Pages

Tuesday, March 8, 2016

ஜீவனின் சரித்திரம் - 12



இடது கண் வலதை விட சற்று பிரகாசம் குறைந்தது எனப்படுகிறது. ஆகவே அது மின்மினிப்பூச்சி. இந்த இரண்டு கண்களாலும் பிரகாசப்படுத்தப்படுபவை மட்டுமே பார்க்கப்படும். நாசிகளால் வாசனை தெரிகிறது. முக்யம் என்ற பெரிய வாயில் வாய். அதன் வழியே வெளியே செல்லும் கடைச்சரக்கு சொற்கள். உள்ளே வருவன உணவு.
காதுகளால் கர்ம சாஸ்திரங்களையும் மோக்‌ஷ சாஸ்திரங்களையும் கேட்டு அறிகிறான். ஆசுரி வழியாக சிற்றின்பத்தை அனுபவிக்கிறான். நிர்ருதி மலத்துவாரம் ஆகும்.
குருடர்களான பொற்கொல்லன் நீதிபதி ஆகியோரில் நீதிபதி கால்கள். செல்ல வேண்டிய வழியில் நடத்துவதால் நீதிபதி. பொற்கொல்லன் கைகள். பொருட்களை வடிவமைப்பதால். இரண்டும் துவாரங்கள் இல்லை என்பதை குறிக்க குருடர்கள் எனப்பட்டனர்.
அந்தப்புரம் என்பது ஹ்ருதயம். மனமே அங்குள்ள விஷயங்கள். அங்கே அவன் மயக்கத்தையும் திருப்தியையும் கிளர்ச்சியையும் அடைகிறான். இவையே சத்வ, ரஜோ, தமோ குணங்களின் பரிணாமங்கள்,
அவள் செய்வதை அனைத்தையும் இவன் செய்தான் எனில் கர்மத்தால் கட்டுண்டு புத்தி செய்வதை ஆத்மா தான் செய்வதாக நினைக்கிறான் எனப்பொருள்.
அவன் வேட்டைக்கு கிளம்பினான் இல்லையா? அந்த உடலே ரதம். புலன்கள் குதிரைகள். காலத்தின் வேகமே ரதத்தின் வேகம். அஹங்காரம், மமகாரம் என இரண்டு தண்டங்கள். புண்ணியமும் பாபமும் சக்கரங்கள். மாயை அதன் அச்சு. முக்குணங்களே கொடிகள். ஐந்து ப்ராணன்கள் பூட்டுகள்.மனதே கடிவாளம். புத்தி தேரோட்டுபவன், ஹ்ருதயம் ஆசனம், சோகமும் மோஹமும் குதிரைகளை கட்டுமிடம், ஐந்து புலன் விஷயங்கள் ஆயுதங்கள், தோல் முதல் சுக்ரசோணிதம் வரை ஏழு தாதுக்கள் கவசங்களாக சொல்லப்பட்டன. ஐந்து கர்மேந்திரியங்களும் நகரும் திறனாகும். அவன் வேட்டையில் ஈடுபட்டது விஷய கேளிக்கைகள்.
(ஏற்கெனெவே நகரமே உடல் என்றெல்லாம் சொல்லியாயிற்றே; இப்ப இது என்ன திருப்பி? என்றால்.. இது இன்னொரு பரிமாணம். புத்தி/ மனம் நல்ல வாசனைகளை சார்ந்து இருக்கலாம். அப்போது அது நல்ல மனசு என்றோ நல்ல புத்தி என்றோ சொல்லப்படுகிறது. கெட்ட வாசனைகளை சார்ந்து நிற்கும் போது கெட்ட மனது என்றோ கெட்ட புத்தி என்றோ சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட வாசனைகளால் தூண்டப்பட்டு ‘கெட்ட’ காரியங்களை செய்கிறோம். பின்னர் இதில் களித்து களைத்து திரும்பும் போது, ’நல்ல’ புத்தி நம்மை கடிந்து கொள்கிறது. ’இல்லை இல்லை இனிமே இப்படி செய்யவே மாட்டேன்’ என்றெல்லாம் நமக்கு நாமே உற்தி மொழி கொடுத்து சமாதானம் சொல்லிக்கொள்கிறோம். திருப்பி வாசனைகள் அதற்கே இழுத்துக்கொண்டு போகும் என்பது வேறு விஷயம்! இதையே இந்த இடத்தில் சொல்லி இருக்கிறதாக எடுத்துக்கொள்ளலாம்.)

No comments: