Pages

Saturday, February 5, 2022

ஶ்ராத்தம் - 32 - உண்ணும் முன் -2




 

பிறகு பித்ரு இலைக்கு சென்று பூணூலை இடம் மாற்றிக்கொண்டு இடது காலை மடித்து முட்டி போட்டு,அன்னத்துக்கு அபிகாரம் செய்து இலை நுனியில் ஆரம்பித்து அப்பிரதட்சணமாக பரிசேஷனம் செய்து, அவர் கையில் நீர் விட வேண்டும். இங்கே சிலர் ‘ஏஷதே’ என்ற மந்திரம் சொல்கிறார்கள். பின் முன் போலவே செய்ய வேண்டும். முன்னே பொன்மயமான பாத்திரம் என்று சொன்ன இடத்தில் வெள்ளி மயமான பாத்திரம் என்று சொல்லப்படும். ஹவ்யம் என்பதற்கு பதில் ’கவ்யம்’. அட்சதை க்கு பதிலாக எள்ளும் தீர்த்தம் பயன்படுகிறது. அதை கீழே விடுவதற்கு நம் இடது (பாத்திரத்தை பிடித்துக்கொண்டு இருக்கும்) கைக்கு கீழாக வலது கையை கொண்டு போய் நமக்கு இடது பக்கம் பித்ரு தீர்த்தத்தால் விட வேண்டும். மற்றபடி கர்மா முன் போலவே.
விஸ்வேதேவருக்கு செய்தது போலவே விஷ்ணுவுக்கும் உபசாரம் செய்ய வேண்டும்.

இங்கே விஸ்வேதேவருக்கு வலது காலை மடக்கி, பித்ருக்களுக்கு இடது காலை மடக்கி முட்டி போட்டு செய்ய வேண்டும் என்று சொன்னேன். இது கடினம் போல தோன்றலாம். ஆனால் உண்மையில் வயதான காலத்தில் குனிந்து செய்வதைவிட இது சௌகரியம். முதுகும் வலி எடுக்காமல் இருக்கும். ஆரம்பத்தில் சில முறை இந்த மாதிரி செய்வது கஷ்டமாக இருக்கலாம். (குறிப்பாக முட்டி கீழே பதிவது. துண்டு போட்டுக் கொள்ளலாம்). ஆனால் சிராத்தம் அல்லாத இடங்களில் ஓரிரு முறை செய்து பழகி விட்டால் இதுவே சிலாக்கியம். உண்மையில் உபசாரங்களில் கூட இதே போல செய்யச் சொல்லி இருக்கிறது.
பிறகு எள் அட்சதை துளசி ஜலம் ஆகியவற்றை கையில் ஏந்திக்கொண்டு ‘ஏகோ விஷ்ணு’ என்ற மந்திரத்தை சொல்லி உபவீதியாக புரூரவ ஆர்த்ரவ சம்ஞக விஸ்வதேவ ஸ்வரூபி என்று விஸ்வேதேவரை பார்த்து; ப்ராசீனாவீதியாக வசு ருத்ர ஆதித்ய சொரூபான் அஸ்மத் பித்ரு பிதாமக ப்ரபிதாமகான் ஸ்வரூபி என்று பித்ருக்களை பார்த்து சொல்லி; மீண்டும் உபவீதியாக ஸ்ராத்த ஸம்ரக்ஷக மகாவிஷ்ணு சொரூபி என்று விஷ்ணுவை பார்த்தும் சொல்லி ப்ராசீனாவீதியாக ஸர்வாகாரோ பகவான் ஸ்ரீ ஹரி ஜனார்த்தன ப்ரீயதாம் என்று சொல்லி பித்ரு தீர்த்தத்தால் தர்ப்பங்களில் இவற்றை விட வேண்டும். பிறகு உபவீதியாக ‘ஈசான விஷ்ணு’ என்ற ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். இதில் ஈசானன், விஷ்ணு, பிரம்மா, குகன், ஆஹவனீயம் தக்ஷிணாக்கினி என்று மூன்று அக்னிகள், சூரியன், சந்திரன், பிள்ளையார், க்ரௌஞ்ச மலை, தேவ இந்திரன், அகஸ்தியர், கச்சியப்பர் இவர்களுடைய பாதங்களை பித்ருக்கள் முக்தி பெறுவதற்காக நமஸ்கரிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். (இந்த பாதங்கள் கயையில் சிலா ரூபமாக உள்ளன.) வடக்கு முகமாக நின்று கயா ஶ்ராத்தம் கயா ஶ்ராத்தம் கயா ஶ்ராத்தம், அக்‌ஷய வட: அக்‌ஷய வட: அக்‌ஷய வட: என்று மூன்று முறை ஜெபிக்க வேண்டும்.


 

No comments: