Pages

Wednesday, June 22, 2016

அந்தணர் ஆசாரம் - 2


அடுத்து சௌசம். சௌசம் என்றால் சுத்தி செய்து கொள்ளுதல். படுக்கையில் இருந்து எழுந்தவுடன் வாயை கொப்பளிக்க வேண்டும். பின் ஆசமனம் செய்ய வேண்டும். அதற்குப்பின் காலை கடன்களை முடிக்கப்போகலாம். அந்த காலத்தில் பூமியில்தான் ஜலத்தையோ மலத்தையோ விடுவதை செய்தார்கள். இந்த காலத்தில் மண் கிடைப்பதே பெரும் பாடாக இருக்கிறது. சௌகரியம் போல செய்யவும். ஜலத்தையோ மலத்தையோ விடும் போது காறித்துப்பக்கூடாது. ஒரு துணியால் தலையை மூடிக்கொள்ள வேண்டும். பகலில் வடக்கு பார்த்து உட்கார வேண்டும். இரவில் தெற்கு. ஈரமான உடையுடன் செய்யலாகாது. அப்படி செய்துவிட்டால் தலை குளிக்க வேண்டும். எண்ணை தேய்த்துக்கொள்வது, வாந்தி எடுத்த பிறகு போன்ற காரியங்களுக்குப்பின் அவற்றுக்கான சுத்தியை செய்து கொண்ட பிறகே ஜலத்தையோ மலத்தையோ விடலாம்.

முன் காலத்தில் இதற்கு முன் கூட்டியே ஜலத்தையும் சுத்தமான மண்னையும் எடுத்து வைத்துக்கொள்வார்கள். இந்த காலத்தில் மண்ணால் சுத்தி செய்து கொள்வது அனேகமாக இல்லை. அதற்கு தகுந்த மண்ணும் இல்லை. கங்கை கரையில் மண்ணை பார்த்து இருப்போருக்கு எப்படிப்பட்ட மண் தேவை என்று புரியும். அப்படிப்பட்ட மண் கிடைத்தால் அதனால் சுத்தி செய்து கொள்ளுவது சிலாக்கியமே.

சாலை, சாம்பல், மாட்டுக்கொட்டில், வாயு, அக்னி, சூரியன், சந்திரன், ப்ராம்ஹணன், பசு ஆகியோர் எதிரில் இதை செய்யலாகாது. மலை உச்சி, ஆற்றுப்படுகை ஆகிய இடங்களிலும் கூடாது. இப்படி செய்தால் விவேக புத்தி நசித்துவிடும்; பைத்தியம் ஆவார்கள் என்பது சாஸ்த்திரம்.

முக்கியமாக இந்த ஜல மல விசர்ஜன காலத்தில் பூணூலை நிவீதியாக தரித்துகொண்டு வலது காதில் சுற்றிக்கொள்ள வேண்டும். இதை மறந்து போனால் வேறு பூணூலை தரித்துக்கொள்ள வேண்டியதுதான்.

இவை அனைத்தும் தனது விஷயத்தில். பிறருடைய கழிவுகளையோ மனித எலும்பு, ரத்தம் ஆகியவற்றையோ தொட நேர்ந்தால் அவற்றை நனறாக கழுவிவிட்டு தலை குளித்து சுத்தி அடையலாம்.

இதெல்லாம் இந்த காலத்துக்கு ஒத்துவராது என்று நினைக்கிறவர்கள் இருக்கலாம். அப்படி இல்லை. முயன்றால் முடியும். அவற்றை செய்வதால்தால் ப்ராம்ஹணனுக்கு பெருமை இருக்கிறது. சௌசம் ஆசாரம் இல்லாதவனுடைய காரியங்கள் எதிர்ப்பார்த்தப் பலனை தரா.

No comments: