ்ம) தேகம் அடங்கும் போது அடங்குதலே அரூப நாசம்.

ராஜசமும் தமஸும் போயாச்சுன்னா மனம் தன் இயல்பான சத்துவத்தில இருக்கும். அந்த வகையை சாதாரணமான மனசா சொல்ல முடியாது. அப்படி இருக்கிறவர் நிகழ்காலத்திலேயே எப்பவும் இருப்பார். கிடைச்சதை சாப்பிடுவார். இன்னைக்கு வடை பாயசத்தோட சாப்பாடா ரைட். அடுத்த நாள் வெறும் மோர் சோறுதானா அதுவும் ரைட். நேத்திக்கு பாயசம் கிடைச்சப்ப மகிழ்ச்சியும் இல்லை. இன்னைக்கு கிடைச்ச மோர் சோறு பத்தி வருத்தமும் இல்லை. நான் செய்கிறேன் என்கிற நினைப்பு இல்லை எப்பவுமே இல்லை என்கிறதால இவர் செய்கிற கர்மா எதுவும் இவரை ஒட்டாது. இறைவனோட ஏஜன்ட் மாதிரி தூண்டப்பட்டதை செய்து கர்மாவை தீத்துப்பார்.
இப்படியாக இவர் கர்மவினையை அனுபவிச்சு தீர்க்கவும் தீர்ப்பார் அதே சமயம் முக்தராகவும் இருப்பார்.
--
போன பதிவிலே உமேஷ் எழுப்பிய கேள்விக்கு இங்கே விடை இருக்கு.
ராஜசமும் தாமசமும் போய்விட்ட மனசு வேற மாதிரி ஆயிடுது. துன்பத்துக்கு வருந்தறது ராஜஸ விஷயம். என்ன நடந்தாலும் சாந்தமா எடுத்து கொள்கிறது சீவன் முக்தனுக்கு எஞ்சி இருக்கிற மனசின் சத்வ விஷயம்.
 
21.
உருவமின்றி அருவமாய் உணர்வுருவமான மனத்தினால் சீவன் முத்தி சுகமும் பிராரத்த போகமும் அனுபவிக்கலாம்.

சுத்தமாஞ் சத்துவமே யுண்மையாகுந் துகளிருள்போ னான்மனமென்சொல்லும் போம்போம்
வர்த்தமா னத்தில்வந்த வுணவை யுண்பார் வருவதும்போ வதுநினைந்து மகிழார்வாடார்
கர்த்தரா மகந்தையைவிட் டகர்த்தராகிக் கரணவிருத் திகளவத்தை காண்பாராகி
முத்தரா யிருக்கலுமாம் புசிப்புங்கூடு முட்டிலையென் றறிந்துசங்கை மோசிப்பாயே

சுத்தமாஞ் சத்துவமே உண்மையாகும் (மனதின் உண்மை சொரூபமாகும்) துகள் (ராஜஸம்) இருள் (தாமசம்) [ஒழிந்து] போனால் மனம் என் சொல்லும் (விவகாரமும்) போம்போம். (இறந்துவிடும்). வர்த்தமானத்தில் (நிகழ்காலத்தில்) வந்த உணவை உண்பார்; வருவதும் (எதிர்காலம்) போவதும் (இறந்தகாலம்) நினைந்து மகிழார் வாடார். கர்த்தராம் (இதை செய்பவன் நான் என்னும்) அகந்தையை விட்டு அகர்த்தராகிக் கரண விருத்திகள் அவத்தை காண்பாராகி, முத்தராய் இருக்கலுமாம் புசிப்பும் கூடும் (பிராரர்த்த போகம் புசித்தலும் ஆகும்) முட்டிலை (தடை இல்லை) என்றறிந்து சங்கை (சந்தேகம்) மோசிப்பாயே (நீக்குவாயே).




Tuesday, June 16, 2009

மனசு இருந்தாதானே கஷ்ட நஷ்டம்?



19.
சத்து ரூபப் பிரமத்திற் சத்துவ மனம் லயித்த போது சத்துக்கள் பிராரத்த போகம் அனுபவிப்பது எப்படி என வினாவுதல்.

ஏகமாய் மனமிறந்தாற் சீவன் முத்த ரிருக்குமட்டும் பிராரத்த மெதினா லுண்பார்
போகமா னதுபுசித்துத் தொலைப்ப தன்றோ புசிப்பதென்றால் மனந்தானும் போன தன்றே
சோகமா மனமிறந்தாற் போகமில்லை தோன்றுமெனின் முத்தரென்று சொலக்கூடாதே
மோகமா மிதுதெளிய குருவே நன்றா மொழிந்தருள்வாய் தெளிவதன்றோ முத்திதானே

ஏகமாய் மனமிறந்தால் சீவன் முத்தர் இருக்கும் மட்டும் பிராரத்தம் எதினால் உண்பார்? போகமானது புசித்துத் தொலைப்பது அன்றோ? புசிப்பதென்றால் மனம் தானும் போனது அன்றே? சோகமாம் (துன்பம் தரும்) மனம் இறந்தால் போகமில்லை. [மனம்] தோன்றும் எனின் முத்தரென்று சொலக்கூடாதே. மோகமாம் இது தெளிய குருவே நன்றாய் மொழிந்தருள்வாய். தெளிவது அன்றோ முத்திதானே.

அடுத்த கேள்வி கேட்கிறான் சீடன். 
குருவே, கர்மாவை அனுபவிச்சுதானே தீர்க்கணும்? அதாவது நாம முன்னே  மத்தவங்களுக்கு செய்த தப்புங்களுக்கு இப்ப நாம அனுபவிக்கணும். அப்படி கஷ்டம் அனுபவிச்சாத்தான் அது தீரும்.
 
சரி, சீவன் முக்தர் ஒத்தர் இருக்கார். அவர் சீவன் முக்தர் என்கிறதால அவருடைய மனம் நாசமாயிடுத்துன்னு தெரியுது.
ஆனா மனசு இருந்தாதானே கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கலாம்? மனசு இல்லைனா கஷ்டம் இல்லை. கஷ்டம் இல்லைனா கர்மவினையை அனுபவிச்சதா ஆகுமா? கஷ்டத்தை அனுபவிக்க மனசு இருக்கிறதா சொன்னா அப்ப அவரை சீவன் முக்தர்ன்னு சொல்ல முடியாதே!
 
இந்த சிஷ்யன் சமான்யப்பட்டவன் இல்லை.
கரெக்டா பாய்ன்ட பிடிக்கிறார் பாருங்க.


Monday, June 15, 2009

PG


இந்த பதிவு முழுக்க கொஞ்சம் அட்வான்ஸ்ட் விஷயம்தான். தமிழ்லே படிச்சு மகிழறவங்களுக்கு. புரியாட்டாலும் ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஏற்கெனெவே சொன்னதுதான் இப்பவும் சில நூல்களிலேந்து மேற்கோள் காட்டப்படுது.
---------------------------
இப்படி எல்லாம் சொன்னதுல ஒண்ணு புரிஞ்சு இருக்கும்.எந்த உள்ளம் சலனமில்லாம (மனசோட குணம்) களங்கம் இல்லாம இருக்கோ அதுவே ஆன்மா, பேரறிவு என்கிறது. இந்த ஆன்மாவுக்கும் பிரமத்துக்கு ஒரே லட்சணம்தான். அதனால இரண்டும் கலந்து ஒண்ணாகும். ஆன்மா பரமான்மா நடுவில பேதம் சொல்கிறவன் ரௌரவம் என்கிற நரகத்தை அடைவான் ன்னு சொல்லி இருக்கு. இந்த இரண்டு நடுவிலே கட ஆகாசம், மஹா ஆகாசம் போல அளவிலேதான் வித்தியாசம். சொரூபத்திலே இல்லை.

சாந்தமே தற்சாட்சி யே பிரமம்......
போந்த பிரமமே பூரணமா-மாய்ந்துணர்ந்த
சுத்தபரி பூரணமே தோன்றாச் சுவானுபவஞ்
சித்தநிலை தானே சிவம் (சொரூப சாரம்)

கடமடமா முபாதிகளை நேதி செய்யிற்
கடவானும் மடவானு மொன்றே போல
மடமைமுத லுபாதிகளை நேதி செய்யின்
மாசற்ற வான்மாவும் பரமு மொன்றே
யிடமருவும் வேதாந்த விசாரத்தாலே
யிருமைதரு முபாதியெலா நேதி பண்ணித்
தடமருவு மான்மபர வைக்கி யத்தைத்
தடையறவே முமூட்சுவெலா முணர வேண்டும்
(ஈஸ்வர கீதை)
[நேதி செய்யின்= இல்லை என ஆக்குதல்]

தற்போதம் (தான் என்ற எண்ணம்=அகங்காரம்) இழந்து ஆன்மா பரமான்மாவோட ஐக்கியமாகும். இது ஆன்மா வேறேயா இருந்து பரமான்மாவை எதிரே பாத்து "அட! நீயும் நானும் ஒண்ணு"ன்னு கலக்கிறதில்லை. தான் யார் என்கிறதை உண்மையா அறிஞ்ச அளவிலே ஐக்கியம் ஆகிடும். எப்போ தான் ன்னு ஒரு எண்ணம் இருக்கோ அப்ப அது உண்மையான நிலையில்லை.

போதம் பதைப்பறவே பூரணமாம் பூரணமும்
போதம் பதைத்தளவே பொய்யாகு-மீது
விழித்திமைப்பர் நின்றால் வெளியசைந்தாற் காற்றாம்
பழக்கமதைச் சாட்சியைப்போற் பார்
(ஒழிவில் ஒடுக்கம்)

அகண்டாகார சொரூபத்தில் தன்னை இழத்தலே நிலையானது ஆகும். சிவம் ஆன்மாவை விழுங்கித்தான் தானாக பிரகாசிக்கும் என்று சொல்வாங்க. இதனால சிவனுக்கு உயிருண்னி ன்னு கூட ஒரு பேர் வெச்சு இருக்காங்க.

ஆனா அமுதே அயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய வென்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரவே. 28- கந்தர் அனுபூதி

அல்லையுண்ட பகல் போல வவித்தை யெல்லா
மடையவுண்டு தடையறவுன் னறிவைத்தானே
வெல்லவுண்டிங் குன்னையுந் தானாகக் கொண்டு
வேதகமாய்ப் பேசாமை விளங்குந்தானே ..
(அல்லையுண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு, தடையற உன் அறிவைத் தானே வெல்ல உண்டு, இங்கு உன்னையும் தானாகக் கொண்டு வேதகமாய்ப் பேசாமை விளக்கும் தானே. 21.)

ஓராமலேயொருகா லுன்னாம லுள்ளொளியைப்
பாரம லுள்ளபடி பார்த்திருந்தால் -வாராதோ
பத்துத் திசையும் பரந்தெழுந்தா னந்தவெள்ளந்
தத்திக் கரைபுரண்டு தான்
(ஓராமலே ஒரு கால் உன்னாமல் உள்ளொளியைப் பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால்-வாராதோ பத்துத் திசையும் பரந்தெழுந்து ஆனந்த வெள்ளம் தத்திக் கரை புரண்டு தான். 58.)
- தாயுமானவர்

ஐக்கிய நிலையில் தான் அதுவாதல் தவிர முன்னிலையில் ஒன்றுமில்லை. அதனால எதிரிட்டு அறிவதற்கு ஒண்ணுமே இல்லை. தான் அங்கே இல்லை. அதனால அது இதுன்னு சொல்ல ஹேது ஒண்ணுமே இல்லை.

ஊமைகண்ட சொப்பனம்போன் றுள்ளே யறிவதன்றி
நாமிதெனச் சொற்றிடவு நண்ணுமோ-தாமதம்போ
லாங்கதுவாய்ப் போவதலா லன்றிதா மென்றுரைக்க
வீங்கொருவ ருண்டோ விசை.
(ஊமை கண்ட சொப்பனம் போன்று உள்ளே அறிவதன்றி, நாம் இது எனச் சொற்றிடவும் நண்ணுமோ? தாமதம் போல் ஆங்கு அதுவாய்ப் போவதலால் அன்றி தாம் என்றுரைக்க ஈங்கு ஒருவர் உண்டோ இசை.)

ஒன்றென் றிரண்டென்று மொன்றிரண்டே யாமென்று
மென்றோ நீ முத்திதனி லேய்ந்திடுவா - யொன்றென்று
சொல்லு மறிவைத் துரியாதீ தம்விழுங்கிற்
சொல்லுமவ னெங்குற்றான் சொல்.
(ஒன்று என்று இரண்டென்றும் ஒன்று இரண்டேயாம் என்றும் என்றோ நீ முத்திதனில் ஏய்ந்திடுவாய். ஒன்றென்று சொல்லும் அறிவைத் துரியாதீதம் விழுங்கில் சொல்லும் அவன் எங்குற்றான் சொல்.)
-வள்ளலார்.- சிவஞான பிரகாச வெண்பா

ஞான நிலையிலே மனச் சலனமில்லை. பிரபஞ்சம் கனவு போன்ற அனுபவமாக தோன்றும். அதற்கு சந்தேகம் இல்லை என்கிறாங்க.

இப்படியா சொல்லுகிற விஷயங்களாலே என்ன புரியுதுன்னா சீவன் முக்தி என்கிறது மனம் இறந்த நிலை.
இதனால சீடனுக்கு ஒரு சந்தேகம் வருது.....


Thursday, June 11, 2009

Wednesday, June 10, 2009

மனசோட சக்தி



சில காட்டுத்தீக்கள் எப்படி உண்டாகுதுன்னா யாராவது பிக்னிக் போயிட்டு பாட்டில் ஏதாவதை காலியானதை அப்படியே போட்டுவிட்டு போயிடுவாங்க. சில நாட்களிலே சூரிய கதிர்கள் அதன் வழியா புகுந்து அது லென்ஸ் மாதிரி வேலை செய்வதாலே குவிஞ்சு பக்கத்தில இருக்கிற காய்ஞ்ச புல்லை பத்த வைக்கும். இது அப்படியே பரவி புதர்கள் மரங்கள் பிடிச்சுக்கொண்டு எரிய ஆரம்பிச்சுடும். இதனாலேயே பாட்டில் கொண்டு போகக்கூடாதுன்னு தடை விதிச்சு இருக்கிற பூங்காக்கள் உண்டு.

சாதாரணமா கடும் கோடையிலே "அப்பா வெயில் கொளுத்துது"ன்னு நாம சொன்னாலும் எவ்வளோ வெயில் அடிச்சாலும் எதுவும் பத்திக்கிறதில்லை. ஆனா குவிக்கப்பட்ட கதிர்கள் ஒரு காட்டையே எரிக்கும். அதைப்போல மனசோட சக்தி சாதாரணமா விஷயங்களை பற்றுகிற ரஜோ, தமோ குணங்களா பரவி இருக்கு. சத்வ குணம் மாறாக நிச்சலனமானது. மனசோட வல்லமை லென்ஸால குவிக்கப்பட்ட வெயில் மாதிரி சத்துவத்தில குவிஞ்சா அதோட வல்லமை காட்டுத்தீ போல அபாரமா ஆகும். அதனால அப்படி குவிக்க முடியறவங்க சாதாரணமா பலரும் செய்ய முடியாததை எல்லாம் செய்வாங்க. முடிவில மாயையையே நீக்கி பரம்பொருளை அடையவும் கூட இந்த சக்தியால செய்ய முடியும்.

இப்படி மூன்று குணங்களிலே ஒன்னு மேலெழும் போது மற்றது அடங்கும் ன்னு யோக வாசிட்டத்திலேயும் சொல்லியிருக்கு.

வாழுஞ்சத்துவ மற்றையவ்விரண்டையு மறைத்துத்
தாழு மற்றையவ் விரண்டுமத்தமோகுணந்தழைப்பின்
வீழும் சத்துவந் தமங்களவ்விரசதம் விளைவி
னூழிந் மற்றவை யிரண்டுந்தாழ்ந் தொன்றுமிக்குளவாம்.
வாழும் சத்துவ மற்றை அவ்விரண்டையும் மறைத்துத்
தாழும் அற்றை அவ் விரண்டும். அத் தமோ குணந்தழைப்பின்
வீழும் சத்துவம். தமங்கள் அவ்விரசதம் விளைவின்
ஊழின் மற்றவை இரண்டுந் தாழ்ந்து ஒன்று மிக்க உளவாம்.

18.திருஷ்டாந்தத்துடன் விடை கூறி முடித்தல்

களங்கமற்ற கண்ணாடி தன்முன் வேறோர் களங்கமற்ற கண்ணாடி காட்டும் போது
விளங்கியதன் மயமாகி யபேதமாகி விகற்பமின்றி நிருவிகற்ப மானாற் போல
அளந்தறியப் படாவிடிவாய்ச் சத்தாய்ச் சித்தா யானந்த மாம்பிரமத் தைக்கிய மான
உளந்தெளிந்த படியிருந்தா லுலக மெங்கே யுலைவெங்கேயென்று சங்கையொழிந்திடாயே

களங்கமற்ற கண்ணாடி தன்முன் வேறோர் களங்கமற்ற கண்ணாடி காட்டும் போது
விளங்கிய [து போல] தன் மயமாகி அபேதமாகி விகற்பமின்றி நிருவிகற்பமானால் போல அளந்தறியப் படா விபுவாய் (வ்யாபகமாய்) சத்தாய் சித்தாய் ஆனந்தமாம் பிரமத்து ஐக்கியமான உளந்தெளிந்த படி இருந்தால், உலகம் எங்கே? உலைவு எங்கே? என்று சங்கை ஒழிந்திடாயே

ஒரு மாசில்லாத கண்ணாடி முன்னே இன்னொரு மாசில்லா கண்ணாடியை காட்டினா இதுவும் அதே போல நிர்மலமா தோணும் இல்லையா? அது போல பிரமத்தைப்போல நிர் மலமா, மாசில்லாத, சாந்தமாய் இருக்கிற உன் உள்ளம் அகண்டமாய், ஆனந்தமாய் இருக்கிற அந்த பிரம்மத்தில் ஐக்கியமாகி தெளிவாக நின்னுதுன்னா இந்த உலக தோற்றமும் ஏது? சலனமேது? என்று உணர்ந்து சந்தேகத்தை போக்கிக்க என்கிறார். இப்ப பாத்தவைகளால சலனமில்லாத களங்கமில்லாத உள்ளமே அறிவு ஆன்மா ன்னு புரியும். இது நடக்கிற விஷயங்களுக்கு சாட்சியா மட்டும் இருக்கு.

Monday, June 8, 2009

மனோலய உபாயம்:



17. மனோலய உபாயம்:
மனது சத்துவ சொரூபமற் றிரண்டும் வந்து கலந்தன வவற்றைமாற் றினார்போம்
தனது சன்மார்கத் தைவிடா திருந்தபோது தமோ குணமும் ரஜோகுணமுஞ் சமிக்கும்பின்னைக்
கன பரிணாமஞ் சலனம் போம் போனக்காற் களங்க மற்றுநின்ற வாகாசம் போலும்
நினதுள மப்படியா மப்பிரமத் தொன்றாய் நிருவிகற்ப சமாதியிலே நிற்குந் தானே

மனதுக்கு [இயல்பானது] சத்வ சொரூபம். மற்றிரண்டும் [இடையே] வந்து கலந்தன. அவற்றை மாற்றினால் போம். (நீக்கினால் நீங்கும்). தனது சன்மார்கத்தை விடாதிருந்த (நீக்காமல் அனுஷ்டித்த) போது [தேகத்தின் இயல்பான] தமோ குணமும் [பிராணத்தின் இயல்பான] ரஜோகுணமும் சமிக்கும் (நீங்கும்). பின்னை கன (கனமாகிய விஷய) பரிணாமமும் (ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்துக்கு தாவும்) சலனம் போம். போனக்கால் களங்கமற்று நின்ற ஆகாசம் போலும் நினது உள்ளம் அப்படியாம் அப்பிரமத்து ஒன்றாய் நிருவிகற்ப சமாதியிலே நிற்குந்தானே.

ரஜோ குணம் மனசோட சலனத்துக்கு காரணமா இருக்கு. இந்த சலனம் பிராணனின் காரியம். தமோ குணம் ஸ்தூல பொருளை - அதான் பருப்பொருளை அறிய காரணமா இருக்கு. ஆசை, கோபம், அகங்காரம், டம்பம், சோம்பல், தூக்கம் இதெல்லாம் இந்த 2 குணங்களை சேர்ந்ததுதான். இதெல்லாம் இடையிலே வந்தவை. நிலையா இருக்காது.

நாம் கடைக்கு போறோம். அங்கே கடைக்காரணோட ஏதோ தகராறு. சண்டை போட்டுட்டு புரு புருன்னு வீட்டுக்கு வரோம். எல்லாம் சரி! இந்த கோபம் எவ்வளவு நேரம் இருக்கும். வீட்டிலே குழந்தையை, பேத்தி பெயரனை பாத்ததும் அது காணாம போயிடும். சிரிச்சு விளையாடறோம். இல்லை ஆசை மனைவி காப்பி போட்டு கொண்டுவந்து கொடுத்து "சரி விடுங்க அதை!" ன்னு சொன்னபின் காணாம போயிடும். இதை நிறுத்தி வைக்க முடியாது. யாரானா "இதோ பாருப்பா இப்படியே ரெண்டு நாள் கோபப்பட்டு கொண்டு இரு பாக்கலாம். ஆயிரம் ரூபா தரேன்" னு சொன்னாக்கூட அப்படியே கோபத்தை நிறுத்தி வைக்க முடியாது. அதை கேட்டு உடனே சிரிச்சாலும் சிரிச்சுடுவார்.

இல்லை மாறாக அடிச்சது லக்கு லாட்டரி, இல்லை இணையத்திலே எழுதிய கதைக்கு ஏதோ பரிசு கிடைக்குது; இல்லை சூடான பதிவுகள்ளே உங்க வலைப்பூ போடு போடுன்னு போடுது. ரொம்ப சந்தோஷப்படறோம். எவ்வளவு நேரம்? ரெண்டு மூணு நாள்? அப்புறம்? அதுவும் கொஞ்ச கொஞ்சமா போயிடும். இல்லை ஆபீஸ் டேமேஜரை பாத்த உடனே சட்டுனு காணாம போயிடும். எந்த "தாங்க முடியாத துயரம்" ன்னு சொல்கிற விஷயம் கூட நாளடைவிலே காணாம போயிடுது.
ஏன்னா இதெல்லாம் நம்மளோட சுபாவ குணம் இல்லை.

சத்துவமே சலனமில்லாத நல்ல குணம். விரும்பினா அதிலேயே இருக்கலாம். எவ்வளவு நேரம், நாள் வேணுமனாலும். "பத்து ரூபாய் தரேன் இன்னிக்கு சாந்தமாவே இரு. யார் கோபப்படுத்தினாலும் கோவம் வராம பாத்துக்க" ன்னா அது கொஞ்சம் முயற்சியோட முடிகிற காரியம்தான். ஆனா லட்ச ரூபா கொடுத்தாலும் கோபத்தையோ சோகத்தையோ வர வைக்கவும் முடியாது, நிலையா நிறுத்தி வைக்கவும் இயலாது.

18.திருஷ்டாந்தத்துடன் விடை கூறி முடித்தல்

களங்கமற்ற கண்ணாடி தன்முன் வேறோர் களங்கமற்ற கண்ணாடி காட்டும் போது
விளங்கியதன் மயமாகி யபேதமாகி விகற்பமின்றி நிருவிகற்ப மானாற் போல
அளந்தறியப் படாவிடிவாய்ச் சத்தாய்ச் சித்தா யானந்த மாம்பிரமத் தைக்கிய மான
உளந்தெளிந்த படியிருந்தா லுலக மெங்கே யுலைவெங்கேயென்று சங்கையொழிந்திடாயே

களங்கமற்ற கண்ணாடி தன்முன் வேறோர் களங்கமற்ற கண்ணாடி காட்டும் போது விளங்கிய [து போல] தன் மயமாகி அபேதமாகி விகற்பமின்றி நிருவிகற்பமானால் போல அளந்தறியப் படா விபுவாய் (வ்யாபகமாய்) சத்தாய் சித்தாய் ஆனந்தமாம் பிரமத்து ஐக்கியமான உளந்தெளிந்த படி இருந்தால், உலகம் எங்கே? உலைவு எங்கே? என்று சங்கை ஒழிந்திடாயே



Friday, June 5, 2009

சாத்திர அபிமானம்



மூணாவது சாத்திர அபிமானம். அதாவது எல்லாரைவிட நமக்கு அதிகமா தெரியணும். நம்மை விட அதிகமா தெரிஞ்ச ஆசாமி இருக்கவே கூடாதுன்னு ஒரு விசித்திர எண்ணம். "இதை தெரியுமா? அதை தெரியுமா? சொல்லுங்க பாப்போம்!” ன்னு கேட்டுகிட்டே இருப்பாங்க. மத்தவங்க எதை சொன்னாலும் "அப்படியா? என்ன ஆதாரம்?"ன்னு கேட்டு மட்டம் தட்டப் பாப்பாங்க.

ஒரு வித்வான் இருந்தார். அவருக்கு எல்லாத்தையும் படிக்கணும்ன்னு ஆசை. சங்கரர் எழுதின பிரம்ம சூத்திரத்தை ஆராய்ஞ்சார், ஆராய்ஞ்சார், அப்படி ஆராய்ஞ்சார். ஆராய்ஞ்சு உரை எழுதினார். மனைவி வீட்டு காரியத்தை எல்லாம் கவனிக்க இவர் பாட்டுக்கு படிச்சுகிட்டே இருப்பார். காலை முதல் இரவு நெடுநேரம் வரை படிப்புதான். நிறைய எழுதினார். ஊர் ஜனங்களும் இப்படி பெரிய வித்வான் நாம் ஊரிலே இருக்கறது பெருமைன்னு தேவையான உதவி எல்லாம் செய்தாங்க. அதனால சாப்பாட்டுக்கு கவலை இல்லாம படிச்சுகிட்டே, எழுதிகிட்டே இருந்தார்.
ஒரு நாள் ஒரு வழியா நூலை எழுதி முடிக்கும் சமயம் இருட்டிவிட்டது. விளக்கு வரக்காணோம். என்னடான்னு தலை நிமிர்ந்து பார்த்தார். ஒரு முதிர்ந்த பெண்மணி மெதுவா கஷ்டப்பட்டுகிட்டு ஒரு விளக்கை எடுத்து வந்தாங்க. "யாருமா நீ?” ன்னு கேட்டார். அவங்க சிரிச்சுகிட்டே "அப்பாடா இப்பவாவது என்னை யாருன்னு கேக்க தோணித்தே! நான்தான் உங்க மனைவி!” ன்னாங்க.

இவர் திகைச்சு போயிட்டார்! அவ்வளோ வயசாயிடுத்தா! இவ்வளோ நாளா உன்னை கவனிக்காம விட்டுட்டேனேன்னு வருத்தப்பட்டார். அதனால, அப்பதான் தான் எழுதி முடிச்ச நூலுக்கு அவங்க பேரையே வெச்சார். பாமதி. ஸ்ரீ சங்கரர் எழுதிய பிரம்ம சூத்திரத்துக்கு உரைநூல். வித்வான் பேர் கூட பிரபலம் இல்லாம போயிடுத்து. அவர் பேரு வாசஸ்பதி மிஸ்ரர் என்கிறாங்க. மிஸ்ரர் குடும்ப பேரு. வாசஸ்பதி டைட்டில். அவர் பேர் என்ன? தெரியாது! (வாசஸ்பதி என்பதே அவர் பேரா இருக்கலாம் என்கிறார் என் பையர்!) பாமதி இன்னும் பேசப்படுது.

பரத்வாஜர் பத்தி காடகத்திலே ஒரு கதை வருது.

எல்லா வித்தைகளையும் கத்துக்கப்பாத்தார். கத்துக்கொண்டேஏஏஏ... போனார். வாழ்நாள் முடியப்போகிறதுன்னு தெரிஞ்சது. "அடடா, இன்னும் படிக்க நினைச்சது பாக்கி இருக்கே!". இந்திரனை நோக்கி தபஸ் பண்ணார். இந்திரன் வந்து என்ன வேணும்ன்னு கேட்டான். இன்னொரு ஆயுசு கொடுன்னு கேட்டார். சரின்னு அவனும் கொடுத்துட்டு போயிட்டான். மேலே படிச்சு படிச்சு அந்த ஆயுசும் முடிகிற நேரம் திருப்பி தபஸ் செஞ்சு இரண்டாம் முறை ஆயுசை நீட்டிக்கொண்டார். அதுவும் போறலை. மூணாம் முறை தபஸ் செஞ்சப்ப இந்திரன் பாத்தான். "எதுக்கு இப்படி ஆயுசை நீட்டிக்கொண்டே போகிறாய்? என்ன பிரயோசனம்?" ன்னு கேட்டான்.

பரத்வாஜர் எனக்கு எல்லா வித்தைகளையும் கரைச்சு குடிச்சு முடிக்கணுமேன்னார்.
இந்திரன் சிரிச்சுண்டே எதிரே இருந்த ஒரு பெரிய மலையை காட்டினான். "இதப்பாத்தியா எவ்வளவு பெரிய மலை? இது போல மனுஷனுக்கு கிடைக்கக்கூடிய சாத்திரங்கள். இதப்பாத்தியா ஒரு கைபிடி அளவு மண். இதான் நீ மூணு ஆயுசுலே கத்துகிட்டது. இதுக்கெல்லாம் முடிவே கிடையாது. "
"எந்த வித்தையை கத்து கொண்டால் எல்லாம் கற்றுக்கொண்டதாகுமோ அந்த பிரம்ம விதையை கத்துக்கப்பாரு" ன்னான்.

பரத்வாஜரும் அதை புரிஞ்சு கொண்டு வேதாந்த மார்கத்திலே மனசை செலுத்தி பெரிய ரிஷி ஆனார்.

இப்படி கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு ன்னு புரிஞ்சுகொண்டு எதை தெரிஞ்சு கொண்டா நம்ம ஆன்ம சாதனைக்கு பயனா இருக்குமோ அதை மட்டுமே ஆழ்ந்து படிச்சு தெரிஞ்சுகொண்டு உள் வாங்கிக்க பாக்கணும். படிச்சதை அனுபவத்துக்கு கொண்டு வரப்பாக்கணும். இதுவே ஒரு ஞான அப்பியாசி செய்ய வேண்டியது.

மனசோட சத்துவ குணம்தான் உத்தம குணம். ரஜோ குணம் மத்திமம். தமஸ் கீழானது. அந்தக்கரணம்ன்னு சொல்கிறதின் 5 பாகங்களிலே (நினைவிருக்கா?) உள்ளமே சத்துவம். மனம், புத்தி, சித்தம் ரஜஸ். அகங்காரம் தமஸ். இந்த சத்துவமான உள்ளம் மனசோட அருவ பாகம். மற்றது உருவ பாகம். பின்னாலே வரும்.

16.
மனத்தின் முக்குணமும் அவற்றின் காரியமும்.

கருதுமனோ குணமூன்றா மூன்றிலொன்று கதித்தெழுந்தான் மற்றிரண்டுங் கரந்து நிற்கும்.
தருமமிகுஞ் சத்துவமே லானபோது சன்மார்க மான தெய்வ சம்பத்துண்டாம்.
மருவுரசோ குணமாகி லுலகதேக வாதனையாஞ் சாத்திரவா தனையுமாகும்
அருமகனே தமோகுணமே லானபோதி லசுரசம்பத்துண்டாகு மறிந்துகொள்ளே

கருதும் மனோ (மனத்தின்) குணம் மூன்றாம் மூன்றில் ஒன்று கதித்தெழுந்தால் (ஓங்கி எழுந்தால்) மற்றிரண்டும் கரந்து (அடங்கி) நிற்கும். தரும மிகும் (நிஷ்காம்ய புண்ய குணம் அதிகரித்ததால்) சத்துவம் மேலானபோது சன் (நல்ல) மார்கமான தெய்வ சம்பத்துண்டாம். மருவும் ரசோ குணமாகில் (காம்ய புண்ணியத்தால் ரஜஸ குணம் அதிகரித்தால்) உலக, தேக, சாத்திர வாதனையும் (வாசனை) உண்டாகும். அரு மகனே [பாவ கர்மத்தால்] தமோ குணம் மேலான போதில் அசுர சம்பத்துண்டாகும் அறிந்து கொள்ளே.

நமக்கு ரொம்பவே ஆறுதல் தர விஷயம் நம் மனசோட இயற்கையான குணம் சத்துவம் என்கிறதுதான்.
ரஜஸும் தமஸூம் கூட வந்து சேர்ந்தது. இயற்கையானதே எப்பவும் நீடிக்கும். இடையிலே வந்ததை நீக்கினால் நீங்கும். சத்வ குணத்தயே மேலோங்கி இருக்கும்படி எப்பவும் பிடிச்சுகிட்டு இருந்தா ரஜோ தமோ குணங்கள் நசியும். உள்ளம் ஆகாய தத்துவம். அதுதானே சத்துவ பாகம்னு பாத்தோம்? சத்துவத்திலேயே மனசு நிலையா இருந்தா ஆகாயம் போல நிர்மலமா போகும். சலனமில்லாம அதி சூக்கும நிலைக்கு போயிடும். அதே போல சலனம் இல்லாத அதி சூக்குமமான பிரம்மத்தோட ஒன்றி போகும்.


Thursday, June 4, 2009

மனம் அலையாதிருக்க உபாயம் கேட்டல்



வஞ்சகமில்(லாத) பரமார்த்த குருவே சொன்ன வழிகள் அறிந்தேன். இனியோர் வசனங்கேளீர். சஞ்சலமற்று அகண்ட பூரணமாய்ச் சித்தம் (மனம்) ததாகாரம் (பிரமம்) ஆவதன்றோ சமாதி யோகம். உஞ்சலை (ஊஞ்சலை) ஒத்து அலைவது தன் சுபாவமாகி ஒரு கணத்தில் பல உலகாய் உதிக்கும் இந்த நெஞ்சகம் வத்துவில் அசையா நிவாததீப நிலை அடைவது எப்படியோ நீர் சொல்வீரே. {மனம் அலையாதிருக்க உபாயம் கேட்டல்}

நல்ல கேள்விப்பா. மனசுக்கு சத்வம் ரஜஸ் தமஸ் ன்னு மூணு குணம் உண்டு இல்லையா? அதில ஒரு நேரத்தில ஒரு குணம்தான் மேலோங்கி இருக்கும்.
சத்துவம் மேலோங்கின போது ஈஸ்வர பக்தி, கருணை, சாந்தம், ஞானம் ன்னு சன் மார்க குணங்கள் உண்டாகும்.
அதுவே ரஜோ குணம் அதிகமாகும்போது உலக சம்பந்தமான விஷயங்கள், உடம்பு சம்பந்தமான விஷயங்கள், சாத்திர வாசனை இப்படி இதில எல்லாம் விருப்பம் வருகிற குணம் இதெல்லாம் உண்டாகும்.
தமோ குணம் மேலோங்கித்துனா அகங்காரம், டம்பம், சோம்பல், தூக்கம், காமம், குரோதம் எல்லாம் உண்டாகும்.

இந்த மூணிலே தமத்தை விடணும்ன்னு எல்லாருக்குமே தெரியும். ரஜோ குணத்தையும் ஞானம் தேடுகிறவங்க விடணும்.
இந்த ரஜோ குணத்திலே மூணு விதம்.

உலக வாசனை என்பது உலகத்திலே எல்லாரும் புகழும் படியா மெச்சும் படியா துதிக்கும்படியா நாம இருக்கணும்ன்னு ஆசை படுகிறது.
இப்படி எல்லாரும் பிரியப்படுகிற மாதிரி நடந்து கொள்கிறது இயலாத காரியம். எப்பவும் எல்லாரையும் திருப்தி செய்ய முடியாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொத்தரை திருப்தி செய்யலாம் அவ்வளவே. ஏன் மழை பெய்யறது. சிலர் பாழும் மழைன்னு திட்டறாங்க. சிலர் ஆஹா மழைன்னு சந்தோஷப்படறாங்க.
பதிவிரதையான சீதையையே குறை சொல்லித்து இந்த உலகம். அப்புறம் என்ன? அதுவும் 2 யுகங்களுக்கு முன்னே. இப்ப கலி யுகத்திலே கேக்கவே வேண்டாம்.
அதனால நமக்கு சரின்னு தோன்றியதை செய்து கொண்டே போகணும். மத்தவங்க மேம்போக்கா பாத்துட்டு புகழறதும் வேணாம்; இகழறதும் வேணாம். ஆனம் லாபம் எந்த வழியிலோ அதிலேயே போகப்பாக்கணும்.

இரண்டாவது தேக வாசனை. காயகல்பம் எல்லாம் சாப்பிட்டு தேகத்தை நெடுங்காலம் அழியாம அப்படியே வெச்சுக்கணும். சந்தனம், பூ எல்லாம் அணிஞ்சு அலங்காரம் செய்துக்கணும் என்கிற ஆசை. இந்த காலத்திலே வருஷா வருஷம் மெடிகல் செக்அப் ன்னு நிறைய பரிசோதனைகள் எல்லாம் செய்து பல பரிசோதனை கூடங்கள் பிழைக்க வழி செய்து தரோம். நிறைய வைட்டமின் மாத்திரை விற்பனை ஆகுது. ஒரு சின்ன ஜலதோஷம்ன்னா கூட ஒரு சுக்கு கஷாயம் வெச்சு குடிக்காம டாக்டரை தேடி ஓடறோம். மொத்தமா ஒரு 500 ரூபா செலவானாதான் அப்பாடான்னு இருக்கு. நம்மால சில ப்யூட்டி பார்லர்கள் பிழைக்குது. எல்லாம் சில மணி நேரம் மட்டுமே நிக்கிற அலங்காரத்துக்கு! தினம் மூணு தரம் ஆடை மாத்தாட்டா ஏதோ குறைஞ்சு போனதா நினைக்கிறோம்.
ஹும்!
என்னதான் பணக்காரன் ஆனாலும், படிச்சவங்களா இருந்தாலும் ஒரு நாள் யமதர்ம ராஜன் கூப்பிட்டா கிளம்பித்தான் ஆகணும். இதோ இந்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டுட்டு வரேன்ன்னு சொல்ல முடியாது. டிரெஸ் மாத்திட்டு வரேன்னு சொல்ல முடியாது.
ஞானத்தை அப்பியாசிக்கிறவங்க உடல் மேலே இருக்கிற இந்த அபிமானத்தையும் விலக்கவே வேணும்.

மூணாவது சாத்திர அபிமானம். அதாவது எல்லாரைவிட நமக்கு அதிகமா தெரியணும். நம்மை விட அதிகமா தெரிசஞ்ச ஆசாமி இருக்கவே கூடாதுன்னு ஒரு விசித்திர எண்ணம். "இதை தெரியுமா? அதை தெரியுமா? சொல்லுங்க பாப்போம்!” ன்னு கேட்டுகிட்டே இருப்பாங்க. மத்தவங்க எதை சொன்னாலும் "அப்படியா? என்ன ஆதாரம்?"ன்னு கேட்டு மட்டம் தட்டப் பாப்பாங்க.



Wednesday, June 3, 2009

மனசு எப்படி சமாதியிலே அசைவில்லாம நிக்க முடியும்?



வஞ்சனை பண்ணாம உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லிக்கொடுக்கிற குருவே நீங்க சொல்கிறது எல்லாம் புரிஞ்சது. இன்னொரு சந்தேகம்.
சமாதி என்கிறது என்ன? மனசு கொஞ்சம் கூட சலனமடையாம, அலையில்லாத கடல் மாதிரியும், காத்தில அசையாத தீபம் மாதிரியும் எங்கும் நிறைஞ்ச பரிபூரண நிலையான பிரம்மாகாரமா ஆகிறதுதானே?

ஆனா இந்த பாழும் மனசோ எப்பவுமே அலை பாஞ்சுகிட்டுதானே இருக்கு? ஊஞ்சல் மாதிரி எப்பவுமே அசைஞ்சு கொண்டிருக்கு. (ஆதி சங்கரர் மனசுக்கு கொடுத்த டெபனஷனே சஞ்சலம்தான்)
இப்படிப்பட்ட மனசு எப்படி பிரம்மகாரமான சமாதியிலே அசைவில்லாம நிக்க முடியும்?

அலையிலா சாகரம் போல் அனிலம் சேரா விளக்கது போல்
நிலையொன்றியநற் சமாதியுற்று நின்றாட்கமலத் தெழும்புரச
நிறைவாரிதியிற் புகுந்தடியேன் நேசித்து அதனில் இருப்பேனோ
திருப்போரூர் சந்நிதி முறை - சிதம்பர ஸ்வாமிகள்.

15
வஞ்சகமில் பரமார்த்த குருவே சொன்ன வழிகளறிந் தேனினியோர் வசனங்கேளீர்
சஞ்சலமற் றகண்ட பூரணமாய்ச் சித்தந் ததாகார மாவதன்றோ சமாதி யோகம்
உஞ்சலையொத் தலைவதுதன் சுபாவ மாகி யொருகணத்திற் பலவுலகா யுதிக்கு மிந்த
நெஞ்சகம்வத் துவிலசையா நிவாததீப நிலையடைவ தெப்படியோ நீர்சொல்வீரே


வஞ்சகமில்(லாத) பரமார்த்த குருவே சொன்ன வழிகள் அறிந்தேன். இனியோர் வசனங்கேளீர். சஞ்சலமற்று அகண்ட பூரணமாய்ச் சித்தம் (மனம்) ததாகாரம் (பிரமம்) ஆவதன்றோ சமாதி யோகம். உஞ்சலை (ஊஞ்சலை) ஒத்து அலைவது தன் சுபாவமாகி ஒரு கணத்தில் பல உலகாய் உதிக்கும் இந்த நெஞ்சகம் வத்துவில் அசையா நிவாததீப நிலை அடைவது எப்படியோ நீர் சொல்வீரே. {மனம் அலையாதிருக்க உபாயம் கேட்டல்}



Tuesday, June 2, 2009

ஜீவன் என்கிறது...



ஜீவன் என்கிறது என்னன்னு கொஞ்சம் தெளிவாக்கிக்கலாம்.
அந்தக்கரணம் ரஜோ குணத்தில சத்துவம். அதனால தெளிவானது.
பிரம்மத்தோட ஒரு துணுக்கு கூடஸ்தன். அதோட சத்துவ நிழல் அதில படிகிற போது அது ஜீவனாகிறது. ஒரு கண்ணாடில பாக்கிற கடல் அலையோட பிம்பத்தை கற்பனை செய்தா கொஞ்சம் புரியலாம்.
அப்ப கூடஸ்தன் +அதன் நிழல் +அந்தக்கரணம் மூணும் சேர்ந்தது ஜீவன்.

ஒரு குளம் இருக்கு. அதில ஆகாசத்தில ஒளி வீசற சந்திரனோட பிம்பம் பிரதிபலிக்குது. இப்படி பிம்பம் தோணனும்னா ரெண்டு விஷயம் அவசியம். நாம கண்ணாடில நம்மோட முகத்தை பாக்கிறப்ப முதலாவதா நாம் இருக்கணும். அடுத்து கண்ணாடி வேணும். அப்படி இருந்தா நம்ம முகத்தை கண்ணாடியிலே பாத்து மகிழலாம். கண்ணாடியில பாக்கிறது நம்மோட பிம்பம். நாம் இல்லாம, கண்ணாடி இல்லாம பிம்பம் இல்லை. வானத்து சந்திரன் இல்லாம, குளம் இல்லாம சந்திர பிம்பம் இல்லை.

இது போல அந்தக்கரணத்தில பிரதிபலிக்கிற கூடஸ்தனோட பிம்பம் ஜீவன்.
வானத்து சந்திரன் அசையாம நிக்க தண்ணீர் அலைச்சலில சந்திர பிம்பம் அசைகிறது. இந்த ஆபாச சந்திரன் அதிஷ்டான வான சந்திரனேதான் நாம் ன்னு மறந்து போச்சு! ஏதோ நீர் அலைகிறதை தான் அசைந்து அலைகிறதா நினைக்குது! இது போல ஜீவனோட தன்மை.

அதிஷ்டான கூடஸ்தனே நாம் ன்னு மறந்து போய் தான் ஜீவன் அப்படின்னு மயங்குகிறது; மனசு இயங்க பலம் ஆபாசனான தன்னோட சக்தியாலதான்னு கவனிக்காம, மனசு தான் இல்லாம வேற பொருள்ன்னும் அது மயங்குகிறது. மனசோட வேலை எல்லாம் தன் வேலைன்னு மயங்குகிறது.

ஜீவன் அப்படி இல்லாம தான் வேற கூடஸ்தன் வேற இல்லைன்னு புரிஞ்சு, சாட்சியாவே நின்னு பாக்குமோ அப்ப இது வரைக்கும் நம்மை ஆட்டிப்படைச்சதா நினைச்ச மனசு எங்கேடான்னு தேடி பாக்க, மனசோட உண்மை தெரிய வரும்.

ஏக காலத்திலே மனசையும் உண்மையான நான் ஐ யும் பாக்க முடியாது. அதனால ஒண்ணுதான் உண்மை. எது?

அதாவது உனக்குள்ளே இருக்கும் நான் என்பதைக்கொண்டு மனம் எங்கே என்று பார்த்தால் அது காணப்படாது.

அட, நான் யாருன்னு தெரியலையே? தெரிஞ்சாதானே அப்படி பாக்கன்னு சொன்னா...
வாஸ்தவம். சரி அப்படின்னா மனத்தை கொண்டு நான் என்பதை பார். அப்போது நான் இன்னது என்று தோன்றியதும் மனம் இல்லாமல் போகும்.
இப்படி பெரியவங்க சொல்லி இருக்காங்க.
இதன் படி பார்க்கிறப்ப "நான்" ஐ கொண்டு மனசை பாத்தாலும், மனசை கொண்டு "நானை" பாத்தாலும் மனம்தான் காணாம போகுது. நான் எப்பவும் இருக்கு. இந்த நானேதான் மனசு தோண காரணமாயும் இருக்கு.

டெக்னிகலா இதை விகங்க மார்கமா மனோலயமாக நேர் வழி என்கிறாங்க. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா!

தாயுமானவர் மனசை பாத்து ¨நின் ஜன்ம தேயத்தில் நீ செல்ல வேண்டும்" ன்னு சொன்ன இந்த வழி கஷ்டமான வழி. சிரம சாத்தியம். அதாவது செய்ய முடியும்னாலும் கஷ்டப்பட்டுதான் சாதிக்க முடியும்.


Monday, June 1, 2009

பிரம்மம் மனதுக்கு எட்டும். எட்டாமலும் இருக்கும்.



வெண்கலத்தில பல பொருட்கள் செய்கிறாங்க. நல்லா வெண்கலத்தை காய்ச்சி உருக்குவாங்க. அப்புறம் பல விதமான அச்சுக்கள் இருக்கும். ஆனை அச்சு, விளக்கு அச்சு, சாமி அச்சுன்னு பலது. எந்த அச்சில வெண்கலத்தை ஊத்தறாங்களோ அதை பொருத்து அது மாதிரியா பொருள் கிடைக்கும். வெண்கலம் ஒரே பொருளா இருந்தாலும் அது பல விதமாகிறது அச்சை பொருத்தது.

அதை போல சத்து பிரதிபலிச்ச மனசு (சரியா சொல்லப்போனா ஆபாச சகித அந்தக்கரண விருத்தி. ஹிஹிஹிஹி எனக்கு தாங்க்ஸ் எல்லாம் வேணாங்க) வெளிப்படுகிற போது உலக விஷயங்களில் இருக்கிற மறைப்பை -அதாங்க ஆவரணம்- பாதிக்கிறது. இந்த மறைப்பு தமஸ் ன்னு நினைவிருக்கு இல்லையா? சஞ்சரிக்கிற மனசு ரஜஸ். சத்துவமான ஆபாசன் உலக விஷயங்களை அது கடம் இது படம்ன்னு வெளிச்சம் போட்டு விளங்க வைக்கிறது.

இதிலே ஒரு விஷயத்தை அறிய விஸ்தாரமாகி வளருகிறது மனசு. அதான் மனோ விருத்தி. இதுக்கு அந்த பலத்தை தருகிறது சித் ஆபாசம்.

ஒரு அறையிலே ஒரு பொருளை தேடறோம். இருட்டா இருக்கேன்னு ஒரு விளக்கை வெச்சுகிட்டு தேடறோம். ஆனா விளக்கை தேட வேற விளக்கு தேவையில்லையே. சூரியனை பாக்க விளக்கு வேணாமே! அது அதோட வெளிச்சத்தாலேயே காணப்படும்.

இதைப்போல உலக பொருட்களை பாக்க மனசு அங்கே போகணும். பார்க்க சித் உடைய பலமும் வேணும். ஆனா சித்தையே பாக்கணும் ன்னா மனசு அங்கே போனால் போதும். சிதாபாச பலம் வேணாம்.

அதனால மனசுக்கு ரெண்டு பாகம். விருத்தி என்கிற பாகம். பலம் என்கிற பாகம். சித்தை பாக்க பலம் வேணாம், மன விருத்தி போதும் ன்னு பாத்தோம் இல்லையா? சித்தாவது எது? பிரம்மம்தான்.

ஆக பிரம்மம் மனசோட விருத்திக்கு எட்டும். பலம் என்கிற பாகத்துக்கு இல்லை.
இப்படித்தான் பிரம்மம் மனசுக்கு எட்டவும் எட்டும். எட்டாமலும் இருக்கும்.

12
ஞேய உற்பத்தியும் ஒரு விஷயத்தை விளங்க வைக்க இரண்டு ஏதுக்கு எனில்

உருக்கிய தராநீர் நாநா வுருவங்க ளானாற் போல
விருத்திகள் கடப டாதி விடயமாய்ப் பரிண மிக்கும்
அருப்பல விடய மெல்லா மாபாசன் றோற்று விக்கும்
இருட்டினில் விளக்குங் கண்ணு மில்லாமற் பொருள் காணாதே

உருக்கிய தராநீர் (அச்சில் விட்ட உடன்) நாநா உருவங்கள் ஆனாற் போல, விருத்திகள் (மன சங்கல்பங்கள்) கட (குடம்) பட ஆதி (முதலான) விடயமாய் [அதாவது உலகாக] பரிணமிக்கும். அருப்பல (அருவமான) விடயம் எல்லாம் ஆபாசன் தோற்றுவிக்கும். இருட்டினில் விளக்கும் கண்ணும் இல்லாமல் பொருள் காணாதே. (காண இயலாது).

(அது போல ஆவரணத்தை போக்க விருத்தியும் ஸ்புரண ரூப பிரயோசன நிமித்தம் சிதாபாசன் என்ற ஆத்ம சாயையும் இல்லாது ஆத்மாவல்லா பொருட்கள் பிரகாசியா) மனோ விருத்தியே ஞேயம் (அறியப்பட்டது) ஆகும், அதை சிதாபாசன் விருத்தியுடன் கூடி விளக்கி வைக்கும்.

13. பகிர்முக அந்தர் முக ஞானத்தால் அறிவது இவை:

எரிகிற விளக்காற் கண்ணா லிருட்பொருள் காணல் வேண்டும்
தெரிகிற பரிதி காணச் சென்றிடில் கண்ணே போதும்
விரிகின்ற சகத்தைக் காண விருத்தியும் பலமும் வேண்டும்
புரிகின்ற விருத்தி யொன்றே போதுமெய்ப் பொருள்காண்போர்க்கே

எரிகிற விளக்கால் கண்ணால் இருட்(டில் உள்ள) பொருள் காணல் வேண்டும். தெரிகிற பரிதி (சூரியனை) காணச் சென்றிடில் கண்ணே போதும். (பலவிதமாக) விரிகின்ற சகத்தைக் காண விருத்தியும் (விருத்தி ஞானமும்) பலமும் (சிதாபாச ஆத்ம நிழல்) வேண்டும். புரிகின்ற (விசார ரூபமான) விருத்தி யொன்றே போதும் மெய்ப் பொருள் (ஆத்மாவை) காண்போர்க்கே
சடமான ஜகத்தை காண மனமும் சீவனும் வேண்டும். சித்து ரூபமான ஆத்மாவை அறிய சத்துவ விருத்தி மட்டுமே வேண்டும்.

14.
மனத்தின் உருவம் கூறி பிரமம் மனத்துக்கு புலப்படும் புலப்படாது எனல்:

விருத்தியும் பலமும் கூடும் விகாரமே மனமென் பார்கள்
கருத்தெழு விருத்திவேண்டுங் கணக்கினான் மனத்திற்கெட்டும்
வருத்தியபலமாமிந்த மனத்திற்கெட்டாது கண்டாய்
அருத்தமிப்படியென்றைய மகன்றுநீ தெளிந்திடாயே

விருத்தியும் பலமும் (சிதாபாசன் என்ற ஆத்ம நிழல்) கூடும் விகாரமே (பரிணாமமே) மனம் என்பார்கள். கருத்தெழு விருத்திவேண்டும் (என்ற) கணக்கினால் (அந்தக் கரணத்தில் எழும் சுத்த சத்துவ விருத்தி வேண்டும் என்பதால்) [பிரமம்] மனத்திற்கெட்டும். வருத்திய (துன்பம் தரும்) பலமாம் (சிதாபாசனுடன் கூடிய) இந்த மனத்திற்கு [பிரமம்] எட்டாது கண்டாய். [ஸ்ருதி வாக்கியத்துக்கு] அருத்தம் (பொருள்) இப்படியென்று ஐயம் அகன்று நீ தெளிந்திடாயே.




ஸ்ரீ கோடி காயத்ரி ஜப யக்ஞம்




எங்க ஊரில் பத்து வருடங்களாக ஆண்டு தோறும் ஸ்ரீ கோடி காயத்ரி ஜப யக்ஞம் நடை பெற்று வருகிறது.

சங்கல்பம்: நாடெங்கும் நல்ல மழை பெய்து நீர் நிலைகள் நிறைந்து தன தான்ய வளம் ஏற்பட வேண்டும், தர்மத்தை அனுசரிப்போர்களுக்கு அதர்ம சக்திகளால் ஏற்படும் இன்னல்கள் விலக்கப்பட வேண்டும்.

பங்கு கொள்வோர் பிரதி வருஷம் மகரசங்கராந்தி அன்று துவங்கி சில நியமங்களுடன் தினசரி 1008 காயத்ரி ஜபம் செய்து வருகிறார்கள். ஜூன் முதல் ஞாயிறு அன்று அதன் நிறைவாக ஹோமம் செய்கிறார்கள். சுமார் நூறு பேர் தலா ஒரு இலட்சம் இலக்கு நிர்ணயித்து செய்கிறார்கள். மொத்தமாக கோடி தாண்ட வேண்டும் என்பது முயற்சி.

ஜப யக்ஞ நிறைவாக செய்யும் ஸஹஸ்ர காயத்ரி ஜோமம் வருகிற ஞாயிறு (7-6-2009) அன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெறும். இடம் திருப்பாதிரிப்புலியூர் சங்கர பக்த ஜன சபா வளாகம், பாபு ராவ் தெரு.

சுமார் 12 மணிக்கு நிறைவுறும். அப்போது மாதர் செய்யும் காயத்ரி பூஜை நடை பெறும்.

தரிசித்து பலனடை ய வேண்டுகிறேன்.

அன்புடன்

தி. வாஸுதேவன்.