Pages

Saturday, August 20, 2022

ஶ்ராத்தம் - 57 - நிறைவு




இந்த ஶ்ராத்தங்களால் யாரெல்லாம் த்ருப்தி அடைகிறார்கள் என்று பார்க்கலாம்.
நமது வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபிகளான தந்தை தாத்தா அவரது அப்பா ஆகியோ த்ருப்தி அடைவது தெளிவு. உபசாரங்களாலும், ஹோமத்தாலும் அன்னத்தை 'ஏஷதே தத' என்று மந்திரங்களால் அர்ப்பணிப்பதாலும் அவர்கள் சந்தோஷிக்கிறார்கள். அதே போல விஶ்வேதேவர்களும் விஷ்ணுவும் நம்மை ஆசீர்வாதம் செய்கிறார்கள்.
ஈஶான விஷ்ணோ என்னும் மந்திரத்தால் அந்த தேவதைகளை த்ருப்தி செய்து பித்ருக்கள் முக்தி அடைய வழி செய்கிறோம்.
விகிரான்ன சமயத்தில்: அஸோமபா மந்திரத்தால்: யக்ஞத்தில் பாகம் இல்லாத சோமயாகம் செய்யாத தேவர்களுக்கு விஸ்வே தேவர்கள் சம்பந்தம் உள்ள உதிரி அன்னம்.
அஸம்ஸ்கிருத: சம்ஸ்காரம் இல்லாமல் பிறந்தவர்களுக்கும் தியாகம் செய்த குலப்பெண்களுக்கும் பித்ரு சம்பந்தமான உதிரி அன்னம்.
வாய்ஸ பிண்டத்தால்: யே அக்னி தக்தா: விதிப்படி அக்னியில் எரிந்தவர் விதிப்படியான அக்னி இன்றி எரிந்தவர், நமது குலத்தில் பிறந்து இறந்தவர் இவர்களுக்கு இந்த பிண்டம்.
பிண்டப்ரதானத்தில் பிண்டம் கொடுப்பதால் பித்ருக்களை அனுசரித்து வரும் பித்ருக்களுக்கும் த்ருப்தி. இது உபஸ்தான மந்திரத்தால் தெரிகிறது. 'யே சத்வாமனு' என்று சொல்லி பிண்ட லேபத்தை கொடுத்து பித்ருக்களை சார்ந்து உள்ளவர்களுக்கு த்ருப்தி.
பிள்ளை இல்லாதவர்கள், அதற்கு விருப்பம் உள்ளவர்களுக்கு பிதாமஹருக்கு வைத்த பிண்டத்தை ‘ஜலம் ஓஷதிகளிவற்றின் ரஸமான இந்த பிண்டத்தை பத்னி சாப்பிடும்படி செய்கிறேன். பிரம்மா கர்ப்பத்தை உண்டாக்கட்டும்’ என்று சொல்லி பத்னிக்கு கொடுக்க வேண்டும். இப்படியும் ஒரு நல்லது நடக்கிறது.
மேல் வஸ்திரத்தை பிழிவதால் ( மந்திரம்: யே கே சாஸ்மத்குலே) தன் குலத்திலோ கோத்ரத்திலோ புத்ரனற்று எவர் இறந்தனரோ அவர்கள் பலனடைகிறார்கள்.
கீழ் வஸ்த்ரத்தை பிழியும்போது (மந்திரம்: உச்சிஷ்ட பாகினோ) ஶ்ராத்தத்தில் உச்சிஷ்டத்தை அடைபவர்களான தாஸர்களும் மந்திரமில்லாமல் எவர் இறந்தவர்களோ அவர்களும் பாபத்தால் மரத்தன்மையை அடைந்தவர்களும் என்னைச்சேர்ந்தவர் எவர் இறந்தனரோ அவர்களும் த்ருப்தி அடையட்டும் என்கிறோம்.
தீர்த்தத்ஶ்ராதத்தால் இன்னும் பலர் த்ருப்தி அடைகிறார்கள்.
ஆகவே இவ்வளவு பேர் த்ருப்தி அடைய, பித்ருக்களின் ஆசிகளைப்பெற ஶ்ரத்தையுடன் நாம் ஶ்ராத்தம் செய்ய இறைவன் துணை நிற்கட்டும்.!
ஶ்ராத்த சமாசாரங்கள் நிறைந்தன.
🙏
 

No comments: