Pages

Tuesday, March 22, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 6



சார்! அன்னிக்கு கடந்த காலத்தைப்பத்தி அலட்டிக்காதேங்கற மாதிரி சொன்னீங்க. ரெண்டு நா முந்தி எதிர்காலத்தப்பத்தி ரொம்ப கவலைப்படாதேன்னு சொன்னாங்க!”
அப்படியா? யாரு?” புன்முறுவலுடன் கேட்டார் பெரியவர்,
யாரோ! அந்த நேரத்துல அது ரொம்ப பெரிய உண்மைன்னு தோணிச்சு”இளைஞன் குரல் கம்மியது.
எதிர்சாரி வீட்டில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப்பார்த்தனர். இரு சிறு குழந்தைகள் சண்டயிட்டுக்கொண்டு இருந்தன. ஒரு குழந்தையின் கையில் பந்து ஒன்று இருந்தது. அதுதான் பிரச்சினை போலும். வீட்டுக்குள் இருந்து ஒரு அம்மா வந்து குழந்தைகளை சமாதானப்படுத்த முயன்றார்.
சரி, சரி! இருக்கட்டும். அப்பறம்?”
கடந்த காலமும் வேணாம், எதிர்காலமும் வேணாம்ன்னா எந்த காலத்தில இருக்கறது?”
ஏன்? அதுல என்ன சந்தேகம்? நிகழ்காலம்ன்னு ஒண்ணு இருக்கே?”
ம்ம்ம்ம்ம், இந்த நிகழ் காலம் என்கிறது என்ன?”
ஏன்பா ஸ்கூல சொல்லித்தரலையா? நிகழ்கின்ற காலம் நிகழ்காலம்ன்னு?”
அதில்ல சார்? அது என்ன ஒரு மாசமா, வாரமா? இல்ல ஒரு நாளா? ஒரு மண்ணேரமா?”
அது உன்னப்பொறுத்தது!”
உம்ம்ம்ம்ம்?”
அது உன் மனசப்பொறுத்து ஒரு நாளோ ஒரு மணி நேரமோ இல்ல ஒரு நிமிஷமோ கூட இருக்கலாம்.”
என்னது? ஒரு நிமிஷமா? அது யாராலேயும் முடியுமா என்ன?”
பெரியவர் இளைஞனையே பார்த்துக்கொண்டு இருந்தார். இளைஞன் எதிர்சாரி வீட்டை திரும்பிப்பார்த்தான். அங்கே சிரிப்புச்சத்தம் கேட்டது! குழந்தைகள் இரண்டும் உற்சாகமாக பந்தை எறிந்து விளையாடிக்கொண்டு இருந்தனர்.
இந்த குழந்தைகள் இப்போத்தானே சண்டை போட்டு அழுதன? இப்போ சிரித்துக்கொண்டு விளையாட்டா? ஆமா. குழந்தைகள் பலதையும் மனசுல வெச்சுக்கறதில்ல. அப்பப்ப என்ன தோணுதோ அப்படி இருந்துட்டு போறாங்க. வயசான பிறகு இதுகளே எப்படி எப்படி எல்லாம் மாறுதுங்க? யார் மாத்தறா? நாம்மளேதான் கெடுக்கறோம் போல இருக்கு! பெரியவங்களப் பாத்துத்தானே இதுங்கள்ளாம் கத்துக்குதுங்க! இந்த குழந்தைங்க மாதிரி நாம் இருக்க முடியுமா? ஏன் முடியாது? முடியணும்.
காலி பெஞ்சில் மடித்து வைத்து இருந்த பேப்பரை திரும்பிப்பார்த்தான் இளைஞன்.

No comments: