Pages

Wednesday, December 31, 2008

பாராட்டுக்கள்!


பாராட்டுக்கள்!
இன்று நேரமின்மையால் பதிவு போட முடியவில்லை. நாளையும் துர்லபம்தான். பாக்கலாம்.
புத்தாண்டு நாளை கொண்டாடுறவங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!


Tuesday, December 30, 2008

முமுக்ஷு


சாதகன் தயா நிதே ன்னு கூப்ட்டு இந்த சம்சார பந்தத்திலேந்து எப்பப்பா எனக்கு விமோசனம் கிடைக்கும்ன்னு கதறுகிறானாம். இப்படிப்பட்ட நிலை முமுக்ஷுத்வம். (1)

சர்வ சாதாரணமா பாக்கிறோம் ஒரு விஷயம். நிறைய கடன், பிரச்சினைகள், துக்கம், நோய் இப்படி சில காரணங்களால மனசு வெறுத்துபோய் போதும்பா இந்த வாழ்க்கை, அப்படின்னு சம்சாரத்திலேந்து விடுதலை கேக்கிறதை இங்க சேக்க முடியாது. ஓரளவு சுக ஜீவனம் இருக்கும்போது கூட அல்லது கஷ்டங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை ஒரு பொருட்டா நினைக்காம இதெல்லாம் மாயைதான். இதிலேந்து விடுபடணும்னு நினைக்கணும். இதுதான் நல்ல திடமான புத்தி. அப்பதான் அதை முமுக்ஷுத்வமா ஏத்துக்கலாம்.

எவ்வளோ சுகமா தோணினாலும் இது மாயை இதை நீக்கணும்ன்னு தீர்மானமா ஒரே தாபமா இருக்கணும். அதே சமயத்திலே ஸத்தியமான அனுபவம் வரனும்ன்னு தவிப்பு இருக்கணும். பொதுவா இந்த பேசறப்ப சத்திய அனுபவத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரதில்லே. மாயையிலிருந்து முக்தி- விடுதலைதான் - வீடுதான் -முக்கியமா படுது.

ஏன் ஸத்யமான அனுபவத்தை கண்டுக்கலே?

ஏன்னா அதை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. வார்த்தைகளுக்கு எட்டாத விஷயம்.
எப்பவும் ஜீவன் பிரம்மமாதான் இருக்கான், மாயைதான் அதை உணராம கட்டிப்போடுது. கட்டு போச்சுன்னா தானா ப்ரம்ம அனுபவம் கிடைச்சுடும்.

ம்ம்ம்ம்...விவேக சூடாமணியிலேயும் என்ன சொல்லறாங்கன்னு ஒரு பார்வை பாத்துடலாம். (2)

அஞ்ஞானம் என்பதுதான் மாயை. இந்த மாயையால்தான் பரமாத்மாவுக்கு அன்னியமா ¨நான்¨ ன்னு ஒண்ணு தோணுது. அதுதான் அஹங்காரம். சூக்குமமா இருக்கிற இந்த அஹங்காரத்தில் இருந்து தூலமான தேகம் வரை இது விரிஞ்சு கட்டிப்போட்டு இருக்கு. இதுதான் முதல் வரிக்கு பொருள். இதிலேந்து விடுபடணும் என்கிற இச்சை -ஆசையே முமுக்ஷுதா. முடிவான நிலை என்ன?

பந்தம் மட்டும் போனால் போதும். அப்புறமா கல் மண் மாதிரி எப்படி வேண்ணா இருக்கலாம். என்கிறது இல்லை. தன் உண்மையான தன்மையான ஆத்மாவை குறித்து ஞானம் பெறுவது. இதனால முக்தி கிடைக்கணும் என்கிறார்.

அஞ்ஞானம் போகிறதும் ஞானம் வருகிறதும் ஒரே நேரத்திலே நடக்கிற விஷயம்தான். தீக்குச்சியை உரசி பத்த வெச்சா இருட்டு முதல்ல போகுமா இல்லை வெளிச்சம் முதல்ல வருமா என்கிறது போல.

முமுக்ஷுக்கு நல்ல உதாரணமா புத்தரை சொல்லறாங்க. அவர் போதி மரத்தடில உக்காரும் முன் சொன்னதா ஒரு வாசகம் சொல்லராங்க. ¨இந்த ஆசனத்திலேயே இந்த உடம்பு வத்தி சுக்கா போகட்டும்; தோலும், எலும்பும் மாமிசமும் நசிந்தே போகட்டும்; போதம் (ஞானம்) பெறாம - எத்தனையோ கல்ப காலம் ஆகும்னாலும் சரி, - இந்த இடத்தை விட்டு இந்த உடம்பு நகராதாக்கும்.¨

1. ஸம்சார பந்த நிர்முக்தி: கதம் ஸ்யாந் மே தயாநிதே|
இதி யா ஸுத்ருடா புத்திர் - வக்தவ்யா ஸா முமுக்ஷுதா||

- அபரோக்ஷ அனுபூதி

2.அஹங்காராதி தேஹாந்தான் பந்தான் - அஜ்ஞாந கல்பிதான் |
ஸ்வஸ்வரூபாவபோதேந மோக்துமிச்சா முக்ஷுதா ||


Monday, December 29, 2008

சமாதானத்தில் இன்னும் ஒண்ணே ஒண்ணு...




சமாதானத்தில் இன்னும் ஒண்ணே ஒண்ணு பாக்கி இருக்கு.
முன்ன சொன்ன ஸ்லோகம் முடியலை, பாதில நிக்குது, இல்லையா?

ஸம்யக் ஆஸ்தாபனம் புத்தே: சுத்தே ப்ரம்ஹணி ஸர்வதா| தத் ஸமாதானம் இத்யுக்தம் ந து சித்தஸ்ய லாலநம்.
வி.சூ 26/27
அது என்ன ¨ந து சித்தஸ்ய லாலநம்¨? சித்தத்துக்கு செல்லம் கொடுக்கிறது இல்லை.

அடம் பிடிக்கற குழந்தையை மிட்டாய் தரேன் என்கிறாப்பல தாஜா பண்ணி காரியத்தை செய்ய வைக்கிறது போல, சாதகனுக்கும் ஆரம்ப நிலைகள்ல கொஞ்சம் சலுகை கொடுத்து முன்னேற தூண்டுகிறது உண்டு. அது முடியலையா, பரவாயில்லை; இத பண்ணு என்கிறது போல. எடுத்த எடுப்பில ப்ரம்மத்துக்கு உருவம் இல்லை, உருவம் இல்லாமலே பக்தி பண்ணுன்னு சொல்லாம ஆனை, பூனைன்னு எப்படி வேணுமானா வெச்சுக்க, பக்தி பண்ணு சொன்னது போல. அது ஆரம்ப நிலை. இப்ப இன்னும் முன்னேறியாச்சு. போகப்போக கன்செஷன் கம்மி, அப்புறம் இல்லவே இல்லை. அப்படி இப்ப புத்தியை நிலை நாட்டறதுல சலுகை ஒண்ணும் இல்லை என்கிறார் சங்கரர். நிர்குணமான வஸ்துலதான் புத்தியை வைக்கணும் என்கிறார். அட, இதெல்லாம் நமக்கு வராதேன்னா...

இப்ப வராதுதான். பொறுமை வேணும். ஆத்ம முன்னேற்றம் பல ஜன்மங்கள்ல நடக்கிற விஷயம். எல்லாருக்கும் திடுதிப்புன்னு வந்துடாது. ஒவ்வொரு ஜன்மத்திலேயும் முன்னே விட்ட இடத்துலேந்து தொடருவோம். அதனால கவலை வேணாம்.
அதானால இப்ப நாம செய்கிறது புத்தி பூர்வமா இது எல்லாம் என்னன்னு தெரிஞ்சுகிறதுதான். சாதனையில போகப்போக அனுபவம் ஏற்படும்.

ஆக நிர்குணமான சுத்தமான ப்ரம்மத்தில் பூர்ணமாகவும் சரியாகவும் எக்காலமும் நிலைநாட்டுவதாக எது உண்டோ அதுவே ஸமாதானம் என்று சொல்லப்படுகிறது.
--
ஆக சமாதி ஷட்சம்பத்தில ஆறும் முடிஞ்சது.

அடுத்த நிலை  முமுக்ஷுத்வம். மோக்ஷத்தை தீவிரமா விரும்பறது. இந்த விருப்பம் நிறைவேறினா கிடைச்சா அவன் முக்தன்.

அட, எல்லாருக்கும்தான் மோக்ஷம் வேணும் என்கிறதுல விருப்பம் இருக்கும்.

அப்படியா? ஆச்சரியம் என்னன்னா, அதுதான் இல்லை.

நான் இந்த வழிக்கு வந்த புதிசில ஒரு சிருங்கேரி சங்கர மடத்து சன்னியாசி ஒத்தரை பார்த்து பேசிக்கொண்டு இருந்தேன்.  இப்ப நான் எழுதற சமாசாரம் எல்லாம் அப்பதான் படிக்க ஆரம்பிச்சு இருந்தேன். படிச்சு புரியறதைவிட கேட்டுக்கலாமேன்னு நிறைய கேள்விகள் கேக்க ஆரம்பிச்சேன். அவரும் சளைக்காம பதில் சொல்ல ஆரம்பிச்சார். இப்படியே போகிற போது ஒரு இடத்திலே ¨சாதாரணமா மக்கள் மோக்ஷத்தை விரும்ப மாட்டாங்க¨ ன்னார். எனக்கு ஆச்சரியமா போச்சு. ¨ஏன், இதோ நான் கேக்கிறேனே?¨ ன்னேன். ¨அட! உன்னை பாத்து அப்பலேந்து ஆச்சரியப்பட்டு கொண்டு இருக்கேன்பா! இவ்வளவு வருஷத்தில என்கிட்ட சிஷ்யர்கள் தவிர யாரும் இப்படி இந்த விஷயத்திலே கேள்வி கேட்டதே இல்லை¨ ன்னார். அப்புறம் உலகத்தை கொஞ்சம் கூர்ந்து பாத்ததிலே அது உண்மைதான்னு தெரிஞ்சது.

¨ஏன் இந்த பதிவுகளை படிச்சுட்டே எவ்வளோ பேர் து.கா து.கா ன்னு ஓடறாங்க!¨ அப்படின்னு யாரோ சொல்கிறது காதில விழுது!

மனுஷ ஜன்மம் கிடைக்கிறதே பெரிசு. அதிலும் ஆன்மீக நாட்டம் இருக்கற சூழ்நிலைல பிறக்கறது இன்னும் பெரிசு. ஆதிலும் ஆன்மீக ஈர்ப்பு இருக்கிறது பெரிசு. அதிலும் வெறும் ஈர்ப்போட நின்னுவிடாம சாதனா செய்யணும்ன்னு ஒரு நினைப்பு வறதும் அதில ஈடு படறதும் ரொம்ப பெரிசு! ஆத்ம ஞானத்துக்கு எல்லாத்தையும் த்யாகம் செய்யறது ரொம்ப ரொம்ப பெரிசு!

குறிப்பா மேல் நாட்டு மக்களுக்கு இது அதிர்ச்சி தரதாவே இருக்கு. தன்னோட சுய அடையாளத்தை இழக்கணும்னா வெல வெலத்து போயிடறாங்க! அதுக்கு நான் ரெடி இல்லேன்னே சுத்தமா சொல்லிடறாங்க. ஒரு போலந்து நாட்டு பெண்மணியோட மடலாடிகிட்டு இருந்தேன். இந்தியா பத்தின விஷயங்களை அவங்க ரொம்ப ஆர்வமா கேட்டுகிட்டே வந்தாங்க. கடேசில இந்த பிலாசபி தான் அவங்களுக்கு பிடி படலே!
அது எப்படி தான் என்கிறதை விட்டுக்கொடுக்க முடியும்?

தான் என்கிற பொய் தோற்றத்தை விட்டுட்டு தான் உண்மையில யார் ன்னு தெரிஞ்சுக்கணும். அப்படி புரிஞ்சா அந்த ¨தான்¨ தானா இருக்காது. இன்னும் பரந்து விரிந்து போயிடும்!


கொம்பு சீவறாங்கப்பா!



சமீப காலமா சிலர் கொம்பு சீவிட்டு இருக்காங்க. அதாவது இந்த பதிவுகள் ஆங்கிலத்துல வரணுமாம். தமிழ் படிக்காத தமிழர் நிறைய பேர் இருக்கங்களாம். அவங்களுக்காம்.
தேவையா என்ன?
வலை முழுக்க வெள்ளக்கார இந்தியர்கள், இந்திய வெள்ளைகாரர்கள், அறிஞர்கள் பட்டாளம் பெரிசா இருக்கு போல இருக்கே!
நாம வேறு குப்பை கொட்டணுமா என்ன?
கருத்து சொல்லுங்க இல்லாட்டா மெயிலுங்க.aanmikam@gmail.com

Friday, December 26, 2008

சமாதானம் -2


ஸ்ரீசங்கரர் ¨ப்ரஹ்மணி புத்தே: ஸ்தாபனம்¨ அப்படின்னார்.

பிரம்மத்தில் புத்தியை நிலை நாட்டு.

ஆமாம், இது வரை நாம கேள்வி பட்டதெல்லாம் புத்தியால ஆத்மாவை பிடிக்க முடியாதுன்னுதானே? முன்னுரையிலேயே அப்படி கொஞ்சம் சிரமப்பட்டு சொன்னாப்பல ஞாபகம்!
உண்மைதான். புத்தியால பிடிக்க முடியாதுதான். ஒண்ணுக்கு ரெண்டா உபநிஷத்துக்களிலே (1) ந மேதயா - புத்தி சக்தியால இல்லை- அப்படின்னு சொல்லி இருக்கு.
பின்னே என்ன அர்த்தம்?
இங்கே அவர் முடிவு நிலையான சமாதியை சொல்லலை. அதுக்கு கீழே இருக்கிறதாலதான் சமாதானம் ன்னு சொல்லி இருக்கார்.
புத்தியாலே பிடிக்க முடியாதுன்னா வேற என்னதான் செய்யறது?
அதை வரணம் செய்யணும்.
வரணம்?

கல்யாணத்துக்கு வரன் தேடறோம். வரன் = சிறந்தவன். இப்படி ஒரு அர்த்தம். இன்னும் ஒண்ணு பல பேரிலே தேர்ந்து எடுக்கப்பட்டவன். சூஸ்! அதான். ஸ்வயம்வரம். அந்த காலத்து ராஜ குமாரிகள் தன் கணவனை தேர்ந்து எடுத்தாங்க. இப்படி செய்கிறதுதான் வரணம். குரு சிஷ்யனை தேர்ந்து எடுக்கிறது சிஷ்ய வரணம். சிஷ்யன் நமக்கு குரு யார்ன்னு தேடி தேர்ந்து எடுக்கிறது குரு வரணம்.

இதே போல பலதையும் தள்ளிவிட்டு ஆத்மாவையே தேர்ந்து எடுத்து ¨நீயே உன்னை தெரிவிச்சுக்க. என்னதான் நான்தான் நீ; நீதான் நான்னு இருந்தாலும் அறியாமையால அது எனக்கு பிடிபடலை. என் மனசு, வாக்கு, புத்தியால உன்னை பிடிக்க முடியலை. அதனால் நீயேதான் உன்னை காட்டிக்கணும்¨ ன்னு பிரார்த்தனை செய்யணும். இப்படி செய்து கொண்டே இருந்தா ஒரு நாள் திடீர்ன்னு அது பளிச்சுன்னு வெளியாகிடுமாம். பிரார்த்தனை செய்தவன் புத்தி, மனசு, வாக்கு எல்லாத்தையும் அவனதுன்னு இல்லாம ஆக்கி இவன் ஆத்ம சொரூபமாகவே சுய அனுபூதி பெறப்பண்ணிடும். அது விவரணம். வரணம் செய்தவனுக்கு கிடைக்கிறது விவரணம்! அதாவது மூடி இருப்பதை திறந்து விடுகிறது. Revelation!

திருப்பி கேள்விக்கு வரலாம். இப்படி புத்தியால முடியாது என்கிறத தெரிஞ்சு இருக்கிறப்ப புத்தியை ப்ரம்மத்தில பொருத்துன்னா என்ன அர்த்தம்?

ப்ரம்மத்தை பத்தி வேத சாஸ்திரங்களிலே சொல்லி இருக்கிறதிலேயும் குரு சொன்னதிலேயும் உன் புத்தியை ஒரே சிந்தனையா பதிய வை.

புத்தியை ப்ரம்மத்திலேயே முழுக்க முழுக்க முழுக விடுகிறது சமாதி. அது அப்புறம் வரது.
இப்ப ப்ரம்ஹணி (மானஸ சஞ்சரரே ஞாபகம் வருதா? மானஸ சஞ்சரரே... ப்ரஹ்மணி...மானஸ சஞ்சரரே:) -பிரம்மத்தில் - பிரம்மத்தை பத்திய விஷயங்களில்.
இதில் புத்தியை பொருத்து. இதுக்கு முன்னாலே நாம் பாத்தது சிரத்தை இல்லையா? பரம சற்குரு (ஈஸ்வரன்) நூல் (வேத சாத்திரங்கள்) மீது அன்பு பற்றுதலே சிரத்தையாகும். ஞாபகம் இருக்கு இல்லே?

இப்ப அதோட தர்க்கரீதியான தொடர்ச்சியா சத் குரு சொன்னது மேலேயும் நூல்கள்ல இருக்கிறதிலேயும் புத்தியை பொருத்தச் சொல்லறாங்க.

ப்ரம்மத்தோட அனுபவம் வரது பின்னால. இப்போதைக்கு அதைப்பத்தி புத்தி வழியா என்னவெல்லாம் தெரிஞ்சுக்க முடியுமோ அதெல்லாம் தெரிஞ்சுக்கணும். அப்படியும் அது போல ப்ரம்மம் இருக்காது!

அட, பின்ன என்ன பிரயோசனம்?

ஒருத்தனுக்கு ஆனை பத்தி ஒண்ணுமே தெரியாது (பாவம்!) பாத்ததே இல்லை. (ரொம்ப பாவம்!) அவனுக்கு ¨இப்படி இப்படி இருக்கும்; இப்படி இப்படி இருக்காது¨ன்னு சொன்னாலும் சரியான கற்பனை வர முடியாது. ஆனா இப்படி கொஞ்சம் புத்தியால தெரிஞ்சு கொண்ட பிறகு எங்கேயாவது ஆனையை பாத்தா ஓ, இதுதான் ஆனை ன்னு உடனே புரிஞ்சுடும்!

அப்படித்தான் இப்ப இந்த புத்தி இன்னும் ஒழிஞ்சு போகாததாலே அதுக்கு ஏதும் நல்ல தீனி போடணும்ன்னு அதை ¨ப்ரம்மத்தை சுத்தியே கிட¨ ன்னு சொல்லறது!

(1) கடோபநிஷத் 2-23; முண்டகோபநிஷத் 3- 2.3



Thursday, December 25, 2008

சமாதானம்



அடுத்து நாம பாக்கப்போறது சமாதானம். இதுவும் ஏறக்குறைய சிரத்தை போலத்தான். அதாவது அசிரத்தையாலயும் சந்தேகத்தாலயும் வருகிறதை எதிர்த்து போராடி ஜெயிக்கிறது. அவநம்பிக்கை இருக்கிற வரை சிரத்தை. அப்புறம் சமாதானம்.
சந்தேகம் தெளிஞ்சு போச்சுன்னா சமாதானம் ஆகிடுவோம்!

ஒத்தரோட சித்தத்தை முழுக்க முழுக்க ஒரே இடத்தில கொண்டு சேத்து வைக்கிறது சமாதானம். சம ஆதானம். சமிதாதானம் ன்னா சமித்தை அக்னியில் கொண்டு சேத்து வைக்கிறது. அது போல சமத்தில சித்தத்தை கொண்டு வைக்கிறது சமாதானம். சமம் - எதிலேயும் ஏற்ற இறக்கம் இல்லாத நிலை. இப்படியும் சொல்லலாம்.

ஆனா இங்கே சொல்ல வருவது பிரம்மத்தில் கொண்டு சித்தத்தை நிலையா வைக்கிறதுதான்.

ஸம்யக் ஆஸ்தாபனம் புத்தே: சுத்தே ப்ரம்ஹணி ஸர்வதா| தத் ஸமாதானம் இத்யுக்தம்
வி.சூ 26/27

ஸம்யக் - சரியாக, பூர்ணமாக. ஆஸ்தாபனம்= நிலை நாட்டுவது. ஸர்வதா -எப்போதும்
சுத்தமான ப்ரம்மத்தில் பூர்ணமாகவும் சரியாகவும் எக்காலமும் நிலைநாட்டுவதாக எது உண்டோ அதுவே ஸமாதானம் என்று சொல்லப்படுகிறது.

ப்ரம்மம் ஒண்ணுதான் மாயை கலப்பு இல்லாதது. எல்லா லோகங்களுக்கு அதுவே ஆதாரம். அது ஒரு சீவனுக்கு ஆதாரமான போது அதை ஆத்மா அல்லது ஜீவாத்மா என்கிறோம். ஈஸ்வரன் கூட மாயையுடன் கூடியவன்தான். மாயையான லோகத்தை நிர்வாகம் பண்ணுகிற அவனுக்கும் மாயை சம்பந்தம் இருக்கு.

அதனாலதான் சுத்த ப்ரம்மம் ன்னு இங்கே சொன்னது. இந்த குணமில்லாத ப்ரம்மத்தில சித்தத்தை நிலை வைக்கிறது சமாதானம். சாதனா ஆரம்பத்திலே அவரவர் சௌகரியத்துக்கு தகுந்தபடி ஈஸ்வரனை மூர்த்தியாக – உருவத்தோட கூடி- உபாசனை பண்ணோம்தான். அதுல சித்தம் நிற்க பழகினோம்தான். ஆனா அது முதல் கட்டம். இப்ப செய்ய வேண்டியது நிர்குண ப்ரமத்தில சித்தம் நிலைக்க வைக்கிறது.

ஆனா இவ்வளோ நாள் உருவத்தோட பூஜை எல்லாம் பண்ண நினைப்பு போயிடுமா? போகாது. இருந்தாலும் மாயையிலிருந்து ஞானத்துக்கு போக அறிவை கொடுத்த அனுகிரஹம் பண்ணற சொரூபம் அதுன்னு நினைச்சு அவனே நிர்குணத்தில சேக்கிற வழியை காட்டறானே, ஆதனால் இன்னும் அவனோட நாம ரூபத்த பிடிச்சுகிட்டு தொங்கக்கூடாதுன்னு தெளிவடைஞ்சு ஆத்ம தத்துவத்தில சித்தத்தை திருப்பணும்.

நாம் சித்தம், சித்தம்ன்னு பேச்றோம். ஆனா சங்கரர் புத்தின்னு இல்லே சொல்கிறார்? அது வேற நிலைதானே ஒழிய வேற வஸ்து இல்லையே. முன்னேயே பாத்துட்டோம், இல்லை? அலையாம இருக்கணும்ன்னு புத்திங்கிறார். ஸ்திரமா இருக்கிறது அதுதானே? வேற இடத்திலே அவரே சித்தம் என்கிறார். (1)

இங்கே புத்திதான் வேலை செய்யணும். உணர்ச்சியால இழுபடாம சரியா விசாரிச்சு உண்மை பொய் எல்லாத்தையும் உள்ளப்படி பாக்கிற புத்தியை அதோட வேலைலேந்து விடுவிச்சு ப்ரம்மத்து பக்கம் திருப்பினாதான் சமாதானம் வரும்.

1. சித்தைகாக்ரியம் து ஸல்லக்ஷ்யே ஸமாதனமிது ஸ்ம்ருதம் - அபரோக்ஷ அனுபூதி.

Wednesday, December 24, 2008

சிரத்தை -3



கொஞ்சம் ரிவிஷன்.

அநித்தியம் எதுன்னு நமக்கு போகப்போக நல்லாவே தெரிகிறது. ஆனா நித்திய வஸ்துவை அனுபவிக்காததால அதைப்பத்தி தெரியாதுதான். ஆத்ம வஸ்துவை பத்தி பெரியவங்க சொன்னதை கேட்டும் புத்தகங்களை படித்தும் ஒரு வழியா ஒரு சின்ன ஐடியா இருக்கும். ஆனாலும் அநித்திய வஸ்துவை பத்தி உறுதியா அனுபவத்திலே தெரிஞ்சுக்கிற அளவு இதை தெரிஞ்சுக்க முடியாது. இருந்தாலும் அநித்தியம்ன்னு தெரியறதை வேண்டாம்ன்னு வெறுத்து தள்ள ஆரம்பிக்கிறோம், இல்லையா? இது வைராக்கியம். அப்புறம் அநித்தியங்களை தேடிப்போக மனசையும் இந்திரியங்களையும் கட்டிப்போடறோம். - சமம், தமம். நாளடைவிலே வேண்டியது கிடைக்காம ஒருவழியா அலுத்து போய் மனசு அலை பாயறதை நிறுத்திடும். - உபரதி. இங்கேயும் ஆத்மா இல்லாததை அனுபவிக்கிற கஷ்டம் இல்லைனாலும் ஆத்ம சுகம் ஒண்ணுமில்லை. வெளியிருந்து வருகிற சுக துக்கங்களை பொறுத்துக்க பழகுறோம்.- திதிக்ஷா. இப்போகூட ஆத்ம சுகமில்லை. இன்னும் வரலை.

இப்படி ஒரேயடியா ஒண்ணுமேயில்லைன்னு இல்லை. அப்பப்ப வெயில்ல எங்கேயோ மழை பெஞ்சு சிலு சிலுன்னு ஒரு காத்து திடீர்ன்னு அடிக்கிற மாதிரி ஏதோ அனுபவம் கிடைக்கும். அப்பப்ப கொஞ்சம் அதிகமாவும் கிடைக்கலாம். மாறி மாறி வரும். கொஞ்சம் கூட சாம்பிள் இல்லைனா பயல் சாதனையை விட்டுவிட்டுவானோன்னு பகவான் அப்பப்ப போடுகிற பிச்சை அது! ¨இத்தனை காலமும் சாதனை பண்ணி ஒண்ணும் பெரிசா தெரியலையே! சமயத்தில கொஞ்சம் மட்டுமே தெரிந்து கண நேரத்தில அதுவும் ஓடிப்போகிறதே! லட்சியம் எப்ப சித்திக்குமோ! எத்தனை ஜன்மம் ஆகுமோ?¨ ன்னு ஆதங்கம் வரலாம். கடப்பாரையை முழுங்கிட்டு சுக்கு கஷாயம் குடிச்சு இருக்கிறப்ப கடப்பாரையை முழுங்கினது பெரிசா தோணாமல் சுக்கு கஷாயம் குடிச்சது மட்டும் பெரிசா தெரியும்! ஏக்கமும் ஏமாத்தமும் வரும். ஓரளவு திதிக்ஷா இருக்கிறதா நினைச்சு கொண்டு இருக்கும்போது இப்படி சகிக்க முடியாம ஆதங்கம் எப்படி வந்ததுனே தெரியாம வந்துடும். அனுக்கிரஹம் பண்ணுகிற பகவானே இப்படி பரிட்சையும் வெக்கிறதாலேதான் இப்படி நடக்கிறது. அதுக்குத்தான் சாதனையை விட்டுவிடக்கூடாதேன்னு சிரத்தையை வைச்சாங்க.

ச்ரத்தைக்கு லட்சணமா இப்படி சொல்கிறாங்க.

சாஸ்த்ரஸ்ய குரு வாக்யஸ்ய ஸத்ய புத்த்யாவதாரணா|
ஸா ச்ரத்தா கதிதா ஸத்பிர்- யயா வஸ்தூபலப்யதே||
வி.சூ 25/26

சாஸ்திரமும் குரு வாக்கியமும் சத்யம் என்று புத்தியால உறுதியா தீர்மானம் செய்வதே சிரத்தை ன்னு சத்துக்களால சொல்லப்பட்டு இருக்கு. இதனால்தான் மெய்ப்பொருள் அடையப்படுகிறது.

இது கொஞ்சம் வித்தியாசமா இருக்குன்னு தெரியறதா?
அதாவது, முன்னாலே என்ன சொன்னோம்? புத்தியை தள்ளி வெச்சுட்டு நம்பிக்கை அடிப்படைல மேலே போகணும்ன்னு சொன்னோம். இப்ப கொஞ்சம் வித்தியாசம். புத்தியாலேயே உறுதி பண்ணிக்க ன்னு சொல்கிறோம். முரண்பாடு மாதிரி இருக்கு இல்லே!
இல்லை, முரண் இல்லை.

புத்தியாலேயே யோசிக்கலாம்.

யோசிச்சு அட நம்மால – புத்தியால- எல்லாத்தையுமே தெரிஞ்சுக்க முடியாது. எல்லத்தையும் ஜட்ஜ் பண்ணவும் முடியாது. கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு. அதுவும் ஆத்ம சம்பந்தமான பல விஷயங்கள் நமக்கு புரிகிறது கஷ்டம். அதில பகவான் தெரியப்பண்ணியும் சொந்த அனுபவத்திலேயும் ஏற்கெனவே தெரிஞ்சு கொண்ட பெரியவங்க சொல்கிறதை அப்படியே எடுத்துகிறதுதான் உசிதம். அதனால் இங்கே நமக்கு வேலை இல்லைன்னு புத்தி புரிஞ்சுக்கணும்.

புத்திக்கு நிறையவே வேலை உண்டே? நித்திய அநித்தியங்களை பகுத்து ஆராயணும். அதுக்கு அவசியமா புத்தி வேணும். மத்தது மனம் என்கிற நிலையை சம்பத்தப்பட்டது. கடைசில இங்கே நமக்கு வேலை இல்லைன்னு புத்திக்கு உறுதியா தெரியணும். வேலையை செய்வதில் சக்தியை காட்டுகிறதைவிட இப்படி காட்டாம இருகிறதுதான் கஷ்டம்! அதுக்கு ரொம்பவே விநயம் வேணும்.

ஒரு அறிவில்லாதவனோட நம்பிக்கையா இல்லாம அறிவோட கூடிய நம்பிக்கையா இருக்கணும். அவ்ளோதான்.

நாரதர் ஒரு முறை மகா விஷ்ணுவை பாக்க போய் கொண்டு இருந்தார். வழில ரெண்டு பேர் மோக்ஷம் வேணும்னு தவம் செய்து கொண்டு இருந்தாங்க. அவங்க நாரதரை பாத்து ¨எங்கே போறீங்க¨ன்னு கேட்டாங்க. ¨நான் மகா விஷ்ணுவை பாக்கப்போறேன்¨ன்னு நாரதர் சொல்ல ¨அப்படியா! எங்க ரெண்டு பேருக்கும் எப்ப மோக்ஷம் கிடைக்கும்ன்னு கேட்டு வாங்க¨ அப்படின்னாங்க. ¨சரி¨ ன்னு நாரதரும் சொன்னார். திரும்பி வரப்ப நாரதரை பாத்து ரெண்டு பேரும் ஆவலா ¨பதில் கிடைச்சுதா¨ ன்னு கேட்டாங்க. நாரதர் விஷ்ணு சொல்லச் சொன்ன பதிலையே சொன்னார். முதல் நபரை பாத்து ¨உங்களுக்கு இன்னும் 3 ஜன்மா போகணும்¨ ன்னார். கேட்டவர் ¨நாராயணா! இன்னும் 3 ஜன்மமா¨ ன்னு அழ ஆரம்பிச்சுட்டார். ரெண்டாவது நபரை பாத்து ¨இந்த மரத்திலே நிறைய இலைகள் இருக்கு இல்ல? உங்களுக்கு அத்தனை ஜன்மா போகணும்¨ ன்னார். கேட்டவரோ ¨ஆஹா! நிச்சயம் மோக்ஷம் கிடைச்சிடும்¨ ன்னு டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டார்!

சாதனையால மோக்ஷம் நிச்சயம் என்கிற நம்பிக்கையோட சாதனை பண்ணணும்!



Tuesday, December 23, 2008

சிரத்தை -2

(ஷெட்யூல் பண்ணப்போய் பப்ளிஷ் பண்ணிட்டேன்.! ஹிஹி!)

இந்த மாதிரி புத்திக்கு எட்டாதபடிக்கு பல விஷயங்கள் இருகிறதாலேதானே யாரும் எதையும் முடிந்த முடிவா சொல்ல முடியலை! அத்வைதம், விசிஷ்டாத்வைதம். த்வைதம் என்று பலவிதமாக பிலாஸபி இருக்கு! எதையுமே தப்புன்னு சொல்லவும் முடியலை. அவரவர் தான் அனுபவித்தபடி சொல்லிப்போனார்கள். இதிலே ஒத்தர் உசத்தின்னோ ஒத்தர் தாழ்த்தின்னோ சொல்ல எதுவுமே இல்லை.

எப்படி இருந்தாலும் ஒரு கட்டத்திலே புத்தியை விட்டு விட்டு சிரத்தையின் பலத்திலேயே போக வேண்டி இருக்கு. அப்படித்தான் அந்த விளையாட்டு இருக்கு. என்ன பண்ணுவது! அடைய வேண்டியது புத்திக்கு எட்டாததாச்சே! ஆத்ம வழில நல்ல முன்னேற்றம் கண்டவர் கூட தொடர்ந்து இதே வழில ஆசாரியர் உபதேசித்தபடிக்கு போகலாம்ன்னு போனாலே இலக்கை அடையலாம். ஒரு ஸ்டேஜுக்கு மேலே கேள்வி கேட்கிறதுல பலன் கிடையாது. அனுபவத்திலேயே புரிஞ்சு கொள்ளணும். கேள்வி கேட்டா ஆசாரியரும் புத்திக்கு புரிகிறாப்பல சொல்ல முடியாது/மாட்டார்.

அதனால ஆரம்பத்திலேன்னு இல்லாம கடைசி வரைக்கும்கூட சாஸ்திரம் சொல்வது மேலேயும் குரு சொல்வது மேலயும் ஒரு தளராத நம்பிக்கை வைக்கணும். நடுவிலே என்ன நடந்தாலும் கூட அதன்படி செய்து கொண்டு போகணும். நிறுத்தாம நம்பிக்கையோடவே சாதனை செய்யணும். இப்படிப்பட்ட சிரத்தை சாதனையின் ஒரு உபாயம் மட்டும் இல்லை. இதுவே உச்சியான உபாயம். (1)

கண்ணனும் திடமாகவே சொல்கிறான்: சிரத்தை உள்ளவன்தான் ஞானம் அடைகிறான்.(2)

ஸாம வேதத்து மஹா வாக்கியம்தான் நாலுலேயும் கொண்டாடப்படுவது. அதை உபநிஷத்திலே சொல்கிற போது ஆசார்யனான உத்தாலக ஆருணி தன் பிள்ளையான ச்வேதகேதுக்கு உபதேசிக்கிறதா வருகிறது. ஆல விதையை பிளந்து கொண்டே போகச்சொன்ன ஆருணி உள்ளே ஒண்ணுமே இல்லை என்ற பிள்ளையிடம் ¨நீ ஒண்ணுமே இல்லை என்றதில் இருந்து சூக்ஷ்மமான சத்து ஆலமரமாக வரப்போகிறது¨ என்று சொல்லி குளிர்ச்சியாக ¨ஸௌம்ய¨ என்று கூப்பிட்டு ¨இதில் சிரத்தை வை¨ - ச்ரத்தஸ்வ என்கிறார்.
மஹா வாக்கிய உபதேசம் பெறும் தகுதி உள்ளவரிடம் கூட ச்ரத்தை வைன்னு சொல்ல வேண்டி இருக்கு! அப்ப ப்ரஹ்ம அனுபவம் ப்ரத்யக்ஷமா - நேரடியா உண்டாகிற வரை நம்பிக்கையே முக்கியம் என்று ஆகிறது.

விஷயங்களை நம்புவது மட்டும் இல்லை. அதை சொல்லுகிற குருவிடத்திலே கூட நம்பிக்கை வேண்டி இருக்கு. இது ரொம்பவே முக்கியம். குரு ஞானியா இருந்தா கூட பல விஷயங்களிலே அஞ்ஞானியா நடிக்க வேண்டி இருக்கும். அப்பதான் அவர் தன் வாழ்க்கையை நிம்மதியா நடத்திக்கொண்டு போக முடியும். யார் கிட்டேயாவது கொஞ்சம் சக்தி இருக்குன்னா அவரை விடாம படுத்தி எடுத்து தனக்கு முக்கியமா தோணுகிற காரியங்களை சாத்திச்சு கொண்டு அப்புறம் கஷ்டப்படறதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே! அவர் சொல்கிறதை பின் பற்ற தயாராக இருக்க மாட்டோம்; ஆனா அவர் நமக்கு வேண்டிய காரியங்களை சாதிச்சு கொடுக்கணும். ம்ம்ம்ம்...... இதுதானே உலகம்! போகட்டும்.

ஒரு வேளை யாரானா அசத்துகிட்ட இவர்தான் குருன்னு மாட்டிகிட்டா என்ன செய்வது? இது பல பேருக்கும் வரக்கூடிய சந்தேகம்தான். அப்படி வந்தா தர்ம சங்கடம் தான்!

குருவை தீர விசாரித்துதான் அடைக்கலம் ஆக வேண்டும். அதுவும் போலிகள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்திலே ரொம்பவும் பிரச்சினையான விஷயம். இவர் நிஜமாவே ஞானிதானா? அப்படின்னா ஏன் இப்படி சாதாரண மனுஷன் போல கோபப்படுகிறார், தாபப்படுகிறார்? இப்படி சந்தேகம் வந்தா தொலைந்தது. அந்த சந்தேகப்பேய் பெரிசா வளந்து மூளையை ஆக்கிரமித்து கொண்டு ஒரு சாதனையும் பண்ணவிடாம ¨ஏமாந்து போயிட்டோமோ, ஏமாந்து போயிட்டோமோ ¨ன்னு இலக்கை கோட்டை விட செய்துடும்.

பகவான் அதனாலதான் சந்தேகப்படுபவன் அழிந்தே போவான் (3) என்று சொல்கிறான். இதையே தமிழ்ல அழகா சொல்லி இருக்கு- பாஸிடிவ்வா! நம்பினோர் கெடுவதில்லை. அப்படின்னா நம்பாதவங்க? அதை சொல்வானேன்!

அப்படி சொன்னா எப்படி? ஒரு வேளை போலியிடம் போய் சேர்ந்துவிட்டோமானால்? நம்ம சாதனா என்ன ஆறது? அவர் நம்மை உபயோகிச்சு (exploit செய்து) கொண்டா?

அப்படி ஆனாலும் உண்மையில் ஒரு பிரச்சினையும் இல்லை. ¨இந்த குருகிட்ட வந்து விழுந்துட்டோம். அவர் வெளியே எப்படி வேணுமானாலும் தோன்றிவிட்டு போகட்டும். நம்மை பொறுத்தவரை அவர் மூலமா பகவான் விமோசனம் தராம கை விட மாட்டான்¨னு திடமான நம்பிக்கையோட சிரத்தையை மனசில ஆணிவேரோட விட விட்டு சரணாகதி செய்துடணும். ஆரம்ப பாடம் சொல்லித்தர ஆசார்யனை விட இது ஞான வழி காட்டற குருகிட்ட ரொம்பவே முக்கியம். அப்படி செய்தா குருவா வரிச்ச ஆசாமி போலியா இருந்தாலும், அவருக்கு ஞானம் இல்லாவிட்டாலும் அவர் மூலமா பகவான் இந்த சிஷ்யனுக்கு ஞான அனுக்கிரஹம் செய்துடுவான்.

நாமே தெரிஞ்சு கொள்கிறதைதான் உண்மை என்றும் சாஸ்திரம் சொல்லி அதை ஆசார்யன் தனக்கு சொல்வதை நம்பிக்கையிலேதான் எடுத்துக்கணும் என்று அவ்வளவு திட புத்தி இல்லாமல் இருக்கிறது சிரத்தை இல்லை. அதானே ஆரம்பத்துல சொன்னோம்?
பரம சற்குரு (ஈஸ்வரன்) நூல் (வேத சாத்திரங்கள்) மீது அன்பு பற்றுதலே சிரத்தையாகும்.



சரி, சரி, ஏன் வேத, சாஸ்திரத்துக்கு இவ்வளோ முக்கியத்வம்ன்னா....
வேதங்களும் சாத்திரங்களும் பகவான் ரிஷிகளுக்கு காட்டிக்கொடுத்து இருக்கிற சத்தியம். இதுல ஒரு நம்பிக்கை வேணும். இதுவே சிரத்தை
சிரத்தை என்கிற வார்த்தையை நிருக்தத்திலே பிரிச்சு வேர்ச்சொல் ஆராய்ச்சி செய்கிறபோது ச்ரத், தா என்று ரெண்டு சொல்லாக சொல்கிறாங்க. ச்ரத் = சத்யம். தா = fix செய்வது. ஒரு விஷயத்தில் இதுதான் சத்தியம் என்று மனசை திடப்படுத்துவது. அதான் சிரத்தை.

சாந்தோக்கியத்திலே இப்படிப்பட்ட ச்ரத்தை நாம் மனசில ஆழ்ந்து நினைக்க வேண்டிய, கண்ணுக்கு தெரியாத, தத்தவத்திலே இருந்தாதான் ஒருத்தன் சரியாக அப்படி நினைப்பான். இல்லாதவன் அப்படி நினைக்கவே முடியாது என்கிறது.(4) ¨எப்போது சிரத்தை வைக்கிறானோ அப்போதே சரியாக நினைப்பது¨.

முண்டகோபநிஷத் பாட்டியல் போடுகிறது - யாருக்கு பிரம்ம வித்தையை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று. பல யோக்யதைகளில் - க்ரியாவந்தர் (கர்ம அநுஷ்டானமுள்ளவர்) ச்ரோத்திரியன் (வேத பொருளை உணர்ந்தவர்), ப்ரம்மத்தில் நிலை பெறும் தாபம் உள்ளவர் என்று சொல்லி மேலே அது ச்ரத்தையை சொல்லுகிறது. (5) ப்ரச்னோபநிஷத் ஆத்மாவை தேடிப்போகிறவர்கள் தபஸாலும், ப்ரஹ்மசர்யத்தாலும். ச்ரத்தையாலும் வித்யையாலும் தகுதி பெறுவதாக சொல்லுகிறது. (6)

கண்ணனும் ¨சாஸ்திர விதியை மீறி தன் இஷ்டப்படி செய்கிறவனுக்கு சித்தி கிடைக்காது, பர கதியும் கிடைக்காது. அதனால அர்ஜுனா சாஸ்திரத்தையே பிரமாணமா வைத்து கொண்டு என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாதுன்னு வழி வகுத்துக்க¨ ன்னு சொல்றார். (7)

1.ச்ரத்தா ச ப்ரஹ்ம விஜ்ஞானே பரமம் ஸாதனம் - ப்ருஹ -அத் 2 முகவுரை.
2.ச்ரத்தாவான் லபதே ஞானம் ப.கீ 4, 39
3.அச்ரத்ததானச்ச சம்சயாத்மா வினச்யதி ப.கீ 4, 40
4.சாந்தோ 7-19-1
5.சாந்தோ 3-2-10
6.ப்ரச்னோ1-10
7.ப.கீ 16 – 23, 24


Monday, December 22, 2008

சிரத்தை



அடுத்து சிரத்தை.
பரம சற்குரு (ஈஸ்வரன்) நூல் (வேத சாத்திரங்கள்) மீது அன்பு பற்றுதலே சிரத்தையாகும்.

இது கொஞ்சம் ஆச்சரியமா இருக்கலாம். ஆரம்ப காலத்திலே சரி, இப்பவா?
ஆரம்ப காலத்திலே நமக்கு ஒண்ணும் ஆத்மா பத்தி அறிவு இல்லை. சொல்லால சொல்ல முடியாத ஒண்ணைத்தானே சொல்ல முயற்சி பண்ணறோம்? அதனால இதில் நிறைய விஷயங்களுக்கு நேரடி ஆதாரம் காட்ட முடியாது. வேதம், சாத்திரங்கள், ஞான நூல்கள், பெரியவர்கள் சொன்னது இப்படி பலதுல ஒரு நம்பிக்கை இருந்தாதான் கொஞ்சம் இந்த கருத்துக்களோட கூடப்போய் பார்த்து புரிஞ்சுக்கலாம். அந்த நேரத்துல சிரத்தை வேணும்ன்னு சொன்னா சரி கரெக்ட்டு.
இப்ப நிறையவே பண்ணியாச்சு. எது நித்தியம் எது அநித்தியம் என்கிற அறிவை ஓரளவாவது வளத்தாச்சு; ஓரளவு வைராக்கியம் வந்தாச்சு; இந்திரியங்களையும் மனசையும் கட்டிப்போட்டு மனசை சாந்தமா வைக்க பழகியாச்சு. மனசில வெறுமை, பொறுமை எல்லாம் வந்தாச்சு. அப்புறம் இப்ப என்ன சிரத்தை?

இப்படி முன்னேறியதாலதான் சிரத்தை!

ஆரம்ப காலத்தில சாதகனுக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கும்.¨நமக்கு இந்த ஆத்ம வித்யை பத்தி ஒண்ணுமே தெரியாதே! பேசாம பெரியவங்க, இதில் திளைச்சவங்க சொல்கிறதை கேட்டுப்போம்¨ அதனால சிரத்தை தானா இருக்கும். ஆனா இப்பவோ எனக்கு மனசு, புத்தி குழப்பம் எல்லாம் போய் தெளிவா இருக்கோம். இனிமேல சாக்ஷாத்காரம் விஷயமா நடக்க வேண்டியது எல்லாம் தானா நமக்கே புரிஞ்சுடும். இப்படி தோண ஆரம்பிச்சுடும். முன்னேயே சொன்னது போல அகங்காரம் எப்ப வந்ததுன்னு தெரியாமலேயே உள்ளே வந்து வளந்தும் விடும்.

ஆனா ஆத்ம தரிசனம் கிடைக்கும் முடிவான நிலைவரைக்கும் கூட பல விஷயங்கள் புத்திக்கு எட்டாதபடிதான் நடந்து கொண்டு போகும். சாக்ஷாத்காரம் கிடைத்து ஞானி ஆகிவிட்டாலும் கூட புத்தி மட்டத்துல பல விஷயங்களை தெளிவு பண்ண முடியாமலே இருக்கும். அதுவரைக்கும் பின்பற்றின வழியையே கேள்வி கேட்காமல் தொடர்ந்து போகணும். என்னென்னமோ சிலது நடந்துதான் திடீர்ன்னு சூர்யோதயம் மாதிரி ஆத்ம சாக்ஷாத்காரம் பிரகாசிக்கும். அது என்ன என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இப்படி சிலது நடந்து கொண்டு போகும் போது புத்தியால விசாரிக்காம எளிமையா அப்படியே அடங்கி ஏத்துக்கொண்டு போகணும். அது நடத்துவிக்கிறப்படி நடக்கணும். ¨இவ்வளோ தூரம் சாதனைல வந்தோம். இதுக்கு அருள் பண்ண பகவானுடைய அனுக்கிரஹ சக்தி இன்னும் மேலே கொண்டுவிடாம போகாது; இப்ப ஏதோ புத்திக்கு விளங்காம நடக்கிறது. இது ஒரு சோதனைதான் என்கிற தெளிவோட புத்தியை கொண்டு வராம நம்பிக்கையோட நடக்கிறதை ஏத்துக்கிட்டா கடைதேறலாம். அந்த விமோசனம் பெற்ற பிறகு கூட புத்தி விசாரணைக்கு எல்லாமே எட்டாது. மகா ஆசார்யராக பலரும் ஒத்துக்கிற சங்கரர் கூட அந்த ரகஸ்யத்தை புத்திக்கு புரிகிற மாதிரி சொல்ல முடியாதுன்னு சிரத்தைன்னு ஒரு படியா வெச்சுட்டார்.


Friday, December 19, 2008

சகித்தல்


[வெளியூர் போகிறதால கொஞ்சம் பெரிய போஸ்ட். நிதானமா படிக்கலாம்.]

அடுத்து நாம பார்க்கிறது திதிக்ஷா என்கிற சகித்தல்.
பொறுமை. பொறை உடைமைன்னு திருவள்ளுவர் சொன்னது.
மயக்கம் செய்கிற காமம் குரோதம் முதலியவை வந்தா அடக்குதல் (பொறுத்தல்) சகித்தல்.
மனசை அடக்க தடையா இருக்கிறது இந்த காமம்தானே? ஆசைப்பட்ட பொருள் கிடைக்காம போனால் வருவது இந்த குரோதம்தானே? இவற்றையும் அடக்குவது.

ஆத்ம சாக்ஷாத்காரம் - நேரடியாக ஆத்மாவை அனுபவிப்பது நடந்தால்தான் விஷயங்கள்ல ருசி முழுக்க முழுக்க நசிஞ்சு போகும். புலனடக்கத்தால புலன்களுக்கு தீனி போடறதை நிறுத்திவிட்டா கொஞ்சம் கொஞ்சமா அவை அடங்குமானாலும் ருசி கண்ட பூனை மாதிரி சாதகன் அனுபவிச்சது உள்ளுக்குள்ளே இருக்கும்தான். இது எப்படா விலகும்ன்னா ஆத்ம தரிசனம் கிடைச்ச பிறகுதான். (1)

¨இது என்னய்யா! பைத்தியம் தெளிஞ்சால் கல்யாணம் ஆகும்; கல்யாணமானால் பைத்தியம் தெளியும் ங்கிறா மாதிரி இருக்கே!¨

இல்லை.
ருசியை அழிச்சு மனசை அழிச்சு ஆத்மாவை பாக்க சாதகன் முயற்சியை பண்ணதான் வேண்டும். இருந்தாலும் முழுக்க செய்ய இவனால முடியாது. இப்படி இவன் முழுக்க முடிஞ்சவரை முயற்சி பண்ண பிறகு ஈஸ்வரன் சீர் தூக்கிப்பாத்து ¨ம்ம்ம்.... பரவாயில்லை. போதுமான முயற்சி பண்ணி இருக்கான். பாவம் முழுக்க செய்ய முடியலை. போனாப்போறது¨ ன்னு கொஞ்சம் மன்னிச்சுவிட்டு கருணையோட ஆத்ம தரிசனத்தை கொடுப்பான். இதனால ருசியும், ருசியை காண்கிற மனசையும் சேத்து அழிச்சுடுவான்.

சரி, அதான் வைராக்கியம் வந்து எல்லாத்தையும் விட்டாச்சே, இது என்ன சகித்தல்ன்னா...

உபாரதி நிலைக்கு வந்ததும் மனசு வெறிச்சுன்னு ஆகிடும்தான். இருந்தாலும் சாதாரண வாழ்க்கையா இல்லாம கொஞ்சம் வித்தியாசமா அளவு கடந்த துக்கமோ கோபத்தை உண்டாக்குகிற விஷயமோ நடந்தா என்ன செய்கிறது? அப்பவும் மனசை பாத்திப்புக்கு விடாதேப்பான்னுதான் இந்த சகித்தலை யும் சொல்லி இருக்கு.

குளிர்- சூடு போல இரட்டைகளா எதிர் எதிரே இருக்கிற ஜோடிகளுக்கு த்வந்த்வம் ன்னு பேரு. இந்த இரட்டைகளை எல்லாம் பொறுத்துக்கப்பா ன்னு அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறப்ப ¨திதிக்ஷ்வ¨ ன்னு சொல்லறார். (ப.கீ 2-14) மேலும் பல இரட்டைகள் வெற்றி தோல்வி, காரியம் நடக்கிறது- நடக்காமல் இருக்கிறது, லாபம்- நஷ்டம் இப்படி பலதும் சொல்லி இதை எல்லாம் பொறுத்துக்க என்கிறான்.

நல்லதை சுலபமா பொறுத்து போயிடுவோம். கெட்டதை பொறுக்கிறது இன்னும் சிரமம். ஆனால் அதுக்கு பழகணும். பழகி பழகி அப்புறமா அதை அசட்டை - உதாசீனம் செய்கிற பக்குவம் வந்துடும்.

அது சரி, நல்லதையும் ஏன் சகிக்கணும்? ஏன் கெட்டதை மட்டும் அசட்டை பண்ண சொல்லி இருக்கலாமேன்னா, அப்படி இல்லை. இரண்டையுமே சமமா பாக்கணும் என்கிறார். ஒரு பக்கத்தோட எக்ஸ்ட்ரீம் தெரியறப்பதானே இன்னும் ஒண்ணு, மறுபக்கம் இருக்குன்னு தெரியும்? இது ஆத்ம சாதனைல கொஞ்சம் முன்னேறின பிறகு புரியும். தென்றல் வீசுதுன்னு தோணீனா ¨அட, தென்றலோ புயலோ ஏதா இருந்தாலும் பரவாயில்லைன்னு தானே இருக்கணும். ஏன் இது தென்றல்ன்னு தனியா தோணணும்¨ன்னு நினைப்பு வரும். மனிதர்கள் ரொம்ப பிரியமா இருந்தா இல்லாவிட்டாலும்தான் என்னன்னு தோணும். அதாவது இப்ப சாதாரணமா நமக்கு கெட்டதை அசட்டை செய்கிறா மாதிரி சாதனைல கொஞ்சம் முன்னேறிய பிறகு நடக்கிற படி நடக்கட்டும் என்று தோணும். அதானே திதிக்ஷா? விடல்?

நல்லது நடக்கிறப்ப மனசு சந்தோஷப்பட்டா அதுவும்தான் மனசு சஞ்சலம், கொந்தளிப்பு. உண்மையில் துக்கம் ன்னு நினைக்கிறது துக்கமும் இல்லை. சுகம் ன்னு நாம சாதாரணமா நினைக்கிறது சுகமே இல்லை. ஆத்ம அனுபவம் மட்டும்தான் உண்மையான சுகம். நல்லதுன்னு நமக்கு தோணுவதை ஆஹான்னு அனுபவிச்சுட்டா பிறகு அந்த நல்லது நடக்காதான்னு எதிர்பார்ப்பு ஆரம்பிச்சுடும் இல்லையா? (இதுக்கு ஸ்ப்ருஹா ன்னு ஒரு சொல் வட மொழிலே) இதை ஏற்படாம பாத்துகிறதும் விடல்தான்.

இப்படி இந்த இரட்டைகள் விடுகிறதுதான் ¨தொந்தம்¨ விடுகிறது! (த்வந்த்வம்). அப்ப த்வைதமும் போய் அத்வைதம் வந்துடும்!

த்வந்த்வம் போகிறவன் பந்தத்தில் இருந்து சுலபமா விடுபடறான் ன்னு கண்ணன் சொல்கிறான். (2)

சங்கரர் ப்ருஹதாரண்ய பாஷ்யத்தில் திதிக்ஷு : த்வந்த்வ ஸஹிஷ்ணு: - எதிரெதிரான இரட்டைகளை சகித்துக்கொள்பவன் திதிக்ஷு என்கிறார்.

நேராக துக்கமா தோணினாலும் அல்லது சுகமா தோணினாலும் ஏதானாலும் அதைப்பத்தி புலம்பாம, விசாரப்படாம, இதை தடுக்க என்ன செய்யலாம்ன்னு யோசிக்காம, பேசாமல் சகிச்சுக்கிறதுதான் தேவை - இதான் சங்கரரோட உபதேசம்.(3)

ஒண்ணு பாத்தீங்களா? விவேகம், தமம் ஆண்பால். வைராக்கியம் ஆண்பால் ஆனா இங்கே நியூட்டர். உபரதி பெண்பால். செயல் துடிப்பு ஆண்மைனா செயல் இல்லாம அடங்கி இருக்கிறது பெண்மை. கிடக்கட்டும், திதிக்ஷா பெண் பால். அவங்க பொறுமை, சகிப்புத்தன்மை யாருக்கு வரும்? பொறுமைக்கு பூமா தேவிதானே!

1.ப.கீ 2.59
விஷயா விநிவர்த்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:|
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே||

2.ப.கீ 5-3
நிர்த்வந்த்வோ ஹி மஹா பாஹோ ஸுகம் பந்தாத் பிரமுச்யதே|

3.ஸஹநம் ஸர்வது:க்காநாம் அப்ரதீகா பூர்வகம்|
சிந்தா விலாப ரஹிதம் ஸா திதிக்ஷா நிகத்யதே|| (வி.சூ 24/25)


Thursday, December 18, 2008

விடல்



அடுத்து விடல்.
உபரதின்னும் சொல்லுவாங்க.

ஒரு வேலையும் இல்லாம மனசு ஓய்ஞ்சு போய் விட்ட நிலை. சமதம பயிற்சியால வெளியே இருக்கிற பிடிப்பு எல்லாத்திலிருந்தும் விடுபட்டு ஒரு செயலும் இல்லாம இருக்கிற நிலை. அப்படித்தான் விவேக சூடாமணி சொல்லுது. (1)

வெளியே உள்ளதில்பிடிப்பு விட்ட உத்தமமான நிலை. வெளியேன்னா? ஆத்மாவுக்கு வெளியே இருக்கிற எல்லாமேதான். மனது எழுப்புகிற எண்ணங்களும் இந்த ¨வெளி¨யில்தான் இருக்கு.

ஒரு பட்டி மன்றம் நடக்குது. ஒரு பக்க பேச்சாளார் ரொம்ப திறமையா வாதாடறார். ஆணித்தரமான வாதங்கள். எவ்வளோ திறமைனா எதிர் தரப்பு பேச்சாளர் சொல்லறத்துக்கு ஒண்ணுமே இல்லாம வாயடைச்சு போய் ஓஞ்சு நிக்கிறார்! இப்படி செயலத்து போகிறது உபரதி.

எல்லாருக்கும் பல விஷயங்கள் விட்டு விட முடிஞ்சாலும் மூணு கஷ்டமாம். மகன், பெண்ணாட்டி, பணம். பலருக்கும் மகன் மேல பாசம் விடறது கஷ்டம். (இந்த கால அரசியல் பத்தி சொல்லல சாமி!) எல்லாத்தையும் விட்ட சன்னியாச வாழ்கை வாழறதா மத்தவங்க நினைக்கிற பேர்கள் கூட. அப்படி இருந்தவர் ¨அண்ணா¨ ன்னு பலராலும் அழக்கப்பட்ட சுப்ரமண்ய சர்மா. ராம கிருஷ்ண மட தமிழ் வெளியீடுன்னா அனேகமா இவருதா இருக்கும். அப்படி ஒரு கால் கட்டத்திலே நிறைய கிரந்தங்கள் மொழி பெயர்ப்பு, தமிழாக்கம் இப்படி செய்தவர். ஏறக்குறைய சன்னியாச வாழ்க்கையே வாழ்ந்தவர். ஆனாலும் இவரோட மகன் இறந்து போனதா கேள்விப்பட்ட பின் மூணு நாளாச்சாம் சுய நிலைக்கு வர.

பெண்டாட்டி மேலே இருக்கிற ஆசையும் பாசமும் சொல்ல வேண்டியதில்லே. தொண்டு கிழமானாலும் இந்தா பாட்டி காபின்னு கொடுக்கச்சே அந்த கிழம் குடிச்சுடுத்தா ன்னு கேட்டுட்டு குடிக்கிற பாட்டியை பாத்து இருக்கோமே! கிழவனும் அதே மாதிரி ஏண்டி காப்பி குடிச்சயான்னு தட்டு தடுமாறிக் கொண்டு வந்து கேட்டு போகும்!

பணம்/ சொத்து மேலே ஆசையும் நல்லா தெரிஞ்சதுதானே! இதுக்காக மக்கள் அலைகிற அலைச்சல்! பல சமயம் ஆச்சரியமா இருக்கும். இத்தனைக்கும் இதை எல்லாம் மூட்டை கட்டிகிட்டு போக முடியாதுன்னு நல்லாவே தெரியும். பின்னே ஏம்பான்னா i can´t help it ன்னு பதில் வரும். நகரத்திலே வாழ ஒரு வீடுதான் இருக்கே இன்னும் ஒண்ணு எதுக்கு? இருந்தாலும் மாநகரத்திலே ஒண்ணு வாங்கிப்போடுவாங்க. புத்தியும் அப்பப்ப மாநகரம் போறப்ப பயன்படுமேன்னு ஒரு சமாதானம் கற்பிக்கும். இது போல பலது.

இந்த மகன், பெண்ணாட்டி, பணம் மூணையும் ஏஷணா த்ரயம் என்பர்.(2)
இந்த மூணு மேலே ஆசையும் விட்டவன்னா உபரதி வந்தாச்சுன்னு அர்த்தமாம்! விடல் ன்னா இந்த மூணையும் விடல்.

அட, முன்னேயே வைராக்கியம் பத்தி பாத்தோமே, அதுல இதை எல்லாம் விடலையா? அப்படின்னா....

வைராக்கியத்துல ஒரு வெறுப்பு இருக்கும். ஆசையை ஒழிக்கிறதுன்னே முனைப்பு இருக்கும். சம தமங்கள்லே மனசையும் புலன்களையும் அடக்குகிறதா இருக்கும். இப்படி எல்லாம் செஞ்சு இப்ப வெறுப்பும் இல்லை ஆசையும் இல்லை. ஓய்வு! சம தமத்தால மனசு ஓய்ஞ்சு போச்சு.
ஒரேயடியா இன்னும் ஒழியலை. அது ரொம்ப கடேசிலதான் நடக்கும். ஆத்ம அனுபவம், ஆனந்தம் எல்லாம் இன்னும் வரலை. இப்ப சும்மா வெத்தா பாழா சூன்யமா இருக்கு. இருந்தாலும் சஞ்சலங்கள் இல்லை. அதனால் ஒரு நிம்மதி நிலை.

சரி மனசு இப்படி உபரதில ஓய்ஞ்சு போச்சே, அப்படியே போயிடுமான்னா..

இல்லை.
இப்படி ஓய்ஞ்சு போச்சுன்னா மேலே எப்படி ப்ரஹ்ம சத்தியத்தை தெரிஞ்சுக்க காரியம் நடக்கும்? அதனால் பகவானோட ஒரு அனுக்கிரஹம் இங்கே கிடைக்கும். அதுக்குன்னு உடனடியா பிரஹ்ம சாக்ஷாத்காரமும் கிடைச்சுடாது. வெத்தா இருக்கிற நிலையாவும் இல்லாம இரண்டுக்கும் நடுவே அடுத்த/ மற்ற நிலையான ஜீவனோட இருக்கிற சமாதானம் என்கிற நிலைக்கு கொண்டுபோவான்.
சில சமயம் வாசனைகள் பலமா இருந்தா திருப்பி நழுவுகிறதும் இருக்கும்.



ஆசைகள் விட்டு போனதால இதையே சன்னியாசம்ன்னு சங்கரர் பிருஹதாரண்ய பாஷ்யத்திலே சொல்லிவிடறார். அது எப்படி சொல்லலாம்? இன்னும் திதிக்ஷா, ஷ்ரத்தா, சமாதானம், முமுக்ஷுத்துவம்ன்னு எவ்வளோ பாக்கி இருக்குன்னா....
முன்னேயே சொன்ன மாதிரி இவை எல்லாம் வரிசையான படிகள் இல்லை. ஏறத்தாழ ஒரே நேரத்திலே பயிற்சி செய்ய வேண்டிய சமாசாரங்கள். சில சமயம் சிலது அதிகம் சிலது குறைவுன்னு போகும்.
உபரதி பூரணமா வந்தாச்சுன்னா சன்னியாசம் வந்தாச்சு.

1.பாஹ்யாவலம்பனம் வ்ருத்தே: ஏஷோ(உ)பரதிருத்தமா
பாஹ்ய = வெளி. அவலம்பனம்= பிடிப்பு. உபரதிர் உத்தமா= உத்தமமான உபரதி நிலை
2. ஏஷணா ரஹிதாத்ருதா = ஆசைகள் அற்றவர்களால் பூஜிக்கப்படுபவள்.


Wednesday, December 17, 2008

சமம்-தமம் எப்படிங்க?



எல்லாம் சரி சமமோ தமமோ, இதை எப்படி அடக்குவதுன்னு சொல்லுங்கன்னா...

முதல்ல கொஞ்சமாவது வெற்றிகரமா செய்யக்கூடியது தமம்தான்.
அதாவது புலனடக்கம்தான்.

இதுக்குத்தான் விரதம், ஆசாரம், தீக்ஷை சாஸ்திரம்ன்னு நிறைய கட்டுப்பாடு. காமத்தை தணிக்கணுமா கல்யாணம் பண்ணிக்கோ, பெண்ணாட்டியோட மட்டும் அனுபவி. அதுவும் இன்ன இன்ன நாட்கள் விலகி இருக்கணும். மாம்சம் சாப்படணுமா. சரி, இந்த இந்த பிராணியோடது எல்லாம் கூடாது. இந்த இந்த நாட்கள் கூடாது. இப்படி நிறைய கட்டுப்பாடுகள். இவை நமக்கு புலன்கள் மனம் போன படி பின்னாலேயே போகாம ஓரளவாவது கட்டுப்பாடு வர உதவுது.

 மேலும் இந்த ஆசைகளை எல்லாம் பகவான் பக்கம் திருப்பி விடணும். சக்கரை  பொங்கல் சாப்பிடனுமா? மார்கழி மாசம் இப்ப. சீக்கிரம் எழுந்து பகவானுக்கு பூஜை பண்ணி சாப்பிடலாம்!

இப்படி செய்த பின்னே மனசும் ஓஹோ நம்மால் இதெல்லாம் இல்லாம கூட இருக்க முடியும் போல இருக்குன்னு ஆரம்பத்துல கொஞ்சம் ஒத்துழைச்சு அவற்றோட நினைப்பிலே*யே* அலையறதை ஓரளவு நிறுத்திவிடலாம். அதாவது தனியா இருக்கிற வரை மனசு இதில் எல்லாம் போக இருக்க முடியும். தனியா இல்லாம உலக நடப்புல இறங்கும்  போது பிச்சுகிட்டு ஓடும். சினிமா பாட்டு எங்கெப்பா, புதுசா என்ன சினிமா, எங்க ஹோட்டல் ஆரம்பிச்சு இருக்கான்னு ஓடும். எல்லாம் வாசனைகளாலதான்! குதிரைகள் லகான் இல்லாம இஷ்டத்துக்கு ஓடறா மாதிரி.

இப்ப சமத்தை கொண்டு வரணும். அதாவது மன அடக்கம். மனசு என்கிற நிலையிலேந்து புத்திங்கிற நிலைக்கு கொண்டு போனால் இது முடியும். அதாவது சலனத்தை விட்டு ஸ்திரமா நல்லதா கெட்டதான்னு நிர்ணயம் செய்கிற நிலைக்கு போகணும். இப்படி போக மன உறுதி ரொம்பவே வேணும். எவ்வளவுக்கு எவ்வளவு வைராக்கியம் இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு இது சுலபம். முன்னாலேயே இது கெட்டது, ஆன்ம முன்னேற்றத்துக்கு உதவாதுன்னு யோசிச்சு நிச்சயப்படுத்தி கொண்டதை இப்ப நினைவு படுத்தி சலனப்படாம இருக்கலாம்.

இப்படி சமம் தமம் ரெண்டையும் மாத்தி மாத்தி பயிற்சி செஞ்சு - உண்மைல வெகு வேகமா இரண்டும் நடப்பதால சேத்தேன்னு கூட சொல்லலாம்- பயிற்சி செஞ்சு சாதித்தே விட்டோம் என்கிற நிலைக்கு வந்துவிடலாம். இந்த முடிவு சமத்தோட நிறைவாகவே இருக்கும். அதாவது மனசு பரி பூரணமா அடங்கி இருக்கும். இது ஆன்மீகத்துல ரொம்ப முன்னேறிய நேரத்துலதான் வரும்ன்னு சொன்னது ஞாபகம் இருக்கலாம். அது வரை பயிற்சி செய்துகிட்டே மத்த படிகளையும் பாக்க வேண்டியதுதான்.

அப்பா, என்னால முடிஞ்சது இவ்வளோதான். மேலே வைராக்கியம் நீதான் பிச்சையா கொடுக்கணும்ன்னு பகவானை வேண்டிக்கணும். அவனும் பாவம் இந்த குழந்தை இவ்வளோ முயற்சி செய்யுதேன்னு கொஞ்சம் தருவான்.

கர்ம யோகத்திலே பாத்த இது நினைவு இருக்கு இல்லியா?

Tuesday, December 16, 2008

சமம் -தமம்




சாதாரணமா ஞான இந்திரியங்களைத்தான் கட்டுப்படுத்த சொல்கிறோம். கர்ம இந்திரியங்களை இல்லை. ஏன்னா ஞான இந்திரியம் தூண்டிதான் கர்ம இந்திரியம் வேலை செய்யும்.

இந்த 5 ஞான இந்திரியங்கள் வழியா ஜீவன்கள் அழிவடையறதை முன்னேயே பாத்து இருக்கோம் இல்லையா? பக்தி பதிவுகள்ல விமோகம் பத்தி பாக்கிறப்ப.  (வி.சூ 76/8)

இருந்தாலும் விவேக சூடாமணில தமம் ன்னா என்னன்னு நிர்ணயம் செய்யறப்ப ரெண்டுமேதான் சொல்லி இருக்கார்.

விஷயேப்ய: பராவர்த்ய ஸ்தாபநம் ஸ்வஸ்வ கோளகே|
உபயேஷாம் இந்த்ரியாணாம் ஸ தம: பரிகீர்த்திதித:

அனுபோக வஸ்துக்களான விஷயங்களில் இருந்து இரண்டு வகை இந்த்ரியங்களையும் இழுத்து அதனதன் வட்டத்தில் நிலை நிறுத்துவது.
சரி அதென்ன வட்டம் மாவட்டம்?

தமம் என்கிறது ஒண்ணையுமே பாக்கக்கூடாது, ஒண்ணையுமே கேட்க்ககூடாது, வாசனை பாக்கக்கூடாது, ருசிக்கக்கூடாது - இப்படி இல்லை. கையை காலை ஆட்டி ஒரு வேலையும் செய்யக்கூடாதா?

ஒரேயடியா இந்திரியங்களோட வேலையை நிறுத்தினா! உயிர் வாழ உலக வியாபாரம் நடக்கணுமே! சரீர யாத்திரைக்கு தேவையான அளவு மட்டும் செய்யத்தான் வேண்டும். அத்தியாவசியமா பாக்க வேண்டியதை பாத்து, கேட்க வேண்டியதை கேட்டு, இப்படியே சாப்பிட்டு நடந்து இப்படி...

இந்த அத்தியாவசியம் என்ன என்பதைதான் வட்டம்ன்னு சொல்லி இருக்கார்.

மேலும் கர்மம் செய்யாமல் இருப்பதால் உனக்கு உடலைப் பேணுவது கூட ஸாத்யமாகாது ன்னு ஏற்கெனவே கண்ணன் சொல்லி இருக்கானே!



+++++++++++++++++++++++++++++++++++
மனசு புலன்கள் எல்லாத்தையும் சேத்து 11 புலன்களாவும் சொல்கிறது உண்டு. ஏகாதச ருத்திரர்கள் என்று ஈசனுக்கு 11 வடிவங்கள் இருப்பது இந்த 11 புலன்களோட அதிதேவதைகளக்தான் என்றும் ஒரு சிலர் சொல்கிறர்களாம். ஏகாதசி பட்டினியும் இந்த 11 க்கும் தீனி போடாம வைக்கவே.
கண்ணனும் இந்த்ரியாணி மனஸாஸ்மி ன்னு மனசை ஒரு புலனாவே சொல்கிறான். (ப.கீ 10-22) இன்னும் தெளிவா மந: ஷஷ்டாநீந்திரியாணி (ப.கீ 15 -7) என்று 6 புலன்கள்ல மனசு ஒண்ணு என்கிறான்.

போகட்டும். சுருக்கமா சொல்லப்போனா மனசு அடக்கம், புலன்கள் அடக்கம் ரெண்டும் செய்ய வேண்டியது. இந்த ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு ஒத்தாசை செஞ்சுக்கும். முன்னே சொன்ன மாதிரி மனசு இல்லாம புலன்கள் தானா ரொம்ப ஒண்ணும் ஓடாது. அப்ப புலன் அடக்கத்துக்கும் கருவி மனசுதான். புலன்களை மனசால் நியமித்து ன்னு கண்ணனும் சொல்லி இருக்கான். (ப.கீ 3-7) ச்ரத்தாவான் லபதே ஞானம் தத்பர: ஸம்யதேந்த்ரிய: ன்னு ச்ரத்தையோட கூட புலன்களை நல்லா அடக்கி இருக்கிறவனே ஞானம் பெறுவான் ன்னு கண்ணன் சொல்றான். (ப.கீ 4 -39)
++++++++++++++++++++++++++++++++++++
ஒரு ஆமை இருக்கு. அதை யாரோ துஷ்டன் பாத்துட்டான். தடி எடுத்து அடிக்கப்போறான். ஆமை என்ன செய்யும். அதால ஓடி ஒளிய முடியாதே! பகவான் அதுக்கு விசேஷமா ஒண்ணை கொடுத்து இருக்கான். அதோட ஓடு. ஆமை தன் தலையையும் கால்களையும் உள்ளே இழுத்துக்கும். அப்புறம் ஓடு மேலே என்ன அடி விழுந்தாலும் நிறையவே தாங்க முடியும் அதனல். பிறகு ஆபத்து போன் பின் வெளியே நீட்டும்.

அப்படி ஒத்தன் புலன்கள் விஷயத்துல இருந்து புலன்களை இழுத்துக்கணும்ன்னு ஸ்தித பிரக்ஞன் லட்சணம் சொல்கிறபோது கண்ணன் அழகா சொல்றான். (ப.கீ 2-58 )


Monday, December 15, 2008

தமம்


தமம் என்கிறது இந்த மனசு கண், காது முதலானவற்றால மனசு வெளியே போய் உலக விஷயங்கள்ல ஈடுபட்டு சுகம் என்கிற கஷ்டத்துல { :-)) } அகப்படறதை தடுப்பது. அதாவது புறக்கரணத்தை கண்டிக்கிறது. புறக்கரணம்? அதாங்க இந்திரியங்கள் / புலன்கள்.

ஐந்து கர்மேந்திரியங்களும் ஐந்து ஞானேந்திரியங்களும் இருக்கு இல்லையா? கை பல விஷயங்களை செய்கிறது. கால் நடக்க; வாய் பேச, இன்னும் இரண்டு இந்திரியங்கள் கழிவுகளையும் வீர்யத்தையும் வெளியே தள்ள. இவை 5 கர்மேந்திரியங்கள். வெளியே உள்ள விஷயங்களை அறிய பயன்படுவது ஞானேந்திரியங்கள். சப்தத்தை கேட்க காது; வழவழ, சொரசொர, சில்லுன்னு, சூடா, இப்படி அனுபவிக்க தோல்; வண்ண மயமா உலகை பார்க்க கண்கள்; பல சுவைகளை அறிய நாக்கு (வாய்); பல வாஸனைகளை அறிய மூக்கு.

இதையெல்லாம் கட்டுக்குள்ள வைக்காததுதான் பல பிரச்சினைகளுக்கும் காரணம். ஒவ்வொரு இந்திரியமும் கொடுக்கக்கூடிய அனுபோகத்தில இருக்கிற ஆசையாலதான்ஒரு ஜீவன் இந்த மாயா லோகத்திலே கட்டிப்போடப்படுகிறது. இந்த மாயைல இருக்கிற வரை ஆத்மாவை புரிஞ்சுக்க முடியாது என்பதாலே ஆத்ம நாட்டம் இருக்கிறவங்க இதை கட்டிப்போடணும்.

சமம் தமம் ரெண்டுமே அடக்கு என்கிற பொருளைதான் தருதுக. இருந்தாலும் வெளி விஷயங்களை அறிந்து அனுபோகத்துக்கு உதவி செய்யறவற்றை அடக்கறது தனியாவும், இந்திரியங்கள் உதவி இல்லாட்டாக்கூட தானே எண்ணங்களை உற்பத்தி பண்ணி சலிக்கிற மனசை அடக்குகிறது தனியாகவும் இருக்கிறதால ரெண்டாச்சு. சமம் மனவடக்கமாயும் தமம் புலனடக்கமாயும் ஆச்சு. ரெண்டிலே மனவடக்கம்தான் முக்கியம். ஏன்னா, புறக்கரணம்ன்னு சொன்னாலும் இந்த இந்திரியங்கள் வழியே வெளியே பாய்கிறது என்னவோ மனசுதான். மனசை கண்டிச்சுட்டா புலன்களுக்கு ரொம்ப ஒண்ணும் வேலை இல்லை. ஆதனாலதான் சமம் முதல்ல சொன்னாங்க.

அப்ப மனசை கட்டுப்படுத்தறது ஒண்ணே போதுமே? ஏன் புலன் கட்டுப்பாடு?

நல்ல கேள்வி. மனசை முழுக்க கட்டுக்கு கொண்டு வரது ஞான வழியிலே ரொம்ப தூரம் போன பிறகுதான் கை வரும். அது வரை கொஞ்சம் கொஞ்சம் கட்டுப்பாட்டுல இருக்கும்.

கேசரி வாசனை மூக்குக்கு எட்டாதவரைக்கும் மனசு அது பின்னால போகாது. வாசனை கிடைச்சாச்சுன்னா கை கால் பரபரக்கும்; ஓடிப்போய் கேசரியை பாத்ததும் கை எடுக்கும், வாய் திறக்கும்; நாக்கு ருசி பாக்கும் ஹா! இப்படி நிறைய விஷயங்கள் புலன்களுக்கு தென் படாத வரை பிரச்சினை இல்லாம தென்பட்டா இந்திரியங்கள் அதுக்கு ஆலாப்பறக்க, உடனடியா மனசு பிச்சுக்கொண்டு அலைய ஆரம்பிக்கும். மேல் மட்டங்களுக்கு போகிற வரையிலே இப்படித்தான் மனசு வெளிக்கவர்ச்சி இல்லாதவரை ஓரளவு அடங்கியும் அது புலப்பட்டா அலைகிறதுமா இருக்கும். புலப்படும் இந்த நேரத்துக்குத்தான் இந்திரியங்களை கட்டுப்படுத்தணும் என்கிறதும் அதை தனியா வெச்சு இருக்கிறதும்.

கடோபநிஷத்துல அழகான உதாரணம் புலன்களைப்பத்தி.

ஜீவன் தேர்ல இருக்கிற யஜமானன் மாதிரி.
சரீரமே தேர்.
ஓட்டுறவன் புத்தி.
தேரை இழுக்கிற குதிரைகள் புலன்கள். இவற்றை கட்டுப்படுத்துகிற லகான் மனசு. இது புத்தி கைலதானே இருக்கும்.
இந்த விவேக வைராக்கியத்துல கெட்டியான நல்ல புத்தி சரியான ஆத்ம வழியில போகிற மாதிரி மனசால லகானை பக்குவமா பிடிச்சு விட வேண்டிய அளவு மட்டுமே விட்டா புலன்களான குதிரைகள் தேவையான அளவு நல்ல அனுபோகங்களுக்கு மட்டுமே போய் இழுத்துப்போக இறங்க வேண்டிய இடமான ஆத்ம சாக்ஷாத்காரம் வரும். அப்புறம் என்ன! இவை ஏதும் தேவையில்லை என்கிறதாலே குதிரைகளையும் லகானையும் அவுத்துவிட்டு சாரதியையும் அனுப்பி வைத்துட்டு யஜமானன் சுகமா இருக்கலாம்!



Sunday, December 14, 2008

சமம்


மூணாவதா சமாதி ஷட்சம்பத்தி.

முதல்ல சமம்.
சமம் என்பது அகக்கரண தண்டம். அதாவது உள்ளே இருக்கிற கருவியை கண்டிக்கிறது - கருவி மேல கன்ட்ரோல். அட அதென்னப்பா உள்ளே இருக்கிற கருவி?

மனம், புத்தி, சித்தம், அகங்காரம், உள்ளம் இது ஐந்தும் சேர்ந்ததுதான். அதுக்கு அந்தக்கரணம்ன்னு பேரு. தமிழ்ல அகக்கரணம்.

இதை கட்டுப்படுத்தறதே சமம். இந்த மனம் இச்சையால அலைஞ்சு கொண்டே இருக்கு. இதோட நிறைவேறாத ஆசைகளாலதான் அடுத்த பிறவியே வருது. அதனால இத அதோட இஷ்டப்படி அலைய விடாமல் தடுக்கணும்.

இந்த அஞ்சும் உண்மைல ஒண்ணே -வேற வேற வடிவம். தண்ணீரையே அது இருக்கிற விதத்தை பாத்து ஐஸ் கட்டி, மூடுபனி, தண்ணி, நீராவி ன்னு வேறு வேறா சொல்கிறோம் இல்லையா? அது போல ஒரே விஷயம் அஞ்சா வடிவம் பெற்று இருக்கு. அதனால இவை ஒண்ணுக்கொண்ணு உதவி பண்ணி நிக்கும்.

உதாரணமா காலை சீக்கிரம் எழுந்திருக்க நினைக்கிறோம். நாலு மணிக்கெல்லாம் எழுந்தாதான் சரிப்பட்டு வரும்ன்னு புத்தி சொல்லுது. அப்படியே நினைச்சுகிட்டு படுக்கிறோம். காலை அலாரம் அடிக்குது. புத்தி எழுதிரிடான்னு சொல்லுது. மனசு ஒத்துக்கலை. இன்னும் அஞ்சு நிமிஷம்ன்னு சொல்லுது. புத்திக்கு தெரியும் - அப்படியே விட்டா திருப்பி தூங்கிடுவோம், எழுந்திரிக்க மாட்டோம்ன்னு. இருந்தாலும் அது பேசாம விட்டுவிடும். காலை மெதுவா எழுந்தபிறகு ¨அடடா இப்படி தூங்கிட்டோமே¨ன்னு தோணுமா! அப்ப ஏன் சீக்கிரம் எழுந்துக்க முடியலைன்னு புத்தி அருமையான விளக்கம் கொடுத்து மனசை குற்ற உணர்ச்சிலேந்து காப்பாத்திடும்! ரொம்ப குளிரா இருந்தது, படுக்கவே லேட்டா போச்சு. ஆறு மணி நேரமாவது தூங்கலைனா உடம்புக்கு நல்லது இல்லை- இப்படி ஏதோ ஒண்ணு!

சாதாரணமா இப்படி புத்தி மனசுக்கு துணை போகும். ஆனா நாம் பெரிய முயற்சி பண்ணி புத்தி சொல்கிறது போல நடக்கணும். புத்தியும் நல்ல புத்தியா இருக்கணுமே? சின்ன வயசுல சாமிக்கிட்ட வேண்டிக்க அம்மா சொல்லி தந்தப்ப ¨சாமி நல்ல புத்தி கொடு¨ ன்னுதான் சொல்லி கொடுத்தாங்க! இப்ப எப்படின்னு தெரியலே! நல்லதையே யோசிச்சு நல்லதையே படிச்சு நல்லதையே செஞ்சு நல்லதையே பேசி இந்த நல்ல புத்தியை வளத்துக்கணும். ஒரு போதும் கெட்ட விஷயங்களுக்கு இது துணை போகக்கூடாது. மூர்க்கமான புத்தி மனசு வேணா வேணான்னு அடிச்சிகிட்டாக்கூட பிடிவாதமா கெட்ட செயலை செய்யும். ஏன் செய்யணும்ன்னு சரியான காரணம் கற்பிக்கவும் அதுக்குத்தெரியும்.

சித்தம். அதையும் கட்டுப்படுத்தணும். புத்தி சொல்லுது ஜபம் நல்லதுன்னு. மனசும் இடங்கொடுத்தாச்சு. ஜபத்துக்கு உக்காருகிறோம். முதல்ல சிந்தனை ஜபத்திலே நல்லா போகுது. கொஞ்ச நேரம் கழிச்சு வேற எங்கேயோ போகுது. ஏதேதோ சிந்தனைகள். திடுதிப்புன்னு நமக்கு ஞாபகம் வர ¨அடடா ஜபம் பண்ண உக்காந்து வேற எங்கேயோ போயிட்டோமே¨ ன்னு நினைச்சு வருத்தப்படறோம். இது சித்தத்து மேலே கட்டுப்பாடு இல்லைன்னு காட்டுது.

அகங்காரம் எல்லாத்தையும் போட்டு கவுக்கிற திறமை கொண்டது. அடங்கறா மாதிரி அடங்கி மெதுவா கள்ளத்தனமா மேலே வந்து முழு கண்ட்ரோலும் பிடிச்சுடும். ¨என்னடா நல்லபடியாதானே இருந்தாரு, ஜபம், பூஜை எல்லாம் பண்ணி ஆசாமிய பாத்தாலே கும்புடுற மாதிரி இல்லே ஒரு நிலைல இருந்தாரு. இப்ப என்ன போல ஜபம் தவம் பண்ண ஆசாமி உண்டான்னு சொல்லிகிட்டு திரியறாரே. அவ்ளோ அகங்காரமா¨ ன்னு மக்கள் யோசிப்பாங்க.
அவருக்கோ எப்ப இப்படி ஒரு நிலை வந்ததுன்னே தெரியாது.


**

திடீர்ன்னு மனசு ன்னு ஆரம்பிச்சு அஞ்சு விஷயம் சொல்லி குழப்பறேனா? முன்னாலேயே ஒரு தரம் குழப்பியாச்சு!
சரி. இப்ப இதை தெளிவு படுத்திக்கலாம்.
பஞ்சீகரணம் என்கிற நிகழ்வு பற்றி பின்னால வரப்போகுது. இப்ப அனாவசியமா அதைப்பத்தி வேண்டாம். அந்த சமயத்தில இன்னும் விரிவா சொல்றேன். இப்ப கொஞ்சம் மட்டும் தெரிஞ்சுக்கலாம்.
இந்த பஞ்சீகரணத்தால அந்தக்கரணம் உண்டாகும். இது 5 வகையாக காட்சி அளிக்கும்.
உள்ளம் என்கிறது ஆகாய தத்துவம். அதனால் மற்றா எல்லா அந்தக்கரண காட்சிகளுக்கும் இடம் கொடுக்கும். அதான் அதோட வேலை.
மனம் என்கிறது வாயுவின் தத்துவம். அதனால சலித்து (நிலையா இல்லாம அலைபாய்ந்து) கொண்டே இருக்கும்.
புத்தி அக்னி தத்துவம். அதனால அது விஷயங்களை வெளிச்சம் போட்டு தெளிவா, பிரகாசமா காட்டிகிட்டே இருக்கும்.
சித்தம் நீர் தத்துவம். அதனால் அது ஒண்ணுலேந்து ஒண்ணை பற்றிகிட்டு போய்கிட்டே இருக்கும். எண்ண ஓட்டம் என்கிறது இதுதான். சித்தத்தை சிவன் பால் வைத்து என்கிறதும் இதனாலதான். அவனைப்பத்தியே எண்ணம் போகணும்னு அப்படி சொல்கிறது. சாதாரணமா அப்படி இல்லை நமக்கு. ஒரு பேப்பர் எடுத்துக்கிட்டு 5 நிமிஷம் முன்னால என்ன நினைச்சுகொண்டு இருந்தோம் ன்னு எழுதி அப்புறம் அப்புறம்ன்னு போய்கிட்டே இருந்தா செஸ் குதிரை கணக்கா அது எங்கெங்கோ போறதை பாக்கலாம்.
கடைசியா அகங்காரம். இது நில தத்துவம். அதோட குணம் எதையும் கடினமா எதிர்த்து நிக்கிறது. அதே போல அகங்காரம் மத்த யார் சொல்கிறதையும் கேக்காம எனக்கு நிகர் யாரும் இல்லைன்னு சொல்லிகிட்டு பிடிவாதமா நிக்கும். இதை நீக்க செய்கிற எல்லா முயற்சிகளையும் அது கடுமையா எதிர்க்கும்.
**




Friday, December 12, 2008

பரிட்சை விடைத்தாள்- ௫



ஒரே ஆணி. பரிட்சை எழுத வரலைன்னு சொன்ன கவி அக்கா நேரம் கண்டு பிடிச்சு பரிட்சை எழுதிட்டாங்க. சரியாவே பாய்ண்ட் எல்லாம் பிடிச்சு இருக்காங்க பாருங்க. கடேசில எனக்கு வேலையும் கொடுத்து இருக்காங்க! நாளைக்கு போட வேண்டியதை இப்பவே போடறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கர்மயோகம் என்பது பற்றில்லாத வாழ்க்கைக்கும் ஞானத்திற்கும் வழி காட்டக் கூடியது. மனிதனாகப் பிறந்துட்டு எதுவுமே செய்யாம சும்மா இருக்க முடியுமா? யோகிகள் கூடஒரு வேளையாவது சாப்பிட வேண்டியிருக்கு. சாதனைகள் செய்ய வேண்டியிருக்கு. இறைவன் கூட கர்மவிதிகளுக்குட்பட்டு காரியங்கள் செய்கிறான். அப்படிஇருக்கும்போது உலகவாழ்வில் ஈடுபட்டவங்களுக்கு, எவ்வளவு கடமைகள், எவ்வளவுவேலைகள்?

கர்மயோகத்துடைய குறிக்கோள் என்ன? ஞான யோகத்துக்கு வழி காட்டுவது. அங்கே போறதுக்கு பற்றில்லாத வாழ்க்கை அவசியம். அந்த பற்று எப்படி விடும்?
விருப்பு வெறுப்பில்லாம நம்ம கர்மாக்களைச் செய்யற போது பற்று விடும். ஆனால்இல்லறத்தில் ஈடு பட்ட எல்லோருமே ஏதோவொரு விருப்பத்திற்காகத்தான் காரியங்கள்செய்யறோம். அப்படி இருக்கும்போது பற்றில்லாம செய்யறது எப்படி? கண்ணன்சொல்கிறான், செயல்களைச் செய்யும்போது அவற்றை உன் விருப்பப்படி செய்துக்கோ. ஆனால் அதனால் ஏற்படும் பலன்களை என்கிட்ட விட்டுருன்னு.

நம்முடைய புலன்களே நமக்கு நண்பர்களும், எதிரிகளும் அப்படிங்கிறதை உணரணும். அவைகளை நம்ம முதலாளியாகி விடாம பார்த்துக்கணும். நம்ம விருப்பு, வெறுப்புகள்புலன்களால ஏற்படுது; அதற்கேற்றாற்போல செயல்களைச் செய்ய நம்முடையமுக்குணங்கள் நம்மைத் தூண்டி விடுது. அதனால, அப்படிச் செய்யும்போது பாவபுண்ணியங்களைச் சேர்ப்பதைத் தவிர்க்க முடியாது. அப்படிச் சேர்ந்துகிட்டே இருந்தாநம்ம கதி? நம்ம கணக்கு பூஜ்யத்துக்கு வர்ற வரை பிறவிகள் எடுத்து உழன்றுகொண்டே இருக்க வேண்டியதுதான்.

அதற்கும் நம்ம கண்ணன் வழி சொல்றான் கேளுங்கநாம செய்யற செயல்களின்பலன்களை இறைவனுக்கே அர்ப்பணம் செய்தால், பாவ புண்ணியக் கணக்குஅவனுக்கு போயிரும்! நமக்கு ஒண்ணும் சேராது. சமபுத்தியும் மன அமைதியும்தான்நமக்குக் கிடைக்கும். அதை நினைச்சாலே எத்தனை ஆனந்தமா இருக்கு. ரொம்பசுலபமாவும் தெரியுது. ஆனா நடைமுறையில ரொம்ப கஷ்டம். முடிஞ்ச வரை முயன்றுகொண்டே இருக்க வேண்டியதுதான்.

இதுல ஒரே ஒரு (முக்கியமான) கேள்வி, நமக்கு விதிக்கப்பட்ட கர்மாக்கள் என்னன்னுஎப்படித் தெரிஞ்சிக்கிறது? அதுக்கு திவா தனிப் பதிவு போடறதாச் சொல்லியிருக்கார்

எளிமையான உதாரணங்களுடன் கண்ணன் காட்டிய வழியை அருமையாக விளக்கியதிவா அவர்களுக்கு நன்றிகள் பல.

--கவிநயா


Thursday, December 11, 2008

படிகள் -1




எல்லா சப்ஜெக்ட்லேயும் இருக்கிறது போல ஞானவழியிலேயும் தனி அகராதி உண்டு. ஞானத்தை பத்தி பேசுற நூல்கள் எல்லாமே சில வார்த்தைகளை பயன்படுத்தும். படிக்கிறவங்களுக்கு அது முதல்லேயே தெரிஞ்சு இருக்கணும் என்பது எதிர்பார்ப்பு. தெரிவது புரிதலை சுலபமாக்கும். அது இல்லாமலே முடியுமான்னு பாக்கலாம்.

அதனால பிஜி (PG) பாய்ண்டை தனியா தரப்போகிறேன். வேணும்னா படிக்கலாம். இல்லைனா விட்டுடலாம். பெரிய பிரச்சினை ஒண்ணும் இல்லை.

சரி, ஞான வழிகள்ல என்ன படிகள்? ஏற்கெனவே பாத்தாச்சு. இருந்தாலும் இப்ப கொஞ்சம் விரிவா பாக்கலாம்.
நித்ய அநித்ய வஸ்து விவேகம் முதலாவது.

இந்த பிரபஞ்சத்திலே எது நிலையா இருக்கக்கூடியது எது அழிஞ்சு போகக்கூடியது என்பதை பத்திய அறிவு. ஒரு அழிஞ்சு போகக்கூடிய விஷயத்தை எவ்வளோ கஷ்டப்பட்டு சம்பாதிக்கலாம், அழிஞ்சு போகாததுக்கு எவ்வளோ கஷ்டப்பட்டலாம்ன்னு நாம முடிவு செய்யலாம் இல்லையா?

நிலையா இருக்கக்கூடிய ஆன்மா, அதோட நம்மை சம்பந்தப்படுத்துற அதை உணர வழிவகை செய்யக்கூடியவற்றை தேடறதும் சம்பாதிக்கிறதும் செய்கிறவங்க புத்திசாலிங்க. அது கொடுக்கிற சந்தோஷம் எப்பவும் இருக்கும். நிலையா இல்லாதவைகளை தேடி சம்பாதிச்சா அவை நிச்சயமா ஒரு நாள் அழியும். அது நமக்கு துக்கத்தை தரும். துக்கம் இல்லாமல் இருக்க நித்திய வஸ்துவைதான் தேடி சம்பாதிக்க வேண்டும்.

**** இதை த்ருக்கு த்ருஷ்ய விவேகம் ன்னும் சொல்வாங்க. அந்த பேர்ல ஒரு புத்தகமே இருக்கு. த்ருக்கு என்பதுக்கு பேர் கிடையாது. வடிவம் கிடையாது. எப்பவும் இருக்கும். அதாவது ப்ரம்மம். சத்தசித் ஆனந்தமா இருக்கிற ஆன்மா. த்ருஷ்யம் என்கிறது நாம் பாத்து பெயர் வெச்சு கூப்பிடக்கூடியவைகள்.***

இரண்டாவதா இகபர விராகம்.

இகம்? இந்த உலக வாழ்க்கை. பரம் - அடுத்த உலக வாழ்க்கை. அது சுவர்க்கமோ, நரகமோ, வேற ஏதோ....இந்த உலக சமாசாரங்களை சம்பாதிப்பதில் கஷ்டமும் அனுபவிப்பதும் தற்காலிகமாகவும் இருக்கு. ஆசை ஆசையா சேர்த்து வைக்கிறவங்க அதை அனுபவிக்கவும் கொடுத்து வெச்சு இருக்க வேண்டி இருக்கு. சேத்ததை பத்திரப்படுத்த வேற வேண்டி இருக்கு. களவு போயிடுமோன்னு பயம். ஒண்ணுமில்லாத ஆசாமி நிம்மதியா தூங்க பொருள் சேத்த ஆசாமிக்கு பல பிரச்சினைகளாள தூக்கம் வரதில்லை. அனுபவிப்போம் ன்னு நினைக்கிற ஆசாமி அனுபவிக்கக்கூடடிய காலம் வரப்ப காலனே வந்துறதும் உண்டு. அப்ப சேத்ததிலே ஒரு சின்ன கர்சீப்பாவது எடுத்து போக முடியுதா?

சரிப்பா நான் நிறைய நல்ல காரியம் செய்யறேன்! பூஜை, ஹோமம், யாகம் எல்லாம் செஞ்சு புண்ணியம் சம்பாதிக்கிறேன். யாகங்கள் செய்து தேவனாகிடறேன். அப்ப என்ன செய்வீங்க, அப்ப என்ன செய்வீங்கன்னு கேட்டா.....

சுவர்கத்திலே எல்லாமே நல்லா இருக்கும். மீமாம்சை படி சுவர்கத்தோட வரையரையே துக்கம் இல்லாத சுக அனுபவம், என்றும் அழியாதது, விரும்பியது கிடைக்கும். அப்படிப்பட்ட இடம்தான். ஆனா தேவலோகம் அப்படி இல்லியே.
அது நிரந்தரமும் இல்லை. செய்த கர்மாக்களுக்கு தகுந்தபடி அனுபவிச்சுட்டு திருப்பி இங்கேதான் வந்தாகணும்.
இந்திரனா இருந்தாக்கூட அசுரர்களால அப்பப்ப தொல்லை. ஓடறான் ஒளியறான். மஹரிஷிகள்கிட்ட அபராதம் பண்ணி, சாபம் வாங்கி, கஷ்டமும் பட்டதா படிக்கிறோமே! எங்கே காமம், கோபம் எல்லாம் இருக்கோ அங்க துக்கமும் இருக்கும். தேவர்களுக்கு அது எல்லாம் உண்டு.

சரி, நான் தேவலோகம் போகாம சுவர்க்கம் போறேன்னாலும் சுகம் அனுபவிச்சு முடிஞ்சு திருப்பி பூமிக்கு அனுப்பிடுவாங்க. ¨தந்தனத்தோம் என்று சொல்லியே...¨ அப்படின்னு திருப்பி இந்த வாழ்க்கை ஆரம்பிச்சுடும். இந்த உலக வாழ்க்கை இரும்பு விலங்குன்னா தேவலோக வாழ்க்கை பொன் விலங்கு என்கிறாங்க. இரும்பானாலும் தங்கமானாலும் விலங்கு விலங்குதானே. பெயரும் உருவமும் இருக்கிற எந்த ஜன்மமானாலும் அதில் துக்கம் இருக்கும்.

அதனால இந்த உலக வாழ்க்கை, மேல் உலக வாழ்க்கை இரண்டிலுமே பற்றை நீக்க வேண்டியதுதான். என் உறவினர் ஒத்தர். நாக்கு சபலம் அதிகம். ஆனா வயிறு ஒத்துழைக்காது. இவரோ நல்ல விருந்துனா சபலப்பட்டுகொண்டு நல்லா ஒரு பிடி பிடிப்பார். ஜீரண சக்தி இல்லாததாலே கொஞ்ச நேரத்தில வயித்து வலி வந்து, வாந்தி எடுத்துதான் சரியாகும். ஆசை ஆசையா சாப்பிட்ட லட்டு வடையெல்லாம் அப்படியே வந்துடும். அதை இப்ப பாத்தா ஆசையா வரும்? வெறுத்து ஒதுக்குவார் இல்லியா? அது போல திருப்பி திருப்பி நாம் அனுபவிச்ச இந்த இரண்டு லோகங்கள் மேல இருக்கிற பற்றையும் விடணும்.

**** கிடைக்கிறது யோகம். கிடைச்சதை அனுபவிக்கிறது க்ஷேமம். ரெண்டும் வேற வேற. நிறைய லட்டு கிடைக்கலாம். அது யோகம். அதை சாப்பிட சக்கரை வியாதி இல்லாம இருக்கணுமே. அல்லது களவு போகாம இருக்கணும். இப்படி தடைகளை தாண்டி அனுபவிச்சா க்ஷேமம் இருக்குன்னு சொல்லலாம்!****

Wednesday, December 10, 2008

வகை வகையா புத்தி...



சிலர் சொல்லிதர சொல்லித்தர பிடிச்சுப்பாங்க. சிலருக்கு பல தரம் விளக்கமா சொல்லித்தர பிடிச்சுப்பாங்க. சிலருக்கு ஒரு தரம் புரிஞ்சு போச்சுனா அப்படியே ஞாபகம் இருக்கும். சிலர் மறந்து போவாங்க. இதை எல்லாம் நம்ம முன்னோர்கள் க்ளாசிபை பண்ணி வெச்சு இருக்காங்க. நமக்கு அது இப்ப அத்தியாவசியம் இல்லைனாலும் சுவாரசியமானதால அத கொஞ்சம் பாக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மண் புத்தி: மண் சுவத்திலே ஆணி ஆடிக்கிறதும் அதை பிடுங்குகிறதும் ரொம்ப சுலபமா இருக்காப்போலே குருகிட்ட கேட்டது உடனே புரிஞ்சும் உடனே மறந்தும் போகிறது மண் புத்தி.

பச்சை மரத்தாணி போல் ன்னு சொல்லுவாங்க. அடிச்சு இறக்குகிறதும் சுலபம். அப்படியே கப்புனு பிடிச்சுக்கும். இப்படி கேட்டதை சுலபமா மனசுல வெச்சு அப்புறம் அதைப்பத்தி அதுக்கு மேலே ஒண்ணும் தெரியாம இருக்கறது;
பட்ட மரத்தில ஆணி இறங்குவது கொஞ்சம் கஷ்டம். அதே போல சுலபமா கழண்டு வந்துடும். இது போல கஷ்டப்பட்டுதான் உள் வாங்க முடியும். நினைவு வெச்சுகிறதும் கஷ்டம், மறந்து போயிடும்.
இது ரெண்டும் தாரு புத்தி.

பாறாங்கல் உடைக்க ரெண்டு மூணு துளை போட்டு தட்ட அப்படியே விண்டுடும். அது போல சில ஹிண்ட்ஸ் ஆலேயே விஷயத்தை புரிஞ்சுகிறவங்க ஒரு ரகம். இது சிலா புத்தி.

மூங்கில் கணுவில ஒரு பக்கம் உளி வெச்சு அடிச்சா இரண்டு பக்கமும் பிளந்துக்கும். இது போல ஒரு விஷயத்தை கேட்டா முன் பின் விஷயங்களையும் தெரிந்து கொள்கிறது வேணு புத்தி. (வேணு = மூங்கில். வேணுகோபாலன் நினைவு வருமே!)

ஒரு சொட்டு எண்ணையை தண்ணில ஊற்றும் போது சட்டுனு முழுக்கவே பரவுகிறது போல குரு சுருக்கமா சொல்கிற விஷயத்தை சட்டுன்னு முழுமையா பரவலா தெரிந்து கொள்ள முடிகிறது சிலருக்கு. இது தைல புத்தி.
(இந்த காலத்திலே எண்ணை தேய்ச்சு குளிக்கிறது குறைஞ்சு போச்சே! சரி, தண்ணில ஒரு துளி டிடர்ஜென்ட் விழுந்தாப்போலன்னு யோசிங்க!)

இதெல்லாம் ஏன் இங்க இழுக்கறேன்னா ...

நான் இந்த விஷயங்கள் படிச்ச புத்தகத்தில சாதாரணமா ஒண்ணும் புரியாதவங்களுக்கு கூட புரிகிறாப்பல சொல்லித்தரேன்னு புத்தக ஆசிரியர் சொல்லி இருக்கார். அதான். அவர் சொல்லிக்கொடுக்கிற அளவு சுலபமா ஆக்க முடியாட்டாலும் ஓரளவு சுலபமா சொல்லித்தர முயற்சி செய்யறேன்.

இந்த ஞான வழியை முதல்ல கொஞ்சம் புரிஞ்சுக்கணும். அப்புறம் சரி, தப்பு; ஒத்துக்கலாம், வேண்டாம்னு ஆராய்ச்சில இறங்கலாம். ¨செய்லிங் வித் த ஐடியா¨ ன்னு ஆங்கிலத்தில சொல்கிறாப்போல இருந்தாதான் சொல்ல வருகிறது புரியும். ஆரம்பத்திலேயே மனத்தடை இருந்தா புரிகிறது கொஞ்சம் கஷ்டம்தான்.


Tuesday, December 9, 2008

பரிட்சை விடைத்தாள் -4



ஒரு சின்ன ஸர்ப்ரைஸ் ஆக நம்ம கேஆர்எஸ் மறைஞ்சு இருந்து படிச்சுட்டு இப்ப வெளிப்படையா தேர்வு எழுதி இருக்கார். அவரோட பார்வை கொஞ்சம் வித்தியாசமா தோணினாலும்.... ம்ம்ம் படிங்க! படிச்சுட்டு சொல்லுங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திவா சாரின் கண்ணன் காட்டும் கர்ம வழி என்னும் தொடர் பதிவுகள் இட்டிருந்தார். அதை மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? என்பது போல் பின்னூட்டம் இடாமல், நிஷ் காம்யமாகப் படித்து வந்ததில் அடியேனும் ஒருவன்! :)
அந்தத் தொடர் பற்றி இப்போது தேர்வு வைத்துள்ளார் திவா சார்!
பாடம் மறைந்திருந்து கேட்டாலும், பரீட்சை நேர்முகமாகத் தானே எழுத வேண்டும்? இதோ அடியேனின் விடைத்தாள்! :)
***********************************************************************

கர்மம் என்றால் செயல்! எதுக்குச் செயல் செய்யணும்?
ஒன்றை விரும்புகிறோம் (காமம்)! அதை அடையச் செயல் செய்தாகணும்!
இப்படி "காமம்-கர்மம்" என்றே இந்தச் சுழல் இருக்கிறது!

எப்பமே இப்படித் தானா? என்று கேட்டால், அதற்குத் தான் வெறுமனே "கர்மம்" என்னாது,
"கர்ம-யோகம்" என்று கர்மத்தோடு, யோகத்தையும் சேர்த்துக் கொள்கிறான்!
தேர்த்தட்டு மொழியிலே சொல்வது என்ன?
* யோகம் = ஒருங்கிணைதல்
* கர்மம் = செயல்
செய்யும் செயலால் ஒருங்கிணைதல் கர்ம யோகம்!

* ஞானமா? கர்மமா?
* துறக்க வேண்டுமா? செய்ய வேண்டுமா?
துறவாமல் செய்து கொண்டிருக்கும் செயலில், ஞானம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து கொள்ளும்!
ஞானம் கலந்து கொள்ள, கலந்து கொள்ள...
செயலைத் துறவாமல், செயலின் நோக்கத்துக்குத் தடையாக இருப்பதை மட்டும் ஒவ்வொன்றாகத் துறக்கத் தொடங்கி விடுவோம்!
***********************************************************************

ஒரு செயல் செய்யும் போது கூடவே பல செயல்கள் எழும்! தனித்த செயல் என்ற ஒன்றுமே கிடையாது!
சமைக்க வேண்டும் என்றால் நெருப்புச் செயல் வேண்டும், நீர்ச் செயல் வேண்டும், பல அங்கங்களை உள்ளே கொட்டவும் வேண்டும்!
ஆனால் நோக்கம் என்னவோ உணவைச் சமைப்பது மட்டுமே!
இந்த எண்ணம் இருந்து கொண்டே இருந்தால், நெருப்பு, நீர் இதையெல்லாம் உணவுக்கு மட்டுமே பயன்படுத்துவோமே தவிர,
அதை வைத்துக் கொண்டு வேறு ஏதும் கொளுத்தவோ, இல்லை நீரை வைத்து விளையாடவோ செஞ்சி திசை திரும்ப மாட்டோம்!

அதே போல் நாம் செய்யும் கர்மங்களின் நோக்கம் ஈஸ்வர ப்ரீதி என்னும் உணவு/பிரசாதம்!
இறைவனின் திருவுள்ள உகப்பு என்பது தான் நோக்கம் என்பதை அறிந்து கொண்டால்...
அதை நோக்கிச் செல்லும் போது வரும் வேறு செயல்களில் சிதறிப் போக மாட்டோம்!
பல செயல்களின் ஒருங்கிணைப்பில் இறுதியில் அந்த உணவு/பிரசாதம் கிட்டும்!

திவா சார், இதைச் சில இடங்களில் பிராக்டிகலாகக் கொண்டு சென்றது பிடித்தது! வேளுக்குடி சுவாமிகள் எடுத்துக்காட்டுகள், தமிழில் வெண்பா என்று லைட்டாகவே கொண்டு சென்றார்!
* திருடர்கள் 4 பேர். உதவியாளர்கள்= இந்திரியம், மனசு, புத்தி! தலைவன்=காமம்!
* இந்திரியங்களை கர்ம யோகத்திலே திசை திருப்பி விடலாம்.
* ரஜோ குணத்தை சாப்பாட்டினால் மாற்றலாம்.
இப்படி எல்லாம் செய்தால் உதவியாளர்கள் காலி! அவர்கள் போன பின் தலைவனும் காலி!
***********************************************************************

ஆக,
* காமம் அற்ற கர்மமா?
* விருப்பு/வெறுப்பு அற்ற செயல்களா?
இல்லை!

* காமத்தோடு கூடிய கர்மம்!
* விருப்புடன் கூடிய செயல்!

அச்சோ! நிஷ்காம்ய கர்மம் என்று கீதை சொல்கிறதே!
அதைத் தானே திவா சார், இம்புட்டு கஷ்டப்பட்டு இருபது பதிவுகளா சொல்லிட்டு வந்தாரு! அத்தனையும் படிச்சிட்டு, படிச்சது ராமாயணம், இடிச்சது பெருமாள் கோயில்-ன்னா நீங்க நினைக்கறீங்க? ஹிஹி! :)

சமைக்கும் போது, நீர்/நெருப்பின் மேல் அதீதமாக ஈடுபடாமல், எப்படிச் சமைக்க வேண்டிய உணவில் மட்டும் நம் கவனம் இருந்ததோ, அதே போல!
பகவத் ப்ரீதி-க்குச் செய்வோம் என்ற எண்ணம் மட்டும் இருக்கட்டும்! அது தான் நோக்கம் என்று அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொண்டு உன் கர்மங்களைச் செய்!

* இறைவனின் மேல் காமம் செலுத்திக் கர்மங்களைச் செய்!
* மற்ற உடன் வரும் செயல்களின் மேல் காமம் செலுத்திக் கர்மங்களைச் செய்யாதே!

யக்ஞார்த்தாத் கர்மணோ அந்யத்ர| லோகோயாம் கர்ம பந்தன||
தத் அர்த்தம் கர்ம கெளந்தேயா| முக்த சங்க சமாசர|| 3.9

மற்றைய காமங்கள் வேண்டாம்! மாதவன் காமங்கள் வேண்டும்!
"மற்றை நம் காமங்கள்", "மாற்று" ஏல்-ஓர் எம்பாவாய்!

Monday, December 8, 2008

பரிட்சை விடைத்தாள் -3




இது மௌலியோட பார்வை. தொடாத ஒரு விஷயத்தை தொட்டு இருக்கார். அது பத்தி பின்னால் எழுதுவேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கர்மா என்று ஆரம்பித்து நித்ய-நைமித்திக கர்மாக்களை விளக்கி நிஷ்காம்ய கர்மாவிற்கு வந்து கீதை ஸ்லோகங்களை பிரிச்சு மேஞ்சுட்டார் திவாண்ணா. ஆரம்பம் முதல் அழகிய மணவாளரது வெண்பாக்களையும் அளித்து, மேலும், பையர், தனது மறுபாதி, வேளுக்குடியார்ன்னு ஒரு குருப்பையே துணைக்கு வைத்துக் கொண்டு பதிவுகளை எழுதியது அழகு. நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. கீழே வருவது எனது சொந்த புரிதல்கள். தவறுகள் இருப்பின் அது எனது புரிதலால் மட்டுமே. திவாண்ணா மற்றும் படிப்பவர்கள் பிழைதிருத்தினால் மகிழ்வேன்.



யத: ப்ரவ்ருத்திர் பூதானாம்

யேன ஸர்வமிதம் ததம்

ஸ்வகர்மணா தமப்யர்ச்ய

ஸித்தம் விந்ததி மானவ ॥18.46॥



அதாவது அவரவர் ஸ்வகர்மாவை அடிப்படையாகக் கொண்டு கர்மங்கள் செய்தால் அதுவே தனக்குப் ப்ரீதியாகிறது என்று கூறியிருக்கிறான் கண்ணன். இந்த கர்மாவின் பலனையும் ஈஸ்வர-ப்ரீதியாக செய்யவேண்டும். அது அவ்வளவு சுலபமானதல்ல. கர்மாக்களால் புண்ணியம் அல்லது நன்மை ஏற்படுவதில்லை. ஆனால் பற்றினைத் துறந்து கர்மாவைச் செய்வதால்தான் நன்மை கிடைக்கிறது. சரி, விதிக்கப்பட்ட கர்மாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தொடர்வதால் என்ன நடக்கும்?, சிரத்தை உருவாகும், அதன் மூலம் புலன்களை அடக்கி முடிவாக கர்மா நம்மை பற்றற்ற நிலைக்குக் கொண்டு செல்லும்.



கல்பம், நிருக்தம், சந்தம் வியாகரணம் போன்ற எல்லா அங்கங்ளையும் கொண்ட வேதத்தை அத்யயனம் செய்தாலும், பரமாத்மாவை அடைதலைக் குறிக்கோளாக கொள்ளாது, லெளகீக சுகத்தில் ஒருவன் இச்சை கொண்டால், அவனது அந்திம-காலத்தில் வேதம் இறகு முளைத்த பறவை போல அவனை விட்டு விலகிச் சென்றுவிடும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆக, கர்மாவைச் செய்தல் மட்டும் பெரிதல்ல, பண்ணும் கர்மா, கர்மாவின் பலன் போன்ற எல்லாமும் ஈஸ்வரனை நோக்கியே இருக்க வேண்டும்.



சரி, கர்மா என்பதில் எல்லாம் அடக்கம், எது நல்ல கர்மா, எது தவறானது என்று எப்படி அறிவது?, அதற்கும் கண்ணன் பதில் சொல்லியிருக்கிறான். எது செய்யக்கூடிய கர்மா, எது செய்யக்கூடாதது என்பதை அறிந்து கொள்ள சாஸ்திரங்களே பிரமாணம் என்கிறான்.





ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வச:

அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே॥3.27॥



ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணநி ஸர்வச

ய: பச்யதி ததாத்மானம் அகர்த்தாரம் ஸ பச்யதி ॥13.29॥



என்பதாக கீதையில் மூன்று வகையான கர்மங்களை பற்றி கூறியிருக்கிறான் கண்ணன். அவை, க்ரியமாண கர்மா (நிகழ்காலத்தில் செய்வது), ஸஞ்சித கர்மா, ப்ராராப்த கர்மா எனப்படுகிறது.



அதாவது சாஸ்திரம் சொன்ன விதிமுறைகளின்படி செய்வது சுபமான க்ரியமாண கர்மம். அதே சமயம் காம-க்ரோத-லோப-ஆஸக்தியால் (குருட்டுப் பற்று) தூண்டப்பட்டு சாஸ்திரம் கூடாது என்று கூறும் செயல்களைச் செய்வது அசுப க்ரியமாண கர்மா.
இதே போல, அநேக மனிதப் பிறவிகளில் எந்த கர்மாக்கள் பற்றிக் கொண்டிருக்கிறதோ அவை சஞ்சித கர்மா என்று கூறக் கேட்டிருக்கிறேன். இந்த சஞ்சித கர்மாவின் முடிவாக பயன் மற்றும் சம்ஸ்காரம் வருகிறது.
இந்த சஞ்சித கர்மாவிலிருந்தே, இக்கர்மாவின் பயனே ப்ராரப்தம் என்று எங்கோ படித்த நினைவு. அது பற்றிய தொடர்பினை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாமோ என்று நினைக்கிறேன். ஒரு வேளை தனித்தனி பதிவுகளைப் படித்ததில், எனக்கு அந்த புரிதலுக்கு வரவில்லையோ?. திவா அண்ணா வழிகாட்டினாலும் நான் சேர வேண்டிய இடத்திற்கு இன்னும் தொலைவு அதிகம் என்றே தோன்றுகிறது. பராம்பிகை அருளட்டும்.

Friday, December 5, 2008

பரிட்சை விடைத்தாள்-2



கீதா அக்கா முந்திகிட்டு முதல் விடைத்தாளை அனுப்பினாங்களா! இப்ப ஜீவா ரெண்டாவது. கீதா அக்கா நான் எழுதற ஞான வழிக்கு முன்னுரை போல எழுதி இருந்தாங்க. ஜீவா டு தெ பாய்ன்ட் கர்ம யோகத்தில அவரோட புரிதலை எழுதறாரு. போனசா ரெண்டு வெண்பா வேற!என்சாய்!

~~~~~~~~~~~~~~~~~~~~
கண்ணன் என்னதான் சொல்லறாரு கர்ம யோகம் என்று?
ஏதோ நமக்குப் புரிந்தது இது:

செயலா, துறவா? செயல்களைத் துறந்து, தியானித்து,
சச்சிதானந்த சொரூபத்தினைக் காண விழைவது ஞான வழி.

செயல்களைத் துறவாமல், ஞானத்திற்கு தயார் செய்து கொள்வது கர்ம வழி.
(தயார் செய்தாப் போதும், ஞானம், பச்சக்குன்னு வந்து பற்றிக்கும்!)
செயல்களை செய்யும்போதோ, நம் விருப்பு வெறுப்புகளென்னும் வண்ணக் கண்ணாடிகளால்,
இவ்வுலகத்தை பார்க்க நேரிடுகிறது. இவ்விருப்பு, வெறுப்புகள் தான்
ஞானத்தினை அடைவதில் பெரும் தடைக் கற்கள் என்பதனால், அவை விலக்க வேண்டியவை.

விருப்பு, வெறுப்புகளில் இருந்து விடுபடுவது எப்படி?
செயலில் எப்படிப்பட்ட பலன் ஏற்படினும், அதை ஒரே மனநிலையுடன் எதிர்கொள்வதால்.
இந்த சமச்சீரான மனநிலைக்குப் பக்குவப்படுத்துவது தான் கர்ம யோகம்.

கர்ம யோகம்:
செயலைச் செய். ஆனால், எப்படிப்பட்ட பலன் ஏற்பட்டாலும், அதை இறைவனின் பிரசாதமாக
நன்றியுடன் ஏற்றுக்கொள்வது கர்மயோகம்.
மனதை அமைதியுறச் செய்து, ஞானத்தை ஏற்றுக் கொள்வதற்கு, அது தயார் செய்திடும்.

செய்ய வேண்டிய செயலை துறப்பதால் துறிவியாக முடியாது. துறவு என்னும் நிலை தானாகக்
கனிய வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம், செய்வன திருந்தச் செய்ய, அதுவே யாகம்.

எல்லாம், இயற்கையால், முக்குணங்களின் தூண்டுதலால், நடப்பவை.
ஆகவே, தன்னால் நடந்தது என்ற ஆணவத்தினை அழித்தொழி.

எல்லாமும் என்னால் எனவே அகந்தையே
இல்லாமல் சும்மா இருக்கவே - எல்லாம்
உலகினில் தானாய் நடந்திட கர்மமும்
செய்வாய் மனமே நிதம்.

இராஜச குணத்தால், தூண்டப்படும் ஆசையானது, சித்தம், மனம், புத்தி
- இவைதனை மூடி மறைத்து, உயர் ஞானம் வந்தடையும் வழி தனை மறிக்கும்.

உடலை விட, புலன்களும், புலன்களை விட மனமும், மனத்தை விட புத்தியும்,
புத்தியை விட ஆன்மாவும் உயர்ந்தது. ஆகவே அந்த ஆன்மாவை அறிவதே குறிக்கோள்.

அந்த உயரிய குறிக்கோளை அடைய, ஆசையை ஒழித்து, பலன்களில் மேல் பற்று வைக்காமல்,
பிரசாதமாக பலன்களை ஏற்று, பகவானைப் போற்று.

பிரசாதம் என்றே பலனை நினைத்தால்
வருமோ இடரும்? கருமம் புரிகையில்,
நானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்
தானடை சிக்கெனத் தான்.


Wednesday, December 3, 2008

ராஜ யோகம்.



ஹடயோகம் அல்லது ராஜ யோகம் என்கிறது மூன்றாம் வழி என்று முன்னமேயே பாத்தோம். முன்னமேயே அதைப்பத்தி ஒரு ஐடியா கொடுத்தாச்சு. அதைப்பத்தி இப்ப விரிவா எழுதப்போறது இல்லை.

முதலாவது இது ஒரு குருகிட்ட இருந்து நேரடியா பழக வேண்டிய சமாசாரம். இப்படி சரியா அமையாம போனா என்ன ஆகும்ன்னு முன்னேயே பாத்தோம். இப்படி விபரீதமா போய் விடக்கூடாது.
இரண்டாவதா இதில எனக்கு குறிப்பிடத்தக்க பரிச்சயம் கிடையாது. தெரியாத விஷயத்தில புகுந்து புறப்பட நான் விரும்பலை. எளிதா ஏதேனும் கிடைக்குமோன்னு பதஞ்சலி யோக சூத்திரத்தை புரட்டிப்பாத்தா தலையை சுத்துது. கொஞ்சம் சாம்பிள் பாக்கிறீங்களா?

முதல் இரண்டு சூத்திரங்கள்

** சித்தத்தின் விருத்தியை (வளர்ச்சியை) அடக்குதல் யோகம்.
அப்படி செய்யும் போது சைதன்யமான (இயங்கு சக்தியாக உள்ள) புருஷனுக்கு தன் சொந்த வடிவில் இருப்பு ஏற்படுகிறது.**

கண்ணீர் மல்க சில பேர் எனக்கு நன்றி சொல்கிறது காதுல விழுது. :-))

ஊன்றி படிக்காம ஒண்ணும் புரிஞ்சுக்க முடியாது. அப்பக்கூட ஒரு அனுபவியோட உதவி தேவைப்படும். அதனால பேசாம இத விட்டுட்டு அடுத்ததுக்கு போயிடலாம். மேலும் இதில வரக்கூடிய சில விஷயங்கள் ஞான யோகத்தில கூட வரும். ஒரு வேளை ஞான யோகம் முடிச்ச பிறகு பதஞ்சலி யோகம் சுலபமா புரியுமோ என்னவோ.

பொன் நிலம் பெண் இவைகள்ல ஆசை வைத்தவங்களோ வைக்காதவங்களோ அவங்களோட உள்ளே இருக்கிறது ஒரே சச்சிதானந்த சொரூபமான ப்ரம்மமே. அது நம் மனத்தடைகளை அகற்றி ஞானம் ஒளிர உதவட்டும் என்று பிரார்த்தனை செய்து ஆரம்பிக்கிறோம்...


Tuesday, December 2, 2008

ஞானவழி -1



பொன், நிலம், பெண் இவைகள்ல ஆசை வைத்தவங்களோ, வைக்காதவங்களோ அவங்களோட உள்ளே இருக்கிறது ஒரே சச்சிதானந்த சொரூபமான ப்ரம்மமே. அது நம் மனத்தடைகளை அகற்றி ஞானம் ஒளிர உதவட்டும் என்று பிரார்த்தனை செய்து ஆரம்பிக்கிறோம்...

ஞான யோகம் ன்னாலே நமக்கு இதெல்லாம் சரிப்படாதுன்னு ஒரு மனத்தடை வர வாய்ப்பு இருக்கு. கொஞ்சம் கூர்ந்து கவனிச்சு யோசிக்கணும்னாலும் போதிய உழைப்பு இருந்தா யாருமே புரிஞ்சுக்கலாம்.

ஞானம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள்லே முதல்ல இந்த புத்தகத்தை படிச்சு பயன் பெறக்கூடியவங்க யார் ன்னு சொல்லிடுவாங்க. சரியான முன் தயாரிப்பு இல்லாத போய் யாரும் குழம்பிவிடக்கூடாதுன்னுதான் அப்படி சொல்கிறது.

ஞானத்துக்கு யார் சரியான அதிகாரி?

யாருக்கு வைராக்கியம் வந்தாச்சோ அவர் ஞானம் பெற சரியான நபர். வைராக்கியம்னா உறுதி இல்லை. பலர் தப்பா இப்படி நினைக்கிறாங்க. வைராக்கியம்னா பற்று இல்லாம இருக்கிறது. அட! இது நமக்கு பழக்கமானதுதானே என்கிறீங்களா ? ஆமாம் கர்ம யோகத்தில திருப்பி திருப்பி பாத்த அதே பற்றின்மை. அப்ப கர்ம யோகத்தில தேரினவங்க ஞானத்துக்கு அதிகாரிதானே? அட சரியா சொல்லிட்டீங்க! பண்ணுருட்டி வழியா சென்னை போற பாதை திண்டிவனத்தில பாண்டி சென்னை பாதையோட சேருகிறது போல, கர்ம வழியானது ஞான வழில போய் சேந்துடும்.

மனிதர்கள்ல பல தரப்பட்டவங்க இருக்காங்க இல்லையா? நினைவாற்றலும் புரிஞ்சுகிற திறனும் வேறுபடும். ஆனா இதால ஒத்தரை உயர்வாகவோ, ஒத்தரை தாழ்வாகவோ நினைக்கக்கூடாது.
ஆதி சங்கரருக்கு சிஷ்யர்கள்ல ஒத்தர். மத்தவங்களுக்கு இவர் குறிச்சு கொஞ்சம் இளப்பம். மத்தவங்க பாடம் எடுக்கச்ச சந்தேகம் எல்லாம் கேட்டு பதில் வந்த பின் ஆஹா ஆஹான்னு கொண்டாடுவாங்க. இவரோ சாதுவா வாயே திறக்காம உக்காந்து இருப்பார். இதனால இவருக்கு புத்தி அவ்வளவு இல்லைன்னு மத்தவங்களுக்கு நினைப்பு. சங்கரருக்கு இது தெரியாம இருக்குமா. நம்மகிட்ட ஆசார்யன்ன்னு வந்து சேந்த பசங்களுக்கு வித்யா கர்வம் வரக்கூடாதே, இதை சரி செய்யணும்னு நினைச்சார். ஒரு நாள் பாடம் எடுக்க தயாராயிட்டார். ஆனா இந்த சாது சிஷ்யரை காணலை. அவர் வந்த பிறகு பாடம் ஆரம்பிக்கலாம்ன்னு சங்கரர் சொன்னார். எல்லாரும் இவனுக்கு போய் தாமதிக்கணுமான்னு நினைச்சாங்க. எங்கேடா போன்னான்னு எல்லாரும் யோசிச்சுகிட்டு இருக்கிறப்ப சாது சிஷ்யர் பாட்டு பாடிகிட்டே வந்து சேர்ந்தார். பாட்டை கேட்டவங்க திகைச்சுப்போயிட்டாங்க. ஏன்னா அது ரொம்ப கடினமான நடையில - தோடகம் என்கிற அமைப்பில அமைஞ்சது. அப்ப புதுசா கவனம் செஞ்சு குதிச்சுண்டே பாடினார். அன்னிலிருந்து அவரை தோடகாச்சாரியார் ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. இது எப்படி சாத்தியமாச்சு? குருவருள் இருந்தா எல்லாமே சாத்தியம்தான்.

சிலர் சொல்லிதர சொல்லித்தர பிடிச்சுப்பாங்க. சிலருக்கு பல தரம் விளக்கமா சொல்லித்தர பிடிச்சுப்பாங்க. சிலருக்கு ஒரு தரம் புரிஞ்சு போச்சுனா அப்படியே ஞாபகம் இருக்கும். சிலர் மறந்து போவாங்க. இதை எல்லாம் நம்ம முன்னோர்கள் க்ளாசிபை பண்ணி வெச்சு இருக்காங்க. நமக்கு அது இப்ப அத்தியாவசியம் இல்லைனாலும் சுவாரசியமானதால அத கொஞ்சம் பாக்கலாம்.


பரிட்சை விடைத்தாள் -1



பரிட்சை கொடுப்பாங்கனு தெரிஞ்சிருந்தால் படிச்சிருக்கவே மாட்டோம்னு எல்லாரும் நினைக்கிறாங்க. திவா கேள்வி கேட்டு பதில் எழுதச் சொல்லிப் பரிட்சை கொடுத்துட்டு மார்க்கை அவருக்குப் போட்டுக்கப் போறார். கொடுமைடா கண்ணா இது! நல்லவேளையா ரிவிஷனுக்கு நேரம் இருந்தது! 500 வரிகளுக்குள்னு வேறே! முடியற வேலையா இது? ஈஸ்வரோ ரக்ஷது!:)))))
*************************************************************************************

"பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி!
ததஹம் பக்த்ய்பஹ்ருத மஸ்நாமி ப்ரயதாத்மந:"

இலையோ, பூவோ, பழமோ அல்லது நீரோ எதாயிருந்தாலும் அதைப் பக்தியுடனும், ஆத்மார்த்தமாயும் கொடுத்தால் அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்கின்றான் கண்ணன். கர்மயோகத்திலே கண்ணன் அர்ஜுனன் கிட்டே உன்னோட ஸ்வதர்மம் என்னமோ அதைப் பண்ணுனு சொல்றான். அதே சமயம் எந்தக் காரியமும் பண்ணாமல் தியான யோகம் செய்யுமாறும் சொல்றான். பலருக்கும் குழப்பும் விஷயம் இது தான். ஒரு பக்கம் வேலை செய், இன்னொரு பக்கம் வேலை செய்யாதே! சும்மா இரு!

தட்சிணாமூர்த்தி சின்முத்திரை காட்டிட்டுச் சும்மாத் தான் இருக்கார். அவருக்கு 4 சிஷ்யர்கள். 4 பேரும் ஆனந்தம் பொங்க அவர் உபதேசம் பண்ணிட்டார்னு சொல்றாங்க. அது எப்படி?? அதுதான் இங்கே சிந்திக்கவேண்டியது. உள்முகமாய்த் தன்னை அறிதல். தன்னை அறிந்ததால் ஆலமரத்தடியில் அமர்ந்து சின்முத்திரை காட்ட முடிகின்றது. பின்னர் ஆனந்தக் கூத்தும் ஆட முடிந்தது. அட்டஹாசச் சிரிப்போடு திரிபுரங்களையும் சம்ஹாரம் செய்ய முடிந்தது. இது தான் இங்கே இவரின் கர்மா. லோக க்ஷேமத்துக்காகச் செய்யும் கர்மாக்கள். செய்தே ஆகவேண்டும். அழிக்கவேண்டியவற்றை அழிக்கவேண்டிய நேரத்தில் அழித்தே ஆகவேண்டும். ஆனால் வெளியே பார்த்தோமானால் இப்படி எல்லாம் ஆடிப் பாடிக் கூத்தடித்துக் கொண்டு உள்ளே அமைதிப் பெருவெளி. இது தான் கர்மயோகத்திலே மறைமுகமாய்ச் சுட்டிக் காட்டப் பட்டிருப்பதாய் எனக்குப் புரிந்தது. ஓயாமல் சலிக்கும் மனத்திடம் இருந்து விடுதலை பெறவேண்டும். ஆனால் அது முடியாதல்லவா? ஆகவே மனதை அடக்கவேண்டும். சும்மா வெளியே பற்றில்லாத மாதிரி காட்டிக் கொண்டு உள்ளுக்குள்ளே மனம் சஞ்சலம் அடையக் கூடாது. மனம் நிர்மலமாய் இருந்தால் மட்டும் போதாது. அலை பாயாமல் அடங்கியும் இருக்கவேண்டும்.

இங்கே உதாரணத்திற்கு ஜனக மகாராஜாவை எடுத்துக் கொள்கின்றேன். அவர் அரசனாகவும் இருந்து கொண்டு உலக நன்மைக்காகவும் உழைத்துக் கொண்டு அதே சமயம் எப்படி ஒரு ஸ்திதப் பிரக்ஞனாய், ஒரு பிரம்ம ரிஷியாகவும் இருந்தாரோ அவ்வாறே இருக்கவேண்டும். அதற்குச் சிந்தை சுத்தம் ஆகவேண்டும். நமக்கு அதற்கென விதித்திருக்கும் சில கடமைகளைத் தவறாமல் பின்பற்றவேண்டும். முதலில் கடமைக்காக ஆரம்பிக்கும் இந்தக் காரியங்களில் நாள் ஆக, ஆக ஈடுபாடு பிறந்து பின் முழு மனதோடு அதில் ஈடுபடுவோம் இல்லையா? அம்மாதிரியே இறை வழிபாட்டையும் ஆரம்பித்து வந்தால் நாள் ஆக ஆக முழு ஈடுபாடு வந்து நம் மனம் அதைத் தவிர வேறொன்றை நினையாமல் இருக்கும்.

சிந்தை சுத்தம் ஆனதும் மனம் ஒருமுகப் படும். உள்முகத் தியானமும் கை கூடும். அதுவரையில் உள்மனக் கூச்சல் இருக்கும் வரையில் என்ன முயன்றாலும் முடியாது. இவ்வாறு மனம் அமைதி அடைந்த பின்னரும் நமக்கென்று விதித்த கடமைகளை நாம் விடாமல் செய்து கொண்டிருக்கலாம். அதில் நமக்கு எந்த விருப்பு, வெறுப்பும் இருக்காது. கசாப்புக் கடைக்காரனாக இருந்தாலும் அவனும் ஒரு பிரம்ம ரிஷியே எனப் புரிந்து கொண்ட கொங்கண சித்தரைப் போல. வெளியே கசாப்புக் கடையில் ஆடுகளை வெட்டினாலும் அவன் ஒரு பிரம்ம ரிஷி என்பதைப் புரிந்து கொண்டதைப் போல. அதற்கு ஆரம்பமே பக்தி யோகம். பக்தியோகத்தில் ஆரம்பித்து இடைவிடாமல் பக்தி செய்து வந்தால், பின் நம் கர்மாக்களைச் செய்து கர்மயோகத்தையும் அடைந்து பின் ஞானத்தை அடைய முடியும்.

இங்கே யோகம் என்பது தினமும் செய்யும் ஆசனங்கள் இல்லை. யோகத்தில் ஆசனங்கள் செய்வது ஒரு பகுதியே. உண்மையான யோக நிலையே வேறு. அதில் மேல் நிலையை அடைய இதுவும் ஒரு படியே.

++++++++++++++++++++++++++++

வீட்டுக்கு உள்ளும் வெளியும் தண்ணீர், ஆர்காட், இணைய பிரச்சினைகள் இவற்றுக்கு நடுவிலும் நான் பாஸ் பண்ண தேர்வு எழுதிய கீதா அக்காவுக்கு நன்றி!