Pages

Thursday, February 28, 2013

கடமை

 
கடமை என்று ஒன்று ஒவ்வொருவருக்குமே இருக்கிறது. ஆனால் அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கற்பனை செய்து கொண்டிருகிறார்கள். கடமை என்றாலே நினைவுக்கு வருவது பகவத் கீதைதான். கடமையை செய்வதே உன் உரிமை. பலனில் இல்லை என்று சொன்னதை, கடமையை செய்; பலனை எதிர்பாராதே என்று பலரும் தவறாக ப்ரசாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். கிடக்கட்டும். இங்கே பரமாத்மா க்ருஷ்ணன் சொன்னது அவரவருக்கான சுய தர்மம் சார்ந்த கடமையைத்தான். நாமோ காசு சம்பாதிக்க ஒரு வழியைத் தேடிக்கொண்டு அதை கடமையாகக் கருதி "என் கடமையை நாம் ஒழுங்காக செய்து கொண்டு இருக்கிறேன்" என்று மார் தட்டிக்கொண்டு இருக்கிறோம். இப்படி இருப்பது அவரவர் இஷ்டம். இருக்கலாம், ஆனால் க்ருஷ்ணனை இதுக்கு இழுக்க வேண்டாம். சுய தர்மம் பற்றி சொல்லும் போது அதன் அவசியத்தை வலுவாகவே சொல்லி இருக்கிறான். பர தர்மம் பயம் தருவது என்றே சொல்லுகிறான். இன்று பலருடைய பிரச்சினைகளும் அவர் கடமையான பித்ரு காரியத்தை ஒழுங்காக செய்யாமல் இருப்பதில் ஆரம்பிக்கிறது. அடுத்து குல தெய்வ வழிபாடு நின்று போனது.....

ஒவ்வொருவருக்குமே தன் கடமை; தன் குடும்பம் சார்ந்த கடமை; தன் நாட்டை சார்ந்த கடமை என்று பலதும் இருக்கிறது. தனக்கு சாத்திரத்தால் இடப்பட்ட கர்மாக்களை செய்து கொண்டு, பின் காசு சம்பாதிக்கும் வழியை செய்து கொண்டு போகலாம். தன் மனைவியையும் மக்களையும் நல்வழிப்படுத்தும் கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இன்றைய குழந்தைகள் சூட்டிக்கையாக இருக்கின்றன. அவை பெரியவர்களிடம் தவறாக நடந்தால் நாம் இப்படி செய்யக்கூடாது என்று சொல்வதில்லை. மாறாக என் குழந்தை என்னவெல்லாம் பேசுகிறது பார் என்று மகிழ்கிறோம். சின்னக்குழந்தை அப்பாவையே சாரி சொல்லு என்று கட்டாயப்படுத்துகிறது. இவர்களும் செய்கிறார்கள். இதற்கு என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. வளர்ந்த பிறகு இவர்கள் மற்றவர்கள் தான் சொல்வதை செய்தே ஆக வேண்டும் என்று நினைக்க மாட்டார்களா? அப்படி நடக்கவில்லை எனும் போது அதை எப்படி எதிர்கொள்வார்கள்? தர்மப்படி நடக்க வேண்டும் என்றும்; அதில் நம்பிக்கை இல்லையானால், சரி/ தவறு, நல்லது/ கெட்டது என்று தெரிந்து நடக்க வேண்டுமென்றே சிறுவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. அடுத்த சந்ததியை உருப்படியாக வளர்ப்பதும் நம் கடமை.....

Wednesday, February 27, 2013

என் உலகில் - 4


இந்த பேரன் பேத்திகள் ஒரு பந்தம். மத்ததெல்லாம் விட்ட பிறகும் இது ஒட்டிக்கொண்டு இருக்கும்! பிள்ளை பெண் எல்லாம் ஒரு வயதுக்கு மேல் நம் பேச்சை கேட்கிறதில்லை. அப்படி எதிர் பார்க்கிறதும் சரியில்லை. அதனால அவங்க செயல்கள் நமக்கு உவப்பா இல்லாம போயிடலாம். பந்தம் விலகிடும். பேரன் பேத்திகள் அப்படி இல்லை. குறைஞ்சது அவங்களும் ஒரு வயசு - அஞ்சு இருக்கலாம்- அஹங்காரம் ன்னு ஒண்ணு வரும் வரை. அப்புறம் வந்த பிறகு உறவு வேற மாதிரி போயிடலாம். அது வரை அன்கண்டிஷனல் லவ் தான் இருக்கும்!


ஸோ, எந்த உறவுமே நிரந்தரம் இல்லை. அட, உசிரே நிரந்தரம் இல்லைன்னா அப்புறம் உறவு என்ன? நாளை காலை கண் விழித்து இந்த போஸ்ட் போடுவேனா என்கிறது நிச்சயமில்லை. இருந்தாலும் நாம் எல்லோருமே நாளை இதை செய்வோம் அதை செய்வோம் என்று நினைத்துக்கொண்டே தூங்கப்போகிறோம். அதுவே யதார்த்தம். நிறைய ப்ளான் செய்கிறதுலேயும் அர்த்தமில்லை. ப்ளான் செய்யாம செய்கிறதுலேயும் அர்த்தமில்லை. அப்ப நடுவில .. ஒரு சின்ன ஸ்கெலிடன் ப்ளான்... சமயம் வரும்போது அதை சுத்தி வளர்த்துக்கலாம்.... பகவான் அதுக்கு சமயம் வரும்போது ப்ளான் ஆப் ஆக்ஷனையும் வகுத்துக்கொடுப்பான். பாத்துக்கலாம்.

                 
மரணம் என்று ஒன்று இருக்கிறது. அதை பலருக்கும் பிடிப்பதில்லை! எப்படியாவது அதை தவிர்க்கவே பார்க்கிறார்கள். குறைந்தது தள்ளிப்போட வேண்டும் என்றாவது பார்க்கிறார்கள். பல மாதங்கள் முன் ஒரு குழுமத்தில் சும்மா கேட்டேன். "இப்போது உனக்கு காலம் முடிந்துவிட்டது போகலாம் வா!” என்று எம தர்ம ராஜன் கூப்பிட்டால் என்ன செய்வீர்கள் என்று. ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டாற்போல தோன்ற வைத்துவிட்டார்கள்!


யோசித்துப்பார்த்தால் மரணத்தைப்போல இயற்கையானது ஒன்றுமே இல்லை. இப்போதெல்லாம் பிறப்பில் கூட கொஞ்ச செயற்கைத்தனம் வந்துவிட்டது. ஆனால் இறப்பு இறப்பாகவே இருக்கிறது. அதற்கான நேரம் வந்துவிட்டால் எதுவுமே அதை தடுக்க முடியவில்லை! என்னதான் மெஷின் எல்லாம் வைத்து அதை நீடிக்கப்பார்த்தாலும்... இப்போதெல்லாம் புற்று நோய் என்று ஒன்று பிரபலமாக இருக்கிறது. அதன் வகைகளும் அதிகமாகிக்கொண்டே போகின்றன! போன நூற்றாண்டு ஆன்மீக சிம்மங்கள் இரண்டு பேர் இதனால் பாதிக்கப்பட்டு எப்படி இதனுடன் வாழ வேண்டுமென்று காட்டிவிட்டே போய் இருக்கிறார்கள். யார் அவர்கள் என்று தெரிகிறதல்லவா?


புற்று நோய்க்கு சிலர் இருக்கும் சொத்தை எல்லாம் செலவழித்து 'குண'ப்படுத்திக்கொள்கிறார்கள். அப்பாடா தப்பித்தாயிற்று என்று நினைத்தால் அப்படி ஒன்றும் நடப்பதில்லை. வேறு ஒன்றால் ஊருக்கு போய் விடுகிறார்கள். ஹார்ட் அட்டாக் போல ஏதோ ஒன்று வந்து அழைத்துப்போய் விடுகிறது....


பிறவி வந்தால் பின்னாலேயே இறப்பும் நிச்சயம். இருந்தாலும் அது தமக்கு இப்போதைக்கு வராது என்றே எல்லாரும் நினைக்கிறார்கள். அத்துடன், தான் இறப்பில்லாமலே இருக்க முடியுமா என்றும் ஆராய்கிறார்கள். இதைத்தான் தர்மன் யட்சனிடம் பேரதிசயமாக சொல்கிறான்!


பிறக்கும் போதே நம் ஆயுள், போகம், எல்லாம் நிர்ணயிக்கப்பட்டு விடுவதாக பதஞ்சலி சொல்கிறார். அந்த ஆயுளை நாம் வாழ்தே தீருவோம். தற்கொலை, பலரும் இன்வால்வ் ஆகும் விபத்து போன்றவற்றை தவிர்த்து ஒரு ஜீவன் தன் காலம் முடிந்த பிறகே உடலை விடுகிறது. போகும் போது தன் பாப புண்ணியம் வாசனைகளை தவிர்த்து எதையும் எடுத்துப்போக முடியவில்லை!


இருந்தாலும் தன் வாழ்நாளை நீட்டிக்க செய்யும் முயற்சி, துன்பம் எல்லாம் அந்தந்த ஜீவன் தன் கர்மாவை கழிக்க உதவுகிறது.


எதற்கு பகவான் அனுப்பினானோ அதை முடித்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். இன்னும் என்ன பாக்கி இருக்கிறதோ யார் கண்டார்கள்! எதாக இருந்தாலும் முடித்துவிட்டு கூப்பிடும் போது போக  எப்போதுமே நான் ரெடி! அதனால் யம பயமே இல்லை. (யார் எமனை தினமும் தொழுகிறார்களோ அவருக்கு யம பயம் இராது என்பது சாஸ்திரம். அதனால் இறப்பு கிடையாது என்றில்லை. பயம் இராது அவ்வளவே! )


சாதாரணமாக ஒருவர் மிகவும் அஞ்சுவது இறப்புக்குத்தான். அந்த அச்சமில்லை என்றால் அவரை ஒன்றும் செய்ய முடியாது! எந்த பிரச்சினையானாலும் "அதனால் என்ன ஆகிவிடும்” என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க ஏதோ ஒன்றில் அது போய் முடிகிறது! அத்துடன் நான் வாழ முடியுமா முடியாதா என்று கேட்டால் முடியுமென்பதே நேர்மையான பதிலாக இருக்கும். வாழ முடியாதென்றால் அதற்கும் நான் ரெடி என்று சொன்னால்? அப்புறமென்ன? அப்படிப்பட்டவரை எதும் பாதிக்க முடியாது!

Tuesday, February 26, 2013

என் உலகில்... 3

 
பல நாட்களுக்கு முன் என் ஆன்மீக வழி காட்டி எங்கள் தந்தையுடன் குடும்பத்தார் அமர்ந்து அவரை வாழ்கையில் கற்றுக்கொண்டவற்றை உபதேசம் செய்யுமாறு கேட்கச்சொன்னார்.
அப்படியே செய்தோம்.
தந்தை சொன்னது அவர் வழக்கமாக பேசுவது போல சில சொற்களே.
எப்போதும் என்ன நடக்க வேண்டுமோ அதுவே நடக்கிறது. இதில் சந்தேகமே வேண்டாம். பெரிசாக திட்டமிட்டு எதிர்பார்ப்புகள் அதிகமானால் பிரச்சினைகளே அதிகமாகின்றன. அதனால் அவ்வப்போது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு போனால் போதும். இப்போது கொஞ்ச நேரம் முன்னால் இந்த குழந்தை அழுதது. அதை சமாதானப்படுத்துவது நம் வேலை. அதை செய்தோம். இதே போல என்ன செய்ய வேண்டுமோ அந்தந்த நேரத்துக்கு செய்து கொண்டு போனால் போதும்.

இப்படி சொன்னது அப்போதைக்கு வெகுவாக பாதிக்கவில்லை. ஆனால் நாளாக ஆக அதன் உண்மை தெரிய வந்தது. இப்போது அது பழக்கத்துக்கே வந்துவிட்டது. பெரிதாக ஒன்றும் திட்டமிடுவதில்லை. அதெற்கென்று திட்டமே இல்லாமல் இருப்பதும் இல்லை. பொதுவாக நம் கடமை என்று ஒன்று இருக்கிறது. அதை ஒட்டி நம் செயல்களை மைத்துக்கொண்டாலே போதும் என்று இப்போது புரிகிறது. மிக விவரமான திட்டமிடல் இல்லை என்பதால் யோசித்த படி நடக்கவில்லை என்றால் இப்படி ஆகிவிட்டதே என்று யோசியாமல் அடுத்து என்ன செய்யலாம் எனபதில் மனம் போய் விடுகிறது. என்னதான் நடந்தாலும் "சரி, நடந்து விட்டது. அடுத்து என்ன செய்யலாம்' என்றே யோசிக்கிறேன். அதனால் மனசு பெருமளவு சாந்தியடைந்தே இருக்கிறது.

Thursday, February 21, 2013

என் உலகில் -2


யார் அந்த சிலர்ன்னு கேக்கறீங்களா? பாவப்பட்ட துணைவிதான். பையன் வளர்ந்தாச்சு. அவன் மேலே கோபப்பட முடியாதுன்னு விட்டுட்டேன். தோளுக்கு மேலே வளந்தா தோழன் ன்னு ஒரு சொலவடை இருக்கு இல்லே? கோபப்பட்டுக்கரா மாதிரி சிஷ்யர்கள் இல்லை. எஞ்சியது துணைவிதானே?
ஏன் இவங்க மட்டும்ன்னா சாஸ்திரம் அப்படி சொல்லுது. இவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய கடமை ஒண்ணு இல்லறத்தானுக்கு இருக்கு. செய்யாம இருக்கிறது பாபம். இதுவே பல பிரச்சினைகளுக்கும் இன்னைக்கும் காரணம்!

