பொதுவான கடவுள்னா ஏன் இப்படி பார பட்சம் காட்டறாரு?



கடவுள் மறுப்பாளர்கள் முன் வைக்கிற இன்னொரு வாதம் - ஏன் ஏற்றத்தாழ்வு இருக்கு? எல்லாரும் ஒரே மாதிரி இருந்து இருக்கலாமே? ஏன் சிலர் பணக்காரங்க சிலர் அறிவாளி சிலர் பலசாலி மத்தவங்க அப்படி இல்லாம? சிலருக்கு எல்லாமே நல்லதா நடக்குது சிலருக்கு குட்டிக்கரணம் போட்டாலும் நடக்கலை. எல்லாருக்கும் பொதுவான கடவுள்னா ஏன் இப்படி பார பட்சம் காட்டறாரு?

முதலாவதா கடவுள் பாரபட்சம் காட்டலை. ஒரே அப்பா ஒழுங்கா படிச்சு நல்ல மார்க் வாங்கற பையனை தட்டிக்கொடுத்து பாராட்டுறார். சரியா படிக்காம ஊர் சுத்ததிட்டு குறைவா மார்க் வாங்கற பையனை திட்டறார் அடிக்கிறார். அது ஏன் அவருக்கு அதில சந்தோஷமா என்ன? கண்டிக்காட்டா பையன் இன்னும்தானே கெட்டுப்போவான்? அப்புறம் கஷ்டப்படுறது யாரு? அது போலதான் தர்மத்துப்படி நடந்துக்கிறவங்களுக்கு நல்லது செஞ்சு மத்தவங்களுக்கு தண்டனை தருவது இதுக்குத்தான். மக்களை நல்வழியிலே போக வைக்கத்தான். தண்டனை கொடுக்கிறதும் கருணையாலதான்.

இரண்டாவதா நெருப்பு எரியுது. யார் கிட்டே போய் உக்காந்துக்கிறாங்களோ அவங்களுக்கு குளிர் போகும். சுகமாயிருப்பாங்க. யார் கிட்டேயே வர மாட்டேன் என்கிறாங்களோ அவங்களுக்கு அதோட பயன் கிடைக்காது. இது நெருப்போட குத்தமா இல்லை பயன்படுத்தறவங்க குத்தமா? வெய்யில்லே காஞ்சுட்டு வந்த ஆசாமி குடத்தில இருக்கிற தண்ணியை குடிச்சாதான் தாகம் போகும். இல்லைனா தாகம் போகாது. அது தண்ணியோட குத்தமில்லை. அது போல ஆண்டவன்கிட்டே முறையிட்டா பலன் கிடைக்கும். இல்லாட்டா எப்படிக்கிடைக்கும்?

60.
ஈஸ்வர சிருட்டி பொதுவானால் அவரும் பொதுவாமே, அப்படியானால் பட்சபாதம் வருவானேன்? விடை:

நலமெய் யையனே யெல்லவர்க் குந்தெய்வ நாயகன் பொதுவானால்
சிலரை வாழ்வித்தல் சிலரொடு கோபித்தல் செய்வதே யேனென்றாயேல்
குலவு மக்களைத் தந்தை போற் சிட்டரைக் குளிர்ந்து துட்டரை காய்வன்
கலைக்கணல் வழி வரச்செய்யும் தண்டமுங் கருணையென் றறிவாயே

நலமெய் ஐயனே, எல்லவர்க்கும் (எல்லாருக்கும்) தெய்வ நாயகன் (ஈசன்) பொதுவானால் சிலரை [நன்கு] வாழ்வித்தல், சிலரொடு கோபித்தல் செய்வது (துன்பமடையச்செய்வது) ஏன் என்றாயேல், குலவு மக்களைத் தந்தை போல் சிட்டரைக் குளிர்ந்து (சாத்திரங்களில் செய்யச் சொல்லியவற்றை செய்து விலக்கச் சொல்லியவற்றை விலக்கி செய்யாது உள்ளோருக்கு இன்பத்தை அளிக்கிறான்) துட்டரை காய்வன். (விலக்கிய தீ நெறியில் செல்வோர்களை தண்டிப்பான்) கலைக் கணல் வழி (ஆன்மாக்கள் நல்ல வழியில்) வரச் செய்யும் தண்டமும் (தண்டனையும்) கருணை[யால் செய்வதே] என்று அறிவாயே.
--
தந்தை நன்னடத்தை உள்ள மகனை சீராட்டி, கெட்ட நடத்தை உள்ள மகனை தண்டிப்பது போல ஈசனும் செய்கிறான்.

61.
மற்றொரு விதமாக விடை:
மனை யிலங்கறு மைந்தனே கற்பக மரங்கனல் புனன் மூன்றும்
தனைய டைந்தவர் வறுமையுஞ் சீதமுந் தாகமுந் தவிர்த்தாளும்
அனைய வீசனு மடைந்தவர்க் கருள்செய்வ னகன்றவர்க் கருள்செய்யான்
இனைய குற்றங்க ளெவர் குற்றமாகு மென்றெண்ணிநீ யறிவாயே

மனையிலங்கு அரு மைந்தனே, கற்பக மரம், கனல் (தீ), புனல் (நீர்) மூன்றும் தனை (தம்மை) அடைந்தவர் வறுமையும், சீதமும் (குளிரும்) தாகமும் தவிர்த்து ஆளும். (காப்பாற்றும்) அனைய [அதுபோல்] ஈசனும் அடைந்தவர்க்கு (வழிபடுவோருக்கு) அருள் செய்வன். அகன்றவர்க்கு அருள் செய்யான். இனைய (இந்த) குற்றங்கள் எவர் குற்றமாகும் என்று எண்ணி நீ அறிவாயே.

"சரி, எனக்கு என்ன செய்யணும் ன்னு தெரியலையே!"ன்னா செய்ய வேண்டியது ஒண்ணுதான். ஈசன் கொடுத்து இருக்கிற சாஸ்திரங்கள், வேதம் முதலியதெல்லாம் என்ன செய்ய சொல்லி இருக்குன்னு பாத்து அது மாதிரி நடந்துக்கணும். இப்படி செய்து கொண்டு நல்லவங்க கூடவே பழகிகிட்டு கெட்ட வாசனைகளை விட்டுடணும். இது ஆன்ம முன்னேற்றத்துக்கு உதவும் - இது உதவாது என்கிற விவேகத்தோட சமம், தமம் முதலானதை பழகணும். இப்படியாக சாதனை செஞ்சு, மாயையை நீக்கி, ஞானத்தை அடைகிறவங்களோட பிறப்பு ஒழியும். இது சர்வ நிச்சயம் என்கிறார் தாண்டவராய சுவாமிகள்.

பொரு திடங்கொண்ட பொன்னி புரக்கும்
அருதிடங்கொண்ட மருத வாண
நின்னது குற்றம் உளதோ நின்னி நினைந்து
எண்ணருங் கோடி இடர் பகை களைந்து
கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா
இறப்பையும் பிறப்பையும் இகழ்ந்து சிறப்பொடு
தேவர் ஆவின் கன்றெனத் திரியாப்
பாவிகள் தமதே பாவம் யாதெனின்
முறியற் பெறுக்கள் முப்பழங் கலந்த
அறுசுவை அடிசில் அட்டினி திருப்பப்
புசியா தொருவன் பசியால் வருந்துதல்
அயினியின் குற்றமன்று வெயிலின் வைத்து
ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட்டு இருப்ப
மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை
தெண்ணீர் குற்றமன்று கண்ணகன்று
தேன்துளி சிதறிப் பூந்துணர் துறுமி
வாலுகங் கிடந்த சோலை கிடப்ப
வெள்ளிடை வெயிலில் புள்ளிவெயர் பொடிப்ப
வடிபெயர்த்திடுவான் ஒருவன்
நெடிது வருந்துதல் இழற்றீங்கு அன்றே.

குண்ட்ஸா புரியுது இல்லே? சாப்பாடு ரெடியா இருக்கிறப்ப பசியோட இருக்கிறவன் சாப்பிடலைனா அது என்ன பண்ணும்? தாகமா இருக்கிறவன் இருக்கிற வாசனையான தண்ணியை குடிக்கலைனா தண்ணி என்ன பண்ணும்? குளிர்ச்சியான சோலை இருக்க வெயில்லே நான் காயறேன்னா சோலை என்ன பண்ணும்?


சீவச்செயலை ஈஸ்வர செயலாகக் கூறுபவர்க்கு.....



முண்டகோபனிஷத்திலே ஒரு அருமையான உதாரணம் வருது. ஒரு அரச மரத்திலே ரெண்டு பறவைகள். கீழ் கிளையில இருக்கிற ஒரு பறவை கிளைக்கு கிளை தாவி அங்க இருக்கிற பழங்களை எல்லாம் விரும்பி சாப்பிடும். மேல் கிளையில இருக்கிற மற்ற பறவை சாந்தமா சும்மா உக்காந்து இருக்கும். வேணும் வேணும் ன்னு ஆலாய் பறக்கிற பறவைதான் சீவன். அசங்காமல் இருக்கிறது ஈசன். சீவன் அஞ்ஞானத்தால சுக துக்கங்களை அனுபவிக்கிறான். சுத்த சத்வ மாயையான ஈசன் இப்படி சுக துக்கங்களால பாதிக்கப்படுகிறதில்லை.

யார் ஜீவனோட செயல்களை கண்டு பிடிச்சுக்கொண்டு அதை சரி செய்ய நினைக்கிறங்களோ அவங்க தன் அகங்காரம், கோபம், தாபங்களை ஒழிச்சு முக்தி அடைய வாய்ப்பு இருக்கு. யார் செய்கிறதை எல்லாம் செய்ஞ்சுகிட்டு எல்லாமே ஈசன் செயல்ன்னு சொல்லிகிட்டு பழியை அவர் மேலே போட்டுட்டு இருக்காங்களோ அவங்க தன்னை கொஞ்சம் கூட மாத்திக்கப்போறதில்லை. (இங்கே முழு சரணாகதி பத்தி பேசலை. விதண்டாவாதம் செய்கிறவங்களைப்பத்திதான் பேசறோம். முன்னே கூட இதே பதிவுகளிலே இதைப்பத்தி பேசி இருக்கோம்!)

59.
சீவச்செயலை ஈஸ்வர செயலாகக் கூறுபவர்க்கு சனன துன்பமும் சீவச்செயலாவே கூறுபவர்க்கு முத்தியின் பலமும் பயனாம்:

இந்தச் சீவனால் வருமரு பகையெலா மிவன்செய லென்னாமல்
அந்தத் தேவனால் வருமென்ற மூடர்க ளதோகெதி யடைவார்கள்
இந்தச் சீவனால் வருமறு பகையெலா மிவன் செயலல்லாமல்
அந்தத்தேவனா லன்றெனும் விவேகிகளமலவீ டடைவாரே

இந்தச் சீவனால் வரும் (நேரிடும்) அரு பகையெலாம் (இங்கு ஆசை, கோபம் முதலானவை) இவன் (சீவனின்) செயல் என்னாமல், அந்தத் தேவனால் வரும் என்ற மூடர்கள் அதோ கெதி அடைவார்கள். இந்தச் சீவனால் வரும் அறு பகையெலாம் (செயல்களெல்லாம்) இவன் செயல் அல்லாமல் அந்தத் தேவனால் அன்று எனும் விவேகிகள் அமல (குற்றமற்ற) வீடு (மோக்ஷம்) அடைவாரே.
---
காம குரோதம் முதலான தீய குணங்களை தன்னுடைய செயல்கள் அல்ல என நினைப்பவன் மேலும் மேலும் அவற்றை செய்து பெரும்பாவம் தேடிக்கொள்வான். அவை தன்னுடையன என்று அறிபவன் அவற்றால் ஏற்படும் தீய பலன்களுக்கு அஞ்சி அக்குணங்களை ஒழிக்க முயன்று ஞானத்தை பெற்று முத்தி அடைவான்.



ஈஸ்வரனோட சிருஷ்டி வேறே; சீவனோட சிருஷ்டி வேறே...




ஈஸ்வரனோட சிருஷ்டி வேறே; சீவனோட சிருஷ்டி வேறே. உலகத்தில பொதுவா இருக்கிறது எல்லாமே ஈஸ்வரனோட சிருஷ்டி. நதிகள் அவன் சிருஷ்டி. மலைகள், கடல், பூமி, வானம், செடி கொடிகள்......
அதை எல்லாம் வைத்துக்கொண்டு மனிதன் செய்கிறது சீவ சிருஷ்டி.
நான், என்னுது, கோபம், தாபம், பொறாமை - இதெல்லாம் மனிதனோட சிருஷ்டி.

[ஒரு சன்னியாசி வித்தியாசமா இறைவன் பத்தி சொன்னார்.
சாமி இருக்கான்னு கேக்கிறியா? இருக்கார்.
அவர் யார் ன்னு கேக்கிறயா?
எதுவெல்லாம் உருவாக மனுஷன் பொறுப்பில்லையோ, அதை எல்லாம் உருவாக்கினவர்தான் சாமி!]

முக்கிய வித்தியாசம் என்னன்னா ஈசனோட சிருஷ்டிகள் மோக்ஷமடைய சாதனமா ஆகும். புண்ணிய தீர்த்தங்கள், மலைகள், விருட்சங்கள்.... இப்படி ஏராளமா இருக்கே.
இன்னுமொன்னு. ஈசனோட சிருஷ்டிகள் நாசம் ஆகிறதால யாருக்கும் பிறவி ஒழியாது. ஆனா மனித சிருஷ்டியான நான், என்னது என்கிறதெல்லாம் ஒழிஞ்சா பிறவி ஒழியும்.
பிரலய காலத்திலே ஈச சிருஷ்டிகள் எல்லாம் ஒழியும். அப்பவும் பிறவி ஒழியாது. மெழுகு உருண்டையில தங்க தூள் போல ஜீவாத்தமா எல்லாமே சரியான நேரத்துக்காக காத்து இருந்து திருப்பி பிறவி எடுக்கும்.
ஆனா தேசம், காலம், தேகம் எல்லாம் இருக்கிறப்பவே ஆசை, கோபம், அகங்காரம் ஒழிச்சவங்க உயிரோட ஜீவன் முக்தர்களா இந்த உலகத்திலேயே ஞானத்தோட இருக்காங்க.

ஈஸ்வர சிருஷ்டி பொது; சீவன் அதில வேறுபாட்டை உருவாக்கறான் என்பதுக்கு உதாரணம் பாக்கலாம். ஈசன் ஒரு பெண்ணை படைக்கிறான். பொதுவா எல்லா பெண்களும் ஒரே தேக அமைப்போடதான் இருக்காங்க. ஆனா மனித பார்வையிலே ஒத்தர் அழகு ஒத்தர் கோரம்... இதே பெண் ஒத்தருக்கு பெண்; ஒத்தருக்கு மனைவி; ஒத்தருக்கு அம்மா; சகோதரி, நாட்டுப்பெண், பாட்டி..... இப்படி வித்தியாசங்களை உருவாக்குகிறது மனிதனோட கற்பனைதான்.

ஈச சிருஷ்டியை சீரழிச்சு மனுஷன் இயற்கையை திட்டுகிறதையும் பாத்துகிட்டுதானே இருக்கோம்.

55.

திகழ்ந்த வீசனார் சிருட்டியுஞ் சீவனார் சிருட்டியும் வெவ்வேறே
சகந்த னிற்பொது வீசனார் சிருட்டிகள் சராசரப் பொருளெல்லாம்
அகந்தை யாமபி மானங்கள் கோபங்க ளாசைக ளிவையெல்லாம்
இகழ்ந்த சீவனார் சிருட்டிக ளாகுங்கா ணீசனார் செயலன்றே

திகழ்ந்த ஈசனார் சிருட்டியும் சீவனார் சிருட்டியும் வெவ்வேறே. ஈசனார் சிருட்டிகள்- சகந்தனில் பொது - சராசரப் பொருளெல்லாம். அகந்தையாம் (என் என்ற) அபிமானங்கள், கோபங்கள், ஆசைகள் இவையெல்லாம் இகழ்ந்த சீவனார் சிருட்டிகள் ஆகும் காண். ஈசனார் செயல் அன்றே.
--

56.
மூவராம்பரன் சிருட்டிக ளுயிர்களுக்கெல்லா முத்திசா தனமாகும்
சீவ னார்செயுஞ் சிருட்டிக டங்களைச் செனிப்பிக்கும் பிணியாகும்
தாவ ராதிக ணசித்திடி லொருவர்க்குஞ் சனனங்க ணசியாவாங்
கோப மாதிக ணசித்திடிற் பந்தமாங் கொடும் பிற விகள்போமே

மூவராம் பரன் சிருட்டிகள் உயிர்களுக்கெல்லாம் முத்தி சாதனமாகும். சீவனார் செயும் சிருட்டிகள் தங்களைச் செனிப்பிக்கும் பிணியாகும். தாவராதிகள் நசித்திடில் ஒருவர்க்கும் சனனங்கள் நசியாவாம். கோபமாதிகள் நசித்திடில் பந்தமாம் கொடும் பிறவிகள் போமே.
--
ஈசனது சிருட்டிகள் மோக்ஷத்துக்கு சாதனமாகும். சீவர்களின் சிருட்டிகள் பிறவி அளிக்கும் பந்தங்களாம். ஈசன் சிருட்டித்த தாவரம் முதலியவை அழிந்தால் ஒருவருக்கும் ஜனனம் ஒழியாது.

57.
ஈசர் காரியம் பிரளயத் தொழியவு மெவர்பவ மொழிந்தார்கள்
தேச காலதே காதிக ளிருக்கவுஞ் சீவகா ரியமோகம்
நாச மாக்கிய விவேகத்தி னுயிரொடு ஞானமுத் தர்களானார்
பாச மோகங்கள் பசுக்களின் செயலன்றிப் பசுபதி செயலன்றே

ஈசர் காரியம் பிரளயத்து ஒழியவும் எவர் பவம் (உலகம்) ஒழிந்தார்கள்? தேச கால தேகாதிகள் இருக்கவும் சீவகாரிய மோகம் நாசமாக்கிய விவேகத்தின் உயிரொடு ஞான முத்தர்களானார். பாச மோகங்கள் பசுக்களின் செயலன்றிப் பசுபதி செயலன்றே.
--
பிரளய காலத்தில் ஈசன் சிருட்டித்த அனைத்தும் அழிகின்றன. அப்படியும் யாருக்கும் ஜனன நாசம் ஏற்படுவதில்லை. கோபம் அகங்காரம் ஆசை ஆகிய ஜீவ சிருஷ்டிகள் ஒழிந்தால் ஜனன நாசம் ஏற்படும்.


நான் செய்வதற்கு நான் பொறுப்பில்லை!



பிரகாசமான ரெண்டு கண்கள்! ஆனா பார்வை எங்கே போகிறதுன்னு விஷயம் இருக்கு இல்லையா? எங்கேயோ பராக்கு பாத்துண்டு போனா ஏதாவது படுகுழி வழில வந்தா விழத்தான் விழுவாங்க.
அதனால எல்லாத்திலேயும் மெய்ப்பொருளையே பாக்கிற உள் முக பார்வை இருக்கிறவங்களுக்கு நித்தியமான பிரம்மானந்த பதவி கிடைக்கும். சுவர்கத்தை விரும்பிக்கொண்டு இருக்கிறவங்க (ஆசைகள் நிறைய இருக்கிறவங்க ) என்ன படிச்சா என்ன, இந்த பிறவிக்கடலிலே விழுந்துகொண்டுதான் இருப்பாங்க. முக்தி அடைய மாட்டாங்க!


53.
விடை:

அழிவி லாததற் பதந்தனை மைந்தனே யகமுகத் தவர் சேர்வர்
வழிந டப்பவர் பராமுக மாயினான் மலர்ந்தகண் ணிருந்தாலும்
குழியில் வீழ்வர்கா ணப்படி வெளி முகங்கொண்டுகா மிகளானோர்
பழித ரும்பிற விக்கட லழுந்துவர் பரகதி யடையாரே

அழிவிலாத தத் பதந்தனை மைந்தனே, அக முகத்தவர் சேர்வர். வழி நடப்பவர் பராமுக மாயினான் மலர்ந்த (திறந்த) கண் இருந்தாலும் குழியில் வீழ்வர் காண். அப்படி வெளி முகம் கொண்டு காமிகளானோர் பழி தரும் பிறவிக் கடலழுந்துவர் பரகதியடையாரே.
--
வழியில் செல்பவர் கண்கள் திறந்து இருந்தாலும் பார்க்காது சென்றால் குழியில் விழுவார்கள் அல்லவா? அதுபோல வெளிமுக பர்வை கொண்ட சுவர்க காமிகள் கருவி நூல்கள் பல கற்றாலும் பிறவிக்கடலில் அழுந்துவார்களே அன்றி முத்தியடையார். எல்லாவற்றிலும் மெய்ப்பொருளை காணும் அகமுக பார்வை உடையவர் நித்திய பிரம்மாநந்த பதவி அடைவர்.

பல சமயங்களிலே சிலர் ஒரு வாதத்தை முன் வைக்கிறாங்க.
நீதான் எல்லாம் அவன் செயல்ன்னு சொல்கிறாயே! அப்ப நான் செய்கிறது எதுவுமே நான் செய்கிறது இல்லையே! நல்லதோ, கெட்டதோ எல்லாம் அவன் செய்விக்கிறது. நான் நினைச்சாலும் எதுவும் செய்ய எனக்கு சுதந்திரம் இல்லையே! அப்ப நான் என்ன செஞ்சாலும் என் மேலே குற்றம் சொல்லக்கூடாது.
மேலோட்டமா பாத்தா நல்ல ஆர்குமெண்ட் தான்.
அப்படி இல்லை.


54.
சீவச் செயலிவை சிவச்செயலிவை எனத் தெளியும் நிமித்தம் வினவுதலுக்கு விடை:

சிறந்த நன்மையுந் தீமையு மீசனார் செய்விக்குஞ் செயலன்றோ
பிறந்த சீவர்க ளென்செய்வா ரவர்கண் மேற்பிழைசொலும் வழியேதோ
துறந்த தேசிக மூர்த்தியே யென்றிடிற் சுருதிநூற் பொருண் மார்க்கம்
மறந்த மூடர்கள் வசனிக்கும் பிராந்திகாண் மைந்தனே யதுகேளாய்

சிறந்த நன்மையும் தீமையும் ஈசனார் செய்விக்கும் செயலன்றோ? பிறந்த சீவர்கள் என் செய்வார்? அவர் கண் மேற் பிழை சொலும் வழி ஏதோ? துறந்த தேசிக மூர்த்தியே என்றிடில், சுருதி நூற் (வேதநூல்)[இன்] பொருள், மார்க்கம் (வழி) மறந்த மூடர்கள் வசனிக்கும் (சொல்லும்) பிராந்தி (மயக்கம்) காண். மைந்தனே அது கேளாய்.


காக்கைக்கு தக்க கணை



எப்பவும் நல்ல குரு சீடனோட தராதரத்தை அறிஞ்சு கொண்டே செய்ய வேண்டியதை சொல்லுவார்; உபதேசம் செய்வார். ஒத்தரால முடியாததை செய் ன்னு சொல்கிறதுல என்ன பிரயோசனம்?

சீடனறி வெவ்வளவோ வவ்வளவுஞ் சிந்தித்துக்
கூறுமுப தேசங்கள் கூறுவா-னீடுபுக
மூக்கமுடைச் சீராம னெண்ணுதற்கா யன்றெய்தான்
காக்கைக்கு தக்க கணை
(ஞான விளக்கம்- வள்ளலார்)
சீடன் அறிவு எவ்வளவோ அவ்வளவும் சிந்தித்துக் கூறும் உப தேசங்கள் கூறுவான் - ஈடு புகம் ஊக்கமுடைச் சீராமன் எண்ணுதற்கா அன்று எய்தான் காக்கைக்கு தக்க கணை.

(இந்த காக்கைக்கு தக்க கணை பத்தி பின்னூட்டம் வரும்ன்னு எதிர்பார்க்கிறேன்! :-)மந்த அதிகாரிகளுக்கே சரியை கிரியை எல்லாம் சொல்லி இருக்காங்க. அதாவது முக்காலே மூணு வீசமான நமக்குத்தான். அதனால ஞானத்தை உபதேசிக்கிற இடத்திலே இதை எல்லாம் தாழ்த்தியேதான் சொல்லி இருக்கும்.

தலையெலாந் தெய்வமென்னுந் தன்னை மற்றேனை
யிடையெல்லாம் வேறிருக்கு மென்னுங்-கடையெல்லா
மரத்தைபா டாணத்தை மண்ணையிருஞ் செம்பைக்
கருத்துருகத் தெய்வமெனுங் காண்

உத்தமங்க ளெல்லா முணர்வையே தாம்பேணும்
மத்திமங்க ளேபதுமை யைவாழ்த்துஞ்-சுத்த
அதமங்க ளெல்லாந்தன் னாகத்தைப் போற்று
நதியோடை கூபமென நாடு

தத்துவத்துக்கப்பாலே தன்னை தரிசித்து
நித்த பரி பூரணத்தினில்லாமல்-சுத்த
பனிமாயை யாற்செய் பதுமையினைத் தேடு
நனிமா னிடமிருக நாடு
(ஞான விளக்கம்- வள்ளலார்)

(தமிழ் அறிஞர்கள் யாரென்னும் இந்த் அபாடல்களுக்கு இன்னும் விளக்கம் தரலாம்!)
இதனால கிரியை, சரியை, விக்கிரஹ ஆராதனை எல்லாம் தேவை இல்லைன்னு இல்லை. அவரவருக்கு தகுந்தபடி...
மொட்டை மாடிக்கு போய்விட்டவனுக்கு மேலே போக படிகள் வேணாம். கீழ் மாடிகளிலே இருக்கிறவனுக்கு அது நிச்சயம் வேணும்தான்!
--
நிறைய அறிஞர்களை பாக்கலாம். பல நூல்களை எல்லாம் கரைச்சு குடிச்சு இருப்பாங்க. ஞான சம்பந்தமான நூல்களைக்கூடத்தான். அது குறிச்சு மணிக்கணக்கிலே விவாதம் செய்ய தயாரா இருப்பாங்க. சமயத்திலே சூடு பறக்கற விவாதங்கள் கூட நடக்கும். (பொன்னியின் செல்வன் ஆழ்வார்க்கடியான் ஞாபகத்துக்கு வரார்!) சரி அவ்வளொ தெரிஞ்சு இருக்கு இல்லே? அப்பக்கூட ஞான வழியிலே போகாம கர்ம படுகுழியிலே ஏன் விழறாங்க?

இந்த தியரிக்கும் நடைமுறைக்கும் ரொம்ப தூரம் என்கிற விஷயம் அடிக்கடி பாக்கலாம் வாழ்க்கையிலே! அன்பின் அவசியத்தைப்பத்தி மணிக்கணக்கிலே பேசிட்டு மத்தவங்க மேலே எரிஞ்சு விழுகிறவர்களை பாத்துதானே இருக்கோம்!

52.
அறிஞர்களும் ஆனந்தம் தரும் அத்வைத ஞானத்தை விட்டு கர்மம் செய்து துன்புறுதல் ஏன்?

என்ம னந்திருக்கோவிலாத் தினங்குடி யிருந்தருள் குருமூர்த்தி
சென்ம சஞ்சித வினைகள்வே ரறுத்திடும் தேவரீர் மெஞ்ஞானம்
தன்ம யந்தரு மகிமையை விபுதராஞ் சமர்த்தரு மறியாமல்
கன்ம மாங்குழி யினில்விழுந் தழிகின்ற காரணமுரையீரே

என் மனந்திருக்கோவிலாத் தினம் குடி இருந்து அருள் குருமூர்த்தி, சென்ம சஞ்சித வினைகள் வேரறுத்திடும் தேவரீர், மெஞ்ஞானம் [ஆனது] தன்மயம் (மோக்ஷம்) தரும் மகிமையை விபுதராம் சமர்த்தரும் (கற்று தெரிந்து கொண்ட பெரும் அறிஞர்களும்) அறியாமல் (அதை அடைந்து உய்யாமல்) கன்மமாம் (கர்மமாம்) [படு] குழியினில் விழுந்து அழிகின்ற காரணம் உரையீரே. (கூறுங்கள்)