Pages

Wednesday, May 25, 2022

காஶி யாத்திரை -2




2.

 மகனும் மருமகளும் கும்பகோணத்தில் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். ஆஏசி கன்ஃபார்ம் ஆனதால் இருக்கைகள் ஒவ்வொரு இடத்தில் இருந்தன. 3 மூன்று சீட்டுகள் ஏறத்தாழ ஒரே இடத்தில். அதை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு தனியிடத்தில் நான் போய் படுத்துக்கொண்டேன். ராத்திரி ரயில் ஆட்டம் அதிகமாக இருந்தது. அதல் குலுங்கம் திசை என்னுடைய முதுகுக்கு கொஞ்சம் கூட சரியாக வரவில்லை. அதனால் சரியாக தூங்க முடியவில்லை.

ராமேஸ்வரம் போய் சேர்ந்த நேரம் இரவு இரண்டரை மணி. ஏன்தான் இப்படி அட்டவணையை தயாரிக்கிறார்களோ தெரியவில்லை. எல்லோரும் ராமேஸ்வரத்துக்கு போகிறார்கள். அதற்கு மேலே போக முடியாது. அப்படி 5:00 காலை போய் சேருமாறு அட்டவணை இருந்திருக்கலாம்.

மகனின் நண்பர் ஒரு சில ஆட்களை கூட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார். ஆட்டோ அமர்த்திக்கொண்டு தங்கும் இடத்திற்கு போய் சேர்ந்தோம். 100 மீட்டருக்கு ஒரு வேகத்தடை இருக்கிறது. போகும் இடம் புதிதாக உருவான ‘நகர்’. ஒரு ஆட்டோ தாராளமாக போக பாதையின் அகல அனுமதிக்கிறது.

தங்குவதற்கு கொடுத்த இடம் வேறு ஒருவருடைய வீட்டின் மாடி. உள்ளே போனால் அங்கே வேறு யாரோ அங்கு தங்கி இருந்திருக்கவேண்டும். பின் அதை பெருக்கக்கூட இல்லை. அதனால் போன இடத்தில் கொஞ்சம் கண் அசந்து விட்டேன். பெருக்கக் கூட தயாராக இல்லை அப்படியே படுத்துவிட்டேன்.

அசதியில் கொஞ்சம் கண்களை மூடிவிட்டேன். ஏதோ பூச்சிக்கடி நன்றாக தூங்கவிடவில்லை. ஜன்னலை திறக்காமல் அறை ரொம்ப சூடு. திறந்தாலோ பூச்சிகள் படையெடுப்பு. விடிந்தபின் ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் காட்டுச்செடிகள், புதர்கள்…

நாங்கள் தங்கின வீட்டுக்கு பக்கத்து இடம். அந்த கோசாலையில்தான் ஶ்ராத்தம் செய்தோம்.

 

 

முன்னேயே அந்த நாளில் என்ன செய்யப்போகிறோம் என்று கேட்டு வைத்திருந்தேன். அவர் சொன்னபடி நான் ஏழரை மணிக்கு ரெடியாகி விட்டேன். ஆனால் அவர் ஏற்பாடு செய்திருந்த வண்டி வரவில்லை. ஏன் என்று பார்த்தால் கொஞ்சம் பிரச்சனை. வாத்தியாருக்கு உறவினர் வீட்டில் உபநயனம் இருந்ததால் வேறு ஒருவரை இங்கே செய்து வைக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதனால் இவர் உபநயனத்தை விட்டுவிட்டு எங்களுக்காக இங்கேயே இருந்துவிட்டார். இந்த நிலையில் அன்று காலை அந்த நபர் கூப்பிட்டு வந்து விடுவதாக கூறி இருக்கிறார். இது தர்மசங்கடம். பேசாமல் ‘அண்ணா நீங்கள் சரியாக பதில் சொல்லாததால் நானே இங்கே இருப்பதாக முடிவு செய்து விட்டேன்’ என்று சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லாததால் அவர் வரவேண்டும் என்று காத்திருக்க வேண்டியதாயிற்று. இதனால் முக்கால் மணி நேரம் போல் வீணானது. முதலில் லட்சுமண தீர்த்தம் போனோம். அங்கே யாத்திரை சங்கல்பம் செய்து வபனம் செய்ய வேண்டும். அதாவது முடி நீக்குதல். பிராமணன் என்று சிகையை வைத்த பிறகு எந்த காரணம் கொண்டும் எடுக்கவே கூடாது. அப்படி எடுப்பது தற்கொலைக்கு சமம் என்று சொல்லப்படுகிறது. அஸ்வத்தாமன் தன் முடியில் இருந்த மணியுடன் அதை அறுத்து கொடுத்துவிட்டு போய்விட்டான் என்ற பாரத கதை நினைவுக்கு வரலாம். இது தெரியாமல் சில பேர் மொட்டை அடித்துக் கொண்டு விடுகிறார்கள். அது தவறு.

No comments: