Pages

Saturday, September 29, 2018

பறவையின் கீதம் - 41





ஒரு சூஃபி கதை:

ஒரு 'இறந்துபோன' மனிதன் சவப்பெட்டியில் வைத்து புதைக்க கொண்டு செல்லப்பட்டான். அவனுக்கு உயிர் வந்துவிட்டது. விழித்துக்கொண்ட அவன் சவப்பெட்டியின் மூடியை பலமாகத்தட்டினான். அதை திறந்து பார்த்தனர். அவன் எழுந்து உட்கார்ந்து 'என்ன செய்யறிங்க? நான் இன்னும் சாகலை' என்றான்.

கூடியிருந்தவர்கள் நம்பவில்லை. கடைசியில் ஒருவர் சொன்னார்: 'நண்பா, நீ செத்துட்டதா டாக்டரும் பாதிரிகளும் சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க. அதனால் நீ செத்து போயாச்சு.'

அவரை முறையாக புதைத்து விட்டார்கள்.

Friday, September 28, 2018

சபரி மலை






சமீபத்தில் சபரி மலை விஷயத்தில் இடப்பட்ட பதிவுகளில் இது மிகவும் மனதை கவர்ந்தது. அப்போது வேறு பணியில் மிக உன்னிப்பாக இருந்ததால் இதை மொழிபெயர்த்து இடமுடியவில்லை. அந்த வேலை இப்போது முடிந்ததால் இதை முக்கிய அடுத்தப் பணியாக எடுத்துச்செய்கிறேன்.
ஹும்! போஸ்ட் செய்யும் முன் தீர்ப்பே பாதகமாக வந்துவிட்டது! :(
இந்த கட்டுரை ஹிந்துக்களாகிய நமக்கே எழக்கூடிய பல கேள்விகளுக்கு பதில் தருகிறது.

ஆலயப்பிரவேசம், அல்லது ஒரு கோவிலில் வழிபாடு செய்வது குறித்த கட்டுப்பாடுகள் பற்றி அடிக்கடி அந்த கட்டுப்பாடுகளால் வழி பட முடியாமல் போவோரால் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது வழிபாடு குறித்த அடிப்படையிலேயே தவறான கருத்தால்தான் ஏற்படுகிறது. வழிபாட்டில் பன்களிப்பு நேர்முறையாகத்தான் எப்போதும் இருக்க வேண்டும் என்று இல்லை.
நேர்முறையாக என்பது இங்கே என்ன? கோவிலில் நுழைவது, குறித்த முறையில் வழிபாடு செய்வது. இப்படித்தான் பலரும் செய்கிறார்கள் என்பதால் அப்படிச்சொல்லலாம்.

ஆனால் இது நம் தர்மத்தையோ மதத்தையோ சரியாக புரிந்து கொண்டதாக சொல்ல முடியாது. ஒரு மதத்தை பின்பற்றும்போது செய்யச்சொன்னதை செய்வது மட்டும் மதத்தை அனுசரித்ததாகாது. செய்தாலும் செய்யலாம் என்று தேர்வில் விட்டிருப்பதை செய்வது மட்டும் மதத்தை அனுசரித்ததாகாது. செய்யாதே என்று சொன்னவற்றையும் செய்யாதிருக்க வேண்டும்.

மாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ள பலரும் விரதம்/ உபவாசம் இருக்கும் நாட்களில் மாமிசம் சாப்பிடுவதில்லை. அதே போல கோவிலுக்குள் போகும்போது செருப்பை வெளியேவே விட்டுவிட்டு செல்கிறார்கள். இப்படி சிலவற்றை செய்யாமல் இருந்து கடைபிடிப்பதும்கூட தர்மத்தை கடைபிடித்ததாகவே ஆகும். அதாவது சில எதிர்மறை விஷயங்களும் தர்மமாகும். சாத்திரங்களை படித்துப்பார்த்தால் இவை தெளிவாகவே புரியும். கொஞ்சம் விளக்கலாம்.

எதிர்மறை கடமைகளும் பங்களிப்பின் முக்கிய மைய விஷயங்களாகும். அதனால்தான் அஷ்டாங்க யோகத்தில் 'யமம்' என்று ஒன்றை வைத்து இருக்கிறார்கள். இதனால்தான் எல்லா விரதங்களும் வெகுஜன தர்மமாக சொல்லி எல்லாவற்றுக்கும் ஒரு புராண கதையை சொல்லி இருக்கிறார்கள்.

இதனால்தான் யமுனாச்சாரியா என்னும் ஶ்ரீவைஷ்ணவ ஆசாரியர் இப்படி 'ஆகம ப்ராமாண்யா' வில் சொல்லுகிறார்: ஸ்ருதி சொல்லும் ஸ்ரௌத்தம் என்னும் கர்மாக்களில் யாரும் முழுக்க விலக்கப்படவில்லை. ஸ்ருதி அனேகமாக 'எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காதே' என்பது போன்ற கட்டுப்பாடுகளையே விதிக்கிறது. இது எல்லா மக்களாலும் போற்றி கடைபிடிக்கத்தக்கது.

அதே போல ஒரு பெண் கருவுறக்கூடிய காலத்தில் - நடைமுறைக்காக 10 முதல் 50 வயது வரை என்று வைக்கப்பட்டுள்ளது - சபரிமலை குறித்த கட்டுப்பாடுகளை பக்தியுடன் அனுசரிக்கும்போது அவர் மத ரீதியாக இந்த தெய்வத்தை வழிபடுவதில் முழுக்க பங்களிக்கிறார். இந்த 'எதிர்மறை' பங்களிப்பு எந்த விதத்திலும் ஆண்களும் அனுமதிக்கப்பட்ட வயதுடைய பெண்களும் நேரடியாக பங்களிப்பதை விட குறைந்ததோ அர்த்தமில்லாததோ இல்லை.

இதில் மையக்கருத்து என்னவென்றால் ஒரு அமைப்பில் எல்லாருமே பங்களிக்கிறார்கள். அது நேரடியாக செய்யசொல்லி இருக்கும் கடமைகளை செய்வதாலோ அல்லது செய்யாதே என்று சொல்லும் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதாலோ இருக்கலாம். இவை யாவை என்பதே அந்த அமைப்பின் தனித்துவ ரசத்தையும் அடையாளத்தையும் காட்டுகிறது.

இது வெறும் இந்து வகுப்புகளுக்கு மட்டுமில்லை. நம்பிக்கை/ பழக்க அமைப்பு எதானாலும் அதில் இப்படி இருக்கும். அந்தந்த மதங்களில் சொல்லப்பட்டபடி உணவு, பாலுணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்கள் மற்றும் பல ஏனைய கட்டுப்பாடுகளை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு கடைபிடிக்காதவரை அந்த மதத்தை கடைபிடிப்பதாக சொல்ல முடியாது.
இந்த இடத்தில் ஒருவர் ஒரு வாதத்தை முன்வைக்கலாம். சபரி மலை கோவிலுக்குள் நுழையக்கூடாது என்னும் கட்டுப்பாட்டை சம்பந்தப்பட்ட பெண்களின் மனச்சாட்சியிடம் விடவில்லை; இது புகுத்தப்படுகிறது என்று சொல்லலாம். இது தனிமனிதர் தாம் காணும்படி வழிபாடு மேற்கொள்ளும் சுதந்திரத்தை தடுக்கிறது என்றும் சொல்லலாம்.
இதற்கு உண்மையான நேர்மையான பதில் இப்படித்தான் இருக்க முடியும்: கோவில் என்பது அந்த தனித்துவம் உள்ள தெய்வத்தின் உறைவிடமாகும். அவரே அந்த கோவிலுக்கு உரிமையாளர். அவரது சொத்தை அவருக்கு ஏற்றவாறு அனுபவிக்க அவருக்கு உரிமை உள்ளது. தேவ்வாஸ்வம், தேவக்ருஹம் போன்ற சொற்றொடர்கள் இதையே காட்டுகின்றன.
கொஞ்சம் இருங்க. தெய்வம் என்கிறது 'உண்மையான நபர்' இல்லை. எப்படி அவர் இந்த சொத்தை ஆளுவது என்று கேட்டால்... சட்டமே இதை அப்படித்தான் நடத்துகிறது. ஒரு 'கார்பொரேட் பாடி' (கம்பனி) இருக்கலாம் என்றும் அதன் பெயரில் சொத்தை வைத்திருக்கவும் நடைமுறைகளை நடத்தவும் முடியும் என்றும் சொல்லும்போது கோவிலில் இருக்கும் தெய்வத்தையும் அப்படி கருத தடையில்லை.
ஒரு நெடுநாள் பாரம்பரிய முன்னோடி அப்படித்தான் இருக்கிறது. கிடைக்கும் கல்வெட்டுக்கள், உரைகளை பார்க்கையில் அப்படி புலப்படுகிறது. சட்டப்படியான தெய்வத்தின் உரிமை தன் குடியிருக்கும் இடத்தின் (சொந்தமான மற்ற இடங்களின் கூட) உரிமை, அதில் மாற்றார் எப்படி நுழையலாம், அந்த இடத்தில் எப்படி இருக்கலாம் என்பது போன்றவற்றை நிர்ணயிக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது.
எதை வைத்து இந்த உரிமை அவரது பூசாரிகளால் நிர்வாகிகளால் - இவர்களே உண்மையில் இவரது அறங்காவலர்கள் இல்லையா - புரிந்து கொண்டு நிலைநாட்டப்படுகிறது? ஆகம சாத்திரங்களாலும் தாந்த்ர சாத்திரங்களாலும் ஆரம்பம் முதல் கடைபிடிக்கப்படும், அது தெரியவில்லையானால் நெடுங்காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறைகளாலும் இது நிர்ணயிக்கப்படுகிறது.



சில ஹிந்துக்கள் தர்ம சாஸ்தா என்னும் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்று சொல்வது இங்கே ஏற்புடையது இல்லை. ஏன் அவரால் 10-50 வயது பெண்களை சகோதரிகளாகவோ அல்லது தாயாகவோ பார்க்க இயலாதா என்ன?
ஒரு குறிப்பிட்ட கோவிலின் புராணங்களையும் சடங்குகளையும் அனுபவ பூர்வமான யதார்த்தங்களுடன் பொருத்திப்பார்க்க முடியாது. அது போலவே மனிதர்களின் குணங்களை தெய்வத்தின் மீது பொருத்த முடியாது.
தெய்வங்கள் இவற்றை கடந்தவை. மிக நுண்ணிய சூக்‌ஷ்ம உடலுடையவை. இவை படைக்கப்படுபவைகளை சாப்பிடுவதும் இல்லை. பிரம்மச்சரியம் அனுஷ்டிப்பதும் இல்லை. பின்னே இதன் முக்கியத்துவம் எங்கே?
இங்கே: நமது சடங்குகள் எப்படி வேலை செய்கின்றன என்பது ஒரு முக்கியமான விஷயம்.
நம் நீதிபதிகளுக்கு மதங்களைப்பற்றிய சரியான கற்பனை இல்லை. பின் வரும் விஷயம் அவர்களது மனதில் தைக்குமாறு யாரேனும் சொல்ல முடிந்தால் நல்லது.
கோவிலில் வழிபடும் தெய்வத்தின் இயல்பு ஒன்று இருக்கிறது. தென்நாடுகளில் ஆகம முறைப்படி ஸ்தாபனம் செய்யப்பட்ட கோவில்களிலும் தந்திரிக முறைப்படி ஸ்தாபனம் செய்யப்பட்ட கோவில்களிலும் இது மந்திரங்களைப்பொருத்து இருக்கிறது. மேலும் கோவில் இருக்கும் இடம், சடங்குகளின் இயல்பு, பூஜை செய்வோரின் தன்மை, பூஜைக்கு உதவும் பூக்கள், நிவேதனங்கள், கோவிலுக்கு வருவோரின் தன்மை, தெய்வத்துக்கு அணிவிக்கப்படும், பக்தர்கள் அணியும் பூசாரிகள் அணியும் உடைகளின் நிறம் போன்ற பல விஷயங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகவேண்டும்.
இவை அனைத்தும் ஒன்றாகும்போது ஒரு 'சடங்கு நிதர்சன நிலை' ஏற்படுகிறது. இதுவே ஒரு உண்மையான பக்தன் வேண்டக்கூடிய நிலை. அப்போது தெய்வத்தின் சாந்நித்தியம் முழுமையாகிறது. இது பக்தனுக்கும் அவனது குடும்பத்துக்கும் அனுக்கிரகம் செய்கிறது. பல வேறு ஆகமங்களும் தந்திரீக சாத்திரங்களும் வெவ்வேறு நிலையை இந்த சடங்கு நிதர்சன நிலையாக சொல்லுகின்றன. இந்த நிலையில்தான் பூசாரிகளுக்கும் பக்தர்களுக்கும் இவ்வுலகில் அவர்கள் செய்ய வேண்டியவைகளும் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த சடங்குகளில் காரண காரியங்கள் இல்லாமல் இல்லை. சைவ ஆகமங்களும் காமிகாகமங்களும் சிவன் மற்றும் விஷ்ணுவின் உக்ர ரூபங்கள் கிராமத்தின் எல்லையிலேயே வைக்கப்பட வேண்டும் என்று சொல்லுகின்றன. ஏன்?
அந்த உக்கிர ரூபங்களின் இயல்புக்கு அந்த இடங்களே உகந்தவை என்பதால்தான். உக்கிரமான, ஆபத்தை விளைவிக்க வாய்ப்பிருக்கக்கூடிய இந்த இயல்புள்ளவை மனிதன் வசிக்கும் இடத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். எந்த கிராமங்கள், ஊர்கள், கோவில்கள் இந்த காமிகாகமத்தின்படி நிர்மாணம் செய்யப்படுள்ளனவோ அவற்றில் இந்த விதி கடைபிடிக்கப்பட்டு இருப்பதை காணலாம்.
இந்த சடங்கு நிதர்சன நிலையும் சடங்குகளால் ஏற்படும் ஒத்திணக்க இயல்பும் என்ற எண்ணம் சபரிமலையிலும் காணப்படுகிறது. ஆரம்ப நாட்களில் இந்த தெய்வம் உருவாக்கப்பட்டு நிறுவப்பட்ட காலத்தில் ஓதப்பட்ட மந்திரங்கள் இந்த தெய்வ சிலையில் நைஷ்டிக பிரம்மச்சரியத்தை இயல்பாக்கி இருக்கின்றன. இதுவே இந்த தெய்வத்தின் முக்கிய இயல்பாகும். அதன் முக்கிய சடங்கு நிதர்சன நிலையாகும்.
ஒரு கோவிலின் இந்த சடங்கு நிதர்சன நிலைக்கு விதிகள் மீறப்படும்போது தீங்கு விளைவிக்கப்படுகிறது. நாசம் கூட ஏற்படலாம். இங்கே பொருத்தமான விதி 'வீட்டு விலக்கான பெண்களுக்கு தடை' என்பது.
அப்படிப்பட்ட தடை மீறப்படுமானால் அந்த கோவிலின் 'சடங்கு நிதர்சன நிலை'யும் சடங்கு ஒத்திணக்க இயல்பும் மாற்றப்படும் அல்லது உருக்குலையும். இவைதான் நம் சடங்குவெளியை நிர்ணயிக்கின்றன. எது ஒரு சடங்குவெளிக்கு சரியோ உகந்ததோ அது இன்னொரு சடங்குவெளிக்கு பொருத்தமில்லாமல், ஏன் தீங்கு விளைவிப்பதாகக்கூட இருக்கலாம்.
உதாரணமாக சைவ ஆகமங்களில் ருத்ர கன்யாக்கள் சொல்லப்படுகிறார்கள். இவர்கள் இளைய பக்திகொண்ட கன்னிகைகள். சிவனின் முன் நடனமாடுவார்கள். இவர்கள் மற்ற பூசாரிகளுடன் ஏன் ராஜாக்களுடனே கூட புதிதாக நிறுவப்படும்/ கும்பாபிஷேகம் முடிந்தபின் சிவனின் முதல் தரிசனத்தை காண அழைக்கப்படுவர்.
ஆனால் ஐயப்பனின் சடங்குவெளியில் இவர்கள் பொருந்த மாட்டார்கள். இவர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வயதாகி குழந்தை பெறும் காலம் போகும் வரை காத்திருக்க வேண்டும்.
இதெல்லாம் ஐயப்பனின் 'மனதை' சார்ந்த விஷயமில்லை. எல்லாவற்றையும் கடந்தவரின் 'மனதை' யாரும் சலனப்படுத்த முடியாது. ஆனால் அதே கடந்தவரின் சக்தி ஒரு சிலையில் ஆவாஹனம் செய்யப்படும்போது சில விதிகள் செயலுக்கு வந்துவிடுகின்றன.
நமது தர்மத்தில் எல்லாமே, கற்பனை செய்யப்பட முடியக்கூடிய எல்லாமே - வயதோ, பாலினமோ, பல்வித மரங்களோ, விலங்குகளோ, உலோகங்களோ, மற்ற பொருட்களோ, நிறங்களோ, வடிவங்களோ, நேரங்களோ - எல்லாவற்றுக்கும் ஒரு புனித அர்த்தம், சடங்குக்கான மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஹிந்துயிசத்தின் செயல்பாட்டுக்கு மிகச்சிறந்த உதாரணம்.
இந்த அம்சம் எல்லா ஆபிரகாமியம் அல்லாத பல தெய்வங்களை வழிபடும் எல்லா பாரம்பரியங்களுக்கும் பொருந்தும். நாம் உலகை பார்க்கும் விதமே தனித்துவமானது. பல சடங்கு அறைகள், அர்த்தங்கள், சக்திகள், குறியீடுகள், குறிப்பிட்ட தெய்வங்கள், அவற்றுக்கான சடங்குகள்….. இவை எல்லாம் ஒரு சடங்கு நிதரிசனத்தை உருவாக்க, பலப்படுத்த, அனுகிரகம் பெற.
யார் இந்த நம் சடங்குகளை மிதிக்க விழைகிறார்களோ - அது அறியாமையால் இருக்கட்டும் அல்லது காழ்ப்புணர்வால் இருக்கட்டும் - நாம் பலமாக நம்மால் முடிந்த விதத்தில் முடிந்த சக்தியுடன் போராட வேண்டும். இந்த கட்டுரை மக்களுக்கு நம் ஹிந்து சடங்குகள் குறித்த சில பரிமாணங்களையும் கட்டுப்பாடுகளுக்கான காரணங்களையும் புரிய வைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த கட்டுரை ஆங்கிலத்தில் ஆங்கீரச ஸ்ரேஷ்டா என்பவரால் எழுதப்பட்டது. முதலில் பல நாட்களுக்கு முன் இதை ஒத்தி ஒட்டியபோது அதன் சுட்டியை சேமிக்கவில்லை. இப்போது வலையில் தேடியதில் கிடைத்துவிட்டது. ஆகவே அதை இங்கே பதிவு செய்கிறேன்.
நிறைந்தது

பறவையின் கீதம் - 40






ஒருவருக்கு ஒரு அழகில்லாத மகள் இருந்தாள். யாரும் அவளை திருமணம் செய்துக்கொள்ள முன் வரவில்லை. கடைசியில் அவளை ஒரு பார்வையில்லாதவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
ஒரு கண் வைத்தியர் இவரது பார்வையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பெறலாம் என்று சொன்னார். பெண்ணின் தகப்பன் வேண்டாம் என்று சொன்னார்.
சாதி இந்த கதை பற்றி சொல்லும்போது 'அழகில்லாத பெண்ணின் கணவன் பார்வையில்லாமல் இருப்பதே மேல்.' என்கிறார்.
அத்துடன் ஒரு எதிர்த்து நிற்க இயலாதவன் அறியாமையிலேயே.

Thursday, September 27, 2018

பறவையின் கீதம் - 39





யாரோ புத்தரிடம் சொன்னார் 'நீங்க செய்யற உபதேசம் எல்லாம் சாத்திரங்களில இல்லை.'
புத்தர் சொன்னார் 'அப்படியானால் அவற்றை அதில் எழுதுங்கள்.'
கொஞ்சம் நெளிந்த அந்த மனிதர் மீண்டும் சொன்னார் 'ஆனா நீங்க சொல்லற சில விஷயங்கள் சாத்திரங்களில சொன்னதுக்கு எதிராவே இருக்கு.'
'அப்படின்னா அத திருத்துங்க.'

.நா சபையில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. எல்லா மதங்களின் சாத்திரங்களும் திருத்தப்பட வேண்டும். எதெல்லாம் சகிப்பின்மைக்கும் வன்முறைக்கும் இடம் தருகின்றனவோ அவை நீக்கப்பட வேண்டும். மனிதர்களின் தன்மானத்தை அழிக்கும் எதுவும் நாசமாக்கப்பட வேண்டும்.
யார் இப்படி ஒரு கோரிக்கையை வைத்தது என்று தேடிய பத்திரிகையாளர்கள் அவரைத் தேடிப் பிடித்து அவரது வீட்டுக்கு போனார்கள். அவரது விளக்கம் மிக எளிது. 'மக்களுக்காகத்தான் சாத்திரங்கள் இருக்கின்றன. சாத்திரங்களுக்காக மக்கள் இல்லை.'

Wednesday, September 26, 2018

பறவையின் கீதம் - 38




பழைய எகிப்திய மன்னர் ஒருவரின் கல்லறையில் ஒரு பிடி கோதுமை கண்டெடுக்கப்பட்டது. யாரோ அதை விதைத்துப்பார்த்தார்கள். ஆச்சரியப்படும்படி அது வளர்ந்து விட்டது!

ஞானிகளின் சொற்கள் வாழ்கை சக்தியின் விதைகள் போல. அவை விதைபோல நெடுங்காலம் உயிர்த்திருக்கக்கூடும். சரியான தருணத்தின் தகுந்த பக்குவமான இதயத்தை கண்டறியும் வரை.

சாத்திரங்களின் சொற்கள் இறந்து போனவை என்று நினைத்திருந்தேன். ஆனால் என் இதயமல்லவோ இறந்து வறண்டு இருந்தது? அங்கே எப்படி எதுவும் விளைய முடியும்?

Tuesday, September 25, 2018

பறவையின் கீதம் - 37





ஆக்கிரமித்த படைகளின் தளபதி மலை பிரதேச கிராமத்தின் மேயரிடம் சொன்னார்: நீங்க 'ஒரு துரோகியை மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்று தெரியும். அவனை ஒப்படைக்காவிட்டால் எங்கள் சக்தியை காட்டி உங்கள் மக்களை துன்புறுத்துவோம்.'

அந்த கிராமம் உண்மையிலேயே அப்போது ஒரு களங்கமற்ற ஆசாமியை மறைத்து வைத்து இருந்தது. ஆனால் ஒரு கிராமமே துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது மேயர் என்ன செய்ய முடியும்? கிராம சபையை கூட்டி நாள் கணக்கில் விவாதித்தும் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. ஆகவே உள்ளூர் பாதிரியிடம் போய் ஆலோசனை கேட்டார்கள். இருவரும் இரவு முழுதும் சாத்திரங்களில் தேடி பார்த்துவிட்டு கடைசியில் 'ஒரு தேசத்தையே காப்பாற்ற ஒருவன் இறப்பது மேல்' என்ற வாசகத்தை கண்டு பிடித்தார்கள்.

ஆகவே அவனை தளபதியிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.

படையினர் அவனை இழுத்துபோய் அவனது அலறல் அந்த பிராந்தியம் முழுக்க எதிரொலிக்க அவனை துன்புறுத்தியே கொன்றார்கள்

இருபது வருடங்கள் கழித்து ஒரு இறைதூதர் அங்கே வந்தார். நேராக மேயரிடம் போய் இது குறித்துகேட்டார். 'எப்படி நீங்க இத செஞ்சீங்க? அவன் உங்களை எல்லாம் காப்பாத்த தேசத்த காப்பாத்த கடவுளால அனுப்பி வைக்கப்பட்டவர். அவரைபோய் பலி கொடுத்துட்டீங்க!'

'நாங்க என்ன தப்பு பண்ணோம்?' மேயர் கொஞ்சினார். 'நானும் பாதிரியும் சாத்திரங்கள பாத்து அதுல சொன்னபடிக்குத்தான் செஞ்சோம்.'

'அதான் பிரச்சினையே. நீங்க சாத்திரங்கள்ல பாத்தீங்க. அவனது கண்கள பாத்து இருக்கணும்.'

Thursday, September 13, 2018

டீக்கடை பெஞ்ச் கதைகள் -14





'ஹும்!' என்று முனகிக்கொண்டே டீக்கடையில் உட்கார்ந்தான் அந்த இளைஞன். 'ஏன் தம்பி, என்ன ஒரு மாதிரி இருக்கே?' என்று கேட்டுக்கொண்டே சூடான டீயை கொடுத்தார் கடைக்காரர். 'ஒண்ணுமில்லே !'என்று சொல்லிகொண்டு டீயை உறிஞ்சினான் இளைஞன்.
சற்று நேரத்தில் தானாகவே பேச ஆரம்பித்தான்.
'இன்னைக்கு பிள்ளையார் சதுர்த்தி. வீட்டுல பொண்சாதிக்கு உடம்பு சரியில்ல. வெறும் நாலு கொழுக்கட்ட தவிர ஒண்ணும் செய்ய முடியல. மத்த வேலை எல்லாம் நா கவனிக்க வேண்டி இருந்ததால பூசையும் ஒழுங்கா செய்ய முடியலை. இப்ப ஒத்தர் அவரோட இடத்துக்கு அழைச்சுப்போனார். அங்க என்ன விரிவா பூஜை பண்ணாங்க. எவ்ளோ பூ! எவ்ளொ அருகபுல்! எவ்ளோ இலை.. வகைவகையா. எவ்ளோ நைவேத்தியம்! இதெல்லாம் பாத்துட்டு நாமும் இருக்கோமேன்னு தோணிச்சு.'
களுக் என்று சிரிப்புச்சத்தம் அருகில் கேட்டது.
திரும்பிப்பார்த்தான். 'நாதாம்பா!' என்றார் பெரியவர். கடைக்காரர் கொடுத்த டீயை வாங்கி உறிஞ்சிகொண்டே பேச ஆரம்பித்தார்.

'உனக்கு ஒரு கதை சொல்லவா?'
'உம் உம்! கதை எப்பவுமே இஷ்டம்தானே?'
'தாமிரபரணி கரையோரம் ஒரு சின்ன கிராமம். அங்கே வயசான ஒரு பாட்டி இருந்தா. தனியாத்தான் இருந்தா. தள்ளாமையும் வந்தாச்சு. பிள்ளையார் சதுர்த்தி வந்தது. ஊரெல்லாம் கொண்டாட்டம். இவளுக்கோ தள்ளாமை; ஒண்ணுமே செய்ய முடியலையேன்னு வருத்தம். எப்பவுமே சமைக்கிற ஒரு பிடி சோறை பகவானேன்னு நிவேதனம் செஞ்சுட்டுத்தான் சாப்பிடுவா. இன்னைக்கு ஒண்ணும் விசேஷமா செய்ய முடியலே. இந்த வருத்ததோடயே தாமிரபரணில குளிக்கப்போனா. குளிச்சு கரையேறினப்பறம் அரச மரத்தடில இருந்த பிள்ளையாரை பாத்தா. உனக்கு ஒண்ணுமே இன்னைக்கு செய்ய முடியலியேன்னு வருத்தத்தோட சொன்னா. அங்கே யாரோ விட்டுப்போன ஒரு மண்கலயம் கிடந்தது. அதை எடுத்து நல்லா சுத்தம் பண்ணி ஆத்துத்தண்ணிய மொண்டு பிள்ளையார்கிட்ட வெச்சா. பகவானே! என்னால் முடிஞ்சது இவ்ளோதான்னு சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டா.

'இப்ப பிளையார் நிறைய இடங்களில நிவேதனம் பண்ண விதவிதமான பக்‌ஷணங்கள், கொழுக்கட்டை, இட்லி, சுண்டல்ன்னு நிறைய சாப்டு களைப்பாயிட்டார். தாகம் எடுத்தது. சுத்தி முத்தி பாத்தார். இவ்வளோ நிவேதனம் நடந்தாலும் தண்ணி மட்டும் யாரும் நிவேதனம் செய்யலையாம். அப்பதான் பாட்டி தண்ணி கலயத்த வெச்சுட்டுப்போனா. பிள்ளையாருக்கு ஒரே சந்தோஷம்! எடுத்து மடக் மடக்குன்னு குடிச்சார். ஏவ்ன்னு ஏப்பம் விட்டார். பாட்டிக்கு தானா அவரோட அருள் கிடைச்சுடுத்து.'

'அப்ப இப்படி விஸ்தாரமா பூஜை செய்யறது, நிவேதனம் எல்லாம் தேவை இல்லையா?'

'தேவை இல்லைன்னு நான் சொல்லலையே? யார் யாரால என்ன முடியுமோ அவ்வளவு செய்யட்டும். பகவான் என்ன செஞ்சேன்னு மட்டும் பார்க்கிறதில்லை. உன்னால் என்ன முடியும், உனக்கு இருக்கிற லிமிடேஷன் என்ன, உன் மனசு எப்படி இருக்குன்னுதான் பார்க்கிறார்.'

இளைஞன் யோசித்தான். என்னால் முடிஞ்சத இன்னைக்கு பண்ணேன் என்று நினைத்தான். ஆறுதலாக இருந்தது.

திரும்பிப்பார்க்கவில்லை. அவர் அங்கே இன்னும் இருக்க மாட்டார் என்று தெரியும்!