Pages

Wednesday, July 6, 2016

கிறுக்கல்கள்! - 139





மனத்தளர்ச்சியுடன் ஒரு சீடன் சொன்னான்: “குருவே, என் ஊனங்களால் நான் வாழ்க்கையால் ஏமாற்றப்படுகிறேன்!”
ஏமாற்றப்படுவதா? உன் சுற்றிலும் பார். உணர்வுடன் இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் உனக்கு அளவுக்கு அதிகமாகவே சம்பளம் கொடுக்கப்படுகிறது!”

Tuesday, July 5, 2016

கிறுக்கல்கள்! - 138





ஞானத்தோடு இருப்பது என்றால் என்ன?”
சரியாக பார்ப்பது.”
எதை?”
வெற்றியின் வெறுமையை; சாதனைகளின் சூன்யம்; மனித முயற்சிகளின் அர்த்தமில்லாமையை.”
ஒரு சீடன் பயந்தே போய்விட்டான். “ஆனா இது தோல்வி மனப்பான்மை, மனத்தளர்ச்சி இல்லியா?”
இல்லை! ஆழமான கணவாய் மேலே பறக்கும் பருந்தின் கிளர்ச்சி! சுதந்திரம்!”


Monday, July 4, 2016

கிறுக்கல்கள்! - 137






வரலாற்று ஆராய்ச்சி என்றால் மாஸ்டருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அதன் மாணவர்கள் அது தரும் முக்கிய படிப்பினைகளை உணர்வதில்லை என்று புகார் செய்வார்.
அப்படிப்பட்ட ஒரு சமயம் ஒரு மாணவன் “உதாரணமாக?” என்றான்.
உதாரணமாக ஒரு காலத்தில் மிகவும் முக்கிய பிரச்சினைகளாக இருந்தவை இப்போது வெறும் எழுத்துக்களாக உறைந்து போய்விட்டன. வரலாற்று நாடகத்தில் மகத்தான வீரர்களாக கருதப்பட்டவர்கள் வெறும் பொம்மலாட்டத்தின் பொம்மைகள்தான் என்று இப்போது நமக்குப்புரிவது அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை!”

Saturday, July 2, 2016

கிறுக்கல்கள்! - 136


துக்கத்துக்கு முக்கிய காரணம் ஜனங்கள் துக்கப்படுவது என்று முடிவு செய்து விடுவதுதான்” என்றார் மாஸ்டர். “ அதனால்தான் ஒரே தருவாயில் ஒருவர் சந்தோஷமாகவும் ஒருவர் துக்கத்துடனும் வித்தியாசமாக இருக்கிறார்கள்.”
அவருடைய சிறு குழந்தை கோடை கேம்புக்கு போக விருப்பம் இல்லாமல் இருப்பதை கண்டவர் அவளை கொஞ்சம் உற்சாகப்படுத்த கொஞ்சம் போஸ்ட் கார்ட் வாங்கி தம் முகவரியையும் எழுதி அவளிடம் கொடுத்தார். “தினமும் ஒன்னுத்துல நான் நல்லா இருக்கேன்னு எழுதி போஸ்ட் பாக்ஸ்ல போட்டுடு, அவ்ளோதான்” என்றார்.

குழந்தை “ம்ம்ம்ம் அழுதுண்டு என்கிறதை எப்படி எழுதறது?” என்று கேட்டாள்.

Friday, July 1, 2016

கோளாறான எண்ணங்கள் - லேட்டஸ்ட்!


பாசத்தை விட்டுடு. நடக்கிறதை சினிமா போல பாரு. இந்த உலக நடப்புகள் மித்யா. திரையில் தெரியற சினிமா போல. உண்மைன்னு தோணினாலும் அது உண்மையான உண்மை இல்லை!
ஒரு சாட்சியா நடக்கறதை வேடிக்கை பாரு!

ஆன்மீக பயணத்துல இப்படி அப்பப்ப காதுல விழுந்திருக்கு. லோகத்தில நடக்கிற ஆயிரத்தெட்டு சமாசாரங்களைப்பத்தி கவலைப்படறதுன்னா இந்த ஜன்மம் போறாது. எல்லாம் கர்ம வினைப்படி நடக்கிறதுன்னு புரியற போது, முயற்சி செஞ்சு பாத்ததுல பெரும்பாலான நிகழ்வுகளை “ரைட் நடக்க வேண்டியது நடக்கிறது. இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லே” ந்னு கடந்து போக முடியறது. இது கஷ்டமா தோணினாலும் சாதிக்கக்கூடியதுதான்னு ஒரு நம்பிக்கை பிறந்திருக்கு. சமூக வலைத்தளங்களில பலரும் பல விஷயங்களுக்கும் பொங்கறதைப்பாத்தா ஒரு பக்கம் சிரிப்புதான் வரது. சம்பந்தமில்லாத பலதுக்கும் பொங்கி, சண்டைப்போட்டு நட்புக்களை முறிச்சுக்கக்கூட தயாரா இருக்காங்க! இதையும் கர்ம வினைன்னு தாண்டலாம். ஆனா இது இப்ப புதுசா செய்யற கர்மா; கொஞ்சம் முயற்சி செஞ்சா விலக்கிக்கூடியது. போகட்டும்.

இப்ப என் பிரச்சினையே நடக்கிறதை சினிமா மாதிரி பார்க்க முடியலை; பார்க்கிறது நாடகம் மாதிரி இருக்கே!

என்ன வித்தியாசம் என்கிறீங்களா? சினிமாவில விலகி இருக்கறது சுலபம். எப்ப வேணும்ன்னாலும் இது சினிமா; எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைன்னு நினைவு படுத்திக்கொண்டு அதோட தாக்கத்திலேந்து மீளறது சுலபம். எந்த கதாநாயகன் யார்கிட்ட அடி வாங்கினா எனக்கென்ன? :-) சினிமாவில நாம் வெறும் பார்வையாளர்தான்!

நாடகம் அப்படி இல்லை. அதுல நாமும் ஒரு பாத்திரம். என்னத்தான் கடவுள் என்கிற டைரக்டர் இயக்கறா மாதிரி இயங்கறோம்ன்னாலும் அது நமக்கு புரியறதில்லையே. விலகி இருக்கறது கஷ்டமா இருக்கு. சும்மா இருக்கவும் முடியலை. நாடகத்தில நாமும் ஏதோ செய்ய வேண்டி இருக்கு; வசனம் பேச வேண்டி இருக்கு. இதுக்கான ஸ்க்ரிப்டையும் நம்மகிட்ட கொடுக்கலை! இதுல நாமா செய்யக்கூடியது, பேசக்கூடியது ஏதேனும் இருக்கா என்கிறது அப்பப்ப வந்து போகிற கேள்வி. சந்தர்பத்துக்கு தகுந்தாப்போல (?) எதையாவது உளறிட்டு இருக்கோம்! அது சரியா தப்பான்னு ஒண்ணும் புரியறதில்லே. இதையும் நாமா செய்யலே, நாம் சொல்லறதையும் செய்கிறதையும் அவனே நிர்ணயிச்சு இருக்கான், அவனின்றி அணுவும் அசையாதுன்னு சிலர் சொல்லறது புத்திக்கு தெரிஞ்சாலும் அனுபவத்துக்கு வர மாட்டேன் என்கிறது! ஐயோ இப்படி சொல்லிட்டோமே, செஞ்சுட்டோமேன்னு பச்சாதாபப்படுகிறோம்! இந்த தாக்கத்திலேந்து மீளறது சுலபமா இல்லே! நம்மைவிட விட்றா சூனா பானா ந்னு போறவங்க பரவாயில்லேன்னு தோணறது!

ரமணர் தெளிவா சொல்லிட்டார்! ‘அவரவரது பிராப்த பிரகாரம், அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான். என்றும் நடவாதது என்ன முயற்சிக்கினும் நடவாது. நடப்பதை என்ன தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மவுனமாய் இருத்தல் நன்று’

ம்ம்ம் என்ன செய்யலாம்? மௌனமா ஒரு போஸ்ட் எழுதி போட்டுடலாம். அதையாவது தேத்திப்போம். மத்தபடிக்கு இதுல – இந்த பொலம்பல்ல- என்ன ப்ரயோஜனம்ன்னு புரியலை!