Pages

Monday, March 14, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் -2



சாமி ஊர்வலம் வந்து கொண்டு இருந்தது. ஒரே சத்தம்! தாரை தப்பட்டை. தாளம் ஆட்டம் பாட்டம். வருகிற ஊர்வலத்தில் ஒரு ஆசாமி ஆடிக்கொண்டே உயிருடன் இருந்த கோழி கழுத்தை கடித்தார். ரத்தம் உறிஞ்சி துப்பினார்.
காட்டானுங்க! ச்சேச்சே! என்று அலுத்துக்கொண்டான் இளைஞன். இதெல்லாம் ஒரு வழிபாடு. கொஞ்சம் கூட நாகரிகமில்ல. இதெல்லாம் அனுமதிக்கற சாமியும் ஒரு சாமியா?”
கண்ணப்பர பத்தி கேள்விப்பட்டு இருக்கியாப்பா?” என்ற குரல் எழுந்தது. இளைஞன் திரும்பிப்பார்த்தான். முன்னே பார்த்த அதே பெரியவர்தான். வழக்கமான பேப்பர் கையில் இருந்தது.

ம்! கேள்விப்பட்டு இருக்கேன். வேடந்தானே?”
ஆமா. அவரேதான். அவர் செஞ்ச பூஜை பத்தி தெரியுமா?”
ம்ம்ம் லேசா தெரியும். நீங்க சொல்லுங்க!”
அவருக்கு திண்ணன்னு பேரு. அவர் மலை மேல ஏறினப்ப சின்ன கோவில் ஒண்ணுல ஒரு சிவ லிங்கத்தை பாத்தார். உடனே ஈர்ப்பு வந்துடுத்து. மெய் மறந்து போனார். பூஜை பண்ணனும்ன்னு தோணித்து. இருக்கறதோ மலை உச்சில! கீழே போய் தேடி வேட்டையாடி மாமிசத்தை பக்குவப்படுத்தி எடுத்துகிட்டார். இன்னொரு கைல காட்டுப்பூ பறிச்சு எடுத்துகிட்டார், ம்ம்ம் குளிப்பாட்டுவாங்களே? ரெண்டு கைலேயும் ஏதோ இருக்கே? சரின்னு வாய்ல தண்ணி உறிஞ்சி எடுத்துகிட்டார். மலை மேலே சிரமப்பட்டு ஏறி தண்ணிய சிவலிங்கத்து மேல துப்பினார். அப்பறம் தொடச்சு காட்டுப்பூ எல்லாம் சாத்தினார். மாமிசத்தை படையலா வெச்சார். ராத்திரிக்கு காவலா நின்னார். அப்பறம் காலை கீழே இறங்கி வேட்டையாட ஆரம்பிச்சுட்டார். அங்கே சிவ கோச்சரியார்ன்னு பூஜாரி ஒத்தர் பூஜை செஞ்சு கொண்டு இருந்தார். அவர் வந்து பாத்து நடுங்கி போயிட்டார். யார் இப்படி அபசாரம் செஞ்சதுன்னு நல்லா திட்டிட்டு அப்புறம் சுத்தம் பண்ணி பூஜை பண்ணிட்டு நைவேத்தியம் செஞ்ச சோற எடுத்துக்கிட்டு போயிட்டார். வேடன் திருப்பியும் வந்தான். முந்தா நா செஞ்ச மாதிரியே பூஜை செஞ்சான். காவல் நின்னான். காலையில போயிட்டான். அடுத்த நாள் பூஜாரி வந்து பாத்து பதைச்சு போனார்.
இப்படியே அஞ்சு நாள் நடந்தது. பூஜாரிக்கு தாங்கலை. ‘கடவுளே! ஏன் இப்படி நடக்கறது’ ன்னு புலம்பி முறையிட்டுட்டு போனார். அன்னைக்கு இரவு கனவில சிவன் வந்து ’நடக்கறத மரத்தடியில் ஒளிஞ்சு இருந்து பாரு’ ந்னு சொல்லிட்டுப் போனார். பூஜாரியும் அதே மாதிரி காலை சீக்கிரமாவே கிளம்பி மரத்துப் பின்னால் ஒளிஞ்சு நின்னார். திண்ணன் வந்தார். பாத்தா சிவலிங்கத்து மேல கண்ணு மாதிரி ரெண்டு இருந்தது, அதில வலது கண்ணிலேந்து ரத்தம் வந்தது. கலங்கிப்போன திண்ணன் கண்ணுக்கு கண் என்கிற காட்டுவாசி எண்ணப்படி தன் கண்ணை அம்பால அகழ்ந்து அதை லிங்கத்து மேலே வெச்சு அமுக்க ரத்தம் வரது நின்னு போச்சு. ஆஹான்னு ஆனந்த கூத்தாடினான் திண்ணன். அப்ப இன்னொரு கண்ணுலேந்து ரத்தம் வர ஆரம்பிச்சது. உடனே திண்ணன் அம்பை எடுத்து தன் இன்னொரு கண்ணையும் தோண்டத் தயாராயிட்டார். ஆமா அடுத்த கண்ணும் போசுன்னா எங்கே கண்ணை வெச்சு அமுக்கறதுன்னு தெர்யணுமே? கொஞ்சம் கூட தயங்கலை. தன் காலை எடுத்து சிவலிங்கத்து மேல- அந்த கண் மேல வெச்சுக்கிட்டார். அம்பை எடுத்துட்டார். அப்ப சிவபெருமான் நில்லு கண்ணப்ப, நில்லு நில்லு! என்று நிறுத்தி ஆட் கொண்டார்.”
பெரியவர் கதை சொல்லும் போது கண்களில் நீர் துளித்ததை இளைஞன் பார்த்தான். அவனுக்குமே மனம் உருகிவிட்டது. பின் இளமைக்கே உரித்தான துடுக்கு மீண்டும் தலை எடுத்தது.
அது சரிங்க. அவருக்கு அவ்ளோ பக்தி இருந்தது. இவங்களுக்கு எல்லாம் என்ன பக்தி இருக்கு?”
பெரியவர் பார்வை கடையில் இயங்கிக்கொண்டு இருந்த டிவி மேல் பதிந்தது. ”அட! அது யாருப்பா?”
நம்ம நாட்டு பிரதமர். இது தெரியாதான்னா உங்களூக்கு?”
என்ன செய்யறங்க?”
வெளி நாடு போயிருக்காரு. அங்க ராணுவ மரியாதையோட வரவேற்கறாங்க! ”
உம் நிறையவே நடைமுறை சமாசாரம் இருக்கு போலிருக்கே?”
ஆமா! பின்ன ஒரு நாட்டு பிரதமர்ன்னா சும்மாவா?”
சரீஈஈ… இவர் திடீர்ன்னு உங்க வீட்டுக்கு வந்துட்டா நீ என்ன செய்வே?”
வாங்க வாங்கன்னு வரவேற்பேன்.”
ம் ...அப்பறம்?”
உள்ள கூட்டிப்போய் உக்கத்தி வெச்சு காபி சாப்படறீங்களா டீயான்னு விசாரிப்பேன்.”
ம்ம்ம்ம் அப்பறம்?”
என்ன விஷயமா வந்தீங்கன்னு கேப்பேன்.”
அவ்ளோதானா? இதோ இந்த நாட்டில எவ்வளோ மரியாதை செய்யறாங்க?”
என்ன இவ்ளோ முட்டாத்தனமா பேசறீங்க? என்னால முடிஞ்சபடி, எனக்குத் தெரிஞ்சபடிதானே நான் செய்ய முடியும்?”
அதானே! ரொம்ப கரெக்டு!”

இளைஞன் திடீரென்று யோசிக்க ஆரம்பித்தான். இந்த ஜனங்கள்… காட்டு ஜனங்கள்… நாகரிகம்ன்னு எல்லாம் ஒண்ணுமே இல்ல. அவங்களுக்கு என்ன தெரியும்? தெரிஞ்சது அவங்க குலத்தில பாரம்பரியமா என்ன செஞ்சுகிட்டு வராங்க என்கறதுதான். அப்படித்தானே சாமி கும்பிட முடியும்?

நீங்க சொல்லறது….” என்று ஆரம்பித்த இளைஞன் திரும்பிப்பார்த்தான். பெஞ்ச் காலியாக இருந்தது!

No comments: