Pages

Friday, February 24, 2012

அண்ணா -3



சதாசிவம் -எம்.எஸ் தம்பதியினரின் ஆதரவு கிடைத்தது.
எம்.எஸ் சம்ஸ்க்ருத பாடல்களையோ அல்லது ஸ்லோகங்களையோ பாடும் முன் இவரிடம் பாடிக்காட்டி உச்சரிப்பை சீர் செய்து கொள்ளுவார். இவருக்குமே சங்கீத ஞானம் நிறையவே உண்டு.
கல்கியில் வேலை பார்த்தார். பல தொடர்கள் பலத்த வரவேற்பை பெற்றன. காற்றினிலே வரும் கீதம் போன்ற தொடர்கள் நான் பள்ளிசிறுவனாக இருந்த போது வந்துக்கொண்டு இருந்தது நினைவிருக்கிறது. எல்லோரும் வியாழக்கிழமைக்காக காத்திருந்து விரும்பிப்படிப்போம். என்னமா எழுதறாண்டா இந்த கணபதி! ஒண்ணுமே புரியலை என்பார் என் எளிய உறவினர் ஒருவர்!

அருள் வாக்கு என்ற பெயரில் மஹா பெரியவா வின் சொற்கள் கல்கியில் இடம் பெற்றன. பின்னால் இவையும் இன்னும் பல விஷயங்களும் புத்தக வடிவாயின. தெய்வத்தின் குரல் என்ற பெயரில் இந்த தொடர் வெளியீடுகள் பலத்தை வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தின.

தெய்வத்தின் குரல் ஒரு ஆச்சரியமான கம்பைலேஷன். பிள்ளையாரைப்பற்றி எழுதுகிறார் என்றால் ஒரு கட்டுரையில் ஒரு கால கட்டத்தில் பெரியவாள் சொன்ன விஷயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதல் சில வரிகள் 1948, அடுத்த சில வரிகள் 1954 இல் உபன்யாசத்தில் சொன்னது, அடுத்து சில வரிகள் 1935 இல் எங்கோ சொன்னது என்று இருக்கும். ஆனால் எல்லாமே ஒன்றாக கோர்ந்து சரியாக விஷயத்தை சொல்லி வரும்.  

இதைப்பற்றி அவரிடம் கேட்ட போது அவர் சொன்னது: “ அதை நான் எழுதலைடா. உட்கார்ந்து எழுத ஆரம்பித்தால் அப்படியே தாரையாக வரும். எழுதிகொண்டே போவேன். சட் என்று நின்று போனால் அவ்வளவுதான். ஒண்ணுமே ஓடாது. இதை அதை படித்துக்கொண்டு இருப்பேன். ரெபரன்ஸ் பார்த்துக்கொண்டிருப்பேன். யார்கிட்டேயாவது போன் பண்ணி விசாரிச்சிண்டு இருப்பேன். என்ன பண்ணினாலும் திருப்பி அதுவா வரும் போதுதான் வரும். எழுதியதுதான் இந்த கை. உண்மையில் எழுதியது பெரியவாதான்.”

No comments: