Pages

Thursday, November 13, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 15



மயி ஸர்வாணி கர்மாணி ஸம்ந்யஸ்யாத்யாத்மசேதஸா।

நிராஷீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர:॥ 3.30 ॥

கன்மமெல்லாம் என்பாற் கருதிச் சமர்ப்பித்து
நின்மலமாம் ஆன்மாவில் நெஞ்சிருத்தி- என்னதெனும்
பற்றகற்றி ஆசை பறித்துப் படரொழித்திங்
குற்றதொரு போர் புரிவாய் ஊங்கு.

கன்மமெல்லாம் என்பாற் கருதிச் சமர்ப்பித்து நின்மலமாம் ஆன்மாவில் நெஞ்சிருத்தி என்னதெனும் பற்றகற்றி ஆசை பறித்துப் படரொழித்திங்கு உற்றதொரு போர் புரிவாய் ஊங்கு.


(அந்தர்யாமியான பரமாத்மாவாகிய என்னிடம் ஒன்றிய மனத்துடன் எல்லா கர்மங்களையும் என்னிடம் அர்ப்பணம் செய்துவிட்டு ஆசையற்றவனாக மமகாரமற்றவனாக மேலும் தாபமற்றவனாக ஆகி யுத்தம் செய்.)

ஆத்மாவை பற்றிய உண்மையான அறிவு கொண்டவன் யாரோ அவன் பகவான்தான் நம்மை தூண்டி செய்கிறான், தான் தானாக செய்கிறவன் இல்லைன்னு புரிஞ்சு கொண்டு வேலை செய்வான். இது "நான் செய்யறேன்" என்ற நினைப்பை விடுவது.

பலன் என்ன கிடைக்கும் என்கிறதுல ஆசையை விட்டுவிடுவான். "கண்ட கண்ட தாழ்ந்த விஷயத்துக்காக நான் ஏதும் செய்யலை; உயர்ந்த மோக்ஷம் வேணும் என்கிறதுக்கு அவன் தூண்டறான், செய்யறேன்" என்று பண்ணுவான். இது தாழ்ந்த பலன்ல ஆசை விடுவது.

 தான் ஆசை பட்ட பலனை வாங்கித்தருது என்கிறதால் "இந்த கர்மா என்னோடது" என்கிற ஒரு நினைப்பு இருக்கு இல்லையா? இதுவும் (மமகாரம்) போயிடும். இப்படி நான் செய்யறேன் என்கிற எண்ணமும், ஆசையும், அகங்காரமும் இல்லாத காரியங்களை செய்து கொண்டு போகணும்.

இப்படி நான் செய்கிறேன் என்கிற கர்த்ருத்வம், தாழ்ந்த பலனில் ஆசை, என் கர்மா என்கிற மமகாரம் மூன்றும் விடணும்.

இப்படி இருந்தால் மேலே ஒரு தாபமும் இருக்காது.

கிழக்கே போகிறதை நிறுத்த மேற்கே போகணும். அதனால "நான் கர்த்தா" என்கிறதை தொலைக்க "நீதான் கர்த்தா"ன்னு நினைச்சாதான் நடக்கும். "நான் செய்யறேன்தான்.  இருந்தாலும் நீதானே செய்விக்கிறாய்!” என்று நினைக்கணும். அம்மா குழந்தைக்கு அனா ஆவன்னா சொல்லிக்கொடுக்கிறா. சிலேட்டுல அ ன்னு எழுதி, இது மேலே எழுது பாக்கலாம் என்பாள். அது உடனே அப்படி எழுதுமா? அதன் கையை பிடிச்சு சிலேட்டுல எழுதுவா. எழுதின அப்புறம் "அட நல்லா எழுதி இருக்கியே" ன்னு மார்க்கும் போடுகிறாப்போல;

பகவான் நம்மை கர்மா செய்யத்தூண்டறான். செய்யவும் வைக்கிறான். அப்புறம் அதுக்கு ஒரு பலனையும் தரான். இதை புரிஞ்சுக்கணும்.

அம்மா கையை பிடிச்சு எழுதும் போது எந்த குழந்தை கையை வேற திசைல இழுத்து கொண்டு போகாம இருக்கோ அது நல்லா எழுதும்.

இப்ப ப்ளாக் எழுதறோம். "ஏதோ பகவான் தூண்டறான் எழுதறோம்" என்கிறதாக தோன்றினால் "எவ்வளோ பேர் படிக்கிறாங்க, இவங்க இப்படி நினைப்பாங்களோ, அவங்க அப்படி நினைப்பங்களோ, இன்னிக்கு எழுதியே ஆகணுமே - நேரம் இல்லையே!” இப்படி எல்லாம் அவஸ்தை படாம எழுதுவோம். நான் செய்யறேன் என்கிற நினைப்பு இருந்தா இதெல்லாமும் வரும் இன்னமும் வரும்! "பின்னூட்டம் 100 தாண்டணுமே; 200 தாண்டணுமே; தமிழ்மணம் சூடான பதிவுகள்ல பேர் வரணுமே; என்னை இப்படி திட்டி எழுதிட்டாங்களே!” ன்னும் இன்னும் ஏதேதோவும் தோணும். :-))


12 comments:

ஜீவி said...

//அம்மா குழந்தைக்கு அனா ஆவன்னா சொல்லிக்கொடுக்கிறா. சிலேட்டுல அ ன்னு எழுதி, இது மேலே எழுது பாக்கலாம் என்பாள். அது உடனே அப்படி எழுதுமா? அதன் கையை பிடிச்சு சிலேட்டுல எழுதுவா. எழுதின அப்புறம் "அட நல்லா எழுதி இருக்கியே" ன்னு மார்க்கும் போடுகிறாப்போல;//


//அம்மா கையை பிடிச்சு எழுதும் போது எந்த குழந்தை கையை வேற திசைல இழுத்து கொண்டு போகாம இருக்கோ அது நல்லா எழுதும்.//

அழகாச் சொல்லியிருக்கீங்க..

'பச்'சென்று மனசில் பதியுது.

திவாண்ணா said...

நல்வரவு ஜீவி!
ஊக்கம் கொடுக்கிறத்துக்கு நன்றி!

திவாண்ணா said...

//"பின்னூட்டம் 100 தாண்டணுமே; 200 தாண்டணுமே; தமிழ்மணம் சூடான பதிவுகள்ல பேர் வரணுமே; என்னை இப்படி திட்டி எழுதிட்டாங்களே!” ன்னும் இன்னும் ஏதேதோவும் தோணும். :-)) //

"வர நாலு பின்னூட்டமும் இப்ப காணோம். இதுவும் சொல்லுவீங்க இன்னமும் சொல்லுவீங்க" ன்னு நீங்க எல்லாம் நினைக்கிறது புரியுது!
:-))

Kavinaya said...

//"வர நாலு பின்னூட்டமும் இப்ப காணோம். இதுவும் சொல்லுவீங்க இன்னமும் சொல்லுவீங்க" ன்னு நீங்க எல்லாம் நினைக்கிறது புரியுது!//

:) நெனச்சுக்கிட்டே வந்தேன் ப்ளாக் உதாரணமும் நல்லாருக்கேன்னு... :) எளிமையான உதாரணங்கள் சொல்வதில தேர்ந்தவராகிட்டீங்க.

திவாண்ணா said...

@கவி அக்கா
:-))
இறைவன் அருள்! நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

ரொம்ப சிம்பிளாச் சொல்லிட்டீங்க, அதுவும் நமக்கெல்லாம் தெரிஞ்ச ப்ளாக் உதாரணத்தை வச்சு. :)

மெளலி (மதுரையம்பதி) said...

////"பின்னூட்டம் 100 தாண்டணுமே; 200 தாண்டணுமே; தமிழ்மணம் சூடான பதிவுகள்ல பேர் வரணுமே; என்னை இப்படி திட்டி எழுதிட்டாங்களே!” ன்னும் இன்னும் ஏதேதோவும் தோணும். :-)) //

ஹா ஹா ஹா

ஆமாம், முச்சந்தில கல்லு வருக்கறதுன்னு எங்கப்பா ஒரு பழமொழி சொல்வார். அது நினைவு வந்துடுத்து. :)

jeevagv said...

பிரசாதம் என்றே பலனை நினைத்தால்
வருமோ இடரும்? கருமம் புரிகையில்,
நானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்
தானடை சிக்கெனத் தான்.

திவாண்ணா said...

//முச்சந்தில கல்லு வருக்கறது//

அதென்னப்பா?

திவாண்ணா said...

ஆகா! ஜீவாகிட்டேந்து நாளும் ஒரு வெண்பா வரும் போல இருக்கே! பிரமாதம். :-)

Geetha Sambasivam said...

//அம்மா குழந்தைக்கு அனா ஆவன்னா சொல்லிக்கொடுக்கிறா. சிலேட்டுல அ ன்னு எழுதி, இது மேலே எழுது பாக்கலாம் என்பாள். அது உடனே அப்படி எழுதுமா? அதன் கையை பிடிச்சு சிலேட்டுல எழுதுவா. எழுதின அப்புறம் "அட நல்லா எழுதி இருக்கியே" ன்னு மார்க்கும் போடுகிறாப்போல//

எல்லாருமே சொல்லிட்டாங்க போல, இந்த உதாரணம் ரொம்ப எளிமையாவும், அருமையாவும் புரியறதுக்குக் கஷ்டம் இல்லாமலும் இருக்கு.

திவாண்ணா said...

கீ அக்கா நன்னி!