Pages

Monday, June 24, 2013

ஐயமிட்டு உண்


ஐயமிட்டு உண்:
கடேசியா ஏற்பது இகழ்ச்சி ன்னு பதிவு போட்டேனா? அப்பவே இன்னொரு வரியும் நினைவுக்கு வந்தது. ஐயமிட்டு உண். என் பாட்டி சின்ன வயசுல ஆத்திச்சூடி முதல் 12 ஐயும் வெச்சு கதை சொல்லுவாங்க. போகிற போக்கில அதையும் சொல்லிடறேன். பையன் பாடம் படிச்சுகிட்டு இருக்கான். வேறென்ன ஆத்திச்சூடிதான். அப்ப யாசகம் கேட்டுகிட்டு ஒத்தர் வராரு. வீட்டில இருக்கற பையனோட அப்பா அவர போன்னு விரட்டறாரு.
பையன் படிக்கிறான்.
"அறம் செய்ய விரும்பு.”
அப்பாவுக்கு கோபம் வருது. "ஏன்டா நீ எனக்கு புத்தி சொல்லறியா?”
"ஆறுவது சினம்.”
அப்பா யாசகன்கிட்ட: "இப்ப காசு இல்ல, போய் வா!”
"இயல்வது கரவேல்.”
சரின்னு காசு போட எடுக்கறார். "ஏன்னா நமக்கே கஷ்டமா இருக்கு" ன்னு அம்மா தடுக்கிறாங்க.
"ஈவது விலக்கேல்.”
அம்மா: "வீட்ல சல்லி காசு கூட இல்லே. கொஞ்சம் சாதம் இருக்கு, போடலாம்.”
"உடையது விளம்பேல்.”
சரி, இங்கே ஒண்ணும் தேறாதுன்னு யாசகன் யாசிக்கிறதை விட்டு நகரப்பார்க்கிறார்.
"ஊக்கமது கைவிடேல்.”
"என்னடா பாடம் சொல்லித்தராங்க உனக்கு"
"எண்ணெழுத்து இகழேல்.”
"சரி, சரி இந்தா" என்று அப்பா காசு கொடுக்கிறார். யாசகர் வாங்கிக் கொள்ளப் போகிறார்.
"ஏற்பது இகழ்ச்சி!”
யாசகர் பின் வாங்கிவிடுகிறார்.
அம்மா "சாப்பாடு ரெடி" என்கிறார். அப்பா சாப்பிட உள்ளே போகிறார்.
"ஐயமிட்டு உண்.”
அம்மா கொஞ்சம் சோறு எடுத்துப்போய் கொடுக்கபோகிறார். யாசகர் வாங்குவது வேண்டாமா என்று தயங்குகிறார்.
"ஒப்புரவொழுகு"
போதும்டா நீ படிச்சது
"ஓதுவது ஒழியேல்"
"இந்த பிள்ளை என்னமாத்தான் படிக்குது" என்கிறாள் வேலைக்காரி.
ஔவியம் பேசேல்.
யாசகர் கடைசியாக வாங்கிக்கொள்ள கொடுக்கும்போது அம்மா குறைவாக கொடுக்கிறார் .
"அஃக்கம் சுருக்கு.”
பாட்டி சொல்லும் விதத்தை கேட்டு சிரிக்காமல் இருக்க முடியாது.
[உங்களுக்கு ஆத்திச்சூடியோட பொருள் தெரியணும்ன்னா இங்கே போய் படிக்கலாம்.

இந்த ஐயமிட்டு உண் என்கிற தலைப்பிலநாஞ்சில் நாடன் ஒரு அருமையான கதை எழுதி இருக்காரு. கொடுக்க ரெடியா இருந்தா மட்டும் போதாது. அதுக்கும் கொடுத்து வெச்சிருக்கணும். http://tinyurl.com/lg2ku9u

சரி சரி இங்கே ஏன் இதை இழுத்தேன்னா, இன்னைய டாபிக் ஐயமிட்டு உண். அருமையான கதை ஒண்ணையும் இங்கே படிக்கலாம்.
அதாவது மத்தவங்களுக்கு சாப்பாடு போட்டுவிட்டு நீ சாப்பிடு என்கிறாள் ஔவை பாட்டி.
க்ருஹஸ்தர்களுக்கு தர்ம சாஸ்திரம் வித்திச்ச கடமைகளில மனுஷ யக்ஞம் ஒண்ணு. அதிதி போஜனம்.
மத்த தானம் போல இல்லை இது.
யாரும் பணம் கொடுத்தா இன்னும் வந்திருக்கலாமேன்னு வாங்கறவர் நினைக்கலாம். வேறு பொருள் எதாவது கொடுத்தாலும் இன்னும் இன்னும் ன்னு மனசு ஏங்கிகிட்டுத்தான் இருக்கும். ஆனா யாரும் சோறு போட்டாங்கன்னா ஒரு அளவுக்கு மேலே சாப்பிடவே முடியாது. பாயசம் இருந்திருக்கலாம் என்கிற ரீதியில வேணா ஆசை இன்னும் இருக்கலாம். ஆனா போதலைன்னு நினைக்கவே முடியாது.
இந்த வரிசையில் ஏற்பது இகழ்ச்சின்னு சொன்ன பாட்டி அடுத்த வரியிலேயே ஐயமிட்டு உண் ன்னு சொல்லி இருக்கா. நெடுந்தூரம் பயணம் செய்பவருக்கு அந்த காலத்தில ஓட்டல் எல்லாம் இல்லை. எல்லா இடங்களிலேயும் சமைத்து சாப்பிடவும் எல்லாராலும் முடியாது. இதுக்காக இப்படி ஒரு ஏற்பாடு ஆரம்பித்து இருக்கலாம். எப்படி இருந்தாலும் அதிதிக்கு வரவேற்று பூஜை செய்து உணவளிக்கறதை ஒரு மிகப்பெரிய தர்மமா விதிச்சு இருக்காங்க. பால் கறக்கற நேரம் வாசலில் காத்திருந்து யாரும் வரலைன்னா இன்னிக்கு பாக்கியம் இல்லைன்னு நொந்து கொண்டு பிறகே சாப்பிட போகணும்.
மத்த தானம் செய்கிறப்ப நாள், வாங்கிக்கொள்கிற ஆள் ன்னு தகுதி பாக்கிற சமாசாரம் இருக்கும். ஆனா இங்கே அப்படி இல்லை. பசித்த ஆசாமி, சாப்பிடும் நேரத்துக்கு வந்தா அதுவே தகுதி!
இதே போலவே யாரும் பிக்ஷை கேட்க வந்தாலும் கொடுக்கணும். படிக்கிற பிரம்மசாரிக்கும், அக்னியில் எந்த காரியமும் செய்யக்கூடாத சன்யாசிக்கும் சமைத்த உணவும், மற்றவர்களுக்கு அரிசியும் கொடுப்பது வழக்கம். வயித்துப்பாட்டை கவனிச்சுட்டா பெரும்பாலும் வேறு தவறான வழிக்கு மனுஷன் போக மாட்டான்ன்னு நினைச்சிருப்பாங்க போலிருக்கு.
ஆக பாட்டி சொன்ன ஐயமிட்டு உண் உணவுக்குத்தான். வேற பொருளுக்கு இல்லை.


No comments: