Pages

Tuesday, May 8, 2018

கிறுக்கல்கள் - 201





மாஸ்டருக்கு மத 'தலைவர்கள்' குறித்து ஒரு புகார் உண்டு. அது என்னவென்றால் அவர்கள் தம்மை பின் தொடர்பவர்களிடம் ஒரு குருட்டு நம்பிக்கையை வளர்க்கிறார்கள். எவ்வளவு தூரம் என்றால் அவர்கள் கேள்வி கேட்டாலும் அவர்கள் நம்புவதன் குறுகிய வரைமுறையிலேயே இருக்கும்.

வழக்கம்போல் ஒரு கதை சொன்னார்: ஒரு வித்தியாசமான பிரசங்கி இருந்தார். அவர் தன்னை பின் பற்றுவோர் தான் சொல்வதை கேள்விகள் கேட்டு தெளிய வேண்டும் என்று விரும்பினார். ஆனால் கூட்டமோ கேள்வியே கேட்பதாக இல்லை. அதனால் ஒரு திட்டம் வகுத்தார். மக்களிடம் ஒரு கதை சொன்னார்.

ஒரு த்யாகி இருந்தார். அவருடைய தலையை எதிரிகள் வெட்டி விட்டார்கள். அதனால அவர் தன் தலையை கைகளில் எடுத்துக்கொண்டு ஊருக்கு திரும்பினார். வரும் வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆற்றை நீந்தித்தான் கடக்க வேண்டி இருந்தது. அதற்கு அவர் தன் தலையை வாயில் கவ்விக்கொண்டு பத்திரமாக நீந்தி கடந்து விட்டார்.”

இவ்வளவு சொல்லிவிட்டு பிரசங்கி ஆவலுடன் சுற்றும் முற்றும் பார்த்தார். ஒரு சில நிமிடங்கள் மௌனமாக கழிந்தன. வழக்கம் போல யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை என்று நினைத்த தருணத்தில் ஒருவர் கையை தூக்கினார். "அப்படி இருக்க முடியாது!" என்றார்.

'ஆஹா!' என்று உற்சாகமடைந்த பிரசங்கி 'ஏன்?' என்று கேட்டார்.

பதில் வந்தது: "அவ்வளவு பெரிய தலையை வாயில் கவ்விக்கொண்டு நீந்தினால் மூச்சு முட்டி செத்துப்போயிருப்பாரே!”

No comments: