Pages

Thursday, August 6, 2009

எல்லாம் பொய்ன்னு சொல்கிறது தப்பில்லையா?



90.
மாயை யென்பது பொய்யெனி லதுபெற்ற வகையெலாம் பொய்யாமே
தாயை யன்றிமக் களுக்கொரு பிறவியுஞ் சாதியும் வேறுண்டோ
சேயசொர்க்கமு நரகமு நன்மையுந் தீமையும் பாராமல்
தூய சத்துச்சித் தானந்த பூரண சொரூபமா யிருப்பாயே

மாயை என்பது [ஸ்ருதி சொல்வதாலும், விசாரித்ததில் 9 விதத்தினாலும் நிச்சயிக்கப்படாததாலும், ஞானிகளும் அப்படி சொல்வதாலும்] பொய்யெனில் அது பெற்ற (அதில் இருந்து உற்பத்தியான) வகை எல்லாம் பொய்யாமே. தாயை அன்றி மக்களுக்கு ஒரு பிறவியும் சாதியும் வேறு உண்டோ? [தாய் எப்படியோ அப்படியே மக்களும்). சேய (சொல்லப்பட்ட) சொர்க்கமும், நரகமும், நன்மையும், தீமையும் பாராமல், தூய சத்து சித்தானந்த பூரண சொரூபமாய் இருப்பாயே.

[நீரின் கரையில் நின்ற புருஷனின் நிழல் தலை கீழாய் தெரிவது பொய். அது ஆடி அசைவதும் பொய். அதை விசாரிப்பதில் பயனில்லை. ஆகவே அதை பகுத்து பாராது கரையில் நின்ற தன் உண்மை சொரூபத்தை பார்த்து சுகமாயிருப்பது போல; பிரமமாகிய தன்னிடத்து தோன்றும் சீவேஸ்வர ஜகத் பொய். அதில் துறக்கமென்றும், நிரயமென்றும், புண்ணிய- பாவம், பந்த- மோட்சம் என பார்ப்பதில் பயன் இல்லை. அனித்தியமான இவற்றை பாராது நிர்மலமாயும்; சிருட்டிக்கு முன்னேயும் பின்னேயும் இருப்பதால் சன் மாத்திரமாயும்; சிருஷ்டி ஸ்திதி சம்ஹார காலங்களையும் அதில் உள்ள காரியங்களையும் விளக்கி வைத்து அறிகிறதால் சின் மாத்திரமாயும்; துவைதமற்று இருப்பதால் சுகமாயும்; சராசரங்களாய் தோன்றும் பிரபஞ்சம் பிரமமாகிய தன்னைத் தவிர வேறில்லாது இருக்கிற படியால் அகண்டமாயும்; பிரம்ம சொரூபமாயும் இரு]

நீங்க சொல்கிறதை பாத்தா பிரம்மா முதலான தேவர்கள் பொய். ஊர்ல இருக்கிற பெரியவங்க பொய். அவங்க சொல்கிறது பொய். கங்கை முதலா இருக்கிற தீர்த்தங்கள் பொய். புண்ணிய ஸ்தலங்கள், வேதங்கள், மந்திரங்கள், விரதங்கள் எல்லாம் பொய். ஆனா நடைமுறையில பாத்தா, இதை எல்லாம் நம்பி நடந்து பாவமெல்லாம் ஒழிந்து மோக்ஷமடைகிறாங்க. இப்படி இருக்கிறதை எல்லாம் பொய்ன்னு சொல்கிறது தப்பில்லையா? அது பாபமாகாதா?

91.
மாயா காரியமான பிரம தேவர் முதலிய நன்மையான பிரபஞ்சத்தையும் மித்தை என தெளிதல்:
பங்கை யாசனன் முதற்பல தேவரும் பாருள பெரியோரும்
கங்கை யாதியாந் தீர்த்தமுந் தேசமுங் காலமு மறைநாலும்
அன்க மாறுமந் திரங்களுந் தவங்களு மசத்திய மெனச் சொன்னால்
எங்க ணாயக னேயத னாற்குற்ற மில்லையோ மொழியீரே

பங்கை (தாமரை) ஆசனன் (= பிரமன்) முதல் பல தேவரும், பாருள பெரியோரும் கங்கை ஆதியாம் முதலான [புண்ணிய] தீர்த்தமும் [புண்ணிய] தேசமும் [புண்ணிய] காலமும் மறை நாலும் [சந்தஸ் முதலான] அங்கம் ஆறும் [பிரணவம் முதலான மகா] மந்திரங்களும் தவங்களும் [சுருதியின் படி வழிபட்டு, பாவம் ஒழித்து மோக்ஷம் அடைய காரணமாக கொண்டு இருக்கிறார்களே. அவற்றை] அசத்தியமெனச் சொன்னால், எங்கள் நாயகனே அதனால் குற்றம் இல்லையோ? மொழியீரே.


6 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

புரிந்ததைவிட புரியாதது ஜாஸ்தி. ஆன்ன புரியாததை புரிஞ்சிக்கனும் என்ற அவாவை தூண்டிவிட்டீர்கள். நன்றி.புரிந்தது இதுதான்.

[நீரின் கரையில் நின்ற புருஷனின் நிழல் தலை கீழாய் தெரிவது பொய். அது ஆடி அசைவதும் பொய். அதை விசாரிப்பதில் பயனில்லை. ஆகவே அதை பகுத்து பாராது கரையில் நின்ற தன் உண்மை சொரூபத்தை பார்த்து சுகமாயிருப்பது

கிருஷ்ண மூர்த்தி S said...

என்னைப்பெற்றவளே பொய் எனும்போது நானும் பொய்-இந்தப்பதிவில் நான் இடுகிற இந்தப் பின்னூட்டமும் பொய்! இதற்குப் பதில் எழுகிறவரும், படிப்பவர்களுமே கூடப் பொய்!

எல்லாமே பொய் என்பது, எல்லாமே பொய்யல்ல, உள்ளதை உள்ளவாறு அறியாத தோற்றப் பிழை,
அப்படித்தானே?!

Geetha Sambasivam said...

இதைப் படிச்சுட்டு அப்புறமா உள்ளதைப் படிச்சிருக்கணுமோ?? இப்போ குழப்பம்! :(

திவாண்ணா said...

//புரிந்ததைவிட புரியாதது ஜாஸ்தி. ஆன்ன புரியாததை புரிஞ்சிக்கனும் என்ற அவாவை தூண்டிவிட்டீர்கள். //

வெற்றி வெற்றி! பதிவோட நோக்கமே அதான்.

//நன்றி.புரிந்தது இதுதான்.//
சரிதானே!
வருகைக்கு நன்னி அண்ணா!

திவாண்ணா said...

//உள்ளதை உள்ளவாறு அறியாத தோற்றப் பிழை, அப்படித்தானே?!//

சரியேதான்.
என்னைப்பெற்ற அம்மான்னா எந்த ஜன்மத்திலே? இப்படியே எல்லாமே அடிபட்டுபோகும்.
உள்ளதை உள்ளபடி பார்க்கலை என்பதே விஷயம்.

திவாண்ணா said...

கீதா அக்கா, அடுத்த பதிவிலே இதோட பதில் இருக்கு இல்லை.