Pages

Monday, July 31, 2017

பொம்மனாட்டி சமாச்சாரம்!





(சொல்டேன தவிர எதான எழுதிருப்பாரோன்னு ப்ளாக்ல தேடினேன். ம்ஹூம் கடஞ்செடுத்த எம்சிபின்னா. பொம்மனாட்டி சமாச்சாரம் ஒன்னும் இருக்கறதா தெரியல)
இப்படி ஒரு கமெண்ட் சமீபத்தில வந்தது இல்லையா?
மனுஷன் தெரிஞ்சதைத்தானே எழுத முடியும்? :-)))
ஹிந்து சமாசாரங்களே பெரிய கடல். அதுல எனக்கு ஆர்வம் இருக்கறது சின்ன செக்டார்ல. அதுல சில விஷயங்களை தோண்டி தெரிஞ்சுண்டு இருக்கேன்…..ம்ம்ம்ம்ம்… தெரிஞ்சுண்டதா நினைச்சுண்டு இருக்கேன்.
ரெண்டு மூணு தரம் இங்கே பதிவுகளில எழுதினா மாதிரி எழுதறதும் 'எனக்கு தெரியும். உனக்குத்தெரியாது, கேட்டுக்கோ' மாதிரி இல்லை. என மனசில தெளிவாகறதுக்குத்தான் எழுதறேன். இனி படிச்சு எழுதி தெளிவாக வேண்டியது ஒண்ணுமில்லை என்கறதால எழுதறத நிறுத்தலாமா ன்னு யோசனை வந்தது.
இத கொஞ்சம் புரிய வைக்கட்டுமா?
மலையாளத்துல ப்ராந்தன் ஒத்தர் இருந்தாராம்! பைத்தியம்ன்னு மத்தவங்க நினைக்கறா மாதிரி நடத்தை. உள்ளுக்குள்ள ஞானியோன்னு சந்தேகப்பட வைக்கும். (ஆக்சுவலி முல்லா நசருதீன் பத்தி படிக்கறப்ப எழுதறப்ப இவர் நினைவு வரும்!) இவர் ஊர சுத்திண்டே இருப்பாராம். மனசில ஆகலையேன்னு சொல்லிண்டே இருப்பாராம். திடீர்ன்னு ஒரு நாள் மாறிடுத்து! மனசிலாயி மனசிலாயி ன்னு சொல்ல ஆரம்பிச்சுடாராம். ஜனங்க வழக்கம் போல சிரிச்சாங்க. யாரோ ஒத்தர மட்டும் இவர்கிட்ட என்ன விஷயம்ன்னு பதமா கேட்டார். ப்ராந்தன் ஒண்ணுமில்ல. ப்ரம்மம்ன்னா என்னன்னு விசாரம் பண்ணிண்டு இருந்தேன். அது என்னன்னு மனசுக்கு பிடிபடலை! ன்னார்.
ஓ அப்படின்னா இப்ப என்னன்னு புரிஞ்சுடுத்தா?
இல்லையே!
பின்னே?
அது மனசுக்கு பிடிபடாதுன்னு புரிஞ்சுடுத்து!
அந்த மாதிரி இந்த புத்தகங்கள் ப்ரவசனங்கள் மாதிரி சமாசாரம் எல்லாமே ஒரு ஸ்டேஜ் வரைதான். அப்புறம் நாமா செய்ய ஒண்ணுமில்லை. தானா கனியட்டும்ன்னு விடணும் போலிருக்கு!
எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டேன். 'படிச்சு எழுதி தெளிவாக வேண்டியது ஒண்ணுமில்லை' எங்கிறதை அஹங்காரமா எடுத்துக்கப்போறாங்களேன்னு அஹங்காரம் தோண வெச்சது. அதனால விளக்கம்.
சரி திருப்பி சப்ஜெக்டுக்கு வருவோம்.
ஹிந்துத்துவத்தை புரிஞ்சுக்க படிக்க ஆரம்பிச்சது உபநிஷத்துக்கள் வழியா போறப்ப வேதத்து மேலே ஒரு அபிமானம் வந்து அது எங்கோ இழுத்துண்டு போயிடுத்து. ரிலேடட் சப்ஜெக்ட் என்கிறதால தர்ம சாஸ்த்ரம் படிச்சேன். அதை அப்பப்ப பேசப்போக அதனால ஏதோ விஷயம் தெரிஞ்ச ஆசாமி மாதிரி ஒரு மயக்கம் ஜனங்களுக்கு ஏற்பட்டுடுத்து.
வேதங்கள் சொல்லுகிற விஷயங்கள் தனி. கர்ம காண்டங்களில கர்மாக்கள், அவற்றை செய்யறதால ஏற்படற பயன்கள் பத்தி இருக்கும். ஸம்ஹிதையில அதுக்கான மந்திரங்கள் இருக்கும். இஷ்டிகளே முன்னூத்தி சொச்சம் இருக்கும். அதை பார்க்கிறப்ப மலைப்பா இருக்கும். எவ்வளவு விஷயங்கள் காணாம போயாச்சு!
நம்ம ரிஷிகள் தொலை பார்வை உடையவங்க. காலப்போக்கில இதெல்லாம் சிரம சாத்தியமா போயிடும்; செய்யறவங்க இல்லாம போயிடுவாங்கன்னு பாத்து அதை எல்லாம் எளிமையாக்கி வைதீக கர்மாக்களா ஆக்கி க்ருஹ்ய சூத்திரம்ன்னு எழுதி வெச்சாங்க. உதாரணமா ஒரு இஷ்டியில செய்யறதுல நிறையவே சுருக்கமா ஒரு ஸ்தாலீபாகத்தில வரும்.
மூன்று வர்ணங்களுக்கான வேதம் ஒரு வர்ணத்துக்குன்னு மட்டுமே ஆகி அதுவும் க்ஷீணிச்சு போயிடும்ன்னு தெரிஞ்சு வேதத்துக்கு அதிகாரம் இல்லாம போகப்போறவங்களுக்காக கடை பிடிச்சு உலக வாழ்க்கைக்கு மேலுலக வாழ்க்கைக்கும் நல்லது செய்யறா மாதிரி சிலத… ம்ம்ம்? பலதை யோசிச்சாங்க. அவற்றை புராணங்கள் வடிவில கொடுத்தாங்க. கூடவே சில பல உப புராணங்கள் போல பல க்ரந்தங்களும் வந்தன. ஹோமங்கள் பூஜை வடிவெடுத்தன.
அதுக்காக புராணங்களில் வரது எல்லாம் கட்டுக்கதைன்னு அர்த்தமில்லை. நாம எதையாவது விளக்க ஒரு அனெக்டோட் சொல்லி விளக்கறா மாதிரி. எப்படியும் இதுல எல்லாம் சாரத்த எடுத்துக்கணும். சக்கையை விட்டுடணும்!
மனிதர்கள் பல விதம். அவர்களோட ருசிகளும் பலவிதம். அதுக்கு தகுந்தாப்போல பலவிதமான பூஜை முறைகள் இருக்கும். பலவிதமான தெய்வங்களும்!
இதில குல தெய்வ வழிபாடு முக்கியம். வருஷத்துக்கு ஒரு முறையாவது போய் அபிஷேக ஆரதனைகள் செஞ்சுட்டு வரணும். மத்தபடி வீட்டுல பூஜைன்னு ஒண்ணு முக்கியம். அது க்ரம பூஜைன்னு பெரியவங்க வழி சொல்லி வெச்சதா இருக்கலாம். அல்லது ஆத்மார்த்தமா அவங்கவங்க மனசுக்கு உகந்தபடி பூஜை செய்யலாம்.
இப்ப புரியும் ஏன் எக்கச்சக்க பூஜை முறைகள் இருக்குன்னு!
இது அத்தனையும் தெரிஞ்சுக்கறது சிரமமான விஷயம். இவை எல்லாமே குடும்ப வழக்கப்படி தலை முறை தலை முறையா பழக்கத்தில வரது. ஒரே பூஜையை ஒவ்வொரு குடும்பமும் வேற வேற மாதிரி செய்யும். இதுல ஹார்ட் அன் ஃபாஸ்ட் ரூல்ஸ் எல்லாம் கிடையாது. சாயங்காலம்தான் செய்வாங்கன்னா அது ஒரு ட்ரெடிஷன். (வாத்தியாருக்கு காலையில மத்த வேலைகள் இருக்குமில்ல? அதுவும் காரணமாயிருக்கலாம்!) வேற மாதிரி செய்யறதால் ஒண்ணும் குறைஞ்சும் போயிடாது! பலன் கிடைக்கதுன்னு ஒண்னுமில்ல. பக்தி மட்டுமே முக்கியம்.
ஆக மொத்தத்தில அவரவர் குடும்ப பழக்கப்படி செய்க. (அப்பாடா! இந்த ஒரு வரிக்காக இவ்ளோ பெரிய பதிவா? வெளங்கிடும்!)


தொடர்புடைய ஒரு பதிவு:
https://anmikam4dumbme.blogspot.in/2011/08/blog-post_05.html

No comments: