Pages

Monday, August 3, 2009

அந்தக்கரண விருத்தி இருக்கையில் அகண்டாநுபவம் எப்படி ஏற்படும்?



87.
முன் கூறிய அந்தக்கரண விருத்தி இருக்கையில் அகண்டாநுபவம் எப்படி ஏற்படும்?

வீட தாம்பரி பூரண சொரூபத்தில் விருத்திஞா னமுங் கூடிச்
சேட மாகினா லகண்டமா மநுபவ சித்தியெப் படியென்றால்
சாடி நீர்மண்னைப் பிரித்ததேற் றாம்பொடி தானுமண் ணொடுமாயும்
ஊடி ஞானமு மறிவிலா மையைக்கெடுத் தொக்கவே கெடுந்தானே

வீடு (முத்தி) அதாம் பரிபூரண சொரூபத்தில் விருத்தி ஞானமுங் கூடிச் சேடம் (சேஷம்=மீதி) ஆகினால் அகண்டமாம் அநுபவ சித்தி எப்படி என்றால், சாடி நீர் மண்ணைப் பிரித்த தேற்றாம் பொடி தானும் மண்ணொடு மாயும். ஊடி (பகைத்து) ஞானமும் அறிவிலாமையைக் கெடுத்து (அழித்து) ஒக்கவே (கூடவே) கெடும் தானே.
--
முத்தி நிலையான பரி பூரண சொரூபத்தில் அந்தக்கரண சம்பந்தம் உள்ள விருத்தி ஞானமும் கூடினால் எப்படி இரன்டில்லாத அனுபவம் சித்திக்கும் எனில்: நீர் நிறைந்த ஜாடியில் உள்ள மண்ணை நீரில் இருந்து பிரிக்க அதில் தேற்றாம் கொட்டை பொடியை போடுவார்கள். அது மண்ணை பிரித்துவிட்டு தானும் அழியும். அது போல விருத்தி ஞானமும் அஞ்ஞானத்துடனே அழியும்.

விருத்தி ஞானம் என்பது சுத்த சத்துவமாக மீதி உள்ள மாயை. மனம் சத்துவமாக மட்டுமே நிற்கும் போது இதற்கு முன் பல இடங்களில் சிதறிக்கிடந்து அலைந்த
அதன் வல்லமை முழுதும் ஒரே இடத்தில் சேருகிறது. அதுவும் மாயையேதான். ஆனால் அது சத்துவ குணமான மாயை. இது ஆவரண சக்தியை அழிக்கும் சக்தி உடையது. இதையே முன்னால் நஞ்சை மருந்தாகிய மற்றொரு நஞ்சால் முறிப்பர்; துணியில் உள்ள அழுக்கை அழுக்கான உவர் மண்ணால் நீக்குவர்; அம்பை வேறொரு அம்பால் அழிப்பர்; அது போல் சத்துவ மாயையால் அசுத்த மாயையை கெடுப்பர், பின் "பிணம் சுடு தடி போல்" அதுவும் அழியும் என்று கூறினோம்.

ஓ! அப்ப பிரம்ம அனுபவத்தில கொண்டு விட்டதும் இந்த விருத்தி ஞானமும் காணாதுபோயிடும். சரிதான்.

இந்த பிரம்ம அனுபவம் எப்படி இருக்கும்?
அது அனுபவத்திலதான் தெரியும்னாலும்...

ஒரு சக்கிரவர்த்தி எப்படி ஒரு கவலையும் இல்லாம இருப்பாரோ, ஒரு சின்ன குழந்தை அம்மாகிட்ட பால் குடிச்சதும் எப்படி திருப்தியோட ஆனந்தமா இருக்குமோ- அப்படி பிரமானந்தத்தில மூழ்கி கொஞ்சமும் கவலை இல்லாம இருப்பாங்க. மோக்ஷம், நரகம், பிறப்புன்னு ஒண்ணுமே நினைவிராது. இதெல்லாம் உண்டுன்னு சொன்னா சாதாரணமா யார்கிட்டேயாவது கொசு ஒண்ணு ஆகாசத்தை விழுங்கினதா "கொசு ஒண்ணு ஆகாசத்தை விழுங்கிவிட்டது"ன்னு சொன்னா எப்படி சிரிப்பாங்களோ அப்படி இடி இடின்னு சிரிப்பாங்க.

88.
இந்த நிச்சய முத்தரு ளநுபவ மிருப்பதெப் படியென்றால்
சிந்தை யற்றபூ மண்டல விராசனுஞ் சிசுவைபோற் சுகமாவர்
பந்த முத்திகண் மறந்துபோ முண்டென்று பலர் சொலி னகையாவர்
அந்த ரத்தையுண் டுமிழ்ந்ததோர் கொசுகெனு மவர்களை நகையாரோ

இந்த நிச்சய [அகண்டானுபவம்] [சீவன்] முத்தருள் அநுபவமிருப்பது எப்படியென்றால், சிந்தையற்ற பூ மண்டல இராசனும் சிசுவை [யும்] போல் சுகமாவர். பந்தங்கள் முத்திகள் (ஆகிய பாவனா விகல்பங்கள்) மறந்து போம். [பந்த முத்திகள்] உண்டென்று பலர் சொலின் நகையாவர் (சிரிப்பர்). அந்தரத்தை (ஆகாயத்தை) உண்டு உமிழ்ந்ததோர் கொசு எனும் அவர்களை நகையாரோ.
--
அகண்டாநுபவம் பெற்ற சீவன் முத்தர்கள் ஒரு கவலையும் இல்லாத சக்கிரவர்த்தி போலவும்; தாயில் பாலை அருந்தி சுகமான அனுபத்தில் இருக்கும் குழந்தை போலவும் பரமானந்த அனுபவத்தில் முழுகி சற்றும் கவலை இல்லாது இருப்பர். மோக்ஷம், நரகம், பிறப்பு போன்ற நினைவுகளே ஒழிந்து போகும். அவை உண்டு என யாரேனும் சொன்னால் "ஒரு கொசு ஆகாயத்தை விழுங்கிவிட்டது" என்று ஒருவன் சொன்னால் மக்கள் எப்படி சிரிப்பார்களோ அதுபோல சிரிப்பார்.


13 comments:

R.DEVARAJAN said...

//ஆனால் அது சத்துவ குணமான மாயை. இது ஆவரண சக்தியை அழிக்கும் சக்தி உடையது.//

Point noted.Pl see da date.

Dev

திவாண்ணா said...

தேவ் சார், இது ஆக்ஸ்டு மூணாம் தேதி வர வேண்டியதுதான். ப்ளாகர் பூதம் இப்பவே பப்ளிஷ் பண்ணி இருக்கு. என்னோட தப்பாவும் இருக்கலாம். பல பதிவுகளையும் போட்டுட்டு எடிட் செய்யும்போது தப்பி இருக்கலாம்.

R.DEVARAJAN said...

இதை விக்ஷேப சக்தியாக வகைப்படுத்துவதில் தவறில்லை என்று
நினைக்கிறேன்.

தேவ்

R.DEVARAJAN said...

*கொசுகெனு* மவர்களை நகையாரோ//

கொசுவெனு மவர்களை நகையாரோ !

தேவ்

Geetha Sambasivam said...

தேற்றாம் கொட்டை பொடியை போடுவார்கள்//

புது விஷயம்!

Geetha Sambasivam said...

ஆக்ஸ்டு மூணாம் தேதி வர வேண்டியதுதான். ப்ளாகர் பூதம் இப்பவே பப்ளிஷ் பண்ணி இருக்கு. //

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

Geetha Sambasivam said...

ம்ம்ம் இன்னொரு பின்னூட்டம் ஒளிஞ்சுண்டு இருக்கு போல! வழக்கம்போல் ப்ளாகர் வேதாளம் வேலை???

திவாண்ணா said...

@தேவ்
ஆமாம் விக்ஷேப சக்தின்னு சொல்லாம்தான்.
கொசுகெனு என்றுதான் புத்தகத்தில் இருக்கு. வேறு மூலம் கிடத்தால் ஒப்பிட்டு பார்க்கணும்.

திவாண்ணா said...

//வழக்கம்போல் ப்ளாகர் வேதாளம் வேலை???//
ம்ம்ம்ம்!
உங்களைத் தவிர வேற யாருக்கு இவ்வளோ விவரமா தெரியும்?
்-)

கிருஷ்ண மூர்த்தி S said...

அகண்டானுபவம் ஏற்படக் கொசு சொல்றதுக்கெல்லாம் சிரிக்கக் கூடாது!

இது மட்டும் தானா, இல்ல இன்னும் யார் யார் சொல்றதுக்கெல்லாம் சிரிக்கக் கூடாதுன்னு லிஸ்ட் இருக்கா:-)

திவாண்ணா said...

@ கி
:-)))))))
சரி பண்ணியாச்சு!
இது வரை நான்தான் இப்படி மத்தவங்களை கோட்டா பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்ப நானே மாட்டிக்கிட்டேன்!
:-))

திவாண்ணா said...

//கொசுகெனு என்றுதான் புத்தகத்தில் இருக்கு. வேறு மூலம் கிடத்தால் ஒப்பிட்டு பார்க்கணும்.//

தேவ் சார், நேத்து ஒரு சன்னியாசி வந்திருந்தார். அவர் கைவைல்லியநீதம் பிரசங்கம் செய்பவர். "கொசுகெனு" என்பதுதான் மற்ற புத்தகங்களிலும் உள்ளது; அது சரிதான், பழந்தமிழ் என்கிறார்.

Kavinaya said...

//தாயில் பாலை அருந்தி சுகமான அனுபத்தில் இருக்கும் குழந்தை போல//

இந்த உதாரணம் சுகமா இருக்கு :)

//இது வரை நான்தான் இப்படி மத்தவங்களை கோட்டா பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்ப நானே மாட்டிக்கிட்டேன்!
:-))//

நல்லா வேணும்! :)