Pages

Thursday, June 11, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் -29



1945 இல் பகவானின் வலது கால் பெருவிரலில் மூட்டு விலகிவிட்டது. ஆசிரம டாக்டர் ஒரு மாதத்துக்கு எங்கும் நடக்கக்கூடாது என்று தடை போட்டுவிட்டார். சாப்பாட்டு ஹாலுக்கும் கழிவறைக்கும் மட்டுமே போக அனுமதி அளித்தார்.ஒரு மாதம் முடியும் முன் ஒரு நாள் வெங்கட்ராமையரும் ராமசந்திரஐயரும் பகவான் சாப்பாட்டு ஹாலில் இருந்து வெளியே வரும்போது நமஸ்கரித்தனர்.
"என்ன ஓய் என்ன விசேஷம்?”
"ரெண்டு பேரும் கந்தாஸ்ரமம் போகப்போறோம். அதான் உத்திரவுக்கு வந்தோம்.”
"சரி போயிட்டு வாங்கோ.”
பகவான் தன் உதவியாளர் ரங்கசாமியிடம் நாமும் போகலாமா?’ என்று கேட்டார்.
ரங்கசாமி அதிர்ச்சிக்குள்ளானார். இன்னும் கால் சரியாகலையே? ஒரு மாசம் நடக்கக்கூடாதே? வெயில் வேற சுட்டெறிக்கிறது.
நாம் எப்படி போக முடியும்? உங்களாலே முடியாதே பகவானே?” என்றார் ரங்கசாமி.
மூவரையும் பார்த்து குழந்தைப் போல பகவான் ஏம்பா! கூட்டிண்டு போக மாட்டேளா என்ன?” என்றார்.
ராமசந்திரஐயர் பகவானே உங்ககூட போறது எங்க பாக்கியம்தான். ஆனா நீங்க நடக்க முடியாதே? எப்படி வர முடியும்?” என்றார்.
ரங்கசாமியைப் பார்த்து இவா கூட்டிண்டு போக மாட்டாஎன்றார் பகவான் வருத்தத்துடன்.
பின் ராமசந்திரஐயரும் வெங்கட்ராமையரும் கிளம்பினர். சிறிது தூரம் சென்றபின் திரும்பிப்பார்த்தால் பகவானும் ராமசந்திரஐயரும் மலைப்பக்கமாக நடந்து வந்து கொண்டு இருந்தனர். ரங்கசாமி பயப்படாதீங்கோ! நாங்க ஒண்ணும் உங்களோட வரலைஎன்றார்.
பகவான் தினமும் கொஞ்ச தூரம் மலையில் நடப்பதுண்டு. அதை நிறுத்தி இருந்தார். அதை மீண்டும் ஆரம்பிக்கிறார் போலும் என்று நினைத்தார்கள்.
கொஞ்ச தூரம் நால்வரும் ஒன்றாக நடந்தார்கள். பிறகு இவர்கள் இருவரும் ஸ்கந்தாஸ்ரமத்துக்கு நடக்க ஆரம்பித்தார்கள். அப்போது ரங்கசாமி ஓடி வந்தார்.
நானும் உங்க கூட வரேன். கொஞ்சம் தூரம் போய் சித்த நில்லுங்க!” என்றார்.
சரியென்று இருவரும் பாதி மலையேறி ஓர் இடத்தில் ரங்கசாமிக்காக காத்து நின்றனர். அரை மணி ஆகியும் வரவில்லை. அப்போது ஒருவர் அந்தப்பக்கமாக வந்தார். அவரிடம் வழியில் யாரும் வராங்களா?’ என்று விசாரித்தனர். அவர் ஆமாம்; பகவான் வருகிறார்!” என்றார். “வெயிலோ உக்கிரம்; பகவான் காலூனவும் முடியாது. எப்படி வரார்? நான் போய் பார்க்கிறேன்என்று ராமசந்திரஐயர் கிளம்பிப்போனார். போய்ப்பார்த்தால் பகவான் பகவான் சிரமப்பட்டு வந்து கொண்டு இருந்தார், உடல் முழுதும் வேர்வை. மிகவும் களைப்புடன் இருந்தார். மெதுவாக தவழ்ந்து வருவது போலவே இருந்தது. கூரான பாறைகளில் ஊன்றி கைகளும் கால்களும் சிராய்த்து இருந்தன. உண்மையிலேயே அவரால் மலையேற முடியவில்லை. திரும்பிப்போகலாம் என்றால் அதற்கு பகவான் ஒப்புக்கொள்ளவில்லை.
வேறு வழியில்லாமல் ரங்கசாமியும் ராமசந்திரஐயரும் பகவானை இருபுறமும் தாங்கலாக தூக்கிக்கொண்டு மிகுந்த சிரமத்துடன் கந்தாஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்தனர்.
அப்போது கந்தாஸ்ரமத்தில் மராமத்துப்பணி நடந்துக்கொண்டு இருந்தது. அதை செய்து கொண்டு இருந்த சிற்பி பகவானைப் பார்த்ததும் ஓடி வந்து பகவானே! என்ன புண்ணியம் செஞ்சேனோ! எனக்காகவே இவ்வளவு தூரம் ஏறி வந்தீங்களே என்று காலில் விழுந்தான்.
பகவானும் புன்னகையுடன் ஆமாம். உனக்காகவே வந்தேன்! உன் வேண்டுதல்தான் என்னை இங்கே இழுத்து வந்ததுஎன்றார்.
ராமசந்திரஐயர் ஒன்றும் புரியாமல் பகவானே, என்ன வேண்டுதல்?” என்று கேட்டார்.
உனக்குத் தெரியாதோல்லியோ? நாலு நாள் முன்னே அம்மா கோவிலுக்கு முன்னே ஒரு ஹால் கட்ட முஹூர்த்தம் பண்ணின்னா. தூணை வெச்சு ஸ்தபதியும் சின்னசாமியும் தொட்டு ஆசீர்வாதம் பண்ணச்சொன்னா. டாக்டர்கிட்டே பெர்மிஷன் வாங்கிண்டு மெதுவா போய் அங்கே உட்காரச் சொல்லி.... பெரிய கூட்டம். முஹூர்த்தம் முடிஞ்சு கிளம்பறப்போ இவன் அந்த கூட்டத்திலே இருந்து பெரிய ஸ்தபதி வேலை பாத்தா பகவான் வந்து ஆசீர்வாதம் பண்ணாறார். நாமும்தான் நிறைய பக்தி சிரத்தையோடத்தானே கந்தாஸ்ரமத்தில வேலை செய்யறோம்? பகவான் வந்து பாத்து ஆசிர்வாதம் பண்ணா நல்லா இருக்குமே. ஆனா இதெல்லாம் நடக்குமாந்னு வேண்டிக்கொண்டு நின்னான்.
அதுதான் இப்ப என்னை இங்கே இழுத்துண்டு வந்ததுஎன்றார் பகவான்.


Wednesday, June 10, 2015

உள்ளது நாற்பது - 31

 
அகந்தையுண் டாயி னனைத்துமுண் டாகு
மகந்தையின் றேலின் றனைத்து - மகந்தையே
யாவுமா மாதலால் யாதிதென்று நாடலே
யோவுதல் யாவுமென வோர்.
அகந்தை உண்டாயின் அனைத்தும் உண்டாகும்
அகந்தை இன்றேல் இன்றுஅனைத்தும் - அகந்தையே
யாவுமாம் ஆதலால் யாதுஇது என்றுநாடலே
ஓவுதல் யாவும்என ஓர்.


அகந்தை உண்டானால் எல்லாவித தோற்றங்களும் உண்டாகின்றன. அகந்தை இல்லை எனில் இந்த தோற்றங்கள் அனைத்தும் இல்லாமல் போகின்றன. ஆகையால் அகந்தையே எல்லாமுமாக உள்ளது. அகந்தையின் தன்மையை விசாரிக்க எல்லாம் மறைவதால் அதுவே எல்லாவற்றையும் துறப்பது என அறிவாயாக.

भावेऽहमः सर्वमिदं विभाति लयेऽहमो नैव विभाति किञ्चित्।
तस्मादहंरूपमिदं समस्तं तन्मार्गणं सर्वजयाय मार्गः ॥ २८ ॥

பா⁴வே()ஹம: ஸர்வமித³ம்ʼ விபா⁴தி லயே()ஹமோ நைவ விபா⁴தி கிஞ்சித்|
தஸ்மாத³ஹம்ʼரூபமித³ம்ʼ ஸமஸ்தம்ʼ தன்மார்க³ணம்ʼ ஸர்வஜயாய மார்க³: || 28 ||
 


 

Tuesday, June 9, 2015

அடியார்கள் - சாந்தம்மாள்-1



சாந்தம்மாள் கைங்கரியம் செய்ய ஆசிரமத்துக்கு வந்த புதிதில் பகவானுக்கு பரிமாறும் போது உருளைக்கிழங்கு கறியை அதிகமாக பரிமாறினார். பகவான் தலையை குனிந்துக்கொண்டார். பரிமாறுபவர்களை முகம் பார்க்கவே இல்லை.
மாலையில் கைங்கர்யம் முடிந்து எல்லாம் பெண்களும் பகவானிடம் உத்திரவு பெற்றுப்போவார்கள். பகவான் யாரும் துணைக்கு இருக்கிறார்களா, கைவிளக்கு இருக்கிறதா என்றெல்லாம் விசாரிப்பார்.
அப்படி அவர்கள் வந்த போது பகவான் சாந்தம்மாளை அழைத்தார்.
இன்னைக்கு நீ என்ன பண்ணே?”
தெரியலையே பகவானே! ஏதும் தப்பு பண்ணிட்டேனா?“
மத்தவாளைவிட எனக்கு கறி அதிகம் வெச்ச இல்லையா? ”
அதுக்கென்ன? ஒரு பிரியத்திலே அப்படி பறிமாறினேன்!”
மத்தவாளை விட அதிகமா சாப்பிடறேனேன்னு ரொம்ப வெக்கமா இருந்தது! இனிமே மத்தவாளை விட எனக்கு குறைவா பரிமாறு!”
அதெப்படி பகவானே மத்தவாளை விட உங்களூக்கு குறைவா பரிமாறுவது? ”
இதுலேதான் நான் சந்தோஷப்படுவேன்னு நினைச்சியா? உருளைக்கிழங்கு கறியிலா அருளிருக்கு? ”
நீ எல்லார் மேலேயும் எவ்வளோ பிரியமா இருக்கியோ அவ்வளொ என் மேல் பிரியமா இருக்கறதா அர்த்தம். என் மேலே உண்மையா பிரியம் வந்துடுத்துன்னா எல்லார்கிட்டேயும் சமமா பிரியம் வந்துடும்!”

சாந்தம்மாளின் சொந்த ஊர் ராமநாதபுரம். நவராத்திரி உற்சவம் அங்கு சிறப்பாக நடைபெறும். சாந்தம்மாளுக்கு அம்பாளை தரிசிக்க அங்கு செல்ல ஆசையாக இருந்தது. ஆசிரமத்திலோ வேலை நெட்டிமுறித்தது.
பகவானிடம் உத்திரவு கேட்போம். ஒரு வேளை அவர் உத்திரவு கொடுத்தால் போகலாம் என்று நினைத்துக்கொண்டு பழைய ஹாலில் அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது அவள் கண் எதிரேயே பகவான் மறைந்து போனார். அவருக்கு பதிலாக ஒரு அழகிய சிறுபெண் குழந்தை பட்டுப்பாவாடையுடன் கம்பீரமாக அமர்ந்திருந்தாள்!
சிறிது நேரத்தில் மீண்டும் பகவானின் உருவம் தோன்றிவிட்டது.
தனக்கு பதில் கிடைத்துவிட்டது என்று கருதிய சாந்தம்மாள் உத்திரவு கேட்கவில்லை!

ஒரு முறை சாந்தம்மாள் நிறைய புடலங்காயை வதக்க வேண்டி இருந்தது. நீர் நிறைந்தது என்பதால் அதை நன்றாக பிழிந்துவிட்டு வதக்குவார்கள்; சீக்கிரம் வதங்கிவிடும். ஆனால் பகவான் அதை பிழியாமல் வதக்கச்சொன்னார்.
நீண்ட நேரம் ஆகும் என்பதால் அடுப்பருகே அமர்ந்து அவ்வப்போது கிளறிவிட்டுக்கொண்டு இருந்தார். அருகே சாந்தம்மாளும் அமர்ந்து இருந்தார். திடீர் என பகவான் கையில் இருந்து அகப்பை நழுவியது. வெறித்த பார்வையுடன் அசைவற்று இருந்தார். இதை பார்த்த உடனே சாந்தம்மாளும் அதே போலானார். அவள் கண் முன்னிருந்த அனைத்தும் மறைந்துவிட்டன.
சிறிது நேரம் கழித்து பகவான் அசைந்தார். சாந்தம்மாவுக்கு நினைவு திரும்பியது.
பகவான் கறியிலே சப்தம் வரலை பார். முழுக்க சரண்டர் ஆயிடுத்து. இப்பத்தான் அரைச்சு வெச்ச சேர்மானத்தை சேர்க்கணும். நல்லா சரண்டர் ஆனவாத்தான் ஆத்ம விசாரத்துக்கு தகுதியானவா. அப்படித்தான் ஞானமும். முழுசா சரண்டர் ஆன பிறகே ஞானம் வரும்.” என்றார்.

Monday, June 8, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் -28


தேவராஜ முதலியார் ஒரு முறை பகவானிடம் கேட்டார்: “பகவானே! ஆன்ம முன்னேற்றம் கொஞ்சம் கொஞ்சமா வருமா.... இல்லை சட்டுன்னு வந்துடுமா?”
பகவான் சொன்னார்: “நீர் ஒரு இருட்டான குகைக்குள்ளே ஒரு டார்ச் லைட் எடுத்துண்டு போறீர்.... குகையில இருக்கிற இருட்டு கொஞ்சம் கொஞ்சமா மறையுமா.... இல்லை உடனடியா மறையுமா?

பகவான் ஒருமுறை நான் பயப்படறது ரெண்டு பேருக்குத்தான். ஒண்ணு முதலியார் பாட்டி. ரெண்டாவது ராமநாதன்என்றார்.
இது அருகில் இருந்த சேவகருக்கு விளங்கவில்லை. உரிமையோடு பகவானிடம் பகவானே, இவங்க ரெண்டு பேரைப்பாத்தா மட்டும் ஏன் பயம்?” என்று கேட்டார்.
இவா ரெண்டு பேரையும் பாத்தாலே எனக்கு ஏதோ பண்ணும். பக்கத்திலே வந்தா இன்னும் ஜாஸ்தியாகும். கஷ்டப்பட்டு அடக்கிப்பேன். இவா ரெண்டு பேரும் என்னை எதைக்கேட்டாலும் தந்துடுவேன் போல இருக்கும். ஆனா வந்ததுலேந்து இது வரைக்கு இவா ரெண்டு பேரும் என்னை ஒண்ணுமே கேட்டதில்லே. முக்தியே அவாளுக்கு தூசு!” குரல் கம்மியது; கண்களில் நீர் பெருகியது. மலையை திரும்பிப்பார்த்தார். அந்த பேச்சே அவருக்கு பயம் ஊட்டுவது போல இருந்தது!

ஒருமுறை மதிய உணவின் போது பாடசாலை மாணவன் ஒருவன் பரிமாறினான். மோர் வார்க்கும்போது பகவான் திடீரென்று இன்னும் கொஞ்சம் விடுஎன்றார். ஆச்சரியம்! எதையுமே இரண்டாம் முறையாக பகவான் கேட்டதே இல்லை. இன்று கேட்டார்.
வாளியில் மோர் இல்லை. இது பகவானுக்கும் தெரிந்தே இருந்தது. மாணவன் சமையலறைக்குப் போய் அங்கிருந்த வாளியை கொண்டு வந்து மோர் வார்த்தான். பகவான் அதை கையில் வாங்கி குடித்தார். பின் சேஷாத்ரி, நீ முன்னே வார்த்த மோருக்கும் இபோ கொண்டு வந்ததுக்கு நிறைய வித்தியாசம் இருக்கே? இது ரொம்ப ஜலமா இருக்கே? ஏன்னு கேட்டுவா!” என்றார்.
அவனும் விசாரித்து வந்து பகவானே! அது வேலையாளுங்களுக்கு வெச்சிருந்ததாம் என்றான்.
பகவான் அங்கிருந்தவர்களை அழைத்து வேதனையுடன் இதென்ன பழக்கம்? அவமானமாயிருக்கு. எல்லாருக்கும் ஒரே மாதிரி பரிமாறுங்கோ என்றார்.
அடுத்த நாள் முதல் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.
 

Sunday, June 7, 2015

உள்ளது நாற்பது - 30

 
 
உருப்பற்றி யுண்டா முருப்பற்றி நிற்கு
முருப்பற்றி யுண்டுமிக வோங்கு - முருவிட்
டுருப்பற்றுந் தேடினா லோட்டம் பிடிக்கு
முருவற்ற பேயகந்தை யோர்.

உருப்பற்றி உண்டாம் உருப்பற்றி நிற்கும்
உருப்பற்றி உண்டுமிக ஓங்கும் - உரு விட்டு
உருப்பற்றும் தேடினால் ஓட்டம் பிடிக்கும்
உருவற்ற பேய்அகந்தை ஓர்.


பேய்க்கு உருவமில்லை. அது போலவே அகந்தைக்கும் உருவமில்லை. அது உருவுள்ள ஒரு உடலைப்பற்றியே எழ இயலும். இதை பற்றிக்கொண்டேதான் நிற்கவும் முடியும். ஐம்புலன்களால் இன்ப துன்பங்களை உண்டு அவற்றில் வாசனையால் மிகவும் வளரும். ஒரு உடலை விடும் காலத்தில் இன்னொரு உடலை பிடித்துக்கொள்ளும். இந்த அகந்தை உதிக்கும் இடம் எது என ஆராய்ந்தால் மறைந்துவிடுகிறது. இந்த நான் யார் விசாரத்தால் அகந்தை அழிகிறது என்பது ஞானிகளின் அனுபவமாகும். மனதே அகந்தை; மனது வாசனைகளின் வடிவமே.


रूपोद्भवो रूपततिप्रतिष्ठो रूपाशनो धूतगृहीतरूपः ।
स्वयं विरूपः स्वविचारकाले धावत्यहङ्कारपिशाच एषः ॥ २७ ॥

ரூபோத்³ப⁴வோ ரூபததிப்ரதிஷ்டோ² ரூபாஶனோ தூ⁴தக்³ருʼஹீதரூப: |
ஸ்வயம்ʼ விரூப: ஸ்வவிசாரகாலே தா⁴வத்யஹங்காரபிஶாச ஏஷ: || 27 ||