Pages

Monday, June 25, 2018

பறவையின் கீதம் - 20





ஒரு தீவில் ஒரு கோவில் இருந்தது. அதில் ஆயிரம் மணிகள் கட்டப்பட்டு இருந்தன. காற்று அடிக்கும் போலெல்லாம் அவை அருமையான ஒலி எழுப்பும். கேட்போர் மனதை கொள்ளை கொள்ளும்.

சில நூற்றாண்டுகளில் கடல் மட்டம் உயர்ந்து அந்த தீவு முழ்கிவிட்டது. அந்த மணிகளும் கோவிலுடன் சேர்ந்து முழுகின. ஆனால் அவை இன்னும் ஒலிப்பதாகவும் கூர்ந்து கேட்போருக்கும் இன்னமும் கேட்பதாகவும் உள்ளூர்வாசிகள் நம்பினர்.

இதை கேள்விப்பட்டு ஒரு இளைஞன் அந்த ஒலியை கேட்க வேட்கை கொண்டான். எவ்வளவு நாளானாலும் சரி; அந்த கிராமத்தில் தங்கி மணிஓசையை கேட்டுவிட வேண்டும் என்று திட்டம். காலை முதல் இரவு வரை கடற்கரையிலேயே பழியாக கிடந்தான். என்ன கூர்ந்து கேட்டாலும் கடல் அலையின் ஓசைதான் கேட்டது. அதை கஷ்டப்பட்டு விலக்கிவிட்டு உன்னிப்பாக கேட்க முயன்றான். கடலோசையை விலக்கவே முடியவில்லை. நாட்கள் உருண்டோடின. மணிகளின் ஓசையை கேட்க முடியும் என்ற நம்பிக்கை போய்விட்டது. சரி இன்றே கடைசி நாள்; நாளை ஊருக்கு கிளம்பவேண்டியதுதான் என்று உறுதி செய்து கொண்டு கடற்கரைக்கு சென்றான். கடலோசையை விலக்க முயலவில்லை. ஆனந்தமாக அதை செவி மடுத்தான். கூடவே தென்னை மரங்களின் ஓசையையும். இந்த ஓசைகளை விலக்க முயலாமல் பேச்சற்று கிடந்தான். அப்படியே ஒரு த்யான நிலைக்கு போய்விட்டான். அந்த சப்தம் அவ்வளவு அமைதியை தருவதாக இருந்தது. திடீரென்று மணியோசை கேட்டது. முதலில் ஒன்று. பின் மற்றவையும் ஒன்றன்பின் ஒன்றாக கீதம் இசைக்க ஆரம்பித்தன. பேரானந்த நிலைக்கு சென்றான்.

மணியோசை கேட்க வேண்டுமா? கடலோசையை கேள்.

கடவுளை தெரிந்து கொள்ள வேண்டுமா? அவரது படைப்பின் அற்புதத்தை பார்!

No comments: