Pages

Monday, November 19, 2012

விதியா மனித முயற்சியா? -4 -

 
நீங்கள் இரண்டு வெவ்வேறு விஷயங்களை ஒன்றாக நினைத்து குழப்பிக்கொண்டு இருக்கிறீர்கள். ஊழ் வினை என்பது நீங்கள் ஏதோ ஒரு சக்தி என்று சொல்வதிலும் வேறானது. உதாரணமாக புதிய கருவி ஒன்றை பயன்படுத்துகிறிர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலில் மிகுந்த ப்ரயாசையுடன் தட்டுத்தடுமாறிக்கொண்டு பயன்படுத்துவீர்கள். அடுத்த முறை அதை பயன்படுத்தும் போது இன்னும் கொஞ்சம் சுலபமாக அதிகம் தட்டுத்தடுமாறாமல் பயன்படுத்துவீர்கள். அடிக்கடிப்பயன்பதிய பின் வெகு சுலபமாக சிரமம் இல்லாமல் பயன்படுத்துவீர்கள். அதாவது எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு எளிதாக பயன்படுத்துவீர்கள். அடிக்கடி பயன்படுத்த நன்றாக கற்றபின் அதை பயன்படுத்த எண்ணமும் தோன்றும். முதல் முறையாக ஒருவன் திருடும்போது பயந்து கொண்டே மிகப்பிரயாசையுடன் திருடுகிறான். அடுத்த முறை பயமும் பிரயாசையும் குறைந்துவிடும். வாய்ப்புகள் அதிகமாகும்போது திருடுவது பழக்கமாகிவிடுகிறது. சர்வ சாதாரணமாக பிரயாசை அதிகமில்லாமலே திருடுவான். இந்த பழக்கம் தேவையே இல்லாவிட்டாலும் அவ்வப்போது திருடவும் அவனை தூண்டுகிறது. இதைத்தான் வாசனை என்கிறார்கள். உங்கள் இஷ்டத்துக்கு எதிராக செயல்படத்தூண்டுவது இந்த வாசனைதான். இதை நீங்களேதான் உருவாக்கினீர்கள். இது ஊழ் வினை அல்ல. செய்த செயலுக்கு தப்ப முடியாமல் கிடைக்கும் பலன் - துன்ப, இன்பம் என்ற உருவில் கிடைக்கும் தண்டனையோ அல்லது வெகுமதியோ- அதைத்தான் ஊழ் வினை என்கிறோம். அடிக்கடி செய்யும் செயல்கள் மனதில் ஒரு சுவையை, ஒரு சௌகர்யம், ஒரு இயல்பை அடிக்கடி மீண்டும் செய்யும் தன்மையை உண்டு பண்ணிவிடுகிறது. இதுவே வாசனை. ஊழ் வினை கடந்த கால செயல்களுக்கு தப்ப முடியாத வெகுமதி அல்லது தண்டனை என்பதால் அதை தவிர்க்க முடியாது. ஆனால் வாசனையை மனித முயற்சியை சரியாக செய்தால் எளிதாக கட்டுப்படுத்தலாம்.

ஆனால் அப்படிப்பட்ட வாசனைகளும் எண்ணற்றனவாக இருக்கின்றனவே, எப்படி அத்தனை வாசனைகளையும் கட்டுப்படுத்துவது?

வாசனைகளின் முக்கிய இயல்பு எப்போதும் வெளிப்பட்டுவிட முயற்சி செய்வதே. நல்லதோ கெட்டதோ எல்லா வாசனைகளின் இயல்பும் இதுதான். வாசனா சரித் என்னும் இந்த நதியில் நல்லது கெட்டது என்று இரண்டு ப்ரவாகங்கள். முழு நதியையும் அணைபோட்டு நிறுத்தப்பார்த்தால் அது ஆபத்தாக முடியலாம். அதனால் சாத்திரங்கள் அப்படி செய்யச்சொல்லவில்லை. அவை நல்ல வாசனை ப்ரவாகத்துடன் இழுத்த இழுப்பில் போ, கெட்ட வாசனை ப்ரவாகம் இழுத்தால் எதிர்த்து போராடு என்கின்றன. ஒரு வாசனை கிளம்புகிறது என்பது நமக்கு தெரிந்தே நடக்கிறது. அதனால் அது நம்மை ஆள்கிறது என்று சொல்ல முடியாது. நமக்கு புத்தி இருக்கும் வரை அதை ஆதரிக்கலாமா இல்லையா என்று முடிவெடுக்கும் திறன் நமக்கு இருக்கிறது. பயிற்சியால் உங்கள் வாசனைகள் எல்லாவற்றையும் நல்லதாகவே செய்து தவறான வழியில் செலுத்தும் கெட்ட வாசனைகளை ஏறத்தாழ முற்றிலும் நீக்கிவிட்டால் அதன் பின் நல்ல வாசனைகளால் செலுத்தப்படுவதையும் உங்கள் மனித முயற்சியால் நீக்குவதை சொல்ல சாத்திரங்கள் காத்திருக்கின்றன. மெல்ல மெல்ல எந்த வாசனையாலும் உங்களை பாதிக்க முடியாத நிலைக்கு போய்விடலாம். அந்த நிலையில் உங்கள் மனம் சுத்த ஸ்படிகம் போல ஆகிவிடும். குறிப்பிட்ட செயலை செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் ஏதும் இல்லாமல் இருப்பீர்கள். இப்படி கர்மா ஏதும் இல்லாததால் கர்ம வினையும் ஏதும் அண்ட முடியாது. ஊழ் வினை, வாசனை இரண்டுமே காணாமல் போகும். சுதந்திரம் எப்போதும் பூர்ணமாக இருக்கும். அதுவே மோக்ஷம் எனப்படும்.

No comments: