Pages

Wednesday, August 10, 2022

ஶ்ராத்தம் - 51




 
இன்னும் சமையல் சமாசாரங்கள் பாக்கி இருக்கிறது.

கருப்பு உளுந்து, எள், யவை, நெல், கோதுமை, பயறு, கடுகு ஆகியவை ஶ்ராத்தத்தில் பயன்படுத்தலாம். எள் உளுந்து பயறு தவிர்த்த மற்ற கருப்பு தானியங்களை பயன்படுத்தக்கூடாது. கோதுமை, உளுந்து இரண்டையும் அவசியம் பயன்படுத்த வேண்டும்.

வில்வம் நெல்லி திராட்சை பலா மாதுளை இவற்றின் பழங்கள்; குங்குமப்பூ கருவேப்பிலை எலுமிச்சை வாழை இலந்தை திப்பிலி மிளகு புடலை எல்லாவிதமான இனிப்புகள் தரமானவை. சுக்கு ஆகியவை ஏற்றுக் கொள்ளத் தக்கன. பாகற்காய் புடலங்காய் சிலாக்கியம். பசுவின் பால் நெய் காய்கறிகள் தேன் கரும்பு ரசம் வெல்லம் தும்பைப்பூ சிறுகீரை இவை கொடுக்கப்படவேண்டும். இவை அனைத்தும் பித்ருக்களுக்கு திருப்தி தருபவை. பாலுடன் கூடிய சர்க்கரை அவல் அளவற்ற திருப்தி கொடுக்கும். நெய் நிறைய விட வேண்டும். காட்டில் உண்டாகும் பழங்கள் கிழங்குகள் ஆகியவற்றை கொடுப்பது பித்ருக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தரும். முள்ளு கத்தரிக்காய் மிகவும் சிறந்தது.

பசுவின் பால் பாயசம் ஆகியவற்றால் ஒருவருஷம் வரை பித்ருக்கள் திருப்தி அடைகின்றனர். கொடுக்கப்படும் நெல் உளுந்து கிழங்குகள் பழம் ஆகியவற்றால் ஒரு மாதம் வரை அவர்கள் திருப்தி அடைகின்றனர் கருவேப்பிலை தேன் அளவற்ற திருப்தி கொடுக்கின்றன. கொடுக்கப்படும் நெய் ஒரு வருஷம் வரை திருப்தி கொடுக்கிறது. கோதுமை மூன்று வருடங்கள் வரை திருப்தி கொடுக்கும்.

மாமிசம் கொடுப்பது ஷத்திரியர்களுக்கு என்று அறியவும். இந்தப் பட்டியல்களில் மீன் மாம்சம் ஆகியனவும் சொல்லப்பட்டுள்ளன. மேலும் கலியுகத்தில் தடை செய்யப்பட்ட சில பல விஷயங்களில் சிராத்தத்தில் மாமிசம் கொடுப்பதும் ஒன்று.

இவை சிராத்தத்தில் விலக்க வேண்டியவை என்று ஒரு பட்டியலை பார்க்கலாம். எதாக இருந்தாலும் அதை சம்பாதிக்க பயன்பட்ட பணமானது லஞ்சம் முதலியவற்றால் அடையப்பட்டது, பதிதனால் சம்பாதிக்கப்பட்டது, அநியாயமாக சம்பாதிக்கப்பட்டது, பெண்ணை விட்டு கிடைத்தது என்று இருந்தால் சாதுக்கள் இப்படி சம்பாதிக்கப்பட்டவற்றை விலக்க வேண்டும்,

வேதத்தை விற்று சம்பாதிக்கப்பட்டது பெண்கள் சம்பாதித்தது கழுதையால் சம்பாதிக்கப்பட்டது ஆகிய தனமும் கொடுக்க தகுந்தது இல்லை.

கொள்ளு, வரகு - ஶ்ராத்தத்துக்கு உகந்ததல்ல. பெருங்காயம் - சில ரிஷிகள் அதை நிச்சயம் கொடுக்க வேண்டும் என்றும் சில ரிஷிகள் விலக்கு என்றும் சொல்லியிருக்கிறார்கள் ஆகவே எப்படி செய்தாலும் தவறில்லை.

கருப்பு, பச்சை நிறமில்லாத பயறு, மொச்சை, துவரை ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற த்விதளங்களை (dicotyledons, இரண்டாக உடைபடும் தான்யங்கள்) கொடுக்கலாம் . முருங்கையும் மிளகாயும் சிராத்தத்தில் கூடாது. பூசணி, சுரைக்காய், கத்தரி, சிறுகீரை, பூண்டு வகைகள் எருமைப்பால்/ தயிர் ஆகியவையும் விலக்க தக்கன.

தாமிர பாத்திரத்தில் வைத்த/ உப்பு சேர்ந்த பால் கூடாது.

ராத்திரி எடுக்கப்பட்ட தண்ணீர் கூடாது. காலையில் எடுத்தே பயன்படுத்த வேண்டும்.


 

Saturday, August 6, 2022

காஶி யாத்திரை - 36 குடல்வால்





குடல்வால்? அதாங்க அபெண்டிக்ஸ்! :-)
சொல்ல நினைத்த சில விஷயங்கள் விட்டுப்போயின. எதுக்கும் சொல்லிடலாம்ன்னு...
முதலாவது நிவேதனம் குறித்து. முன்னேயே எழுதி இருக்கிறேன். இந்த காசி வாத்தியார் நிறைய கற்றவர். அப்படிப்போன்றவர்கள்தான் வழக்கமாக பையரின் நண்பர்கள். ஆச்சரியமில்லை.
பிண்ட பிரதானம் முடித்து பித்ருக்களுக்கு வடை அப்பம் அதிரசம் என்று நிவேதனம் செய்யச்சொல்லி இருக்கிறது, வழக்கத்தில் இருக்கிறது. இந்த இடத்தில் வாத்தியார் மற்றவர்கள் போலவே ப்ராணாய ஸ்வாஹா என்று ஆரம்பித்தார். முதல் முறை சரி என்று அது போல் செய்துவிட்டேன். இரண்டாம் முறை 'கொஞ்சம் இருங்க. நீங்க சம்ஸ்க்ருதம் படிச்சவர். நிவேதனம்ன்னா என்ன அர்த்தம்ன்னு உங்களுக்குத்தெரியும்தானே? பின்ன இந்த ப்ராணாய ஸ்வாஹா எல்லாம் எங்கே வந்தது?’ என்று கேட்டேன். அவர் 'நீங்க சொல்லறது கரெக்ட்தான். ஆனா பெரியவர்கள் செஞ்சு கொண்டு வந்ததை மாத்த எனக்கு தைரியம் இல்ல. நீங்க உங்க விருப்பப்படி செய்ங்க.’ என்றார். னும் அதிலிருந்து என் வழக்கப்படி நிவேதயாமி என்று காட்டுவதுடன் நிறுத்திக்கொண்டேன்.
இரண்டாவது ... ப்ரயாகை போனதில் இருந்து வயிற்றுப்போக்கு ஆரம்பித்து இரண்டு வாரம் சென்று கடலூர் திரும்பி வேறு மருந்து ஒரு வாரம் சாப்பிட்டுத்தான் சரி ஆயிற்று என்று சொல்லி இருந்தேன். பின்னே இவ்வளவு காரியம் செய்ய எங்கிருந்து சக்தி வந்தது என்று கேள்வி. சரியான கேள்வி!
காலை குடிக்கும் காபி அரை மணியில் வெளியே வந்துவிடும். மதிய உணவும் இரவு உணவும் அப்படியேதான். அந்த அரை மணியில் உடம்பால் என்ன எடுத்துக்கொள்ளப்பட்டதோ அவ்வளவுதான். நிச்சயமாக போறாது.
29-3-2014 இல் கோவையில் ஸ்வாமி ஓங்காரின் ப்ராணக்ரியா பயிற்சி பெற்றேன். உடலில் ப்ராண சக்தியை கூட்டுவதற்கன பயிற்சி அது. திரும்பும் போது அவர் என்னை பஸ்ஸ்டாண்டில் கொண்டு விடுவதாக சொல்லி இருந்தார். அதற்கு அவர் வந்தபோது பேச்சு எப்படியோ ப்ராண சக்தி இருந்தால் உணவு அவசியமா என்று திரும்பியது. அந்த சுவாரசியமான பேச்சில் ஏறத்தாழ பஸ்ஸை கோட்டை விட்டேன்!
இந்த காஶி பயணத்தின் போது நேரடியாக அதை அனுபவித்தாயிற்று. அறுவை சிகிச்சை இரு முறை செய்து கொண்ட நாட்கள் தவிர பயிற்சியை நிறுத்தியதே இல்லை. ‘அது இல்லாமல் என்னால் ஒரு காரியமும் எந்த நாளும் செய்ய முடியாது' என்று சொல்லும் ஒரு நண்பர் எனக்கு இருக்கிறார்.
இந்த ப்ராணக்ரியாதான் எனக்கு தேவையான சக்தியை கொடுத்தது என்றே நம்புகிறேன். ஸ்வாமி ஓங்காருக்கு நன்றி!
அடுத்து ஸ்வாமி ஓங்கார் காஶியில் இயற்கையாகவே மூச்சு இரு நாசிகளிலும் சமமாகப் போய் வரும் என்று சொல்லி இருந்தார். அதை உறுதிப்படுத்திக்கொள்ள நானும் ஆர்வத்துடன் இருந்தேன். முதல் நாளே உண்மைதான் என்று தெரிந்தது. என் ஆச்சரியம் அது கயாவிலும் தொடர்ந்தது. ஸ்வாமிக்கு செய்தி அனுப்பினேன். இல்லை, அது சாத்தியம் இல்லை. காஶியில் அவருடைய ஆட்சிக்கு உட்பட்ட வட்டாரத்தில் மட்டுமே கால பைரவர் அதை அனுமதிப்பார் என்று பதில் வந்தது. ஆனாலும் தொடர்ந்தது. கடலூர் திரும்பிய அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் தியேட்டருக்குள் காஶிக்கயிறை கழட்டிய பின் மாலையில் மூச்சு பழைய படி இருப்பதை உணர்ந்தேன்!
பதிவுகளில் நிறையவே என் மோசமான உடல்நிலை குறித்து புலம்பி இருக்கிறேன் என்று தோன்றுகிறது. மன்னிக்க!

அவ்ளோதான்.
இப்போ நிஜமாகவே...
ஶுபம்!

Friday, August 5, 2022

காஶி யாத்திரை - 35 மீண்டும் ராமேஸ்வரம்.




 
மீண்டும் ராமேஸ்வரம் செல்லும் அந்த நாளும் வந்தது. இரவு பத்தரைக்கு ரயில். கடலூர் முது நகர் போய் ஏற வேண்டி இருந்தது. காத்திருந்தோம் காத்திருந்தோம் காத்திருந்தோம்… ஒரு வழியாக அரை மணி தாமதமாக வந்து சேர்ந்தது. ஏறிப்படுத்தோம். நல்ல வேளையாக ஆட்டம் அதிகமில்லை. காலை வழக்கம் போல நான்கு மணிக்கு விழிப்பு வந்துவிட்டது. பாம்பனில் புதியதாக கட்டிக்கொண்டு இருக்கும் பாலத்தை பார்க்க முடிந்தது.
 

 

 

பையர் பாடசாலை பசங்களுடன் முன்னேயே ராமேஸ்வரம் போயாச்சு. பாம்பன் தாண்டும் போது ‘நாங்க தனுஷ்கோடி போறோம்’ வாத்தியார் சிஷ்யன் வந்து ரயில்நிலையத்தில் அழைத்துக்கொள்வார் என்று போனில் சொன்னார். பிரச்சினை ஏதும் இல்லை என்றோம். அதே போல் சிஷ்யர் வந்துவிட்டார். ஆட்டோ பிடித்து முன்னே தங்கின அதே இடத்துக்குப்போய் சேர்ந்தோம். இம்முறை கீழேயே ஒழித்து கொடுத்துவிட்டார்கள். போகும் முன் மருமகள் டிபன் செய்து வைத்துவிட்டு போய்விட்டார்.
11 மணி போல பூஜை ஆரம்பித்தது. 11 பேர் ஶ்ரீருத்ரம் ஜபம் செய்து பின் பூஜை செய்து முடித்து சமாராதனை செய்தோம். உணவு ஏற்பாடு வேறு இடத்தில் இருந்தது. அதனால் பையர் போய் அதை கவனித்தார். வழக்கம் போல கோவில் போவதை அப்புறம் வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போயிற்று. 3 மணிக்கு போகலாம் என்றார்கள்.
பசங்களுக்கு ஃஜூம் இல் உணர்வு சார் நுண்ணறிவு பாடம் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். சரியாக மூச்சுப்பயிற்சி பாடம் அன்று அமைந்தது. நேரிலேயே அவர்களை செய்ய வைத்து புரிய வைக்க முடிந்தது.
வண்டி பிடித்து கோவிலுக்கு போனோம். சிஷ்யர் கூடவே வந்தார். நான் பாட்டுக்கு அனுமாரை பார்த்துக்கொண்டேதான் உள்ளே போனேன். அங்கே இருந்த கல்வெட்டு ஒன்றில் எழுத்துக்களை வெள்ளை பெயிண்டால் எழுதும் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அது என்ன என்று படிக்கப்போய் பெயிண்டர் எக்கச்சக்க எழுத்துப்பிழை செய்திருப்பதை பார்த்து பக்குவமாக சுட்டிக்காட்டி திருத்த வைத்தேன். அவரே குழப்பமாக இருந்த சிலதை இது என்ன என்று கேட்டுக்கொண்டார். இன்னும் 30% வேலை பாக்கி இருந்தது. திரும்பும் போது பார்க்க வேண்டுமென்று நினைத்து கடைசியில் மறந்து போயிற்று! இந்த காலத்தில் எழுத்தறிவு இல்லாமலா இருக்கிறார்கள் என்று ஆச்சரியம். எழுத்துக்கள் மறைந்து கொண்டிருந்தாலும் தமிழ் தெரிந்தால் கண்டுபிடித்துவிடும் அளவில்தான் இருந்தது. இப்போது எந்த அளவில் இருக்கிறதோ! யாரும் போனால் பார்த்துச்சொல்லுங்கள்.
100 ரூபாய் டிக்கட் வாங்க சிஷ்யர் போனார். நேரமாகிறதே என்று பதஞ்சலியை பார்க்கபோய்விட்டேன். பசங்களையும் கூப்பிட்டு காட்டினேன். அங்கேயே பக்கத்தில் ஜோதிர்லிங்கத்தையும் தரிசித்தோம்.
சிஷ்யர் வர வெகு நேரமாயிற்றூ. என்னடா என்று பார்த்தால் 100 க்கு பதில் 200 டிக்கட்டை டிக்கட் கொடுப்பவர் கிழித்துவிட்டு அதை யார் தலையில் கட்டலாம் என்று பார்த்துக்கொண்டிருந்தார் போலிருக்கிறது! யாரும் வாங்கவில்லை என்று எங்கள் தலையிலேயே கட்டிவிட்டார். நாராயணா என்று வாங்கிக்கொண்டு நகர்ந்தோம்.
நிதானமாக வெளியே பசங்களுக்கு சுற்றிக்காட்டிக்கொண்டு மீண்டும் சேது மாதவரையும் தரிசித்து சந்நிதிக்குப்போய் சேர்ந்தோம். அர்ச்சகர் கொஞ்சம் இருங்கள் கூட்டம் சற்று குறையட்டும் என்றார்.
பேரன் இந்த கங்கை நீர் பாத்திரம் மூடியிருக்கிறதே என்ன செய்வார்கள் என்று கேட்டான். சாதாரணமாக சூடு வைத்தால் ஈயம் உருகி மூடி கழன்றுவிடும். நாங்கள் வீட்டில் அனல் வைத்து பிரித்திருக்கிறோம். அனேகமாக இங்கே கொடு வாளால் மூடியை வெட்டி அபிஷேகம் செய்வார்கள் என்று பிசிக்ஸ் பாடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். அர்ச்சகர் வந்து சங்கல்பம் செய்துகொண்டு கங்கை சொம்பை வாங்கிக்கொண்டு போனார். போகும் வழியிலேயே இடது கையில் சொம்பை வைத்துக்கொண்டு வலது கையை தட்டையாக வைத்துக்கொண்டு ஓங்கி அறைந்தார். மூடி சுத்தமாக கழன்றுக்கொண்டு வந்துவிட்டது! அதே மூவ்மெண்டில் அதை பிடித்து எறிந்தார். மொத்தம் 2 வினாடி கூட ஆகவில்லை! அபிஷேகத்துக்குப்போய்விட்டார்! நான் புதிய பிசிக்ஸ் பாடம் கற்றுக்கொண்டேன்.
மனம் நிறைவாக தரிசனம் செய்து திரும்பினோம். அம்பாள் சந்நிதிக்குபோய் சுற்றும் முற்றும் தரிசனம் செய்தோம். பேத்தி அபிராமி அந்தாதி பாடினாள். திரும்பினோம். ஹனுமார் எதிரில் நின்றார்கள். நான் தரிசனம் பண்ணிவிட்டேன் என்றேன். இல்லை இவரை கடைசியாகத்தான் பார்க்க வேண்டும் என்றார்கள். அனுமார் 18 அடி ஒசரம். பத்தடி பூமிக்கு அடியிலே இருக்கார் என்று சிஷ்யர் சொன்னார். ஓஹோ என்று கேட்டுக்கொண்டு வெளியே வந்தோம். மற்றவர்கள் இன்னும் எங்கோ போக வேண்டும் என்று திட்டமிட நானும் மனைவியும் இருப்பிடத்துக்கு திரும்பலானோம்.
நான் தனுஷ்கோடியில் பல ஆண்டுகள் முன் வைத்து பூஜை செய்த அனுமாரை பார்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன். அதனால் ஆட்டோ ட்ரைவரிடம் சிஷ்யர் பேசி வைத்து இருந்தார். போகும் வழியில் இல்லத்தரசி தன் எல்லாம் கொள்ளும் மஹராஜன் கப்பலை துழாவிவிட்டு ஃபெப்ரக்ஸ் ப்ளஸ் வாங்கணும் என்றார். ட்ரைவரிடம் சொன்னேன். அவர் சரி என்று சொல்லிவிட்டு கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு நாற்சந்தியில் நிறுத்திவிட்டார். இந்த 30 அடி நேராக போய் இடது பக்கம் திரும்பினால் முதல் கடை மருந்துக்கடை என்றார். மனைவியிடம் 50 ரூபாய் நோட்டுதான் இருந்தது. நாலு மாத்திரை போறும் என்றார் மனைவி. சரி என்று போய் வாங்கினேன். கடைக்காரர் சில்லறை கேட்பார் என்று நினைத்தால் அவர் பாட்டுக்கு மீதி சில்லறை எடுத்துக்கொடுத்தார்! பில்லை பார்த்தால் 20 சொச்சம். தூக்கிவாரிப்போட்டது. ஹும்! இவ்வளவு நாளும் சொன்னால் மருந்து வந்துவிடுகிறது என்று நிலையில் விலைவாசியே தெரியாமல் இருக்கிறேன்!
வண்டி கிளம்பியது. ஆச்சரியமாக வெகு நாட்கள் கழித்து பசித்தது. வீட்டில் ஏதேனும் சாப்பிட இருக்கிறதா என்று மனைவியை விசாரித்தேன். இருக்கு. போனதும் கொடுக்கிறேன் என்றார். இந்த பசி அதுவைரை காத்திருக்குமா என்று யோசித்தேன்.
ஆட்டோ அனுமார் கோவில் போய் நின்றது. பூஜை சாமான்களை எல்லாம் வெளி முற்றத்தில் போட்டு ஒரு பெண்மணி தேய்த்துக்கொண்டு இருந்தார். இன்னொரு பெண்மணி பைப் ஹோசில் தண்ணீர் ஊற்றி மண்டபத்தை அலம்பி விட்டுக்கொண்டு இருந்தார். ‘ஸொல்பா அட்ஜஸ்ட் மாடி’ அனுமார்கிட்டே போய் தரிசித்தோம். ப்ரதக்‌ஷிணம் செய்து திரும்பும் வேளை அர்ச்சகர் வந்தார். கொஞ்சம் இருங்கோண்ணா என்று கற்பூரம் ஏற்றிக்காட்டினார். பூஜை சாமான் எல்லாம் தேய்ச்சுண்டு இருக்கா என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் சொன்னார். பரவாயில்லை என்றோம். அந்த சுஷ்கமான பூஜை முடிந்து திரும்பும் போது ‘அண்ணா ப்ரசாதம் சாப்பிடறேளா?” என்று அர்ச்சகர் கேட்டார். தலையாட்டியதும் தொன்னைகளில் (ம்ம்.. இல்லை ப்ளாஸ்டிக் கப்பா? நினைவில்லை) தயிர்சாதம் கொடுத்தார். ‘பகவானே என்னே உன் கருணை!’ என்று நினைத்துக்கொண்டு எடுத்துக்கொண்டேன்.
வீட்டுக்குத்திரும்பினோம். பையர் அண்ட் கோ அடுத்த நாள் ஆதி சேது, தேவிப்பட்டினம், திருப்புல்லாணி போவது என்று திட்டம். நாங்கள் இரவு வண்டியை பிடித்துவிட்டோம். போன முறை விழுப்புரம் போய் இறங்கினோம். கடலூர் வழியில் ரோடு நன்றாக இல்லை என்று சுற்றிப்போக வேண்டி இருந்தது. அதனால் விருத்தாசலத்தின் இறங்கலாம் என்று மனைவி முடிவெடுத்துவிட்டார். காலை 3 மணிக்கு போகும். திருப்பி தூக்கம் பணால். என்னத்த ஆட்சேபணை செய்து என்ன?
இரவு இரண்டரை அலாரம் வைத்து விழித்துப்பார்த்தால் விருத்தாசலம் அவுட்டரில் வண்டி நின்றுகொண்டு இருந்தது. அரை மணி நேரம் சீக்கிரமாக வந்தாச்சு. ஆனால் அங்கேயே மண்டகப்படி போட்டு அரை மணி கழித்துத்தான் ஜங்ஷனுள் விட்டார்கள். அழைத்துபோக வந்திருந்த ட்ரைவர் மானேஜர் இடம் லக்கேஜை கொடுத்து தள்ளாடி காரை அடைந்தோம். பின் கடலூர் வந்து சேர்ந்தோம். அப்பாடா! ஒரு வழியாக தூக்கம் கெட்டுப்போகும் நாட்கள் ஒரு வழியாக முடிவடைந்தன என்று தோன்றியது.
இவ்வாறாக காஶி யாத்திரை பூர்த்தி!
ஶுபம்!

Thursday, August 4, 2022

காஶி யாத்திரை - 34 மீண்டும் கொல்கொத்தா


முதல்முறையாக அகாலத்தில் போய் சேராத ஒரு வண்டியில் பயணித்தேன் பயணித்தோம். கொல்கொத்தா போய் சேரும் போது மணி ஆறு. ஒரு அரை மணி தாமதமாக போகின்றது என்று நினைக்கிறேன்.
இங்கே கூடவந்த உதவியாளர் அஷ்டாவக்கிரன் விடை பெற்றுக் கொண்டார். அவருடைய சகோதரி வீட்டுக்கு போய்விட்டு தான் திரும்பிக் கொள்வதாக முன்னாலேயே சொல்லியிருந்தார். அதற்காக முந்தின நாளே அவருக்கான சம்பாவனையை கொடுத்துவிட்டோம்.
நாங்கள் எல்லோரும் ஏற்பாடாகியிருந்த ஒரு பெரிய வண்டியில் கிளம்பி கொல்கத்தா நண்பர் வீட்டுக்குப் போனோம். குளித்து டிபன் சாப்பிட்டு விட்டு நல்ல அசதியில் தூங்கினேன். மதிய உணவு முடித்து மீண்டும் ஓய்வு எடுத்தோம். அரவிந்தனை நண்பரின் சகோதரர் ரயில் ஏற்றிவிட்டார். மாலை ஏழரை மணிக்கு விமானம். ஒரு மணி நேரம் முன்னால் போகவேண்டுமென்று நான்கு மணி போல விமான நிலையத்துக்கு கிளம்பினோம். வாடகை வண்டிக்காரர் ஏசி போடவில்லை. ஏனென்று கேட்டால் அரசு அதை தடைசெய்து இருக்கிறது; இன்னும் கோவிட் முடிந்து அனுமதி கிடைக்கவில்லை என்று பதில் வந்தது. ஆனால் இந்த பிரச்சனை முதல் முறை கல்கத்தா வந்து போனபோதும் இன்று காலை நண்பர் வீட்டுக்கு வந்த போதும் எழவில்லை. கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான்.
மாலை நேர கல்கத்தா போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டுக் கொண்டோம். நான் முன்பக்கம் டிரைவர் இருக்கை பக்கத்தில் உட்கார்ந்து இருந்தேன். அவருடைய அலைபேசியில் முன்னே ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சு என்றெல்லாம் இல்லாமல் அரை மணி நேரம் தொடர்ந்து 19 கிலோமீட்டர் போகவேண்டிய தூரம் என்று காட்டிக்கொண்டிருந்தது. எட்டு கிலோமீட்டர் வந்தாலும் அதே தான் காட்டிக் கொண்டிருக்கிறது. என்னப்பா இது என்று கேட்டால் அவர் பார்த்துவிட்டு ஓ, தொலைதொடர்பு பிரச்சனை என்று சுலபமாக முடித்தார். நேரம் ஆக ஆக கொஞ்சம் பதட்டம் அடைவோமோ என்று தோன்றிக் கொண்டிருந்தது. நேரம் பாட்டுக்கு போய்க்கொண்டிருந்தது. ஆனால் போக வேண்டிய தூரமோ குறையவே இல்லை. என்னுடைய அலைபேசியில் கூகுள் படத்தை கிளப்பி பார்த்துக்கொண்டிருந்தேன். அதிக நேர அவகாசம் இல்லாமல் போய் சேருவோம் என்று தோன்றியது. அதேபோல நாங்கள் போய் சேர்ந்த போது உத்தேசித்த நேரத்துக்கு 10 நிமிடம் தான் இருந்தது. அவசரம் அவசரமாக உள்ளே போனோம். போன பிறகுதான் அவசரப்பட்டு இருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை என்று தெரிந்தது. விமானம் தாமதமாக கிளம்பும் என்று அறிவிப்பு பார்த்தேன். காத்திருந்து காத்திருந்து கடைசியில் இரண்டு மணி நேரம் தாமதமாக ஒன்பதரைக்கு கிளம்பியது.
கொரோனாவில் அடிவாங்கிய விமான கம்பெனிகள் எங்கே காசு பார்க்கலாம் என்று தேடுகிறார்கள். இந்த இருக்கை வேண்டும் என்றால் கூடுதலாக கட்டணம் என்கிறார்கள். பொதுவாக ஜன்னல் ஓரம் அல்லது நடைவழி ஓரம் விரும்புகிறார்கள் என்பதால் காசு கூடுதலாக கட்டாதவர்களுக்கு நடு இருக்கைகளையே கொடுத்து விடுகிறார்கள். இதனால் வழக்கம்போல் ஆளுக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தோம்.
ஒருவழியாக எங்களை அழைக்க விமானத்தில் ஏறுவதற்காக கிளம்பினோம். பின்னால் பார்த்தால் ஒரு நடுத்தர வயது இளைஞரும் இரண்டு சிறுவர்களும் பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். பேச்சு சம்ஸ்கிருதம் பற்றியும் வேதம் பற்றியும் இருந்ததால் ஆச்சரியப்பட்டுக் கொண்டு யார் என்ன என்று விசாரித்தேன். அவர் சென்னையில் பாடசாலையில் நடத்திக்கொண்டிருக்கிறார். வக்கீல் தொழில் புரிகிறார் என்று தெரிந்தது.
பயணம் பற்றி குறிப்பாக சொல்ல ஒன்றுமில்லை. வழக்கம்போல் அகாலத்தில் சென்னை வந்து சேர்ந்தோம். அங்கே வந்திருந்த எங்கள் வண்டியில் எங்கள் உறவினர் வீட்டுக்குப் போய் சேர்ந்தோம். படுக்கையில் விழுந்தேன்.
அடுத்த நாள் காலை ஆறு மணி போல் எழுந்து காலைக்கடன்களை முடித்து சிற்றுண்டி முடித்து ஊருக்கு கிளம்பி விட்டோம். மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டோம். இப்படியாக காசி யாத்திரையின் இரண்டாவது கட்டம் பூர்த்தியாகிறது. அடுத்து கடைசி கட்டமாக ராமேஸ்வரம் செல்ல வேண்டும். இதுவரை பிரயாகையில் கிரஹித்த கங்கை நீருக்கு தினசரி கங்கா பூஜை செய்ய வேண்டும். முதலில் கையோடு கையாக இராமேஸ்வரத்தை முடித்துவிடலாம் என்று நினைத்திருந்தாலும் ராமேஸ்வரம் வாத்தியார் காலநிலை சரியாக இருக்காது என்று சொன்னதால் ஒரு மாதம் கழித்து போவதாக முடிவு செய்து ரயில் இருக்கைகள் பதிவு செய்து இருந்தன.
 

Tuesday, August 2, 2022

காஶி யாத்திரை - 33 கயா- 4



அடுத்த நாள் அஷய்ய வட ஶ்ராத்தம்.
காலையில் நானும் பையரும் சீக்கிரமாகவே கிளம்பி போனோம் . பல்குனி தீர்த்தத்தை கிரகித்துக் கொண்டு அங்கே இருக்கிற கதாதரர் கோவிலை பார்க்க வேண்டுமென்று போனோம். பூ வாங்கிக்கொண்டு போகலாம் என்றேன். ஒரு சிலரே கடை வைத்திருந்தார்கள். ஒருவர் கொஞ்சம் பூ வைத்திருந்தார். அவரிடம் 50 ரூ. க்கு சில்லறை இல்லை. கோவிலுக்கானதை கொடுக்கவா என்று கேட்டார். சரி என்றோம். கொஞ்சம் பூ, சின்ன மாலை, கர்ப்பூரம், நிவேதனத்துக்கு ஒரு பேடா என்று சிலதை கட்டிக்கொடுத்து மீதி சில்லறை கொடுத்தார்!
நடை சார்த்தி இருந்தது. எங்களை பார்த்துவிட்டு எலும்பும் தோலுமாக வறுமை என்று எழுதி ஒட்டி இருந்த கிழவர் ஒருவர் வந்தார். கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு இடத்தை பெருக்கினார். வேலையாள் போலிருக்கிறது என்று நினைத்தேன். பெருக்கிவிட்டு கையலம்பி கதவருகே வந்தார். கதவை மெலிதாக தட்டினார். இரன்டு மூன்று முறை தட்டிவிட்டு அப்புறம் திறந்தார்! அப்புறம்தான் இவர்தான் இங்கே பண்டா என்று தெரிந்தது.
கிழவருக்கும் தெய்வத்துக்கும் இருந்த உறவு புரிந்தது. குழந்தைக்கு செய்வது போல அன்புடன் வாத்ஸல்யத்துடன் செய்தார். சின்ன பூஜை முடித்து பேடா, பூ ஆகியவற்றை பிரசாதமாக கொடுத்தார். கதாதரர் சின்ன மூர்த்தம். அவ்ளோ அழகு! பொதுவாக வட இந்திய கோவில்களில் இப்படி அழகான மூர்த்தங்களை பார்ப்பது அரிது!
 
கதாதரர்


நிறைவான மனத்துடன் திரும்பினோம். வந்த வழியே திரும்பாமல் இடது புறமாகவே போனதில் இன்னும் சில சன்னதிகள் எல்லாம் பார்த்துக்கொண்டு போனோம். கடைசியில் இந்த பாதை நேற்று பார்த்த கல்மண்டபத்தில் கொண்டு வந்து விட்டது. ஈசானாதி சதுர்தச பாதங்களை மீண்டும் மெதுவாக பார்த்துக்கொண்டு இருப்பிடத்துக்கு வந்தோம்.

போக்தாக்களை கொஞ்சம் சீக்கிரம் வர வாத்தியார் சொல்லி இருந்தார். 11 மணி போலவே வந்துவிட்டனர். உபசாரங்கள் முடிந்து ஹோமம் முடிந்து உணவிட்டு எல்லாருக்கும் நன்றி சொல்லி அனுப்பிவிட்டு பிண்டங்களை எடுத்துக்கொண்டு அக்‌ஷய்ய வடத்துக்கு இரண்டு ஆட்டோவில் போனோம். சாலைகள் படு மோசம். ஒரு முக்கியமான யாத்ரை ஸ்தலத்தை இப்படியா வைத்திருப்பது! தினசரி எவ்வளவு பேர் வந்துபோகிறார்கள்!
ஆட்டோ போய் நின்ற இடம் ஒரு வளாகம். அதில் சுட்டெரிக்கும் வெய்யிலில் முற்றத்தை கடந்து மாடிப்படி ஏறினோம். போன முறை இப்படி படியேறி போன நினைவு ஏனோ இல்லை. ஏறிப்போன பாதை அக்‌ஷய்ய வடத்தில் கொண்டு விட்டது. சரிதான் மேடு பள்ளம் இருந்ததால் ஏதோ சரி செய்து மாடி ஏறி போவதாக அமைத்து விட்டார்கள். நிறைய்ய மக்கள். கீழே தரையில் சலவைக்கல் பதித்திருக்கிறார்கள். ஆங்காங்கே பண்டாக்கள் மந்திரங்கள் சொல்லிகொடுத்து பிண்டங்களை ஆல மரத்தின் கீழ் போடசொன்னார்கள்.
நாங்கள் பத்தடி தள்ளி கிழக்கு பார்த்து உட்கார்ந்து கர்மாவை ஆரம்பித்தோம். அரவிந்தனை வாத்தியார் ஜலம் கொண்டுவரசொன்னார். ஒரு நிமிஷத்தில் வந்து விட்டான். என்னடா என்று பார்த்தால் இந்த ‘மாடி’யிலேயே கிணறு இருக்கிறது! இன்று மாத்ரு ஷோடசிக்கும் கூடுதலாக 24 (என்று நினைவு) ஜோடி (ஆண்-பெண்) மந்திரங்கள் சொல்லி பிண்டங்கள் வைத்தோம். நேற்று மறந்துபோன/ விட்டுப்போனவர்களுக்கும் வைத்தோம். இந்த கூடுதல் பிண்டங்கள் விஷ்ணுபாதத்திலேயே வைத்திருக்க வேண்டும் போலிருக்கிறது. நேரமாகிவிடும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று வாத்தியார் சொல்லிவிட்டதாக பையர் பின்னால் சொன்னார்.
பிண்டங்களை சேர்த்து ஆலமரத்தின் கீழ் இட்டோம். அங்கிருந்த பண்டா ஏதோ ஸ்லோகம் சொல்லி போடச்சொன்னார். வாத்தியார் வைதீகமாக செய்து வைத்திருந்தால் என்ன? இவர்கள் கடைசியில் சொல்லவே சொல்கிறார்கள். அவர்களைப்பொறுத்த வரை அது இல்லாமல் கர்மா பூர்த்தியாவது இல்லை. தக்‌ஷிணை கொடுத்தோம். அவரோ சீதையின் சாபத்தை மெய்ப்பித்தார். போகிறது என்று கூடுதலாக கொடுத்து ஆசீர்வாதம் பெற்று திரும்பினோம். கடைசி நாள், நேரமாகிவிடும், 5- 10 க்கு ப்ளேன் பிடிப்பது கஷ்டம் என்று வாத்தியார் சொன்னதை பொய்யாக்கும் விதமாக இன்று ஒன்னரை மணிக்கே கர்மா முடிந்து சாப்பிட்டோம்.
வாத்தியாருக்கு இவ்வளவு நாட்கள் கர்மாக்களை செய்து வைத்ததற்கு தக்‌ஷிணை கொடுத்து ஆசீர்வாதங்கள் பெற்றோம். அவர் அடுத்த வேலையை உத்தேசித்து 4 மணிக்கெல்லாம் காரில் கிளம்பிவிட்டார்.
தங்கின இடத்துக்கான விஷயங்களை செட்டில் செய்தோம். மானேஜர் இளைஞர் வந்து சில குறைபாடுகள் இருந்திருக்கும்; மன்னித்துகொள்ளுங்கள் என்றார். பரவாயில்லை; தவறுகள் நடக்க நடக்க அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள். மீண்டும் அது நடக்காமல் இருக்க முயற்சி செய் என்றேன்.
கொல்கொத்தா திரும்ப அதே ஜன் சதாப்திதான். எட்டு பத்துக்கு ட்ரெய்ன்.
இதற்குள் இன்னொரு குழப்பம் நடந்துவிட்டது. கொல்கொத்தா சென்னை புக் செய்த விமானம் சென்னைக்கு ஆறு மணி போல வர வேண்டும். எங்கேயும் போக வேண்டாம். ஏர்போர்டுக்கு காரை வரச்சொல்லிவிட்டு அதில் கடலூர் திரும்பி விடலாம் என்று திட்டம். இண்டிகோ ஆசாமி கொஞ்சம் விளையாடிவிட்டார். அந்த விமானம் கிளம்பும் நேரத்தை மாற்றி இருக்கிறோம். ராத்திரி 9 மணிக்குத்தான் கிளம்பும். சரி என்றால் சரி. இல்லையானால் கேன்சல் செய்துகொள் என்று பையருக்கு செய்தி அனுப்பிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் நண்பர் வீட்டில் தங்கியே போவது என்று முடிவாகிவிட்டது.
இரவு ட்ரெய்ன் பிடிப்பதில் சிக்கல் இல்லை. நிம்மதியாக தூங்கினோம்.