Pages

Thursday, September 13, 2018

டீக்கடை பெஞ்ச் கதைகள் -14





'ஹும்!' என்று முனகிக்கொண்டே டீக்கடையில் உட்கார்ந்தான் அந்த இளைஞன். 'ஏன் தம்பி, என்ன ஒரு மாதிரி இருக்கே?' என்று கேட்டுக்கொண்டே சூடான டீயை கொடுத்தார் கடைக்காரர். 'ஒண்ணுமில்லே !'என்று சொல்லிகொண்டு டீயை உறிஞ்சினான் இளைஞன்.
சற்று நேரத்தில் தானாகவே பேச ஆரம்பித்தான்.
'இன்னைக்கு பிள்ளையார் சதுர்த்தி. வீட்டுல பொண்சாதிக்கு உடம்பு சரியில்ல. வெறும் நாலு கொழுக்கட்ட தவிர ஒண்ணும் செய்ய முடியல. மத்த வேலை எல்லாம் நா கவனிக்க வேண்டி இருந்ததால பூசையும் ஒழுங்கா செய்ய முடியலை. இப்ப ஒத்தர் அவரோட இடத்துக்கு அழைச்சுப்போனார். அங்க என்ன விரிவா பூஜை பண்ணாங்க. எவ்ளோ பூ! எவ்ளொ அருகபுல்! எவ்ளோ இலை.. வகைவகையா. எவ்ளோ நைவேத்தியம்! இதெல்லாம் பாத்துட்டு நாமும் இருக்கோமேன்னு தோணிச்சு.'
களுக் என்று சிரிப்புச்சத்தம் அருகில் கேட்டது.
திரும்பிப்பார்த்தான். 'நாதாம்பா!' என்றார் பெரியவர். கடைக்காரர் கொடுத்த டீயை வாங்கி உறிஞ்சிகொண்டே பேச ஆரம்பித்தார்.

'உனக்கு ஒரு கதை சொல்லவா?'
'உம் உம்! கதை எப்பவுமே இஷ்டம்தானே?'
'தாமிரபரணி கரையோரம் ஒரு சின்ன கிராமம். அங்கே வயசான ஒரு பாட்டி இருந்தா. தனியாத்தான் இருந்தா. தள்ளாமையும் வந்தாச்சு. பிள்ளையார் சதுர்த்தி வந்தது. ஊரெல்லாம் கொண்டாட்டம். இவளுக்கோ தள்ளாமை; ஒண்ணுமே செய்ய முடியலையேன்னு வருத்தம். எப்பவுமே சமைக்கிற ஒரு பிடி சோறை பகவானேன்னு நிவேதனம் செஞ்சுட்டுத்தான் சாப்பிடுவா. இன்னைக்கு ஒண்ணும் விசேஷமா செய்ய முடியலே. இந்த வருத்ததோடயே தாமிரபரணில குளிக்கப்போனா. குளிச்சு கரையேறினப்பறம் அரச மரத்தடில இருந்த பிள்ளையாரை பாத்தா. உனக்கு ஒண்ணுமே இன்னைக்கு செய்ய முடியலியேன்னு வருத்தத்தோட சொன்னா. அங்கே யாரோ விட்டுப்போன ஒரு மண்கலயம் கிடந்தது. அதை எடுத்து நல்லா சுத்தம் பண்ணி ஆத்துத்தண்ணிய மொண்டு பிள்ளையார்கிட்ட வெச்சா. பகவானே! என்னால் முடிஞ்சது இவ்ளோதான்னு சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டா.

'இப்ப பிளையார் நிறைய இடங்களில நிவேதனம் பண்ண விதவிதமான பக்‌ஷணங்கள், கொழுக்கட்டை, இட்லி, சுண்டல்ன்னு நிறைய சாப்டு களைப்பாயிட்டார். தாகம் எடுத்தது. சுத்தி முத்தி பாத்தார். இவ்வளோ நிவேதனம் நடந்தாலும் தண்ணி மட்டும் யாரும் நிவேதனம் செய்யலையாம். அப்பதான் பாட்டி தண்ணி கலயத்த வெச்சுட்டுப்போனா. பிள்ளையாருக்கு ஒரே சந்தோஷம்! எடுத்து மடக் மடக்குன்னு குடிச்சார். ஏவ்ன்னு ஏப்பம் விட்டார். பாட்டிக்கு தானா அவரோட அருள் கிடைச்சுடுத்து.'

'அப்ப இப்படி விஸ்தாரமா பூஜை செய்யறது, நிவேதனம் எல்லாம் தேவை இல்லையா?'

'தேவை இல்லைன்னு நான் சொல்லலையே? யார் யாரால என்ன முடியுமோ அவ்வளவு செய்யட்டும். பகவான் என்ன செஞ்சேன்னு மட்டும் பார்க்கிறதில்லை. உன்னால் என்ன முடியும், உனக்கு இருக்கிற லிமிடேஷன் என்ன, உன் மனசு எப்படி இருக்குன்னுதான் பார்க்கிறார்.'

இளைஞன் யோசித்தான். என்னால் முடிஞ்சத இன்னைக்கு பண்ணேன் என்று நினைத்தான். ஆறுதலாக இருந்தது.

திரும்பிப்பார்க்கவில்லை. அவர் அங்கே இன்னும் இருக்க மாட்டார் என்று தெரியும்!

No comments: