
ஒரே பிரச்சினை.
"என்ன பிரச்சினை?”
"வீட்டிலே ஜெ பாட்டுக்கு எப்ப பாத்தாலும் ஏதோ தியானத்திலே இருக்கான்.
எந்த வேலையை தேடவும் முனையலை. வாழ்க்கையிலே பிடிப்பே இல்லாத மாதிரி
இருக்கான்.”
ஏதோ பெரிய சமாசாரம் இது ன்னு தோன்றியது.
"அவரோட தினசரி வேலையை அவரே பாத்துக்கிறாரா?”
"பாத்துக்கிறார்.”
"அவரை அவர் போக்கிலேயே விட்டுங்க. மாத்த முயற்சி செய்ய வேணாம். தேவையானால் நான் வந்து உங்க அப்பா அம்மாகிட்டே பேசறேன்.”
வந்த தம்பி நான் வீட்டுக்கு வந்து ஜெ ஐ மாத்த முயற்சி செய்வேன்ன்னு நினைச்சார் போல இருக்கு. சரின்னு அரை குறை மனசோட கிளம்பி போனார். தொடர்பு
கொள்ளவே இல்லை.
அடுத்த வருடம் யக்ஞத்தில் ஜெ வெறும் பார்வையாளராக மட்டும் வந்து போனார்.
சிரித்துக்கொண்டே ஜபம் எல்லாம் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். சில மாதங்களுக்குப்பின் ஜெ வுடன் அவர் தம்பி வந்து சேர்ந்தார்.
"என்ன விஷயம்?”
"இவர் பிரச்சினை அதிகமா இருக்கு.”
“????”
"சரி! இவன் ஆன்மீகத்திலேதான் போவான் போல இருக்குன்னு **** ஆசிரமத்திலே
கொண்டுவிட்டோம்.”
"ம்ம்ம்..”
"மூணு மாசத்துக்குள்ளே அவங்க போன் பண்ணி அழைச்சுண்டு போக சொல்லிட்டாங்க.”
"ஏன்!!!!!”
"இவர் பாட்டுக்கு உலாவ போயிடுவார். எங்கே போவார்ன்னு யாருக்கும் தெரியாது.
ஆளை காணோமேன்னு போய் தேடி அழைச்சுண்டு வரணும். ஆசிரம வளாகத்திலெ எங்கே வேணுமானால் இருப்பார். அங்கே எடுக்கிற வகுப்புகளிலேயும் கலந்துக்கிறதில்லை. ஒண்ணும் சரிப்பட்டு வரலை.
திடீர்ண்ணு பாத்தா கண்ணிலேந்ந்து கண்ணீர் வர மௌனமாக இருப்பார். ஆதனால்
அவர்கள் அழைத்து போக சொல்லிவிட்டார்கள். இப்ப என்ன செய்யறது?”
ஜெ வை "என்ன சமாசாரம்?"ன்னு கேட்டேன். அவர் சிரித்துகொண்டே எனக்கு ஒரு
பிரச்சினையும் இல்லை. இவர்கள்தான் கவலைப்படுக்கிறார்கள். என்னால் இவர்களுக்குத்தான் தொல்லை என்றார்.
"இதோ பாருங்கள்! இவரை என்ன செய்வது என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. நாளை **** போய் என் வழிகாட்டியை சந்திக்க இருக்கிறேன். அவரிடன் கேட்டு வருகிறேன். திங்கள் அன்று வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினேன்.
ஞாயிறு தாத்தாவை (யார் என்று தெரிகிறதல்லவா? என் வழி காட்டி) பார்க்கபோனேன். மற்ற விஷயங்கள் பேசிவிட்டு இவரை பற்றி சொன்னேன். அவர் "டேய்! அவர் என்ன ஸ்டேஜிலே இருக்கார் தெரியுமா? துரியத்திலே இருக்கார். அவருக்கு இப்போ மாத்ரு பாவத்துடன் ஒரு வழிகாட்டுதல் தேவை. **** ஐ போய் பாக்கச்சொல்" என்றார்.
கடலூர் திரும்பினேன். இரண்டு பேருமே மீண்டும் வந்தார்கள். சேதியை சொன்னேன்.
ஜெ சிரித்துக்கொண்டே "நான் **** இல் இருந்த போது சக பயணி ஒருவர் அவரிடம்
போகும்படித்தான் என்னிடம் சொன்னார்" என்றார். "சரி! அவரை சந்தியுங்கள்”
என்றேன்.
ஜெ கதை இத்துடன் முடிகிறது.
நீங்கள் கொஞ்சம் ஏமாந்து போவீர்கள் என்றூ தெரியும். இருந்தாலும் வேறு
வழியில்லை. அந்த குடும்பம் எங்கள் ஊரைவிட்டு போய்விட்டார்கள். பிறகு என்ன
ஆயிற்று என்று தெரியவில்லை.

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-5
Posted by
திவா
at
0
comments
Reactions:
Labels: காயத்ரி
ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-4
மூன்றவது வருட யக்ஞத்தில் கொஞ்சம் சுதாரித்துகொண்டோம். இரண்டாம் வருட
மெத்தனத்தை நீக்க கூடுதல் உழைப்பு கொடுத்து மேலும் ஒருங்கிணைப்பாளர்களை
சேர்த்து கொஞ்சம் சமாளித்துவிட்டோம்.
கடலூரில் மொத்த அந்தணர் குடும்பங்களே குறைவான எண்ணிக்கையில் இருந்ததால்
பக்கத்தில் விழுப்புரம், நெய்வேலி ஆகிய ஊர்களையும் எங்கள் திட்டத்தில்
சேர்த்து இருந்தோம்.
இந்த வருடம் நெய்வேலிக்கு ஸ்ரி நா. ஒருங்கிணைப்பளராக அகப்பட்டார்.
முன்னால் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் உடல் நிலை சரியில்லாமல் போக அவரே
நா. வை பார்த்து பேசி பொறுப்பை கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.
நா. சத்தான மனிதர். நல்ல உழைப்பாளி. சேர்ந்த முதல் வருடம் பொறுப்பு
தாமதமாக வந்து சேர நேரம் அதிகம் இல்லாததால் சரியாக செயல்பட முடியவில்லை.
64 பேர்களை சேர்த்தார். அடுத்த வருடம் 108 இலக்காக வைத்து முடித்தார்.
நாங்களும் நெய்வேலிக்கே போய் கூட்டங்கள் நடத்தி உற்சாகப்படுத்தினோம். நா.
கொஞ்சம் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டதில்லையாகையால் ஆரம்ப காலங்களில்
கொஞ்சம் வருத்தப்பட்டார். மீட்டிங்க் இருக்கிறது என்று தெரிவிப்பார்.
பதிவு செய்தவரும் ஆஹா வருகிறேன் என்பார். ஆனால் வர மாட்டார். இது நா.
வுக்கு மிகுந்த வருத்தம் தந்தது. "மாமரத்தில் எவ்வளவு பூ பூக்கிறது?
எல்லாமே பிஞ்சாகிவிடுகிரதா? எல்லா பிஞ்சும் காயாகி விடுமா? எல்லா காயும்
பழமாகிவிடுமா? பழுக்கும் அத்தனை பழமும் நமக்கு உண்ண கிடைக்குமா?
இயற்கையில் இப்படி ஒரு நியதி இருக்கிறது. கவலைப்படாதீர்கள். யாருக்கு
கொடுப்பினை இருக்கிறதோ அவர் பயன்பெறுவார். அவர்கள் யார் என்று
தெரியாததால் நாம் பலரையும் சந்தித்து பேச வேண்டி இருக்கு" என்று
சமாதானப்படுத்தினோம்.
உள்ளூரில் நடந்த மீட்டிங்க் ஒன்றில் எவ்வளவு ஜபம் ஆகி இருக்கிறது என்றூ
விசாரித்து கொண்டு இருந்தோம். தொய்வு இருந்தால் என்ன பிரச்சினை என்று
கேட்டு இயன்றால் உதவி வந்தோம்.
மூன்றாம் வருடம் ஒருவர் 3 இலட்சம் முடித்ததாக சொன்னேன் இல்லையா! இவர்
பெயர் ஜெ. இந்த முறை எவ்வளவு என்று கேட்ட போது 11 லட்சம் முடித்து
அப்புறம் எண்ணுவதை நிறுத்திவிட்டேன் என்றார். ஆஹா! வித்தியசமான ஆசாமியாக
இருக்கார் என்று எண்ணி எப்படி இவ்வளவு ஜபம் செய்கிறீர்கள் என்று
கேட்டேன்.
"நான் எங்கே செய்கிறேன்? ஜபம் பாட்டுக்கு ஓடுகிறது; நான் வேடிக்கை
பார்க்கிறேன்" என்றார்! அப்போது எனக்கு இது அவ்வளவு சரியா புரியவில்லை.
மனதில் பல லேயர் இருக்கு. இது பழகியவர்களுக்கு புரியும். மேலோட்டமாக
இருப்பது ஒன்று. இதில அன்றாட சமாசாரங்கள் ஓடும். ஜபம் செய்ய
உக்காருகிறோம். கொஞ்சம் மனசை குவித்து செய்ய ஆரம்பிக்கிறோம். கொஞ்ச நேரம்
ஆச்சு. ஏதேதோ சிந்தனைகள். திடீரென்று "அட! ஜபம் செய்யும் போது இதெல்லாம்
எதுக்கு?" என்று வெட்கப்படுகிறோம். திருப்பி ஜபம் செய்ய நினைக்கிறோம்.
என்ன ஆச்சரியம்! அது பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கு. நிற்கவேயில்லை.
அதாவது மேலோட்ட சிந்தனைகள் இருக்கும்போதும் அடி மனதில் ஒரு அடுக்கில்
ஜபம் ஓடுகிறது. இப்படி பயிற்சியால் செய்ய முடியும். இந்த ஜபத்தை சும்மா
வேடிக்கை பார்க்கலாம். அது பாட்டுக்கு ஒரு வேகத்தில் லயத்தில் ஓடும்.
இப்படி வேடிக்கை பார்க்க பழகினால் அது மேலே மேலே கொண்டு போய் சாட்சி
பாவத்தில் விடும்.
ஜெ செராமிக்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த துறையில்
இவர் நல்ல படிப்பு படித்து இருந்தார்.
ஹோமம் முடிந்த பின் ஒரு நாள் இவருடைய தம்பி இவருடன் என்னை பார்க்க வந்தார்.
என்ன விஷயம்?
ஒரே பிரச்சினை.
.......
Posted by
திவா
at
1 comments
Reactions:
Labels: காயத்ரி
ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-3

லினக்ஸ் புதுசு நிறுவப்போய் பேக் அப்ப பண்ணது எல்லாம் எங்கேன்னு தேடறேன். அதானால தாமதம்.
------------------
முன்னே பணி இட மாற்றுதல் ஒருவர் மனைவிக்கு கிடத்ததாக சொன்னேன் இல்லையா? அவர்கள் ஏழு வருடங்களாக முயற்சி செய்து வந்ததை சொல்லாமல் விட்டு விட்டேன். ஆமாம் ஏழு வருட முயற்சியில் கிடைக்காததுதான் காயத்ரியால் கிடைத்தது.
முதல் வருஷம் காயத்ரி ஜபயக்ஞம் நடத்திய போது அதை வருடா வருடம் நடத்தும் கற்பனை ஏதும் இல்லை. நிகழ்ச்சி முடிந்த பின் என் ஆன்மீக வழிகாட்டியுடன் பேசிக்கொண்டு இருந்த போது இந்த நிகழ்ச்சிக்கு உழைத்தவர்களை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி இதைப்பற்றி யோசிக்கச்சொன்னார். நாங்களும் அப்படி செய்ததில் அவரவர் பகுதியில் யக்ஞத்தில் கலந்து கொண்டவர்களுடன் பேசியதில் அனைவரும் இதை வரவேற்றதாகவும் அடுத்தது எப்போ என்று கேட்பதாகவும் சொன்னார்கள். அடுத்த வருடமும் இதே கால கட்டத்தில் நிகழ்ச்சி நடத்துவதாக ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
நவம்பர் மாதம் வேலையை துவக்கினோம். இந்த முறை கொஞ்சம் அலட்சியம் வந்துவிடக்கூடும்,மெத்தனமாக இராதீர்கள் என்று எச்சரித்தும் ஒருங்கினைபாளர் பெரும்பாலானோர் அசட்டையாக இருந்துவிட்டனர். எல்லாரும் போன முறை போல ஜபம் செய்துவிடுவார்கள் என்று நம்பிவிட்டனர். களப்பணிதொய்ய அது பதிவு செய்தோர் எண்ணிக்கை ஜப எண்ணிக்கை இரண்டிலும் பிரதிபலித்தது.
இரண்டாம் ஹோமம் 18-06-2000 அன்று முன் போல டவுண்ஹாலிலேயே!
இந்த முறை 62 பேர்கள்தான். இருந்தாலும் மொத்த எண்ணிக்கை ரொம்பவும் குறையவில்லை. என்னடா என்று பார்த்தால் ஒருவர் 3 லட்சம் செய்து இருந்தார்!
இந்த ஜபகாலத்தில் ஒரு சில கூடுதல்கள் ஏற்பாடு செய்து ஜப காலத்தில் என்ன அனுபவம் என்று விசாரிக்க ஆரம்பித்தோம். அந்த கூட்டத்க்கு வந்தவர்களில் ஒருவர் ரெய்கீ மாஸ்டர் ஸ்ரீ பா. முன்னே பத்து பதினைந்து நிமிடம் ரெய்கி கொடுப்பதில் தெரிந்த எபெக்ட் 3-5 நிமிடங்களிலேயே தெரிவதாக சொன்னார்.
2005 ஆம் ஆண்டு ஜபத்தில் பதிவு செய்து தொடர்புக்கு வந்தவர் ஸ்ரீ ரெ. பதிவு காலம் முடிந்து ஜப காலம் துவங்கியதும் பகுதி வாரியாக கூடுதல்கள் நடத்துவோம். ஜப யக்ஞத்தைப்பற்றிய முழு விவரம் சந்தேகங்களுக்கு பதில்கள் ஜபம் செய்ய உற்சாகப்படுத்துதல் எல்லாம் நடைபெறும். அத்தகைய நிகழ்ச்சி ஒன்றில் அவரை சந்தித்தேன். திருமணம் ஆகவில்லை. ரயில்வே எஞ்சினீயராக வேலை. கூட்டம் நிகழ்ந்த இடத்துக்கு பக்கத்திலே வீடு இருந்ததால் தவிர்க்க முடியாமல் வர நேர்ந்தது போலும்.
எடுத்த எடுப்பிலேயே "பிராம்மணனைப்போல முட்டாள் இல்லை" என்று நான் சொல்ல கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார். அது நான் கவனத்தை கவர செய்யும் யுக்தி. "பின்னே, இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரம் உபதேசம் ஆகி இருந்தும் அதை ஜபம் செய்து பயனடையாமல் நான் கஷ்டப்படுகிறேன் என்று புலம்புபவர்களை என்ன சொல்வது?" என்று காயத்திரியின் பெருமை பக்கம் பேச்சை கொண்டு போய் விடுவேன்.
ரெ சில நடைமுறை சந்தேகங்களை கேட்டார். அந்த வருட ஜப காலம் முடிந்து ஹோமம் நடந்து முடிந்தது. கொஞ்சம் தயக்கத்துடன் என்னை பார்க்க வந்தார். இந்த ஹோமத்துக்கு நீங்கள் நன்கொடை வசூலிப்பது இல்லை என்று தெரியும், ஆனால் கொடுத்தால் வாங்கிக்கொள்வீர்களா என்று கேட்டார். இசைவை தெரிவித்ததும் ஒரு நல்ல தொகையை கொடுத்தார். பின்னாலேயே ஒரு பத்திரிகையை நீட்டினார்.
"என்ன சமாசாரம்?" என்று விசாரித்தேன்.
"எனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் ...அவசியம் வர வேணும்" என்று கேட்டுக்கொண்டார். வாழ்த்தி அனுப்பி வைத்தோம். பின்னால் விசாரித்ததில் சில விஷயங்கள் தெரிய வந்தன, இவர் ஆரம்பத்தில் ஒன்றும் ஆர்வமாக இல்லை. கூட்டத்தில் பிராமணனை திட்டப்போக அது இவரை கொஞ்சம் உசுப்பி விட்டது. கொஞ்சம் யோசித்தார். நாலு வருஷமாக பெண் பாத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒண்ணும் அமையவில்லை. இவர் ஏதோ சொல்கிறாரே, செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தார். வீட்டில் டிவி யை தூக்கி பரணில் போட்டார். "டிவி அவசியமாக பார்த்தே ஆக வேண்டும்!" என்ற தன் தாயை தன் அண்ணன் வீட்டுக்கு கொஞ்ச காலம் இருந்து வர அனுப்பினார். ஒரு லட்சம் பூர்த்தி செய்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் செய்து பூர்த்தி செய்தார். திருமணமும் நிச்சயம் ஆகிவிட்டது.
ரெ இப்போது எங்கள் ஒருங்கிணைப்பாளர் குழுவில் முக்கிய அங்கத்தினர்!

Posted by
திவா
at
5
comments
Reactions:
Labels: காயத்ரி
ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள் -2

01- 01-1999 அன்று துவக்க நிகழ்ச்சி நடந்தது. பங்களூரில் ஒரு ஹோமம் நடந்து அதனால் உற்சாகம் பெற்றதாக சொன்னேன் அல்லவா?அதை ஏற்பாடு செய்தவர் சிருங்கேரி மடத்தை சேர்ந்த ஒரு சன்னியாசி. அவர் சென்னையில் அந்த சமயம் இருந்தபடியால் அவரை அழைத்து துவக்க நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டோம்.
பதிவு செய்து கொண்டவர்களில் வெகு சிலரே நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர். இருந்தாலும் பலருக்கும் இருந்த சந்தேகங்களுக்கு ஸ்வாமிகள் தீர்வுகள் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஜப காலத்தில் வெளியே ஓட்டலில் சாப்பிடக்கூடாது என்றால் ஊர் ஊராக சுற்றி வேலை செய்பவர்கள் என்ன செய்வது போன்ற பலவித கேள்விகள் எழுந்தன, எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொன்னார்.
ஆரம்ப காலத்திலேயே ஒருங்கிணைப்பாளராக சேர்ந்தவர் ஸ்ரீ ர. வெகு உற்சாகமாக செயல்பட்டார். மருத்துவ பிரதிநிதி வேலை. ஊர் ஊராக சுற்றும் வேலை. உணவு கட்டுப்பாடை கடைபிடிப்பது எப்படி? நாங்களோ ஹோட்டலில் சாப்பிடக்கூடாது என்று நியமம் விதித்து இருந்தோம். அப்படியும் அதை சாதித்து காட்டினார். கையோடு ஏதேனும் உணவு கொண்டு போய்விடுவார். பயண திட்டத்தை யோசித்து அமைத்துக்கொள்வார்.
இல்லை பட்டினி இருந்துவிடுவார். இது முடியவில்லையானால் தெரிந்தவர்கள் வீட்டுக்கு முன்னேயே சொல்லை வைத்துப்போய் நெய், துளசி, வில்வம் இப்படி எதையாவது கூட சேர்த்து சாப்பிடுவார். எப்படியோ நியமங்களுக்கு குறை வராமல் பார்த்துக்கொண்டார்.
இவர் மனைவி பிஎஸ்என்எல் இல் வேலை பார்த்து வந்தார். திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் அவருக்கு புது தில்லிக்கு மாற்றலாகி விட்டது. எப்படியாவது தமிழ்நாட்டுக்கு திரும்ப படாத பாடு பட்டு, பலரையும் பார்த்து, விண்ணப்பங்கள் போட்டு ஒன்றும் நடக்கவில்லை. அலுத்துப்போய் முயற்சிகளை கைவிட்டு இறுதியாக ராஜினாமா செய்துவிடலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தனர்.
நான்கு மாத கால ஜபம் முடிந்தது. அனைவரும் சேர்ந்து காயத்ரி ஹோமம் டவுண்
ஹாலில் செய்தோம். 16- 05-1999 அன்று ஹோமம் நடந்தது.
மொத்தம் 82 பேர் ஹோமத்தில் நேரடியாக கலந்து கொண்டனர். அதில் 32 பேர்
இலக்கான இலட்சத்தை பூர்த்தி செய்து இருந்தனர்.
அடுத்த வாரம் ஸ்ரீ ர. அவரது மனைவி இருவரும் ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில்
எங்கள் ஊருக்கே பணி மாற்றம் வந்து விட்டது.

Posted by
திவா
at
0
comments
Reactions:
Labels: காயத்ரி
ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்-1

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன் பங்களூரில் நடை பெற்ற சத கோடி காயத்ரி ஜப யக்ஞத்தில் பங்கு கொள்ளும் பாக்கியம் இறை அருளால் அமையப்பெற்றது. அந்த நேரத்தில் பங்கு கொள்ள உறுப்பினர்களை சேர்க்கும் வேலையில் ஒரு சிலர் இறங்கினோம், மிகுந்த அவநம்பிக்கையுடன்தான். ஒரு வருட காலத்துக்கு யார் இந்த காலத்தில் ஆசாரத்துடன் இருந்து இரண்டரை லட்சம் - தினம் அறு நூற்று ஐம்பது- காயத்ரி செய்வர் ? இருந்தாலும் முயற்சி செய்வது மட்டுமே நம் வேலை மற்றது இறைவன் செயல் என்று களத்தில் இறங்கினோம். ஒரு மாதம் சுற்றியதில் பதினைந்து பேர் பதிவு செய்து கொண்டனர். இதுவே எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வருடம் கழித்து ஐந்து பேர் பங்களூர் சென்று பங்கு கொண்டோம். மேலும் சிலர் ஜபம் செய்து இருந்தாலும் ஜனவரி குளிர், தூரம் உள்ளிட்ட பல காரணங்களால் பங்கேற்கவில்லை.
ஜபம் ஆரம்பித்த சிலர் உற்சாகத்தில் தினசரி கூட்டு ஜபம் செய்யலாம் என்று ஒரு முயற்சி ஆரம்பித்து பெரியவர்களை கேட்கலாம் என்று ஒரு வேத விற்பனரை கேட்கப்போய் அவர் ஜபம் தனியாக செய்வதே சரி என்று சொல்ல அந்த முயற்சி அத்துடன் முடிந்தது. (போன இடத்தில் வேதம் பயில ஆர்வத்தை வெளியிடப்போய் "பேஷா சொல்லித்தரேனே! வியாழக்கிழமையிலிருந்து வா" என்று அவரும் சொல்ல என் வேத பாடங்கள் ஆரம்பித்து ஏழு வருடங்களில் பூர்த்தி ஆனது தனிக்கதை. )
ஹோமம் முடிந்தபின் இன்னொரு முயற்சி ஆரம்பித்தது. இதே போல உள்ளூரில் செய்தால் என்ன? தெரிந்தவர்களையும் பங்களூர் ஹோமத்துக்கு பதிவு செய்து கொண்டவர்களையும் கூப்பிட்டு ஒரு மீட்டிங் போட்டோம். (ஆமா, நம்பிக்கை மீட்டிங் எப்பங்க ராமா?) எல்லாருடைய கருத்துக்களையும் கேட்டோம். எல்லாரும் அவசியம் செய்ய வேண்டும் என்றனர். இதோ பாருங்கள் இப்படி கொம்பு சீவி விட்டுவிட்டு போய் விடலாம் என்று நினைக்க வேண்டாம். எல்லாருக்கும் பொறுப்பு இருக்கு என்றோம். சரி என்று ஒப்புக்கொண்டனர்.
உடனடியாக ஒரு சமிதி ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டது.
சரிதான் யார் தலைவர் என்று தேர்ந்தெடுக்கலாமா என்றார்கள்.
இங்கே தலையும் இல்லை வாலும் இல்லை என்றோம்.
அது ஏன் எப்படி?
இப்படி ஒரு கமிட்டி போட்டதும் எல்லாரும் இனி அவர்கள் பாடு என்று தங்கள் வேலையை பார்க்கப்போய் விடுவர். இப்படி வேண்டாம். அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உள்ளது என்றோம். நீங்கள் தலைவராக இருக்கலாமே என்றார்கள். இல்லை நானும் ஒரு ஒருங்கிணைப்பாளர். ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்.
இந்த விஷயம் அத்துடன் முடிந்தது. இன்று வரை யாருக்கும் எந்த பதவியும் இங்கு இல்லை. பொறுப்பு மட்டுமே இருக்கிறது.
ஊரை பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் இரண்டு பேர் பொறுப்பாக்கப்பட்டார்கள். ஒரு மாத காலத்தில் தம் பகுதியில் வேலையை முடிக்கவேண்டும். வீடு வீடாக போய் ஜபம் செய்ய அதிகாரம் உள்ள, இசைவு தரும் நபர்களை பட்டியல் இட்டு அவர் குறித்த விவரங்களை சேகரித்து அவரிடம் கையெழுத்தும் வாங்க வேண்டும்.
ஜபம் சங்கராந்தி அன்று துவங்கும். நான்கு மாதங்கள் ஜபகாலம். தினசரி ஆயிரம் காயத்ரி ஜபிக்க வேண்டும். இப்படி நூறு நாட்களில் ஒரு லட்சம் பூர்த்தி செய்ய வேண்டும்.
இப்படி நூறு பேரை பிடித்துவிட்டால் ஒரு கோடி பூர்த்தியாகும் என்பது ஏட்டுக்கணக்கு.
அது நடைமுறையில் சாத்தியமாகாது என்று அறிந்து இருந்தோம். முன்னே பதினைந்தில் ஐந்துதானே தேறியது? ஆகவே எவ்வளவு பேர் பதிவு செய்வது என்பதில் மட்டு இல்லை என்று முடிவு செய்தோம்.
பகுதி பகுதியாக கூடுதல்கள் நடத்தி பங்கேற்போருக்கு ஜபம் குறித்த விவரங்களும் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் என்று செயல் பட்டோம். ஜப காலம் முடியும் போது அவர்களுடைய அனுபவங்களையும் கேட்டுக்கொண்டோம்.
அந்த அனுபவங்களைத்தான் உங்களுடன் பெயர்களை சொல்லாமல் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
Posted by
திவா
at
2
comments
Reactions:
Labels: காயத்ரி

