Pages

Thursday, July 6, 2017

அந்தணர் ஆசாரம் - 19 ஹோமங்கள்- 7




அடுத்து ஹோமத்தில என்ன செய்யக்கூடாதுன்னு பார்க்கலாமா வேணாமா? கொஞ்சம் யோசனையா இருக்கு. இக்னரன்ஸ் ஈஸ் ப்லிஸ்!
------------
ரைட். பாத்துடலாம்.முடிஞ்ச வரை ஆரம்பம் முதல் கடைசி வரை நடுவில எழுந்து போகக்கூடாது. ஹோமம் ஆரம்பிச்ச பிறகு அவசியம் இல்லாம பேசக்கூடாது. அவசியம் ஆனாலும் முடிஞ்ச வரை சைகையால காரியத்தை சாதிச்சுக்கணும்.

ஆரம்பிச்சுட்டா அந்த அக்னியை நல்லா பலப்படுத்திண்டு மேலே செய்யணும். அக்னி அணைய விடக்கூடாது. விட்டுட்டு அப்புறம் அதுல தீக்குச்சி கொளுத்தி போடறது சிலாக்கியம் இல்லை.

அக்னி காரியத்தால ஒரு லாபம் - தனம் கிடைக்கறது. ஆனா அந்த நேரத்தில பேசினா தனம் கையை விட்டுப்போகும். தேவையா? இதே போலத்தான் குளிக்கும் போதும், சாப்பிடும் போதும் பேசினா முகத்தில காந்தியும் ஆயுஸும் குறையும்.

ஹோமம் செய்தவுடன் எந்த தேவதையை உத்தேசிச்சு செய்தோமோ அந்த தேவதையுடையது இது என்னுடையதில்லை ன்னு பொருள் தொனிக்க … இதம் ந மம ன்னு சொல்லணும். சில ஹோமங்கள் - ம்ருத்யுஞ்சய ஹோமம், ஆயுஷ் ஹோமம் மாதிரி - இதுல கொஞ்சம் சிக்கலா இருக்கலாம். அதனால ஒட்டு மொத்தமா சொல்லறதும் உண்டு; தனித்தனியா தேவதை பேர் இல்லாம. ஆனா இப்படி ஒரு உத்தேச த்யாகம் இல்லாம பலன் இல்லை.

ஹோம திரவியத்தை சமர்பிக்கறப்ப சமர்பண பாவம் இருக்கணும். சமித்/ அன்னத்தை அக்னியில தூக்கி எரிவதோ விசிறுவதோ கூடாது. நெய் ஹோமம் செஞ்சா அதை தழல்ல தான் செய்யணும். மற்றதுக்கு அப்படி இல்லை. அக்னியில போட்டாப்போதும்.

அக்னில தண்ணீர் விழக்கூடாது. அப்படி விழுந்தா நமக்கு தீயால சுடறா மாதிரியாம் அக்னிக்கு. கொப்பளிச்சு போறதாம். அதனால ஒரு வேளை அக்னியை சமனப்படுத்த வேண்டி இருந்தா பாலோ சாணியை கரைச்சோ அக்னில சேர்க்கணும். இந்த "பால் ஊத்தறது" என்னன்னு இப்ப புரியறதா? சவத்தை எரிச்ச இரண்டாம் நாள் அக்னியை பாலால சமனப்படுத்திவிட்டு அஸ்தியை எடுப்பாங்க.

ஹோமம் செய்கிற எல்லாரும் செல்போனை எல்லாம் அணைச்சு வெக்கணும். அல்லது வேற யார்கிட்டயானா கொடுத்து வைக்கணும். நடுவில அது சத்தம் போட்டு கவனம் திரும்பறது சரியா இராது. தெரிஞ்ச வாத்தியார் ஒத்தர் அதை - அவர்கிட்ட வரும் வரை அதை - திட்டிண்டு இருந்தார். அதை அவர் வாங்கியப்பிறகு ஒரு நிகழ்ச்சி கூட ஒரு காலாவது அடென்ட் செய்யாம இருக்கறதில்லை. எஜமானனுக்கு தர்ம சங்கடம். 'ச்ராத்தத்துக்கு இன்னும் ஆள் வரலை'ன்னு ஆரம்பிச்சு 'இடம் எங்கே இருக்குன்னா?' வரை எல்லாத்துக்கு பதில் சொல்லிண்டு இருப்பார். பேசறவங்களாவது சட்டுன்னு பேசி கட் பண்ணுவாங்களா? மாட்டாங்க. சாங்கோபாங்கமா குசலம் விசாரிச்சுட்டு ஊர் கதை எல்லாம் பேசிட்டுத்தான் அது முடியும். எந்த வைதீகர் காலை நேரத்தில வேலையில்லாம இருக்காங்க? அந்த நேரம் பாத்து ஏன் இதுக்கு நாள் பாத்து சொல்லுன்னு போன் பண்ணனும்? என்னத்த சொல்லறது.

மந்திரத்தில கவனம் இருக்கணும். வாய் பாட்டுக்கு மந்திரம் சொல்ல செய்யறவங்க பாட்டுக்கு செல்போன், டேப் சகிதம் யார்கிட்டேயோ தொடர்பு வெச்சுண்டு சிரிச்சுண்டு பக்கத்துல இருக்கறவன்கிட்டேயும் ஷேர் செய்துண்டு… இது மாதிரி கவனமின்மை நிறைய கண்ணுல படறது. வாங்கற காசுக்கு வஞ்சனை இல்லாம உழைக்கனும்ன்னு தோண வேண்டாமோ? ஒரு வேளை இப்படி அவங்க செய்ய நினைச்சாலும்… பெரிய நிகழ்ச்சிகளில பாத்து இருக்கேன்.. ஆர்கனைசர் ஒத்தர் வந்து பேப்பரும் பேனாவும் ஒத்தர்கிட்ட கொடுத்து அந்த ஹோம குண்டத்தில உக்காந்து இருக்கறவங்க பேர் எல்லாம் எழுதித்தர சொல்லுவார். இவருக்கு எல்லாரையும் தெரியுமா? அதனால விசாரணை நடக்கும். மத்தவங்க கவனம் சிதறது மட்டும் இல்ல, அதை எழுதி முடிக்கற வரை இவர் செய்ய வேண்டிய ஹோமம் என்ன ஆகிறது? நாராயணா!

இன்னும் கொஞ்ச நாள் போனா விஷயம் தெரிஞ்ச யஜமானன் வைதீகர்கள்கிட்டேந்து செல்போன்களை பறிமுதல் செய்யும் நாள் வந்துடும்.

இன்னும் எழுதினா டிப்ரஷன் வந்துடும். முடிச்சுக்கலாம்.

No comments: