Pages

Tuesday, December 14, 2021

ஶ்ராத்தம் – 4 -வரணம் முறை





(விஶ்வேதேவர் என்பதே சரியாக எழுதும் முறை.)
நல்லது. வந்தவர்களில் வயதானவரை விஸ்வேதேவராக வரணம் செய்யவேண்டும். பித்ருக்களாக இரண்டாம் நபரை வரணம் செய்ய வேண்டும்.
இங்கே ஆரம்பத்தில் பொதுவாக சில விஷயங்களை சொல்லி விடுகிறேன். விஸ்வேதேவருக்கு எந்த உபசாரம் செய்வதாக இருந்தாலும் நாம் வழக்கமாக பூணூல் அணிவது போல அதாவது இடது தோளில் பூணூல் இருப்பதாக செய்ய வேண்டும். அட்சதை என்கிற முனை முறியாத அரிசியை உபயோகப்படுத்த வேண்டும். மங்களாக்‌ஷதை வேறு; இந்த அட்சதை வேறூ. அக்‌ஷதை என்றால் முனை முறியாதது என்றுதான் பொருள். மங்களாக்‌ஷதை என்பது இது போன்ற அரிசியுடன் மஞ்சள், குங்குமம், நெய் ஆகியவற்றை சேர்த்து தேவ பூஜைக்காக தயார் செய்வது. சாதாரணமான முனை முறியாத அரிசியை களைந்து உலர வைத்து உபயோகித்தால் அது இந்த சிராத்தத்துக்கானது. விஸ்வேதேவருக்கு செய்யக்கூடிய எல்லா உபசாரங்களிலும் இடது தோளில் பூணூல், அதாவது உபவீதி என்பார்கள், அதே மாதிரி அக்ஷதை இதுதான் உபயோகத்திற்கு வரும். விஸ்வேதேவர் என்பதே தேவர் என்பதைக் காட்டிவிடுகிறது. ஆகவே அவருக்கு செய்வது நாம் விரல் நுனிகளால் நேரடியாக அரிசியோ அக்‌ஷதையோ ஜலமோ விழுவதாகத்தான் செய்வோம். இதுவே பித்ரு என்றால் மறித்து செய்வோம் இல்லையா?
அடுத்து பித்ருக்கள். பித்ருக்களுக்கு எந்த உபசாரம் செய்வதானாலும் எள்தான் பயனாகும். (ஒரு விதி விலக்கு அப்புறம் சொல்கிறேன்) அத்துடன் அவருக்கு செய்யும் பல காரியங்களையும் இடது தோளில் இருக்கும் பூணூலை வலது தோளுக்கு மாற்றி கொண்டு அதாவது ப்ராசீனாவீதி என்பார்கள் - தொங்கும் பூணூலின் கீழ் இடது கை விட்டு வலது தோளுக்கு மாற்றி அணிந்து கொண்டு தான் செய்ய வேண்டும். அதே போல எள்ளை எடுக்க மோதிரவிரலும் கட்டைவிரலும் பயனுக்கு வரும். அதை போடுவது, ஜலம் விடுவது போன்றவை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் விழும்படி செய்ய வேண்டும்.
நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது விஸ்வேதேவருக்கு எப்போதுமே தெய்வ பூஜை மாதிரி இடது தோளில் பூணூல், விரல் நுனிகளால் அர்ப்பணம். பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூல்; கையை மறித்து கட்டை விரல் ஆள்காட்டி விரல் நடுவில் தர்ப்பணம் முதலான விஷயங்கள். இதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த விஸ்வேதேவர்கள் இந்த சிரார்த்தத்துக்கு பலத்தை சேர்ப்பதற்காக இங்கே கூடி வருகிறார்கள். இல்லாவிட்டால் சிராத்தம் எனப்து பித்ருக்களை உத்தேசித்ததுதான் இல்லையா? ஆனால் இங்கே விஸ்வேதேவர்கள் என்ற இவர்கள் வருகிறார்கள். புரூரார்த்ரவ சம்ஹிகேப்ப்யஹ என்பார்கள். ஆருணம் வேத பாடத்தில் - சூரியநமஸ்காரம் என்றும் சொல்வர்- பார்த்திருக்கலாம் விஸ்வேதேவர்கள் பற்றிப் பேசப்படுகிறது. மிகவும் பலம் வாய்ந்தவர்கள் அவர்களை யாராலும் வெற்றி கொள்ள முடியாது என்றெல்லாம் வரும். அத்தகைய பலம் விஸ்வேதேவர்கள் இந்த சிரார்த்தத்துக்கு பலம் சேர்ப்பதற்காக வருகிறார்கள். ஆகவே அவர்களும் நம்முடைய பூஜைக்கு உரித்தானவர்கள்தான். மேலும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

No comments: