Pages

Tuesday, June 4, 2013

அதனால் என்ன?

 
What if?
நம்மில் பலருக்கும் வாழ்கை அழுத்தம் நிறைந்ததாக இருக்கிறது. சுமார் 40-50 வருஷங்களில் உலகம் வெகுவாக மாறிப்போய்விட்டது. நிதானமாக பல்லைத்தேய்த்துக்கொண்டே காலால் மடையை உடைத்துத்திறந்து நீர் பாய்ச்சி விவசாயம் பார்த்த காலம் போய்விட்டது. எதிலும் வேகம் வேகம் வேகம். காலை எழுந்து குழதையையும் பள்ளிக்குபோக எழுப்பிவிட்டு அவசர அவசரமாக குளித்து சமையல் செய்து காலை டிபன் மதிய உணவு ஸ்நாக்ஸ் கட்டிக்கொடுத்து தானும் ஆபீஸுக்கு ஓடி உழன்று என்றாகிவிட்டது. என் நிலை எதிரிக்கும் வர வேண்டாம் என்று ஸ்டேடஸ் போடும் அளவு போகிறது.

இப்படியே போனால் கூடிய சீக்கிரம் டென்ஷனில் சுரக்கும் அட்ரினலினால் எடை கூடி சர்க்கரை வியாதி, பி.பி இன்ன பிற வியாதிகளும் நம்மை பிடித்துக்கொண்டு ஆட்ட ஆரம்பிக்கும். அதற்கு மருந்து என்றெல்லாம் ஆரம்பித்து வாழ்கையே துன்ப மயமாகிறது.
என்ன செய்வது?
டாக்டரிடம் போனால் டென்ஷன் படாதீர்கள், கூலாக இருங்கள் என்பார்.
சொல்லறது சுலபம்தான், அதை செய்ய முடியனுமே?
அதுக்கு என்ன செய்யறது?
கூடிய வரை இந்த சூழலில் மாட்டிக்கொள்ளக்கூடாது.
முக்கியமாக நமக்கு அயர்ச்சி தருவது எதிர்காலத்தைப்பற்றிய பதட்டம்தான். அது நீண்ட எதிர்காலமோ அல்லது குறுகிய எதிர்காலமோ...
பதட்டத்தால் சாதிக்கக்கூடியது எதுவுமில்லை. எதையும் தீர்க்கமாக ஆலோசிக்கப் பழகிவிட்டால் இந்த பதட்டம் போய்விடும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பழகப்பழக இது சுலபமாகிவிடும். மனசு தானாக இப்படி யோசிக்க ஆரம்பித்துவிடும். அப்புறம் பதட்டமே வராது.
அது எப்படி தீர்க்கமாக யோசிப்பது?
ரொம்ப சுலபமே. தீர்க்கம் என்றால் நீளம் என்று பொருள். தொடர்ந்து நீள யோசிக்கணும். முதலில் நிதானமாக உட்கார்ந்து இதை யோசித்து பழகிவிட்டால் அப்புறம் எப்போதும் எங்கேயும் இப்படி யோசித்துக்கொள்ளலாம்.
கேள்வி கேட்டு விடை கண்டு பிடிக்க பழக வேண்டும். ஒரே கேள்விதான் திருப்பித்திருப்பி...
what if? அதனால் என்ன?
உதாரணம் சொன்னால் புரியும். என் பிறந்த ஊருக்குப்போய் ஒருவரை, அவர் அலுவலகத்துக்கு கிளம்பும் முன் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பேருந்து நிலையம் போய் அங்கிருந்து வண்டி பிடித்து இன்னொரு ஊரில் வண்டி மாறி போக வேண்டும். அடிக்கடி பேருந்துகள் போகிற வழித்தடமாக இருந்தால் பெரிய பிரச்சினை இராது. இந்த வழித்தடத்திலோ அதிக வண்டிகள் இல்லை. வீட்டில் இருந்து கிளம்பும் போதே தாமதமாகிவிடுகிறது. இந்த மாதிரி சமயத்தில்தானே என்னவெல்லாம் தாமதிக்கச் செய்யும் சமாசாரங்கள் உண்டோ அது எல்லாமே நடக்கும்? :-) போகட்டும்!

இப்போது எனக்கு பதட்டம் வந்துவிடுகிறது. சரியான நேரத்துக்கு பேருந்து நிலையத்துக்குப் போய் சேர முடியுமா? முதல் பஸ்ஸை பிடிக்க முடியுமா? அது நேரத்துக்குப்போய் அடுத்த பஸ்ஸை பிடிக்க முடியுமா? அப்படி பிடித்தாலும் நேரத்துக்கு ஊர் போய் சேருமா? நான் பார்க்கப்போகும் நபர் அலுவலகத்துக்கு கிளம்பாமல் இருப்பாரா? இதெல்லாம் எனக்கு வரக்கூடிய பதட்டம்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய கற்பனா சக்தி இன்னும் அதிகமானது. மேலே சொன்ன விஷயங்களுடன் அவர்களுடைய பதட்டம் நிற்காது. பஸ் போகும் போது பஞ்சர் ஆகாமல் இருக்குமா? வழியில் ரோட் ரோகோ ன்னு யாராவது தடை செய்யாமல் இருப்பார்களா? எந்த கட்சியாவது வழியில் ஊர்வலம் விடாமல் இருக்க வேண்டுமே! அடுத்த பஸ் கிராமத்து பஸ் ஆச்சே! எதாவது வழி சரியில்லைன்னு கான்சல் செய்யாமல் இருக்கணுமே! சந்திக்கப்போகிற நபர் கொஞ்சம் சென்சிடிவ் ஆச்சே! அவர் நல்ல மூடில் இருப்பாரா? இப்படி அவர்களுடைய கற்பனை பெருத்துக்கொண்டே போகும்!
யோசிக்கலாம். இந்த மாதிரி முன்னால் நமக்கு நடக்கவில்லையா என்ன? அப்போது என்ன செய்தோம்?

அட, இப்போது பஸ்ஸை தவற விட்டுவிடுகிறோம். அதனால் என்ன? அடுத்த பஸ்ஸை பிடிக்க வேண்டும். அதனால் என்ன? அதுக்கு அடுத்த பஸ்ஸை பிடிக்க இன்னும் தாமதமாகும். அதனால் என்ன? சந்திக்கப்போகிற நபர் அலுவலகத்துக்கு கிளம்பிவிடுவார். அதனால் என்ன? அவரை வீட்டில் சந்திக்க முடியாமல் போகலாம். அதனால் என்ன? அவரை அலுவலகத்துக்கு சென்றுதான் சந்திக்க வேண்டும். அதனால் என்ன? அதனால்.. அதனால் ஒன்றுமில்லை. வீட்டிலேயே சந்தித்தால் நல்லது என்று நினைத்தேன். அப்போதுதான் சாவகாசமாக பேசலாம். அப்புறம் என்ன? ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. பார்க்கவே முடியாது என்றால்... அதனால் என்ன? ஒன்றும் இல்லை. இன்னொரு நாள் திரும்பி போய் கொள்ளலாம். இப்படி இந்த 'அதனால் என்ன?' என்ற கேள்வியை திருப்பி திருப்பி கேட்டால் பல பிரச்சினைகள் பிரச்சினைகளே இல்லை என்று புரியும்.

எல்லாமே இப்படி சுலபமாக முடிந்துவிடாது....

No comments: