Pages

Friday, August 14, 2009

மாயையை நீக்க வழி?



[பிரம்மத்தின் சித் சக்தி அவற்றில் இல்லாவிட்டால் இந்த ஒழுங்கு இருக்காது.].......

இந்த ஒழுங்கு எவ்வளோ தூரம் இருக்குன்னா சைன்ஸ் ன்னு சொல்லி விதிகள் எல்லாம் வரையறுக்க முடியுது. இன்ன இன்ன ரசாயனத்தை கலந்தா இது உருவாகும் ன்னு சொல்ல முடியுது. உப்பை தண்ணில கரைச்சு சர்க்கரை வரதில்லை.
இந்த ஒழுங்கைப்பாத்துட்டு இதுவே எல்லாம்ன்னு மயங்கிப்போறோம். அதுதான் தப்பு. சரிப்பா எல்லாம் ஒழுங்காதான் நடக்குது, ஏன் அப்படின்னு சொல்லுன்னு கேட்டா பதில் வராது. அது இயற்கை விதின்னா இயற்கை எங்கிருந்து வந்தது?

இந்த மாயா உலகத்தில இருந்து கொண்டு நாம எந்த மட்டத்திலே -ப்ளேன்ல- இருக்கோமோ அதுக்கு தகுந்த படி எல்லாத்தையும் பார்க்கலாம். பூலோகத்தில இருந்து கொண்டு விஞ்ஞான விதிகள் படியும் ஒழுங்கை பார்க்கலாம். தேவ உலக விதிகள் படி பூஜை ஹோமங்கள் பலன் தரதையும் பார்க்கலாம். பித்ரு லோக நியாயங்கள் படி செய்ய வேண்டியதை செய்யாததற்கு பலனாக பிரச்சினைகளும், செய்ய வேண்டியதை செய்து நிவர்த்திகள் கிடைக்கிறதையும் பார்க்கலாம். ஞானியா இருந்து கொண்டு இதைப்பத்தி எல்லாம் கவலைப்படாம, நடக்கிறதை வேடிக்கையும் பார்க்கலாம்.
--
என்னங்க இது? மாயையை யாராலும் அறிய முடியாது, இன்னதுன்னு சொல்ல முடியாது. இந்த பிரபஞ்சம் என்கிற பயிருக்கு இதுவே வித்து ன்னு நீங்க சொன்னா அதை நீக்குவது எப்படி? நீக்க முடியாதுன்னா எப்படி பிரமத்தை ஒரே ரூபமாக பார்க்க முடியும்? ஒரே ரூபமாக பார்த்தாதானே அது முத்தி ஆகும்?

101.
அத்வைத நிச்சயம் உண்டாகும் பொருட்டு வினா
ஆர்க்குங் காணவு மறியவும் படாதென்று மவாச்சிய வடிவென்றும்
சேர்க்கு நாம ரூபப்பயிர் வித்தென்றுஞ் செப்பிய சிற்சத்தி
பேர்க்கு மாறெங்ஙன் பிரித்திடப் படாதெனிற் பிரமபா வனையொன்றாப்
பார்க்கு மாறெங்ஙன் முத்தியா குவதெங்ஙன் பரமசற் குருமூர்த்தி

ஆர்க்கும் (யாருக்கும்) காணவும் அறியவும் படாது என்றும், அவாச்சிய (சொல்ல இயலாத) வடிவென்றும் சேர்க்கு நாம ரூப[மாகிய] பயிர்[களின்] வித்து என்றும் செப்பிய சிற்சத்தி (மாயையை), பேர்க்குமாறு எங்ஙன்? (நீக்கும் வழி எது?) பிரித்திடப் படாதெனில் பிரம பாவனை ஒன்றாக (ஸ்வரூப சமாதியில் அத்வைதமாக) பார்க்குமாறு எங்ஙன்? (பார்க்கும் விதம் எப்படி?) (அத்வைதமாக பார்க்க முடியாதானால்) முத்தியாகுவது எங்ஙன்? பரம சற்குரு மூர்த்தி.


102.
வாயுத் தம்பனஞ் சலத்தம்ப னம்மணிமந்திர மருந்தாலே
தேயுத் தம்பனஞ் செய்திடி லதிலதிற் சிறந்தசத் திகளெங்கே
நீயச் சச்சிதா நந்தமாய் வேறொன்று நினைந்திடா திருப்பாயேல்
மாயச் சத்திபோ மீதன்றி மந்திர மறைகளிற் காணோமே

வாயு தம்பனம், சல (நீர்) தம்பனம், தேயு (நெருப்பு) தம்பனம், [ஆகியவற்றை] மணி மந்திர மருந்தாலே செய்திடில் அதில் அதில் சிறந்த சத்திகள் எங்கே? நீ அச் சச்சிதாநந்தமாய் வேறு ஒன்று நினைந்திடாது இருப்பாயேல் மாயச் சத்தி போம். ஈது அன்றி மந்திரம் [ஏதும்] மறைகளில் காணோமே.
மனோ நாசம் செய்தலே மாய சக்தியை நீக்கும் விதம். அப்போது அத்வைதம் சித்திக்கும். இது அன்றி வேறு வழி ஏதும் இல்லை.
--
மணி, மந்திர, மருந்தாலே வாயு, நீர், அக்னி ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரும்போது அவற்றின் சிறப்பான சக்திகளான சலனம், திரவத்தன்மை, சூடு ஆகியன மறைந்து போச்சு இல்லையா? அது போல நீ ஒரே பிரமமான நிலையிலே வேற ஒண்ணும் நினைப்பு வராம நின்னா மாயை மீண்டும் வராம அழியும். இது தவிர வேறு வழி ஏதும் வேதங்களில சொல்லப்படலை.


No comments: