Pages

Saturday, November 4, 2017

அந்தணர் ஆசாரம் - 22 - ப்ரம்ஹ யக்ஞம்




ப்ரம்ஹ யக்ஞம்
பசுவை முதுகில் சொறிந்து அரச மரத்தை ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்து பெரியோர்களையும் குருவையும் நமஸ்கரித்து பின் ப்ரம்ஹ யக்ஞம் செய்ய வேண்டும்.
சூரிய உதயத்துக்கு பின்பு கிழக்கு, வடக்கு அல்லது ஈசான்ய திக்கை பார்த்து செய்ய வேண்டும்.
கிராமத்தின் வெளியில் அதாவது எங்கிருந்து கிராம வீடுகளின் கூரை தெரியாதோ அங்கு இருந்து கொண்டு செய்ய வேண்டும் என்பது வேதம். தற்காலத்தில் யாரும் அப்படி செய்வதாக தெரியவில்லை. காலையில் செய்வதானால் சந்த்யா, ஔபாசனம் முடிந்த பிறகு சொல்ல வேண்டும் . மாத்யாஹ்ணிகம்/ வைஸ்வதேவம் முடித்த பிறகும் சொல்லலாம். பின் தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். பகல் போஜனத்துக்கு முன் ஜல சமீபத்தில் ஸ்வயம் சுத்தனாய் இருந்து கொண்டு சுத்தமான ப்ரதேசத்தில் வேதம் சொல்வதே ப்ரம்ஹ யக்ஞம் என்கிறார் ஆபஸ்தம்பர்.
ஹாரீதர் இன்னும் விளக்கமாக சொல்லுகிறார். தர்ப்பங்களில் அமர்ந்து தர்பம் தரித்து ப்ரம்ஹ யக்ஞ விதிப்படி செய்ய வேண்டும். ப்ரம்ஹ யக்ஞேன யக்ஷ்யே என்று சங்கல்பம். வித்யுதசி மந்திரத்தால் உள்ளங்கை புறங்கைகளை ஜலத்தால் துடைக்க வேண்டும்.இடது கை கால்களை அலம்பி ஆசமனம் செய்து இரு முறை ஜலத்தால் உதடுகளை சேர்த்துத்துடைத்து தலை கண்கள், மூக்கு, காதுகள், மார்பு இவற்றை ஸ்பர்சித்து , தர்ப்பங்க்களை ஆசனமாக பரத்தி அதில் இடது கால் மீது வலது கால் இருக்கும் படி அமர்ந்து, பவித்ரம் தரித்து யோக வேஷ்டியுடன் கிழக்கு முகமாய் இருந்து ப்ரணவத்துடனும் வ்யாஹ்ருதிகளுடனும் காயத்ரி, வேதாதிகளை சொல்லி பின் வேதத்தை வரிசையாக சொல்ல வேண்டும். முதல் நாள் முடித்த இடத்திலிருந்து அடுத்த நாள் சொல்ல வேண்டும். முடிந்த அளவு சொல்லி பின் நமோ ப்ரஹ்மனே என்ற ரிக்கை மூன்று முறை சொல்லி முடிக்கவேண்டும். பெரியோர்களிடம் நன்கு தெரிந்து கொண்டு செய்யவும்.
வேதம் சொல்ல கால அவகாசம் இல்லாத பட்சத்தில் புருஷ சூக்தத்தை ஜபம் செய்யலாம். வேதம் ஜபித்த புண்ணியம் கிடைக்கும்.
பகலில் செய்ய தவறிய கர்மாவை இரவில் முதல் யாமம் வரை செய்யலாம் என்று இருக்கிறது இல்லையா? ஆனால் ப்ரஹ்ம யக்ஞமும் சூர்ய நமஸ்காரமும் அஸ்தமனத்துக்குப்பின் செய்யலாகாது.

No comments: