முதல் சந்தேகத்துக்கு பதில் சொல்லியாச்சு. இப்ப ரெண்டாவது சந்தேகமான பிரம்மம் மனசுக்கு எட்டுமா எட்டாதான்னு சொல்கிறார்.
புலன்களாலதானே இந்த உலகத்தை அறியறோம். இந்த புலன்களுக்கு அந்தக்கரணமே ராஜா. மனசாகவும் புத்தியாகவும் வெளிப்படுகிற அந்தக்கரணம் உள்ளே தனியாவும், புலன்கள் மூலமா வெளியேவும் செயல்படும். புத்தி எப்பவும் தெளிவானது. கண்ணாடி மாதிரி. அதிலே சத்தாக இருக்கிற கூடஸ்தனோட நிழல் பிரதிபலிக்கும். (கூடஸ்தன்? நினைவிருக்கா? கடல்- கடல் நீர் திவலை மாதிரி பிரம்மம்- கூடஸ்தன்). இப்படி பிரதிபலிக்கிறதாலே அது இயல்பு மாறிடுது இல்லையா? அதனால அதுக்கு ஆபாசன்னு பேர். அந்தக்கரணம் மனசாக இதன் வழியா சஞ்சரிக்கும். அதாவது விஷயங்களோட சம்பந்திக்கும். இந்த சுத்த சத்துவ மனோ விருத்திதான் ஞானம் என்கிறது. இதை ஆழ்ந்து யோசிச்சு புரிஞ்சுக்கணும். (அதுக்காகவே இது சின்ன பதிவு!)
10.
உகற்ப சிருட்டியாய் மனோ உற்பத்தி
முந்திய சங்கை தீர மொழிந்ததை யறிந்து கொள்வாய்
பிந்திய சங்கை தீரப் பேசுமுத் தரநீ கேளாய்
இந்தியங் களுக்கிராச னிதயமா மதினெண் ணங்கள்
புந்தியு மனமு மென்றே புறத்தகத் துலாவி யாடும்
முந்திய சங்கை (பிரமம் வாக்குக்கு எப்படி எட்டும் என்ற சந்தேகம்) தீர மொழிந்ததை அறிந்து கொள்வாய். பிந்திய சங்கை (சுயஞ்சோதியாகிய பிரமம் மனத்துக்கு எட்டும், எட்டாது எவ்விதம்) தீரப் பேசும் உத்தரம் (பதில்) நீ கேளாய்.
இந்தியங்களுக்கு (சர்வேந்திரியங்களுக்கும்) இராசன் இதயமாம். அதன் எண்ணங்கள் புந்தியும் மனமும் என்றே புறத்தகத்து உலாவி ஆடும் (ஆத்ம ஸ்மரணமே மனமும் புத்தியும் ஆகத்தோன்றும்)

