Pages

Thursday, March 17, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் -4


 “இன்னைக்கும் கோவமாத்தான் இருக்கீங்க!” என்றவாறு டீயை கொடுத்தார் கடைக்காரர். அதை வாங்கிக்கொண்ட இளைஞன் ”ஆமாம்!” என்றான்.
துரோகம் துரோகம் பச்சை துரோகம்! அவனுக்கு எவ்வளோ நல்லது செஞ்சேன்? பதிலுக்கு சரியான நேரத்தில காலை வாரிட்டான்.”
சிரித்துக்கொண்டே கடைக்காரர் அடுத்த நபரை கவனிக்க ஆரம்பித்தார்.
டீயை உறிஞ்சிய இளைஞன் பக்கத்தில் அமர்ந்து பேப்பரை படித்துக்கொண்டு இருந்த பெரியவரை திரும்பிப்பார்த்தான்.
ஏன் நீங்க எதுவும் கேக்கலை?”
ஏன்? எதுவும் கேக்கணுமா என்ன?” என்றார் பேப்பரில் இருந்து பார்வையை திருப்பாமலே.
ஆமாம்!”
உம்! பழைய கால நினைவுகள் போலிருக்கு!”
ஆமா. எனக்கு எவ்வளோ கோவம் வரது தெரியுமா? அந்தப்பய என்னை கஷ்டப்படுத்தியதுக்கு அளவே இல்லை!”
உம்! இப்ப என்ன செய்யறார்?”
இப்பவா? போய் சேந்துட்டான். முப்பது வயசிலேயே ஹார்ட் அட்டாக்!”
ரொம்ப புத்திசாலி போலிருக்கு!”
என்னது!”
ரொம்பவே சாமர்த்தியம்!”
என்ன சொல்லறீங்க?”
செத்துப்போனப்பறம் கூட உன்னை கஷ்டப்படுத்த முடியறதே!”
இதுல அவன் சாமர்த்தியம் என்ன இருக்கு? நானேதான்….”

நானேதான் என்னை கஷ்டப்படுத்திக்கறேன். பின்னே அவந்தான் உயிரோட இல்லையே! நடந்து போனதோட நினைவுகள்தான் என்னை கஷ்டப்படுத்தறது. நினைவுகள் என்னோடது. அப்ப நடந்ததை நினைச்சு கஷ்டப்படறதோ அல்லது அதை உதாசீனம் செய்யறதோ என் சாய்ஸ்! நாம இப்படித்தான் நடந்து போனதைப்பத்தி நினைச்சு நினைச்சு கஷ்டப்பட்டு, மருகி…. என்ன ஒரு முட்டாள்தனம்! நடந்து போனதை இப்ப மாத்த முடியுமா என்ன? பின்ன கடந்த காலத்தை நினைக்கிறதுல அர்த்தமே இல்லையா?

அவனது மன ஓட்டத்தை உணர்ந்தவர் போல பெரியவர் பேசினார். “ கடந்த கால நினைப்பிலிருந்து நமக்கு ப்ரயோசனமாகறது அது கத்துத்தர பாடங்கள்தான். ஒத்தருக்கு உதவி செஞ்சோம். அப்படி செஞ்சா பதிலுக்கு எதுவும் கிடைக்கும்ன்னு நினைச்சா செஞ்சோம்? அப்ப செய்யத்தோணினது, செஞ்சோம். சமயத்துல காலை வாரி விட்டாரா? இப்படித்தான் சிலர் இருப்பாங்க. இது ஒரு பாடம். அவர் திருப்பி ஒரு உதவி செய்வார்ன்னு எதிர்பார்த்து உதவி செஞ்சோமா? அது தப்பு. இது இரண்டாவது பாடம். எப்பவுமே இப்படித்தான் நடக்கும்ன்னு எதையும் எதிர்பார்க்காதே. நாம எப்பவும் மாறிகிட்டேத்தான் இருக்கோம். ஒரே ஆசாமி முன்னே நடந்து கொண்டது போல எப்பவும் நடந்துப்பார்ன்னு எதிர்பாராதே! அதுக்கு சான்ஸ் அதிகம். அவ்ளோதான். கடந்த கால அனுபவத்தில இன்னார் இன்னின்ன சிச்சுவேஷன்ல இப்படி நடந்துக்க வாய்ப்பு அதிகமிருக்குன்னு புரிஞ்சுக்க. இந்த அனுபவத்தோட பின்னணில இன்னை செய்யற விஷயங்களை முடிவு பண்ணிக்கோ. அவ்ளோதான்”

பெரியவர் சொன்னதை அசை போட்ட இளைஞன் திரும்பிப்பார்க்கவில்லை. பெஞ்ச் காலியாக இருக்கும் என்று அவனுக்கு தெரியும்!

No comments: