Pages

Thursday, February 23, 2017

அந்தணர் ஆசாரம் - 12




ஸந்த்யாவந்தனம்
நக்ஷத்திரங்களின் ஒளி மறைவதில் இருந்து ஸூர்யோதயம் ஏற்படும் வரை உள்ள காலம் ப்ராதஸ் ஸந்த்யா எனப்படும். ராத்ரியின் கடைசி யாமத்தில் கடைசி 2 நாழிகைகள் ஸந்த்யையின் ஆரம்ப காலம் என்றும் சொல்லப்படுகிறது. வானத்தில் ஸூர்யனின் மேல் நோக்கிய கிரணங்கள் தெரிந்தால் அது ஸந்த்யையின் முடிவாகும். ஸந்த்யா என்பது காலத்தின் பெயரானாலும் அந்த நேரத்தில் உபாசிக்கப்படும் தேவதையும் அவ்வாறே அழைக்கப்படுகிறது.
காலை ஸூர்யன் உதித்த பிறகும் மாலை அஸ்தமித்தப்பிறகும் சந்த்யா உபாஸனம் செய்யலாகாது. (அது முக்ய காலமில்லை எனக்கருத்து) “ப்ரம்மா, விஷ்ணு, சங்கரன் ஆகியோரே இந்த முக்கிய காலத்தில் சந்த்யையை உபாசிக்கிறார்கள். ப்ராஹ்மணன் எவ்வாறு உபாசிக்காமல் இருப்பான்?” என்கிறார் யோக யாக்ஞவல்கியர்.
ப்ரஹ்ம ஞானிகள் மூன்று வேளை ஸந்த்யானுஷ்டானம் செய்யச்சொல்லுகிறார்கள். இரு ஸந்த்யா வேளைகளும் மாத்யான்ஹிகமும் என்கிறார் அத்ரி. வ்யாஸரோ ஸந்த்யா வேளையில் அனுஷ்டானத்தை செய்யாமல் வேறு எந்த தர்ம காரியத்தையும் செய்யும் ப்ராஹ்மணன் ஆயிரக்கணக்கான நரகங்களில் துக்கத்தை அனுபவிப்பான் என்கிறார். விவேகம் இல்லாமல் சந்த்யையை விடுத்து வேறு காரியத்தில் ஈடு படுபவனை ப்ராஹ்மணர்கள் செய்யும் சகல வைதிக காரியங்களில் இருந்தும் விலக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
ஸந்த்யையை த்ருடமாக நியமத்துடன் உபாஸிப்பவன் சகல பாபங்களில் இருந்தும் விடுபட்டு ப்ரம்ம லோகத்தை அடைவான் என்று எமன் சொல்லுகிறார். சரீரத்தாலும் மனதாலும் வாக்காலும் பகலில் செய்யும் பாபம் ப்ராணாயாமத்துடன் செய்யும் ஸாயம் ஸந்த்யா அனுஷ்டானத்தால் விலகுகிறது. அதே போல இரவு செய்யும் பாபங்கள் காலை செய்யும் சந்த்யா அனுஷ்டானத்தால் விலகுகிறது.
ஸந்த்யா அனுஷ்டான கர்மாவில் அர்க்யம், த்யானம், ஜபம், உபஸ்தானம் ஆகிய நான்கு காரியங்களும் ப்ரதானமானவை, மற்றவை அங்கங்கள் எனப்படுகிறது.
முக்கிய காலத்துக்கு பின் வரும் அரை யாம நேரம் (84 நிமிடங்கள் அல்லது சுமார் ஒன்றரை மணி நேரம்) சந்த்யைக்கு கௌணகாலமாகும். மோசமான சூழ்நிலை, ஜலம் கிடைப்பதில் பிரச்சினை, உடம்பு அசௌகரியம், ஆபத்து ஆகிய காலங்களுக்கு இது பொருந்தும். சோம்பேறித்தனத்தால் முக்ய காலத்தை தவறவிட்டு இந்த நேரத்தில் செய்யலாகாது. வ்யாதி இல்லாமல் நன்றாக இருக்கும் ப்ராஹ்மணன் முக்ய காலத்தில் செய்யாமல் இருந்தால் அவன் பரம பாபியாகிறான். ஸூர்யனை ஹிம்சித்தவனாவான்.
தாரையாக விழும் ஜலத்தில் (இக்காலத்தில் தண்ணீர் குழாய் போல) செய்யக்கூடாது. இரு கைகளாலும் ஜலத்தை எடுத்து காயத்ரியால் அபிமந்திரித்து பசு மாட்டுக்கொம்பு அளவு உயரே எடுத்து அர்க்யம் விட வேண்டும். பொதுவாக ஜலத்திலேயே அர்க்யம் விட வேண்டும். அப்படி இடமில்லையானால் (இந்த காலத்தில் துர்லபமாகிவிட்டது), சுத்தமான தரையில் முன் கூட்டியே ப்ரோக்ஷித்து அங்கே விட வேண்டும். காலையிலும் மாத்யான்ஹிக வேளையிலும் நின்று கொண்டும் மாலையில் உட்கார்ந்து கொண்டும் அர்க்யம் கொடுக்க வேண்டும்.

ஸந்த்யா என்பது ஸூக்ஷ்மமான நேரம். ஆகவே எப்போதும் ப்ராயச்சித்த அர்க்யம் கொடுக்க வேண்டும். பின் ஆசமனம் செய்து ஆத்ம ப்ரதக்ஷிணம் செய்து பின் சற்று ஆத்ம த்யானம் செய்ய வேண்டும். பின் நவக்ரஹங்களுக்கும் கேசவாதி 12 தேவதைகளுக்கும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

No comments: