
ஒரு சின்ன ஸர்ப்ரைஸ் ஆக நம்ம கேஆர்எஸ் மறைஞ்சு இருந்து படிச்சுட்டு இப்ப வெளிப்படையா தேர்வு எழுதி இருக்கார். அவரோட பார்வை கொஞ்சம் வித்தியாசமா தோணினாலும்.... ம்ம்ம் படிங்க! படிச்சுட்டு சொல்லுங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திவா சாரின் கண்ணன் காட்டும் கர்ம வழி என்னும் தொடர் பதிவுகள் இட்டிருந்தார். அதை மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? என்பது போல் பின்னூட்டம் இடாமல், நிஷ் காம்யமாகப் படித்து வந்ததில் அடியேனும் ஒருவன்! :)
அந்தத் தொடர் பற்றி இப்போது தேர்வு வைத்துள்ளார் திவா சார்!
பாடம் மறைந்திருந்து கேட்டாலும், பரீட்சை நேர்முகமாகத் தானே எழுத வேண்டும்? இதோ அடியேனின் விடைத்தாள்! :)
***********************************************************************
கர்மம் என்றால் செயல்! எதுக்குச் செயல் செய்யணும்?
ஒன்றை விரும்புகிறோம் (காமம்)! அதை அடையச் செயல் செய்தாகணும்!
இப்படி "காமம்-கர்மம்" என்றே இந்தச் சுழல் இருக்கிறது!
எப்பமே இப்படித் தானா? என்று கேட்டால், அதற்குத் தான் வெறுமனே "கர்மம்" என்னாது,
"கர்ம-யோகம்" என்று கர்மத்தோடு, யோகத்தையும் சேர்த்துக் கொள்கிறான்!
தேர்த்தட்டு மொழியிலே சொல்வது என்ன?
* யோகம் = ஒருங்கிணைதல்
* கர்மம் = செயல்
செய்யும் செயலால் ஒருங்கிணைதல் கர்ம யோகம்!
* ஞானமா? கர்மமா?
* துறக்க வேண்டுமா? செய்ய வேண்டுமா?
துறவாமல் செய்து கொண்டிருக்கும் செயலில், ஞானம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து கொள்ளும்!
ஞானம் கலந்து கொள்ள, கலந்து கொள்ள...
செயலைத் துறவாமல், செயலின் நோக்கத்துக்குத் தடையாக இருப்பதை மட்டும் ஒவ்வொன்றாகத் துறக்கத் தொடங்கி விடுவோம்!
***********************************************************************
ஒரு செயல் செய்யும் போது கூடவே பல செயல்கள் எழும்! தனித்த செயல் என்ற ஒன்றுமே கிடையாது!
சமைக்க வேண்டும் என்றால் நெருப்புச் செயல் வேண்டும், நீர்ச் செயல் வேண்டும், பல அங்கங்களை உள்ளே கொட்டவும் வேண்டும்!
ஆனால் நோக்கம் என்னவோ உணவைச் சமைப்பது மட்டுமே!
இந்த எண்ணம் இருந்து கொண்டே இருந்தால், நெருப்பு, நீர் இதையெல்லாம் உணவுக்கு மட்டுமே பயன்படுத்துவோமே தவிர,
அதை வைத்துக் கொண்டு வேறு ஏதும் கொளுத்தவோ, இல்லை நீரை வைத்து விளையாடவோ செஞ்சி திசை திரும்ப மாட்டோம்!
அதே போல் நாம் செய்யும் கர்மங்களின் நோக்கம் ஈஸ்வர ப்ரீதி என்னும் உணவு/பிரசாதம்!
இறைவனின் திருவுள்ள உகப்பு என்பது தான் நோக்கம் என்பதை அறிந்து கொண்டால்...
அதை நோக்கிச் செல்லும் போது வரும் வேறு செயல்களில் சிதறிப் போக மாட்டோம்!
பல செயல்களின் ஒருங்கிணைப்பில் இறுதியில் அந்த உணவு/பிரசாதம் கிட்டும்!
திவா சார், இதைச் சில இடங்களில் பிராக்டிகலாகக் கொண்டு சென்றது பிடித்தது! வேளுக்குடி சுவாமிகள் எடுத்துக்காட்டுகள், தமிழில் வெண்பா என்று லைட்டாகவே கொண்டு சென்றார்!
* திருடர்கள் 4 பேர். உதவியாளர்கள்= இந்திரியம், மனசு, புத்தி! தலைவன்=காமம்!
* இந்திரியங்களை கர்ம யோகத்திலே திசை திருப்பி விடலாம்.
* ரஜோ குணத்தை சாப்பாட்டினால் மாற்றலாம்.
இப்படி எல்லாம் செய்தால் உதவியாளர்கள் காலி! அவர்கள் போன பின் தலைவனும் காலி!
***********************************************************************
ஆக,
* காமம் அற்ற கர்மமா?
* விருப்பு/வெறுப்பு அற்ற செயல்களா?
இல்லை!
* காமத்தோடு கூடிய கர்மம்!
* விருப்புடன் கூடிய செயல்!
அச்சோ! நிஷ்காம்ய கர்மம் என்று கீதை சொல்கிறதே!
அதைத் தானே திவா சார், இம்புட்டு கஷ்டப்பட்டு இருபது பதிவுகளா சொல்லிட்டு வந்தாரு! அத்தனையும் படிச்சிட்டு, படிச்சது ராமாயணம், இடிச்சது பெருமாள் கோயில்-ன்னா நீங்க நினைக்கறீங்க? ஹிஹி! :)
சமைக்கும் போது, நீர்/நெருப்பின் மேல் அதீதமாக ஈடுபடாமல், எப்படிச் சமைக்க வேண்டிய உணவில் மட்டும் நம் கவனம் இருந்ததோ, அதே போல!
பகவத் ப்ரீதி-க்குச் செய்வோம் என்ற எண்ணம் மட்டும் இருக்கட்டும்! அது தான் நோக்கம் என்று அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொண்டு உன் கர்மங்களைச் செய்!
* இறைவனின் மேல் காமம் செலுத்திக் கர்மங்களைச் செய்!
* மற்ற உடன் வரும் செயல்களின் மேல் காமம் செலுத்திக் கர்மங்களைச் செய்யாதே!
யக்ஞார்த்தாத் கர்மணோ அந்யத்ர| லோகோயாம் கர்ம பந்தன||தத் அர்த்தம் கர்ம கெளந்தேயா| முக்த சங்க சமாசர|| 3.9 மற்றைய காமங்கள் வேண்டாம்! மாதவன் காமங்கள் வேண்டும்!"மற்றை நம் காமங்கள்", "மாற்று" ஏல்-ஓர் எம்பாவாய்!