Pages

Showing posts with label காஶி_யாத்திரை.. Show all posts
Showing posts with label காஶி_யாத்திரை.. Show all posts

Wednesday, June 1, 2022

காஶி யாத்திரை - 6




ஒருவழியாக பிராமணர்கள் சாப்பிட்டு முடித்ததும் உபசாரங்களை முடித்து அடுத்து தனுஷ்கோடியில் எடுத்த மண்ணை பாகம் செய்தோம். சேது மாதவர் பிந்து மாதவர் வேணி மாதவர் என்று பிரித்து எல்லோருக்கும் பூஜை செய்து பிந்து மாதவரை வாத்தியாரிடம் கொடுத்துவிட்டேன். சேது மாதவரை கடலில் கரைக்க சொல்லி அவர் என் பிள்ளையிடம் கொடுத்துவிட்டார். வேணி மாதவரை கொண்டுபோய் உலர்த்தி வைத்துக்கொள்ள சொன்னார். நீங்கள் சாப்பிட்டு வாருங்கள் நான் போய் படுக்கிறேன் என்று படுக்கப் போய்விட்டார். பாவம். நாங்கள் சாப்பிட்டு முடித்து மணி 2 போல் ஆகிவிட்டது என்பதால் அவரை எழுப்பி தானங்களை ஆரம்பித்தோம். முந்தைய நாள் தீர்த்த ஸ்நானம் செய்த ஒவ்வொன்றுக்கும் சாத்குண்யமாக ஒவ்வொரு தீர்த்தத்துக்கு ஒவ்வொரு விஷயம் தானம் சொல்லியிருக்கிறது. அதன் பட்டியல் பின்வருமாறு:

அக்னி தீர்த்தம் - ஜல பாத்திரம்
மஹாலக்‌ஷ்மி தீர்த்தம் - முத்து மாலை
சாவித்ரி, காயத்ரி, ஸரஸ்வதி தீர்த்தங்கள் - சந்தனம் மஞ்சள் குங்குமம்
ஶங்க தீர்த்தம் - ஶங்கு
சக்ர தீர்த்தம் - பவள மாலை
சேது மாதவ தீர்த்தம் -ஶாலக்ராமம்
நள, நீல, கவ, கவாக்‌ஷ, கந்தமான தீர்த்தங்கள் - தக்‌ஷிணை
ப்ரம்ஹஹத்தி விமோசன தீர்த்தம் - தில பூரித (எள் நிரப்பிய) பாத்திரம்
சாத்யாம்ருத தீர்த்தம் - நெய் நிரப்பிய வெண்கல பாத்திரம்
ஸர்வ தீர்த்தம் -அன்ன தானம்
ஶிவ தீர்த்தம் - ஶிவலிங்கம்
கங்கா தீர்த்தம் -சந்தனம் நிரப்பிய வெள்ளி பாத்திரம்
யமுனா தீர்த்தம் - துகூல வஸ்த்ரம் (நீலம் அல்லது சிவப்பு வஸ்த்ரம்)
கயா தீர்த்தம் -தேன் நிரப்பிய வெண்கல பாத்திரம்
ஸூர்ய, சந்த்ர தீர்த்தங்கள் - நவக்ரஹ தான்யங்கள்
கோடி தீர்த்தம் - பாதுகை
தனுஷ் கோடி தீர்த்தம் - தங்கம்


இப்படியாக தானங்களை செய்து முடித்தோம். சிலதுக்கு பிரதிநிதியாக தக்‌ஷிணை கொடுத்தோம். பையர் போய் கடலில் போட வேண்டியவைகளை போட்டு விட்டு வந்தார். பித்ரு சேஷம் முதலியவற்றை அப்படி செய்ய சொல்லி இருக்கிறது.
ஒருவழியாக ராமேஸ்வரம் யாத்திரை பூர்த்தி ஆயிற்று. உடம்பு முடியாமல் போய் படுத்துக் கொண்டேன். பையரும் நாட்டுப்பெண்ணும் 4 மணி போல ரயில் ஏறி அவர்கள் ஊர் நோக்கி போய்விட்டனர். நாங்கள் இரவு 8 மணி போல் ரயில் ஏறி அதிகாலை 4 மணிக்கு விழுப்புரம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து காரில் வீட்டுக்கு.
முதல் கட்டம் முடிந்தது.


Saturday, May 28, 2022

காஶி_யாத்திரை - 4




 

தனுஷ் கோடியிலிருந்து அக்னி தீர்த்தத்துக்கு போனோம். உச்சரிப்பு பிழையுடன் நகராட்சி மாஸ்க் போட்டுக்கொள்ள மக்களை வலியுறுத்திக்கொண்டு இருந்தது. கேட்பார்தான் இல்லை. போட்டுக்கொள்ளாவிட்டால் அபதாரம் வசூலிப்பார்களாம். யாரும் சட்டை செய்யவில்லை.

படத்தில்: தனுஷ்கோடியில் பூஜை செய்த அத்தி ஆஞ்சனேயர் கோவில் அக்னி தீர்த்தம் போகும் வழியில்...

வாத்தியார் அங்கே மற்றவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு போய்விட்டார். அவர் அங்கே சங்கல்பாதிகள் செய்து வைத்து விட்டு எங்களை தீர்த்தங்களில் ஸ்நாநம் செய்து வைக்க இன்னொருவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு போய்விட்டார். அக்னி தீர்த்தம் என்பது இப்போதைய கடல் எல்லைக்கு உள்ளேஏஏஏ இருந்ததாகவும் கடல் உள்ளே வந்துவிட்டதால் அதையே அக்னி தீர்த்தம் என்பதாகவும் சொல்கிறார்கள். புதிய வாத்தியார் எங்க்ளை அழைத்துப்போய் ஒவ்வொரு தீர்த்தமாக நீர் முகர்ந்து எங்களுக்கு அபிஷேகம் செய்தார். எல்லா ஸ்நானமும் முடிந்து வாத்தியாரின் வீட்டுக்குப்போனோம். மணி ஒண்ணரையோ என்னவோ. சில ப்ராம்ஹணர்கள் காத்திருந்தார்கள். மாத்யான்ஹிகம் முடித்து என்னப்பா என்றால் இன்னும் ரெண்டு பேர் வரணும் என்றார்கள்.

அன்றைக்கு ஷன்னவதி ஶ்ராத்த நாள். நான் அப்போது அவற்றை தர்ப்பணமாக செய்ய ஆரம்பித்து இருந்தேன். ஆகவே அதை செய்து விட்டு பார்த்தால் இன்னும் அந்த 2 பேரை காணவில்லை. ஒருவர் ஆரம்பத்தில் இருந்து எப்போ ஆரம்பிக்கப்போறோம் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். இதோ இதோ என்று போக்கு காட்டிக்கொண்டே இருந்தார் வாத்தியார்.

ஹிரண்ய ஶ்ராத்தம் என்பதால் முதலில் பிண்ட ப்ரதானம் முடித்தோம். அந்த ரெண்டு பேரை இன்னும் காணவில்லை. ஒருவர் தர்ப்பணம் பண்ணிக்கொண்டு இருக்கேன்; தோ வரேன் என்றார். அந்த நேரம் அந்த இன்னொருவர் வந்து சேர்ந்தார். ஆரம்பிக்கப் போறோமா என்று கேட்டால் 'இல்லை, அந்த இன்னோருத்தர் வரட்டும், எனக்காக கொஞ்சம் காத்திருங்க' என்றார் வாத்தியார்.

இவ்வளவு நேரம் காத்திருந்த அந்த ப்ராம்ஹணருக்கு கோபம் வந்துவிட்டது. வெளியே போய் தன் வண்டியை எடுத்துக்கொண்டு போயே விட்டார்! என்னப்பாது என்றாலும் ஒண்ணும் செய்ய முடியாது என்றார் வாத்தியார்

 இன்னும் காத்திருந்து காத்திருந்து .... என்னப்பா மணி ரெண்டரை ஆகிறது; இவ்வளவு லேட்டாக செய்யக்கூடாது என்றே இருக்கே? என்று நான் கேட்க ஒரு வழியாக இரண்டு கூர்ச்சங்கள் போட்டு ஆரம்பித்தார். இதை முதலிலேயே செய்திருக்கலாம்.

வஸ்த்ரங்கள் உட்பட்ட உபசாரங்கள் ஆரம்பித்து நடக்கும்போது அந்த ப்ராம்ஹணர் வந்து சேர்ந்தார். வாத்தியார் சொன்னபடி அவர் சார்பாக போட்ட கூர்ச்சத்தை எடுத்து அவரிடன் கொடுத்தேன். கோபித்துக்கொண்டு போய்விட்ட ப்ராம்ஹணர் ஸ்தானத்தில் வாத்தியாரே உட்கார்ந்துவிட்டார். பித்ரு வர்க்கம், மாதா வர்க்கம், சபத்னீக மாதாமஹ வர்க்கம், காருண்ய பித்ரு, ஶ்ராத்த சம்ரக்‌ஷக மஹா விஷ்ணு என ஒருவர் - இப்படியாக ப்ராம்ஹணர்கள். பார்வண ஶ்ராத்தத்தை பார்க்கில் குறைந்த உபசாரங்கள் என்றாலும் நிறைய பேர் இருப்பதால் கூடுதல் நேரம் ஆகிவிடுகிறது. அவர்கள் சாப்பிட்டு முடித்து உபசாரங்கள் செய்து வழியனுப்பி விட்டு நாங்கள் சாப்பிட உட்காரும்போது மணி 4.

சர்க்கரை வியாதி இருக்கிற மனுஷன் என்ன செய்வது? காலை ஒரு கஞ்சி, பின் ஒரு காபி தவிர ஒன்றுமில்லை. காலையில் மருந்து சாப்டாமல் தவிர்த்துவிட்டேன். சாப்பிட்ட பின் காலை மதியம் டோஸ் இரண்டைஉ ஒன்றாக போட்டுக்கொண்டு இரவு தவிர்த்துவிட்டேன். 4 மணிக்கு சாப்பிட்டு விட்டு இரவு என்னத்தை சாப்பிட? பால் மட்டும் குடித்தேன் என்று நினைக்கிறேன்.

செம வெயில். வேணி மாதவரை உலர்த்தி துணியில் முடிந்து வைத்துவிட்டேன். ஊருக்குப்போனதும் பித்தலை சம்புடம் வாங்கி அதில் வைத்துக்கொள்ள சொன்னார்கள்.

முந்தைய நாள் மாலை ஔபாசனம் செய்ய முடியாமல் விச்சின்னம் ஆகிவிட்டது. காலை முதலில் அதை புதுப்பித்துக்கொண்டேன். தொடர்ந்து வைத்துக்கொள்வது சிரமம் என்பதால் ஸமித்தில் ஆரோபணம் செய்து பயன்படுத்தினேன்.

ஜன்னலை சாத்தினால் புழுக்கம் திறந்தால் பூச்சிக்கடி என்று இருந்தாலும் அயற்ந்து தூங்கிப்போனேன்.

இப்படியாக முதல் நாள் கர்மா நடந்து முடிந்தது.


Thursday, May 26, 2022

காஶி_யாத்திரை - 3




  ஸ்நான சங்கல்பம் செய்து வபனத்துக்கு கிளம்பினேன். 
 

 

 

ராமேஸ்வரத்தில் எல்லாமே விலைவாசி அதிகம் போலிருக்கிறது. லக்‌ஷ்மண தீர்த்தத்தின் பக்கத்திலேயே முடி நீக்க இடம் இருக்கிறது. ஆனால் நாவிதரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பெரியவரை கூப்பிடு என்று ஆளுக்காள் ஏவி கொஞ்ச நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டார். எவ்வளவு வேண்டும் என்று கேட்டால் கூசாமல் 500 ரூபாய் என்று சொன்னார். எனக்கு சரியான அதிர்ச்சி. பிறகு வாத்தியார் பையனிடம் எவ்வளவு வாங்கி கொடுத்தார் என்று எனக்கு தெரியவில்லை. கேட்டுக் கொள்ளவும் இல்லை. அங்கேயே குளித்துவிட்டு சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்து எடுத்து ராமர் தீர்த்தத்துக்கு போனோம். அங்கேயும் சங்கல்ப ஸ்நானம். முடித்து எதிரே ராமர் கோவிலுக்குப்போய் தர்சனம் செய்தோம். பின் தனுஷ்கோடிக்கு கிளம்பினோம். போன முறை என் தாய் தந்தையருடன் போனபோது தனுஷ்கோடிக்கு ஜீப்பில் தான் போக வேண்டி இருந்தது. ஆனால் இந்த முறை அருமையான சாலை போட்டுவிட்டார்கள். இருந்தாலும் இந்த சாலை மிகவும் கஷ்டத்தில் பிழைத்து இருக்கிறது என்று தோன்றியது.

 

 அதை போட்ட போது பார்த்த வீடியோ வீடியோவில் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் வித்தியாசம் நன்றாக தெரிந்தது. சுருக்கமாக பக்கவாட்டில் இருக்கும் சாலையின் பக்கவாட்டில் இருக்கும் கருங்கற்கள் நழுவி என்று பல பிரச்சனைகள். இருந்தாலும் சாலை கெட்டுப்போகாமல் பராமரித்துக் கொண்டு இருக்கிறார் இருக்கிறார்கள். தனுஷ்கோடி டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிவிட்டது. ஆகவே ஸ்நானம் மண் கிரகிப்பது போன்றவை சுமார் ஒரு கிலோமீட்டருக்கு முன்னாலேயே செய்யப்படுகிறது.

 மற்ற இடங்களைப்போல் தனுஷ்கோடியில் நேரடியாக நீரில் இறங்கி ஸ்நானம் செய்ய கூடாது. அங்கே முதலில் மணலில் வில் வரைந்து ராமருக்கு பூஜை செய்து அதன் பின்னரே தண்ணீரில் இறங்க வேண்டும். தம்பதிகளாக இறங்கி 36 முக்கு போட்டோம்! கேசவாதி நாமங்கள் 12 ஐயும் மூன்று முறை சொன்னது நினைவிருக்கிறது என்கிறார் பையர்இதற்குப் பின்னால் அங்கிருந்து மண் சேகரித்து ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு திரும்பினோம். இங்கேயும் நீங்கள் முன்னால் போங்கள் நான் 2 வீலரில் வருகிறேன் என்று சொன்ன வாத்தியார் வந்து சேர தாமதமானதால் அரை மணி வீணாயிற்று.

 தனுஷ்கோடி போகும் வழியில் பாதிக்கு மேல் மொபைல் சிக்னல் இல்லை. அப்படி வேண்டும் என்றுதான் விட்டு வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. டிரைவரிடம் கேட்டபோது தன்னுடைய செல்போனை சிரித்துக்கொண்டே காட்டினார். ஜியோ ஸ்ரீலங்கா என்று காட்டியது!

 

 



 

Tuesday, May 24, 2022

காஶி_யாத்திரை. -1




காசி யாத்திரை என்று சொன்னால் அது ஒரு நீண்ட பயணம். வீட்டில் சங்கல்பம் செய்து கிளம்பி முதலில் ராமேஸ்வரம் சென்று அங்கே தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து மணல் சேகரிக்க வேண்டும். அதில் வேணி மாதவன் பிந்து மாதவர் சேது மாதவர் என்று மூன்றாக பிரித்து பூஜை செய்து சேதுமாதவரை வாத்தியாரிடம் கொடுத்து விட்டு, மீண்டும் அவரை அவரை உலர்த்தி மூட்டையாக கட்டிக்கொண்டு எடுத்து அடுத்து த்ரிவேணிக்கு செல்ல வேண்டும். அங்கே திரிவேணியில் முண்டனம் செய்துகொண்டு சங்கல்ப ஸ்நாநம் செய்து வேணி மாதவரை அங்கே கங்கையில் சேர்க்க வேண்டும். அந்த இடத்திலிருந் கங்கை நீரை சேகரித்துக்கொண்டு அடுத்து காசிக்கு செல்லவேண்டும். அங்கே கர்மாக்களை முடித்து கயை செல்ல வேண்டும். பிண்டதானங்களை முடித்து மீண்டும் ராமேஸ்வரத்திற்கு செல்ல வேண்டும். நாம் த்ருவேணியில் சேகரித்த அந்த கங்கை நீரை அங்கே ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக கொடுக்க வேண்டும். சுருங்கச்சொல்ல இப்படியாக காசி யாத்திரை பூர்த்தி ஆகும்.
இரண்டு வருடங்களுக்கு முன் என் தாயார் தவறிவிட்டார். 2021 மார்ச் மாதம் என் தந்தையும் தவறிவிட்டார் இருவருடைய அந்திம காரியங்களை முடித்து தந்தையின் வருட பூர்த்தி சிராத்தத்தை முடித்து பின்னர் காசி யாத்திரை கிளம்பினோம். வடக்கே வெய்யில் அதிகமாகிவிடும் என்பதால் முடிந்தவரை சீக்கிரம் போக வேண்டும் என்று என்று நினைத்தோம் புது வருடம் துவங்கும் வரை கிளம்புவதற்கு முடியவில்லை. என் மகனே ராமேஸ்வரத்தில் காசியிலும் தெரிந்தவர்கள் இருப்பதால் ஏற்பாடுகளை கவனித்தான். அவனே பயணத்திற்கான பயணச்சீட்டு களையும் முன்பதிவு செய்தான்.
கிளம்பும் முன் வீட்டில் எங்கள் வாத்தியார் இஷ்டி முடித்து க்ருத (Grutha) ஶ்ராத்தம் செய்து வைத்தார்.
பிறகு நாங்கள் ராமேஸ்வரத்திற்கு கிளம்பினோம். கடலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அரை மணி நேரம் முன்பாகவே போய் சேர்ந்து விட்டோம். பயணத்தின் டிக்கட்டுகள் முக்கால்வாசி ஆர் ஏ சி என்றே இருந்தன. இந்த டிக்கெட்டுகளும் அவ்வாறே. முந்தின நாள் இவை முன் பதிவாக மாற்றப்பட்டன. இந்த டீ கோச் எங்கே வருகிறது என்று சரியாக தெரியவில்லை. எங்கள் மருத்துவமனை உதவியாளர் அங்கே கடைகளில் விசாரித்ததில் அது எங்கே வேண்டுமானாலும் வரும் என்று தெளிவாக உதவிகரமாக சொன்னார்கள். பின்னர் அனேகமாக இந்த இடத்தில் என்று சொன்ன பிறகு அங்கே போய் நின்றோம். கூரை கிடையாது. ஆனால் ரயில்வே டிஜிட்டல் இன்டிகேட்டர் அந்த இடம் வேறு பெட்டி என்று சொன்னது. அது எந்த இடம் என்று காட்டுகிறதோ அங்கே போகலாம் என்று நான் சொன்னது நிராகரிக்கப்பட்டது. நான் சின்னப்பையனாக இருந்தபோது 5 பெட்டிகள் இருந்தால் அதிகம். இப்போது சர்வ சாதாரணமாக 20 பெட்டிகள் இருக்கின்றன. எங்கே வரும் என்று தெரியாவிட்டால் எங்கே போய் நிற்பது? நடுவில் நிற்க வேண்டும் போல் இருக்கிறது எந்த பக்கம் வந்தாலும் அந்த பக்கம் போய்க் கொள்ளலாம், ஆனால் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுவதாக இருக்கிறது. ரயில் கொஞ்சம் லேட்டாக வந்தது. நினைத்தது போல நாங்கள் நின்ற இடமில்லை. அது இன்னம் பின்னால் போய்விட்டது. உதவியாளர்கள் இருந்ததால் லக்கேஜை ஏற்ற முடிந்தது. இரண்டு நாட்களுக்கு அப்படி என்ன பெரிய லக்கேஜ் என்று கேட்கிறீர்களா? கேட்கக் கூடாது. என்னதான் சொன்னாலும் வீட்டுப் பெண்கள் அப்படித்தான் எக்கச்சக்கமாக எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்கள். பல விஷயங்களை இங்கிருந்து கொண்டு போக வேண்டியிருந்ததால் இது குறித்து ஒன்னும் சொல்ல முடியவில்லை.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிரத்தையுடன் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பல விஷயங்கள் தங்கும் இடத்தில் கிடைக்காது என்று புரிந்து கொள்ள வேண்டும் நாம். கிடைப்பது நாம் பழகிய படி இருக்காது. வாத்தியார் என்ன சொல்கிறாரோ செய்கிறாரோ அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டு கிளம்புபவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் நாங்கள் பார்வணவிதான சிராத்தம் செய்யவேண்டும் என்று நினைத்ததால் அதற்குத் தேவையான விஷயங்களை இங்கிருந்தே கொண்டு போக வேண்டி இருந்தது. அப்படியும் அங்கே சில விஷயங்கள் சரியாக கிடைக்காமல் தடுமாற வேண்டி இருந்தது.
-தொடரும்