இன்னைக்கும் பலர் இணையத்தில பொங்கல் வெச்சுகிட்டே இருக்காங்க. இதை அனேகமா தள்ளிடுவேன். ஒரு வேளை படிச்சாலும் விவாதத்தில இறங்கறதில்லை. எனக்குத்தெரிஞ்சு யாரும் விவாதங்களுக்கு அப்புறம் கூட தன் கருத்துக்களை மாத்திக்கொண்டதில்லை.
எல்லா சமாசாரத்துக்கும் பகவான் ஒவ்வொத்தரை அனுப்பி இருக்கான். அவங்க அவங்க வேலையை செய்யட்டும். நமக்கு சம்பந்தமில்லைன்னு தோன்றதுனால் நான் கண்டுக்கிறதில்லை. இப்போ ஒத்தரை ஒரு வன்முறைக்காக திட்டறாங்கன்னா கர்மா தியரி படி அது இந்த ஜன்மத்தில திருப்பி செய்யப்படுகிற வினை. அதுல சொல்ல என்ன இருக்கு?
நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் அதை வேடிக்கை மட்டுமே பார்கிறேன். அதுல என் பங்கு ஏதாவது இருக்கும்ன்னு தோணினால் மட்டுமே எதுவும் செய்கிறேன். முக்காலே மூணு வீசம் ஒண்ணுமில்லைதான்!

உலகத்தில இருக்கிற மனுஷர்கள் மட்டுமே எனக்கு பிரச்சினை செய்கிறவங்களா இருக்காங்க. பிராணிகள் மேலே அன்பே ஏற்படுது. பாம்பு வந்தால் கூட பதட்டமில்லாம வேடிக்கை மட்டுமே பார்க்கிறேன். பல சமயம் தோட்டத்தில பார்க்கிற பாம்பு பத்தி யாருக்கும் சொல்லாமலே இருப்பேன். அது பாட்டுக்கு அதோட வேலையை பாத்துட்டு போயிடும்! பாத் ரூமில் பூரான் ப்ரென்ட் ஒத்தர் அப்பப்ப வருவார். குழந்தைகள் வீட்டில் இல்லை என்றால் அவருக்கு ஒரு பிரச்சினையும் தருவதில்லை. இருந்தாலும் அப்பப்போது வேலைக்காரி கண்ணில் பட்டு போய் சேர்ந்து விடுவார்கள். வருத்தமாக இருக்கும்! 

தோட்டத்துக்கு வரும் பறவைகளுக்கு குறைச்சலில்லை. எப்போதுமே இருக்கும் காக்கா தவிர குருவிகள், பான்ட் ஹெரான், கிளிகள், புறாக்கள், குயில், மைனாக்கள் ன்னு எதேனும் இருந்து கொண்டே இருக்கும். இவற்றோட சப்தங்கள் பாதிக்கிறதே இல்லை. ஆனால் வீட்டுக்கு வருகிற மனிதர்கள் பேச்சு அப்படியில்லை! வர வர மனிதர்கள் என்றாலே அலர்ஜி ஆகிவிடும் போல இருக்கு! குழந்தைகள் தவிர..... அஞ்சு வயசுக்கு உட்பட்ட குழந்தைகள் கொஞ்ச நேரத்தில் ஒட்டிக்கொள்கின்றன! எங்க உலகம் தனி உலகம்!

Wednesday, February 20, 2013

என் உலகில்....


என் உலகில்....

ஒரு உலகம் இருக்கா? இல்லை நிறைய உலகங்கள் இருக்கா?
நிறையவே இருக்கு! இருக்கிற வஸ்து ஒண்ணுதான்; ஆனாலும் பார்க்கிறவர் பார்வைக்கு தக்கபடி அது பல ரூபங்களாக இருக்கு. அதனால பல உலகங்கள் இருக்கணும். ஒவ்வொரு ஜீவனுக்கும் தக்கபடி ஒவ்வொரு உலகம். உலகத்தில் மனித ஜாதியில் மட்டுமே ஏழு பில்லியன் ஜீவர்கள். மத்த இனங்களை எடுத்துக்கொண்டா நிறையவே அதிகமாயிடும்!

அவரவர் பார்வைப்படி உலகங்கள் இருக்கு. கூகுள் சர்கிள் மாதிரி, பலர் அதை பெரிசு பண்ணிக்கிறோம். சிலர் சின்னது செய்து கொள்வாங்க. நம்ம செயல்கள் இந்த வட்டத்தைத்தான் பெரும்பாலும் பாதிக்குது. நான் தொடர்பில இருக்கும் நபர்களை என் செயல்கள் உடனடியா பாதிக்குது. அதுக்கு அடுத்த படி இருக்கிற வட்டத்தில் குறைவா பாதிக்கும். அதுக்கு அடுத்து இன்னும் குறைவாக. இருந்தாலும் உலகத்தின் எதோ ஒரு மூலையிலிருந்து முகம் தெரியாத நபர் 'குருஜி ' ன்னு அஞ்சல் எழுதறப்ப பயமாவே இருக்கு!

என் உலகம் எப்படி இருக்கு? இதுக்கு ஒரு முன் யோசனையும் இல்லாம் ஏழுத ஆரம்பிச்சு இருக்கேன். என்ன எழுதப்போறேன்னு தெரியாது. ஏனோ இன்னைக்கு இப்படி எழுதி என் குறைகள் நிறைகள் என்னன்னு ஆராய ஒரு எண்ணம் தோன்றியதன் கோளாறு, இந்த கோளாறான சிந்தைனைகளும் வந்தாச்சு.

காலை எழுந்திருக்கிறேன். பல நாட்கள் நாலு மணிக்கே தூக்கம் கலைகிறது. அப்புறமா போராட்டம்தான். எப்படியும் எழுந்து பாத்ரூம் போன பிறகு, திருப்பிப்படுக்கவே மனசு யோசிக்கும். பிடிவாதமா 'வா ஜபம் பண்ணலாம்ன்னு' இழுக்க வேண்டி இருக்கு! முக்காவாசி தூக்கம் தோத்துடும். சில நாட்கள் படுக்க நேரம் ஆனாலோ அல்லது உடல் நலம் குறைவா இருந்தாலோ தூக்கம் ஜெயிச்சுடும். கொஞ்ச நாளா ஜபம் கொஞ்சம் ஒரு மாதிரி சுலபமா இருக்கு! ஒன்னும் செய்யாம வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.
மனசை பார்க்க ஆரம்பிச்சா அது படிப்படியா கொய்யட் ஆகிடுது. ஜபம் தானா மேலே வந்து அது பாட்டுக்கு ஓடுது. அதையே கவனிக்கிற வரை ஒன்னும் பிரச்சினை இல்லை. ஓடிக்கொண்டே இருக்கும். ஆனா பிரச்சினையே கவனிக்கிறதுதான்! கவனிப்பு கொஞ்சம் சிதறினாலும் ஏதேனும் எண்ணங்கள் தலைதூக்கிக் கொண்டு அது பாட்டுக்கு ஓட ஆரம்பிக்கும். எப்ப பிச்சிக்கொண்டதுன்னு தெரியாமலே பிச்சிக்கும். அதனால அதிக கவனம் வேண்டி இருக்கு.

மனசு...இந்த மனசுதானே பல அர்த்தங்களுக்கு அனர்த்தங்களுக்கும் காரணமா இருக்கு?
குருவருளால அது கொஞ்சம் பண் பட்டு இருக்கு. யாரை பாத்தாலும் ஒரு கம்பெஷந்தான் இருக்கு! மலினமான எண்ணங்கள் வரதில்லை. பொதுவா யார் மேலேயும் கோபம் வரதில்லை. சமீபத்தில மொபைல் போனை திருட்டு கொடுத்த பின்னும் திருடின நபர் மேல எவ்வளோ சாமர்த்யம்ன்னு ஒரு வியப்பு இருந்ததே தவிர கோபம் வரலை. இது எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு! இந்த காமமும் குரோதமும் போனதுக்கு இறைவனுக்குத்தான் நன்றி சொல்லணும்.
காமமும் குரோதமும் போன பின் உலகே சுகமா இருக்கு. சிலர்கிட்ட இன்னும் அப்பப்ப கோபம் வரத்தான் செய்யுது., ஆனா ஒரு நிமிஷத்துக்குள்ள காணாமல் போயிடும்! அப்புறம் இவனா கோபப்பட்டான்ன்னு வியக்கிற மாதிரி இருக்கும்! யார் அந்த சிலர்ன்னு கேக்கறீங்களா? :-))))