Pages

Monday, November 5, 2012

கடவுளின் உபயோகம் - 4

 
ஸ்வாமிகள்: ஒரு மனிதன் மிகவும் பலஹீனமாக நடக்கக்கூட சக்தி இல்லாமல் இருப்பதாக வைத்துக்கொள்ளலாம். அவனுக்கு உதவி செய்து வழி நடத்த நல்ல பலசாலி தயாராக இருப்பதாக தெரிந்தால் அவனுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்? நோய்வாய்ப்பட்ட ஒருவனுக்கு ஒரு நல்ல இரக்கமுள்ள வைத்தியர் அருகில் இருப்பதாக தெரிந்தால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும்? வறுமையில் வாடும் ஒருவனுக்கு பணக்கார உறவினன் ஒருவன் அருகில் இருப்பதாக தெரிந்தால் எப்படி இருக்கும்? அவன் சிரமம் குறையாதா?

மாணவர்: நிச்சயமாக!

வாழ்கையில் ஒவ்வொரு கணமும் நாம் எண்ணற்ற துன்பங்களுக்கு காரணமாகும் விஷயங்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. சிலருக்கு துன்பம், சிலருக்கு நோய், சிலருக்கு ஏழ்மை. ஒரு வேளை, நாம் கேட்டால் போதும், நம் துன்பங்களை நீக்கி ஆறுதல் கொடுத்து உதவ தயார் என்று ஒருவர் இருந்தால் நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?

அது நிச்சயமாக ஒரு ஆறுதல் தரும் எண்ணம்.

நம் நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது இன்னொரு நோய்வாய்ப்பட்ட நபரை காண்பதிலோ ஏழ்மையில் இருக்கும்போது இன்னொரு ஏழ்மையில் இருப்பவரை காண்பதிலோ பயன் இராது.

நிச்சயமாக இருக்காது.

அப்போது நாம் பலமான, ஆரோக்கியமான, தனவானாக ஒருவரை பார்க்க வேண்டும்.

சந்தேகமில்லை.

ஆனால் நம் துன்பங்கள் வெறும் நோய் அல்லது ஏழ்மையுடன் நிற்பதில்லையே?

இல்லைதான். நமக்கு ஏற்படும் துன்பங்களை எண்ணவே முடியாது.

ஒவ்வொரு துன்பத்துக்கும் அதிலிருந்து நம்மை விடுவிக்கக்கூடிய நண்பர் இருப்பதாக தெரிந்தால் ஆறுதலாக இருக்கும்.

ஆமாம்.

ஆகவே நமக்கு ஏற்படக்கூடிய சிரமங்களுக்கு தக்கபடி அந்தந்த சிரமங்கள் இல்லாத நண்பர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அது முடியாதே! நமது துன்பங்களோ அளவில்லாமல் இருக்கின்றன.

உண்மைதான். அதனால் எந்த சிரமத்துக்கும் ஆள்படாத ஒரு நண்பர் கிடைத்து விட்டால் போதும்.

உண்மைதான். ஆனால் அப்படிப்பட்ட நபரை எங்கே என்று போய் தேடுவது?

மரணம் ஒரு துன்பம்தானா?

நிச்சயமாக!

பிறப்பும் ஒரு துன்பம்?

சந்தேகமில்லாமல். அதுதானே மற்ற எல்லா பிரச்சினைகளுக்கும் மூல காரணம்?

அப்படியானால் பிறப்பு இறப்பு இல்லாத ஒருவர் கூடுதலாக நம் துன்பங்களையும் தீர்த்து வைப்பவர் இருக்கிறார் என்று தெரிவது ஆறுதல்தானே?

தர்க்கரீதியாக அப்படித்தான்.

சாதாரணமாக நாம் நம் துன்பங்கள் தீருவதுடன் திருப்தி அடைவதில்லை. நம் ஆசைகள் நிறைவேற வேண்டும். நம் ஆசைகளும் அனந்தமாக இருக்கின்றன. அதனால் நமக்கு நம் ஆசைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொடுப்பவராகவும் நம் நண்பர் இருக்க வேண்டும். நம் ஆசைகள் எண்ணற்றவை மட்டும் அல்ல. அவற்றுக்கு வானமே எல்லை என்னும்படி அளவில் மிக அதிகமாக இருக்கிறது. எந்த பணக்கார உறவினரும் எவ்வளவுதான் தனம் இருந்தாலும் அந்த அளவு நம் ஆசைகளை தீர்த்து வைக்க முன் வர மாட்டார். அப்படியே முன் வந்தாலும் நாளடைவில் சொத்து தீர்ந்து விடும். நம் நண்பரிடம் அப்படி தீர்க்க முடியாத அளவு சொத்து இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அது எப்போதும் கிடைக்க வேண்டும். நம் அவசர தேவைக்கு அது உடனே உதவ வேண்டும். பணம் பெட்டியில் இருக்கிறது, சாவி இங்கே இல்லை, கணக்காளர் வர வேண்டும் என்றெல்லாம் இருந்தால் அது சரிப்படாது. அத்தகைய நண்பர் மதுரையில் இருந்து கொண்டு நமக்கு மைசூரில் பணம் உடனடி தேவை என்றால் அவரை கூடவே கூட்டிப்போனால் ஒழிய கிடைக்காது. அப்போது உங்கள் நண்பர் எங்கும் எப்போதும் உதவ தயாராக இருந்தால்தான் நல்லது. இதே போல யோசித்துக்கொண்டு போனால் உங்களுடன் எங்கும் எப்போதும் இருக்கும், உங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்யத்தயாராக இருக்கும், எல்லாம் அறிந்த, தனக்கு ஒரு துன்பமும் இல்லாத, உங்கள் துன்பங்களை எல்லாம் நீக்கி விருப்பங்கள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்யக்கூடிய நண்பர் இருக்கிறார் என்ற பாவனை மிகவும் ஆறுதலை கொடுக்ககூடியதாகும்.

ஆனால் அப்படி வெறும் கற்பனையில்தானே இருக்க முடியும்?

No comments: