Pages

Wednesday, February 23, 2022

#ஶ்ராத்தம் - 41 ஶ்ராத்தத்தின் புகழ்ச்சி





சிராத்தத்தை சுமந்து புகழ்கிறார். சிராத்தத்தை விட நன்மையை செய்யும் காரியம் வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் எந்தவித முயற்சி செய்தாவது சிராத்தத்தை செய்ய வேண்டும்.
தேவலர்: சிராத்தத்தை செய்பவன் நோய் நொடி இல்லாமல் நெடுநாள் வாழ்வான். புத்திரன் பேரன் ஆகியவர்களை உடையவன் ஆவான். செல்வத்தை விரும்பினால் செல்வம் உடையவனாகவும் ஆவான். பரலோகத்தில் அதிக மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பலவித சிறந்த உலகங்களையும் அதிகமான யஷஸ்ஸையும் அடைவான்.
எமன் என்பவர் சொல்லுவது: யார் பித்ருக்களையும் தேவர்களையும் அக்னி உள்ள பிராமணர்களையும் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லாப் பிராணிகளுக்கும் உள்ளே இருக்கிற விஷ்ணுவையே பூஜிக்கிறார்கள்.
சிராத்தத்தை செய்யாவிடில் தோஷம் இருக்கிறது. அந்த இடத்தில் புத்திரர்கள் பிறப்பதில்லை; மனிதர்கள் நோயற்று இருப்பதில்லை; நெடுநாள் வாழ்வதும் இல்லை; நன்மையும் அடைவதில்லை.
மார்க்கண்டேயர் சொல்லுவது: அநியாயமான வழியில் சம்பாதித்த திரவியங்களால் சிராத்தத்தை செய்கின்றனரோ அந்த சிராத்தத்தால் சண்டாளர்களும் புல்கசர்களும் திருப்தி அடைகின்றனர். பித்ருக்கள் திருப்தி அடைவதில்லை.
யாக்ஞ்வல்கியர்: வஸுக்கள் ருத்ரர்கள் ஆதித்யர்கள் என்பவர் சிராத்த தேவதைகளான பித்ருக்கள் ஆவார், அவர்கள் சிராத்தத்தினால் திருப்தி செய்யப்பட்டால் அவர்கள் மனிதர்களின் பித்ருக்களை திருப்தி செய்கின்றனர். இப்படி திருப்தியடைந்த பித்ருக்கள் ஆயுசு தனம் வித்யை சுவர்கம் மோக்ஷம் சுகங்கள் ராஜ்யம் ஆகியவற்றை கொடுக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு சக்தி உள்ளது.
எப்படி வழிதவறி போன கன்று பல பசு மாடுகள் இருக்கும்போது தன் தாயான பசுவையே அடைகிறதோ அதுபோல சிராத்தத்தில் கொடுத்த அன்னத்தை மந்திரமானது பித்ருக்களை அடைவிக்கிறது என்று வியாசர் சொல்லுகிறார்.
மத்ஸ்யர் சொல்லுவது: நாமம் கோத்திரம் ஆகியவை ஹவ்ய கவ்யங்களை பித்ருக்களுக்கு கொண்டு சேர்ப்பவை. நமது பித்ருக்கள் வேறு ஜென்மம் எடுத்து இருக்கலாம். அந்தந்த ஜன்மாவுக்கு தகுந்தாற்போல ஆகாரத்தை அடைத்து அந்தப் பிராணிகளை திருப்தி செய்கின்றன. நல்ல கர்மங்களைச் செய்து தெய்வத்தன்மை அடைந்து இருந்தால் அவனுக்கு அது அமிர்தமாக ஆகும். பசுவாகப் பிறந்திருந்தால் அது புல்லாக ஆகும். பாம்பாக பிறந்திருந்தால் காற்றாகி போய் சேரும். யக்‌ஷனாக பிறந்திருந்தால் அது பானமாக ஆகிறது. கழுகு பிறந்திருந்தால், அசுரர்களாக பிறந்திருந்தால் அது மாம்சமாக ஆகிறது. பித்ரு இன்னும் பிரேதம் ஆகவே இருந்தால் அது இரத்தம் கலந்த ஜலம் ஆகிறது. மனிதனாக பிறந்து இருந்தாலும் அது பலவித சுகத்தை உண்டாக்கும் அன்ன பானம் முதலியதாய் ஆகிறது.
இப்படிப்பட்ட சிராத்தத்தை செய்ய வேண்டியவர்கள் தவறாது செய்ய வேண்டும் என்று வேண்டுகிறோம்.
இன்னும் சமையல் சமாசாரங்களும் மற்ற ஸுத்திரக்காரர் விஷயமும் பாக்கி இருக்கிறது.
தந்தையின் ஆப்த்திகம் இந்த வாரம் வருவதால் அடுத்த வாரம் தொடரலாம்.


No comments: