Pages

Thursday, June 16, 2022

காஶி யாத்திரை - 17



வந்தே பாரத் சொகுசு எல்லாம் அத்தோட போச்சு. வெளியே வந்து வெய்யிலில் காஞ்சது எல்லாத்தையும் எதார்த்தத்துக்கு கொண்டு வந்தது. எஇன்று சூரியன் மறையும் நேரம் 6 20. ஆகவே அக்னிஹோத்திரம் ஔபாசனம் செய்வதற்காக கிளம்ப வேண்டியிருந்தது. கங்கையில் போய் குளிக்கலாம் என்று கிளம்பினேன். சங்கர மடம் இருக்கிற இடம் அனுமன் காட். காட்ல ஒரு கல்வெட்டு பார்த்தேன். ‘இந்த காட் க்கு ராமேஸ்வரம் காட் என்றுதான் பெயர். இங்கே பக்கத்தில் இருக்கும் அனுமார் கோவில் பிரபலமாகிவிட்டது என்பதால் அனுமன் காட் என்று பெயர் மாறிவிட்டது’ என்று கல்வெட்டில் பார்த்தேன்.

இந்த குறுகலான சந்துகள் எல்லாம் கீழே கல் பதித்தவை. அதில் ஒரு சௌகரியம் இருக்கிறது. ரோடு சரியாக இருக்கும் வரை விட்டுவிட்டு மேடு பள்ளமானால் திருப்பியும் கற்கலை கெந்தி சமன் செய்து போட்டுவிடலாம். ஏனென்றால் கங்கை தண்ணீர் ஏற ஏற இந்த மண் அதை உறிஞ்சி கொள்ளளவில் அதிகமாகும் என்பதால் இந்த சமநிலை இருக்காது. கடலூரில் இருந்து தஞ்சாவூர் போகும் வழியில் ஒவ்வொரு முறையும் கவனிப்பேன். தஞ்சை மாவட்டம் வந்துவிட்டது என்பது சுலபமாக தெரிந்து விடும். எஸ் போல் வளைந்து வளைந்து ரோடு போக ஆரம்பிக்கும். அதேபோல் சமமாக இருக்காது. குண்டும் குழியுமாக இருக்கும். இந்த மண்ணின் ஈரம், தண்ணீர் மட்டம் அடிக்கடி பாதிக்கப் படுவதால் இந்த சமநிலை இருப்பது கடினம். அதற்கு சரியாக திட்டமிட்டு பாதை போட வேண்டும் அதை யார் செய்யப்போகிறார்கள். கிடைத்த காசை வாங்கிட்டு…. அது தான்.
 
செருப்பு போட்டுக்கொள்ளாமல் கிளம்பிவிட்டேன். பிரயாகையில் மேனேஜ் செய்தோமே என்று ஒரு நினைப்பு. மேலும் கங்கையில் ஸ்நானம் செய்ய போகும்போது போட்டுக் கொண்டு போவதா என்று ஒரு நினைப்ப. நான் போன பாதை தவறு. வழி கேட்ட போது கங்கைக்கு போக நேராக இந்தப்பக்கம் போய்க்கொண்டே இருங்கள். தெரு முட்டு வரும். கொஞ்சம் இடது பக்கம் திரும்பி நடந்து வலது பக்கம் திரும்பிப்போனால் போய்விடலாம் என்று சொன்னார்கள். ஆனால் இந்த இடத்தில் ஒரு எச்சரிக்கை கொடுத்தார்கள். இந்த இடத்தில் படித்துறை இருக்கின்றது. ஆகவே இங்கே பாசி படிந்து இருக்கும் என்பதால் உங்களுக்கு இது உசிதமல்ல. இன்னும் வலது பக்கம் போனால் சிவாலயா காட் என்று இருக்கிறது. அது சரியாக இருக்கும் என்று சொன்னார்கள். எங்கே மண்ணாக இருக்கிறதோ அங்கே பாசி இல்லை என்பதால் நாம் சின்னச்சின்ன படியாக வைத்து போய்விடலாம். பழக்கமில்லாவிட்டால் நாம் எதிர்பாராமல் படியில் பாசி வழுக்கும். அவர்கள் சொன்னபடியே நான் நேராக போய் கொஞ்சம் இடது பக்கம் திரும்பி - கர்நாடகா காட் கட்டிடத்தை ஒட்டி பாதை போகிறது - அதேபோல் அனுமன் காட் க்கு போய் விட்டேன். இங்கேதான் முன்னே சொன்ன அந்த கல்வெட்டை பார்த்தேன். நான் சாயங்காலம் ஆகிவிட்டதே வெயில் குறைந்துவிட்டது என்று நினைத்தாலும் அங்கே இருந்த கற்கள் அத்தனையும் நன்றாக சூடாகவே இருந்தன. ஆகவே கால் பாதிப்பு இருக்கவே இருந்தது. அங்கே இங்கே இருக்கும் நிழல்களில் போய் நிற்பதாகவும் கொஞ்சம் பாதிப்பு குறைந்ததும் அடுத்த நிழலை நோக்கி போவதாகவும் போயிற்று.
 
போன தரம் வந்த பிறகு இந்த முறை கங்கை மிகவும் மாறியிருக்கிறது. வாரணாசி எம்.பி. பல விஷயங்களை மாற்றி இருக்கிறார். எல்லாம் நல்லதுக்கு என்று சொல்ல முடியாது. சிலர் குறைகளை தெரிவித்தனர். உதரணமாக வீட்டில் மாடு வைத்துக்கொள்ள முடியவில்லை; தடை செய்துவிட்டார்கள் என்று வாத்தியார் குறை பட்டுக்கொண்டார். எல்லோரையும் த்ருப்தி படுத்த முடியாதுதானே?
 
இருந்தாலும் மனிதன் போகுமிடம் மோசமாகி விடும் என்ற பொதுவிதிப்படி கொஞ்சம் குப்பை இருக்க தான் இருந்தது. என்னதான் அங்கே குப்பை தொட்டிகள் வைத்திருந்தாலும் ஜனங்கள் துணி சோப்புகள், சோப்பு, ஷாம்பூ உறைகள், கொஞ்சம் துணி என்று பல குப்பைகளை போட்டு தான் இருந்தார்கள். கங்கை அவற்றை கரையில் சேர்த்துவிட்டு போய் விடுவாள்.
முதல் நாள் இது பற்றி சரியான கற்பனை வராமல் அடுத்த நாள் காலை மறந்து போய் குளித்து, அடுத்த நாள் மாலை நினைவில் வைத்து ஒரு வேலை செய்ய ஆரம்பித்தேன். குளிக்க இறங்கும் முன்னால் கொஞ்சமாவது குப்பை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு அதற்கப்புறம் குளிப்பதற்கு தண்ணீரில் இறங்குவதாக ஆரம்பித்தேன். 3 4 நாட்களில் இந்த இடம் சுத்தமாகி விட்டது. இந்த மாதிரி செய்தால் மகத்தான புண்ணியம் என்று அங்கே ஒரு அறிவிப்பு பலகை வைக்கலாம். உள்ளூர்வாசிகள் கண்டுக்கொள்ளாவிட்டாலும் வருகிற யாத்ரிகர்களில் 25% செய்தாலே கங்கை ஓஹோ என்று ஆகிவிடும்.
 
தண்ணீர் குவாலிட்டி எக்கச்சக்க இம்ப்ரூவ்மென்ட். தண்ணீர் வெகுவாக நன்றாகவே இருக்கிறது. இந்த டீசல் படகுகள் தாண்டி போகும்போது அந்த டீசலின் தாக்கம் கொஞ்சம் தெரிகிறது. நாலு நாட்களுக்குப் பின்னால் வாரணா காட் போகும் போது இண்டியன் ஆயில் மிதக்கும் சிஎன்ஜி ப்ராஜக்ட் ஆரம்பித்து இருப்பதை பார்த்தேன். இன்னும் எல்லாம் மாற்ற ஆரம்பிக்கவில்லை போலிருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் மாறூகிறார்களோ அவ்வளவு நன்றாக இருக்கும்.
புதியதாக போகிறவர்களுக்கு குறிப்பு: கங்கையில் தயக்கமில்லாமல் இறங்குவதற்காக அங்கே இருக்கும் பல படகுகளில் ஒன்றை பிடித்த படியே கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறங்கலாம். 6 இன்ச்சுக்கு அடி எடுத்துவைத்தால் போதுமானது. ஒரு பத்தடி சென்ற பிறகு குளிக்க கூடிய ஆழம் வந்துவிடுகிறது.. இரண்டாம் நாள் இப்படி ஜாக்கிரதையாக போன பிறகு அடுத்த நாளிலிருந்து ஒரு தைரியம் வந்து பிடித்துக் கொள்ளாமல் போய் குளிக்க முடிந்தது. 
 
 

 

வாத்தியார் வீட்டுக்குப்போய் ஔபாசனம் செய்தேன். எனக்கான மாலை அக்னிஹோத்திரம் அரவிந்தன் செய்தார். பசும்பால்தான் எங்கள் வழக்கம். அவர்களுக்கு அந்த கற்பனை இல்லை. பல மாட்டுப்பால் கலந்தால் அது உசிதமில்லை. பையர் இப்படிச்சொல்லி வைத்திருந்தும் அது கிடைக்கவில்லை. பால் கேட்டு வாங்க வாத்தியாரின் சிஷ்யர் போய்விட்டார். வெகுவாக தாமதமானது. யாத்திரையில் பல சொதப்பல்களில் இதுவும் ஒன்று. ரைட் என்று அடுத்து என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டியதுதான். ஆகவே நான் அரிசியில் செய்யச்சொன்னேன். அது அரவிந்தனுக்கு பழக்கமில்லை. நானே ஓரிரு முறைதான் அப்படி செய்திருக்கிறேன். சொல்லிக்கொடுத்து செய்யச்சொன்னேன். பையர் காத்திருந்து வரவில்லை என்று நெய்யில் செய்தார். வாத்தியார் வீட்டிலேயே சாப்பாடு ஏற்பாடு இருந்தது. சாப்பிட்டுவந்து படுத்தேன். அடுத்த நாள் காலை அக்னிஹோத்திரத்துக்காக சூரியோதய நேரம் பார்த்தால் 5-20! தூக்கிவாரிப்போட்டது. ம்ம்ம் எப்படியானாலும் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டியதுதான் என்று படுத்தேன். அசதியில் தூங்கினேன்.

No comments: