Pages

Saturday, June 18, 2022

காஶி யாத்திரை - 19 காஶி -2




 
காசியில் இரண்டாவது நாள். காலையில் ஔபாசனம் செய்து அக்னி ஹோத்திர பக்‌ஷ ஹோமம் செய்தேன். அதாவது அரவிந்தன் செய்தார். வாத்தியாரின் சிஷ்யருக்கு தெரிந்தவர் ஒருவர் வீட்டில் வில்வ மரம் ஒன்றை வெட்டி இருக்கிறார்கள். அந்த சிஷ்யர் அங்கே போய் அதை கைப்பற்றி துண்டு போட்டு விறகு கட்டுகளாக்கி வாத்தியார் வீட்டில் போட்டுவிட்டார். வீடு கொஞ்சம் பெரியது. அதனால் சேமித்து வைக்க முடிந்தது. வில்வம் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்படுகிறது. பற்றிக்கொண்டுவிட்டால் நெடு நேரம் நன்றாகவே எரிகிறது. விராட்டி கொஞ்சம் பிரச்சினை. அதை சரியாக தட்டையாக தட்டி வைக்கவில்லை போலிருக்கிறது. கிடைத்தது எல்லாம் 2 இஞ்ச் தடிமனுக்கு சரியாக வடிவம் இல்லாமல்… மாடு போடுவது அப்படியே இங்கிருக்கும் சூட்டில் காயந்துவிடும் போலிருக்கிறது. அதை அப்படி கொண்டு வந்து சேமித்து விடுவார்களோ! எப்படியோ! இருப்பதில் மெலிசு ஒரு செ.மீ! உடைக்க சிரமப்பட்டோம். இருந்தாலும் ஒரு வழியாக பற்றிக்கொண்டால் விரைவில் போட்ட அரிசியை சாம்பலாக்கிவிடுகிறது. அது சௌகரியமாக இருந்தது. அப்படி சாம்பலான பின்பே ஸமித்தில் அக்னியை ஆரோபணம் செய்து வைத்துக்கொள்ள முடியும்.
வீட்டில் ஔபாசன அக்னியை ஒரு தட்டியில் தவிடு/ சாம்பல் போட்டு அதில் விராட்டி துண்டுகளை வைத்து பராமரிப்போம். இங்கே அதற்கு வசதி இல்லாமல் ஒவ்வொரு வேளைக்குமே ஸமித்தில் அதை ஆரோபணம் செய்து கொண்டு அடுத்த வேளைக்கு மூட்டிய அக்னியில் இந்த ஸமித்தை வைத்து பின் ஔபாசனம் தொடருவதாக போயிற்று. அதே போல அக்னி ஹோத்ர அக்னியும் ஆத்ம சமாரோபணம்.

இங்கே குரங்குத்தொல்லை இருக்கிறது. கதவை திறந்து வைக்காதீர்கள் என்று வீட்டார் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தார்கள். சந்தியா வந்தனம் செய்ய பால்கனிக்குப்போனால் கொஞ்ச நேரத்தில் வந்துவிட்டது. அது பாட்டுக்குப்போகட்டும் என்று விட்டுவிட்டேன். எல்லாம் நன்றாகத்தான் போயிற்று ஒரு குட்டி வரும் வரை. அதுவும் ஒதுங்கித்தான் போயிற்று. நான் பாட்டுக்கு ஜபத்தில் இருந்தேன். என்ன சிக்னல் போயிற்றோ, அம்மா குரங்கு கர்ர்ர்ர் என்று கத்திக்கொண்டே பாய்ந்து என் பக்கவாட்டில் மோதி விழுந்து எழுந்து நகர்ந்து விட்டது.
நா உன் குட்டியை ஒண்ணும் பண்ணலையேடா என்று அதனுடன் பேசிக்கொண்டே சந்தியை முடித்தேன்.

அது முடிந்து மணிகர்ணிகா ஸ்நானம் செய்வதற்காக சங்கல்பம் எட்டரை மணிக்கு என்று வாத்தியார் சொல்லியிருந்தார். ஒன்பது மணிக்கு ஆரம்பித்தோம். பிராமணர்கள் வருவதற்கு சற்று நேரம் ஆகியது. ஒரு ஒன்பது பத்து பிராமணர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு சாகையிலும் ஒவ்வொருவர் ஏற்பாடு செய்து இருந்தார் வாத்தியார். (இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று ஒன்றுமில்லை. ) ரிக் வேதத்தில் ஷாகல ஶாகா, சுக்ல யஜுர் வேதத்தில் மாத்யந்தின, காண்வ ஶாகைகள். எதோ ஒரு குஜ்ராத் வேரியேஷன் - சம்ப்ரதாயம் என்று ஒன்று ஞாபகம். க்ருஷ்ண யஜுர் வேதத்தில் தைத்ரீயம் மட்டும் என்று நினக்கிறேன். ஸாம வேதத்தில் கௌதும, ராணாயனீய காசி சம்ப்ராதாயம்; ஜைமினீய ஶாகை, அதர்வணத்தில் பிப்பலாத ஶாகை, சௌனக ஶாகை.
இப்படியாக பல கிளைகளில் பயிற்சிபெற்ற வித்வான்கள் வந்திருந்து ஆசீர்வாதம் செய்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆசீர்வாதம் செய்கையில் அவரவருடைய ஶாகையில் ஒரு பஞ்சாதி சொல்லி ஆசீர்வாதம் செய்தார்கள்.
அதற்கு முன் நவக்ரஹ ப்ரீதி, வைஷ்ணவ ஶ்ராத்தம் என்று சொல்லி ஆளுக்கு 200 கொடுக்கச்சொன்னார். செய்தோம். க்ருத ஶ்ராத்தம் முன்னேயே வீட்டில் செய்துவிட்டோம். ஆகவே இங்கே செய்யவில்லை.
இதன் பிறகு மணிகர்ணிகா கட்டுக்கு படகில் சென்றோம். படகு அந்த மடத்தின் வாட்ச்மேனுடையது. அவர் போகும் வழியில் சொல்லிக்கொண்டே போனார். ‘இந்த இடம் ஆனந்த வனம். இங்கே பல அதிசயங்கள் உண்டு. கருடன் பறக்காது. பல்லி கத்தாது. மாடு முட்டாது. பூக்கள் மணக்காது. பிணம் எரியும் போது நாறாது. மனித வியர்வை நாறாது’… ஆமாம். மாடு முட்டுவதில்லை. வளர்க்கத்தடை என்று இருந்தாலும் பலதும் சாதுவாக சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. கடைசியில் சிவாலயா கட்டத்தில் ஒரு படகில் கொண்டு விட்டார். என் பையன் தான் உங்களைப் பார்த்துக் கொள்ளுவான் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
மணிகர்ணிகா கட்டத்திற்கு போனோம். ஶிவ பெருமான் தக்‌ஷன் யாகத்தை தொடர்ந்து தீக்குளித்த சக்தியின் உடலை துண்டுகளாக வெட்ட அவை அங்கங்கே விழுந்தன. இந்த இடத்தில் தேவியின் காதணி விழுந்தது. 



 
பக்கத்தில் ஶ்மசானம் இருக்கிறது. குவியல் குவியலாக விறகு! 
 
கீழேயே அழகான சாய்ந்த கோவில் இருக்கிறது. இது ரத்னேஸ்வர் மஹாதேவர் கோவில். வடமேற்காக 9 டிகிரி சாய்ந்து இருக்கிறது. உயரம் 12 மீட்டர். கர்ப க்ருஹம் நீருக்குள் உள்ளது. கோவிலின் முக்கால்வாசி பாகம் நீருக்குள்தான் இருக்கிறது. கங்கையில் ப்ரவாகம் என்றால் மூழ்கியேகூட விடும். ஆனாலும் சேதம் அதிகமில்லாமல் இருக்கிறது.
பக்கத்தில் மணிகர்ணிகா குண்ட் என்னும் கிணறு இருக்கிறது. படிகள் மிகவும் உயரமானவை செங்குத்தானவை. இந்த மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையில் ஸ்நானம் செய்தோம். செய்து முடிக்க நேரமாகிவிட்டது. ஆகவே ஸ்நானம் முடிந்து பையரும் மருமகளும் மட்டும் போய் ப்ரோக்‌ஷித்துக்கொண்டு எங்களுக்கு தீர்த்தம் கொண்டு வந்தனர்.

பக்கத்தில் 13 கட்டங்கள் தள்ளி பிந்துமாதவர் இருக்கிறார். பிந்து மாதவர் காட் என்றும் பஞ்ச கங்கா காட் என்றும் பெயர். அங்கேயேதான் மேலே பிந்து மாதவர், லக்‌ஷ்மி நாராயணர் கோவில் இருக்கிறது. வழியிலேயே இரண்டு மூன்று சிறு கோவில்கள் இருக்கின்றன. ஒரு மசூதியைக் கூட பார்த்தேன். பிந்து மாதவரை சேவித்துவிட்டு வரும்போது அங்கேயே வலது பக்கத்தில் ஒரு சிறிய சன்னதியில் ஒரு சிவலிங்கம் வைத்து இருக்கிறார்கள் பெரிய அண்டாவில் தண்ணீர் வைத்துக் கொண்டு அபிஷேகம் செய்வதற்காக ஒரு சிறு சொம்பில் முகர்ந்து கொடுக்கிறார். நாம் நேரடியாக அபிஷேகம் செய்யலாம். ஏறத்தாழ எல்லா வட இந்திய கோவில்களிலும் நாமே செய்வதாக தான் இருக்கிறது. செய்து முடித்த பின் கையை நீட்டுகிறார். நல்ல ஐடியாதான் என்று நினைத்துக் கொண்டேன். போகட்டும்.


ஆகவே மாத்யான்ஹிகத்தையும் அங்கேயே செய்துவிட்டு ரூமுக்கு திரும்பினோம்.
மாலை டீ நேரத்துக்கு கொஞ்சம் மடத்தை சுற்றிப்பார்த்தேன். நாங்கள் தங்கி இருந்த அறை வெங்கடராம ஐயர் அலையஸ் ராம் பாபு அவர்கள் உபயம் என்று அறிந்து அவருக்கு மானசீகமாக நன்றி சொன்னேன்.
 
இரண்டு இளைஞர்கள் வேதம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் நன்கு சொன்னார். மற்றவருக்கு கொஞ்சம் தடங்கியது. அவ்வப்போது கொஞ்சம் பாடமாகவே கேட்டார். கற்கும் பருவம் போலிருந்தது. முடிந்ததும் பேச்சு கொடுத்தேன். ‘காலையில்தான் வயிற்றுப்பிழைப்பு இருக்கவே இருக்கிறது. ஆனால் தினசரி இந்நேரத்துக்கு இங்கே வந்து பாடம் சொல்லுகிறோம்’ என்றார்கள். வாழ்த்தினேன்.
பின்னால் பையரிடம் பேசிக்கொண்டு இருந்த போது திருப்பதி ஸ்கீமாக இருக்கும் என்றார். எப்படி இருந்தாலும் நல்லதே.
மாலையில் சப்தரிஷி பூஜை என்று திட்டமிட்டு இருந்தார்கள். மனைவியும் மருமகளும் அரவிந்தனை அழைத்துக்கொண்டு போய் வந்தார்கள்.

உடல்நிலை கருதி நான் எங்கும் போகவில்லை.


 



 
 

No comments: