Pages

Friday, April 13, 2018

ஆத்ம குணங்கள் 5 - சௌசம்





நாலாவதா சௌசம். சரியா எழுத ஶௌசம். ஶுசியாக அதாவது சுத்தமாக இருத்தல். உடல் வாக்கு மனம் மூன்றுமே சுத்தமாக இருக்க வேண்டும்.
புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப்படும் இல்லையா?
இதில் நாட்டமுள்ளவர்கள் அடிக்கடி குளிப்பார்கள். எனக்கு நாளுக்கு 3 முறை குளிக்க வேண்டி இருக்கிறது. உண்ணும் உணவில் தூய்மையை பார்க்க வேண்டும். அசுத்தமான உணவு, உண்ணத்தகாதன, தீட்டானது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் பல் துலக்குவது, ஜல மலம் கழித்த பின் சுத்தம் செய்து கொள்வது, சொல்லப்பட்ட நேரங்களில் ஆசமனம் செய்வது, வாய் கொப்பளிப்பது, வீட்டுக்குள் நுழையும் முன்பே கால்களை சுத்தம் செய்து கொள்வது, அநாசாரமான இடத்துக்கு போகாமல் இருப்பது போன்ற பலதும் புறத்தூய்மை.
நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லுமே உண்மையானதாக இருக்க வேண்டும். மங்கலமானதாக இருக்க வேண்டும். கடும் சொற்களை சொல்லலாகாது. பிறரை திட்டக்கூடாது. எல்லோருக்கும் ப்ரியமானதையும் ஹிதமானதையுமே பேச வேண்டும்.
பிறருக்கு தீங்கை மனதாலும் நினையாதிருக்க வேண்டும். மனதாலும் பிறர் பொருளை அனுபவிக்கக்கூடாது. ஒரு பொருளை வாங்க நேர்ந்தால் அதற்கான விலையை கொடுத்துவிட வேண்டும். கடனாக வாங்குவதை குறித்த நேரத்தில் திருப்பிக்கொடுத்து விட வேண்டும். அக்கிரமமான வழியிலோ பிறரை ஏமாற்றியோ பணம் சம்பாதிக்கக்கூடாது. இன்று பரவலாக காணும் விளம்பரங்கள் என்ன செய்கின்றன?
பொதுக்காரியத்துக்காக வஸூல் செய்ததை உரிய கணக்குடன் வெளிப்படுத்த வேண்டும். அதை எக்காரணம் கொண்டும் தனக்கு பயன்படுத்தக்கூடாது.

Thursday, April 12, 2018

ஆத்ம குணங்கள் - 4 - அநஸூயா





மூணாவது அநஸூயா. பெண்மணி பேரா இருக்கு இல்லே?

அஸூயை இல்லாம இருக்கறது அநஸூயா. அஸுயை என்கிறது பொறாமை.
ஊர்ல ஒத்தர் இருக்கார். அவர் நிறைய நல்ல காரியங்களை செய்யறார். நம்மால அப்படி எல்லாம் செய்ய முடியலை அல்லது செய்ய மனசில்லை. இவன் பாட்டுக்கு நல்ல பேர் தட்டிகிட்டு போறானே? ன்னு மனசு சகிக்கறதில்லை! பொறாமைப்பட்டு "ஹும்! உள்ளுக்குள்ள கெட்ட மனசு. ஊர் பணத்தை கொள்ளை அடிச்சான். எல்லாத்தையும் மறைக்க இப்படி வேஷம் போடறான்' னு சொல்லிண்டு இருந்தா அது அஸூயை. நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் ன்னு இவங்களைப்பத்தித்தான் நரிவெரூஉத் தலையார்  சொன்னாங்க.

நல்லது செய்தல் ஆற்றிர் ஆயினும்
அல்லது செய்தல் ஒம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படு உம் நெறியுமா ரதுவே”

அவரவர் செய்த நல்ல கர்மாவின் வாசனையில் நல்ல காரியங்கள் செய்கிறார்கள். இதை உணர்ந்து பாராட்டுவதுதான் அநஸூயா.
எங்கே யார் நல்ல காரியங்கள் செஞ்சாலும் ஆஹா ஆஹா நல்லதுன்னு நினைக்கணும்.

Wednesday, April 11, 2018

ஆத்ம குணங்கள் - 3 - க்ஷமா





க்ஷமா அல்லது ஶாந்தி என்கிறது அடுத்தது.
சமூக வலைத்தளங்களில அடிக்கடி பார்க்கலாம். யாரானா நம்மைப்பத்தி எதாவது சொன்னா நமக்கு சுர்ர்ர்ர்ன்னு கோவம் வருது; திருப்பித்திட்டறோம். இது கூட பரவாயில்லை. தான் சார்ந்திருக்கற / ஆதரிக்கற கட்சி பத்தி தலைவன் பத்தி ஏதாவது யாரான சொல்லிட்டாலும் கோவம் வருது. லபோ திபோன்னு அடிச்சுக்கறோம்! இதுல நமக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லே!
நம்மை யாரும் திட்டினாலோ அடித்தாலோ மத்த வழிகளில தீங்கு செய்தாலோ அவங்க மேல கோபப்படாம பொறுமையா இருக்கறதுதான் க்ஷமா. இவற்றுக்கு மனசாலும் உடலாலும் வாயாலும் எதிர்வினை ஆற்றாம இருக்கறதுதான் க்ஷமா.
இப்படி இல்லாம ஏதோ ஒரு வகையில் எதிர்வினை ஆற்றுவது சாதாரண மனித குணம்.
அது சரி! எப்படி இந்த மாதிரி பொறுமையா இருக்கிறதுன்னா...

புத்தர் கதைன்னு ஒண்ணு சொல்லுவாங்க. ஒத்தன் புத்தரை திட்டு திட்டுன்னு திட்டித்தீத்தானாம். புத்தர் பொறுமையா இருந்துட்டார். அவனுக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு! மெதுவா ஏன் உங்களுக்கு கோவமே வரலைன்னு கேட்டான். புத்தர் சொன்னார்: தோ பார் நீ எனக்கு ஒரு பொருளை கொடுக்கறே. ஆயிரம் ரூபான்னு வெச்சிக்கோயேன். அதை நான் ஏத்துக்கலை; வேணாம்ன்னு சொல்லிட்டேன். அந்த பணம் யாருது?
இது என்ன கேள்வி? என்னுதுதான்.
அதேப்போலத்தான் நீ சொன்ன திட்டு எதையும் நா ஏத்துக்கலை!

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிறது தமிழ் முது மொழி. இதைத்தான் கர்மா தியரின்னு சொல்றாங்க. நாம் எதோ செஞ்சோம்; அதுக்கு எதிர்வினையாத்தான் இப்ப நமக்கு எதிரா ஏதோ நடக்குது. எய்தவனை விட்டுட்டு அம்பை நோவானேன்னு சொல்லுவாங்க இல்லையா? நாமத்தான் அம்பை போட்டோம். அது நம் மேலயே இப்ப பாயுது. அம்பை திட்டி இப்ப என்ன புண்ணியம்? இப்படி சரியா எடுத்துக்க பயிற்சி அவசியம். உணர்வு சார் நுண்ணறிவு பத்தி நான் எழுதினதை படிச்சு இருப்பீங்க. அதுதான் வேணும். என்ன படிக்கலையா? முதல்ல போய் படிங்க!

Tuesday, April 10, 2018

ஆத்ம குணம் - 2 - தயை





தயை எட்டு ஆத்ம குணங்களிலேயும் முக்கியமானதும் முதலாவதும். இது என்னன்னா துன்பப்படற மத்த உயிர்களைப்பாத்து இரக்கம் கொள்வது; ஐயோ பாவம்ன்னு வருந்தி துன்பம் தனக்கே வந்தாப்போல உணர்வது(empathy); முடிஞ்ச வரை உதவி செய்வது; அவங்களுக்கு ஹிதமா பேசறது; அவங்க நல்லா இருக்கணும்ன்னு நினைக்கறது. துன்பம் நீங்கினப்ப சந்தோஷப்படறது.

இது போல... புரிகிறதில்லையா?

இது மத்த ஜனங்களுக்குத்தான்னு இல்லை. மத்த எல்லா உயிரினங்களுக்கும்தான். இன்னும் பார்க்கப்போனா உயிரில்லாததுக்கும்தான்

மனித நேயம் என்கிறதை பெரிசா சிலர் சொல்லிகிட்டு இருக்காங்க. இது அதையும் தாண்டினது என்கிறதை உணரணும்

இந்த தயைக்கு ப்ரீ கண்டிஷன்ஸ் இல்லை. என்னதான் கெட்டவன்னு தெரிஞ்சாலும் கூட தயை இருக்கவே இருக்கும்! இங்கேதான் மத்தவங்களிலிருந்து இந்த சாதகர் வித்தியாசப்படறார். சாதாரணமா நமக்கு மத்ததுகிட்ட இருந்து துன்பம் வராத வரைக்கும் இந்த தயையை காட்டிடலாம். ஆனா நமக்கு ஒரு துன்பம் விளைவிச்ச நபர்/ உயிர்/ வஸ்து ன்னு இருந்தா தயை காட்டறது கஷ்டம். ம்ம்ம்ம்.. நல்லா வேணும்; நீ அன்னைக்கு அப்படி செஞ்ச இல்ல? இப்படி செஞ்ச இல்ல? இப்ப கஷ்டப்படுன்னு நினைக்கிறவர் தயை என்கிற ஆத்ம குணத்தை இன்னும் சம்பாதிக்கலை.

Monday, April 9, 2018

ஆத்ம குணங்கள் 1





மனிதனாகப் பிறந்தவனோட நோக்கம்  இறைத்தன்மையை அடையறதா இருக்கணும். இதுக்கு பக்தி, கர்மம், யோகம், ஞானம்ன்னு பல வழிகள். நாம கடைபிடிக்கறது எந்த மார்க்கமா இருந்தாலும் சரி அது எல்லாம் கடைசில இந்த ஒரு இடத்திலத்தான் கொண்டு விடும். இன்னொரு பக்கமா பார்த்தா நீ எந்த வழியை வேணுமானாலும் பிடிச்சுக்கோ. நாத்திகனாக்கூட இரு. ஆனா இந்த இந்த குணங்களை சம்பாதிச்சுக்கோ என்கிறது மறை நூல்கள்.

கர்ம வழியிலே 40 சம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டு இருக்கு. அதுல முவ்வேழு யாகங்களும் அடக்கம். இது எல்லாத்தையும் சொன்னது எதுக்குன்னா மனசு நிர்மலமாகி - அழுக்கு நீங்கி-  இந்த ஆத்ம குணங்களை அடையணும் என்கிறதுதான்.

அந்த ஆறு குணங்கள் என்ன?

தயை, க்‌ஷமா, அநஸூயை, சௌசம், அநாயாஸம், மங்களம், அகார்பண்யம், அஸ்ப்ருஹா.
தயை, மங்களம் கேள்விப்ப்ட்டு இருப்போம். சௌசம் கூட கேள்விப்பட்டு இருக்கலாம். மத்தது பழக்கம் இல்லாத வார்த்தைகள். இது எல்லாம் என்னன்னு வரும் பதிவுகளில பார்க்கலாம்.