Pages

Tuesday, May 12, 2009

மூணு உடம்பும் போகணுமே!




சீவன் முத்தருக்கு மூணு உடம்பும் போகணுமே. அப்பதானே பிரம்மத்தோட ஐக்கியமாகலாம்.
ஸ்தூல உடம்பு காலப்போக்கிலே விழுந்துடும். அதாவது பிராரப்த கர்மா முடிஞ்சதுமே மேலே கர்மா செய்ய, அனுபவிக்க வேலை இல்லாததால உடம்பு சவமாயிடும்.
சாதாரணமா இந்த நேரத்தில சூக்கும சரீரம் அவித்தையான காரண சரீரத்தோட ஒட்டிக்கும். இந்த காரண சரீரம்தான் அடுத்த பிறவிக்கு காரணம். இதுதான் ஆன்மாவோட கர்ம மூட்டை ஒட்டிகிட்டு போக கோந்து போல உதவும்.
ஆனா எப்ப ஞானம் வருதோ அப்பவே ஞானத்தீயால அவித்தை எரிஞ்சு சாம்பலாகுமாம். ஆணவம், கன்மம், மாயை என்கிற இந்த காரண சரீரம்தான் இந்த அவித்தை.

அதாவது ஞானத்தாலே காரண சரீரம் அழியும்.

கொல்லன் உலையிலே பாத்தா பழுக்க பழுக்க இரும்பை காய்ச்சுவார். தேவையான உருவம் கிடைக்கிறாப்போல இரும்பு துண்டை சம்மட்டியால அடிப்பார். அப்பறம் மேலே தண்ணிய கொட்டுவார். நல்லா பழுக்க காய்ச்சியதாலே தண்ணி மேலே விழுகிற அந்த வினாடியே ஆவியா போய் காணாம போகும்.

அது போல அவ்வளவு சீக்கிரமா சூக்கும சரீரமும் காணாம போகும்.
எப்படின்னா பசை மாதிரி ஒட்டிகிட்டு அடுத்த இடத்துக்கு கொண்டு போன காரண சரீரம் இல்லை என்கிறதால அதை கட்டுப்படுத்த ஒண்ணும் இல்லாம அதோட இயல்பான நிலையை அடையும். இயல்புன்னா? எங்கிருந்து வந்ததோ அங்கேயே போக வேண்டியதுதான். எல்லா காரியங்களும் அததோட காரணத்தில ஒடுங்குகிறாப்போல சூக்கும தேக சத்துவங்கள் சத்துவ ரஜோ குண தன் மாத்திரைகளாக மாறும்.

முன்னே ஆகாசாத் வாயு... ன்னு இறங்கி வந்தாப்பல இப்ப ஒவ்வொண்ணும் வந்த வழியே ஆகாசத்தில ஒடுங்கி, ஆகாசம் விட்சேப சக்தியில ஒடுங்கி, விட்சேபம் மூல ப்ரக்ருதில ஒடுங்கி, இதுவும் பர ப்ரம்ம சொரூபத்தில லயம் ஆகிடும்.
தலை சுத்துதா! ஒண்ணுமில்லை. சீவன் வந்த அதே வழில திரும்பி போயிடும். அவ்வளோதான்.

அந்த நிலையிலே சாக்கிரத்/ ஸ்வப்ன/ சுசுப்தி இல்லை. அதனால துரியம் ன்னு பேர். இந்த துரிய பரம்பொருள் எல்லா இடத்திலேயும் நீக்கமற நிறைஞ்சு இருக்கிறதால அதுக்கு விபு ன்னு பேர்.


105.
சீவன் முத்தருக்கு சரீர த்ரயம் நீங்கும் விதம்:

அரியமெஞ் ஞானத்தீயா லவித்தையா முடனீறாகும்
பெரியதூ லமுங்காலத்தாற் பிணமாகி விழுமந்நேரம்
உரியசூக்கும சரீரமுலையிரும் புண்டநீர் போல்
துரியமாய் விபுவாய்நின்ற சொரூபத்தி லிறந்துபோமே.

அரிய மெஞ்ஞானத் தீயால் அவித்தையாம் உடல் (காரண சரீரம்) நீறாகும் (சாம்பலாகும்). பெரிய தூலமும் (பருத்த ஸ்தூல சரீரம்) காலத்தால் (காலப்போக்கில் பிரார்த்த கர்மா முடிந்ததும்) பிணமாகி விழும். அந்நேரம் உரிய (தன்னை அறிய சாதனமான) சூக்கும சரீரம் உலை இரும்பு உண்ட நீர் போல் (கொல்லன் உலையில் பழுக்க காய்ச்சிய இரும்பு மீது ஊற்றிய நீர் ஆவியாதல் போல) துரியமாய் விபுவாய் நின்ற சொரூபத்தில் இறந்து போமே.
--
த்வைத, விசிஷ்டாத்வைதம் போல அல்லாது அத்வைத அப்ரதிபந்த அபரோட்ச ஞானம் ஆகையால் அரிய மெய்ஞானம். ஜடமான ஸ்தூல சரீரமும் அறியாமையே சொரூபமான காரண சரீரமும் தன்னை அறிய ஹேது இல்லை. சூக்கும சரீரமே ஹேதுவாம்.(-உரிய சூக்கும சரீரம்) சூக்கும சரீரம் பிரளயத்தில் பிரதம சரீரத்துடன் உண்மையாகிய பிரமத்தில் அத்தியாச ஐக்கியம் ஆதலின் மறுபடி ஜன்மிக்கும். ஆனால் அகண்ட அறிவு சொரூபத்தில் “காய்ச்சின இரும்பு கிரகிக்கின்ற நீர் போல” இறந்த பின் ஜன்மிக்காது.

தாத்பர்யம்: சீவன் முத்தருக்கு தத்துவ ஞானம் வந்தவுடன் காரண சரீரம் நீங்கும். பிராரத்த கர்மம் புசித்து தீர்த்தவுடன் ஸ்தூல சரீரம் நீங்கும். அப்போது சூட்சும சரீரம் பரிபூரண சொரூபத்தில் லயித்து நீங்கும்.

8 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

//த்வைத, விசிஷ்டாத்வைதம் போல அல்லாது அத்வைத அப்ரதிபந்த அபரோட்ச ஞானம்//


இந்தப் பகுதி கொஞ்சம் வேறுபட்டுத் தெரிகிறதே:-)

த்ரிதேக சுத்தி வரை சரி. ஒண்ணு ஒண்ணாக் கழண்டப்புறம், ஜீவன் முக்தர் ப்ரம்மத்தோடு ஐக்கியமாயிடுவார்ன்கிறது, தியரி லெவலுக்குச் சரியா இருக்கலாம். ஆனா, இந்த விளக்கம், நிறைய கேள்விகளுக்கு சமாதானம் சொல்ற மாதிரி இல்லையே, அண்ணா!

ஞானிகள், அவதாரபுருஷாள், இப்படி நிறையப் பேருடைய விஷயத்திலே இது பொருந்துவதாகக் காணோமே. உதாரணத்திற்கு, ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகள் சரித்ரத்தை எடுத்துப் பார்த்தால், அவர் ஆஞ்சநேயனாக, பீமனாக, வ்யாசராஜ் சுவாமிகளாக தன்னுடைய முந்தைய பிறவிகளைத் தொட்டுச் சொல்வதோடு, இன்னும் எழுநூறு வருஷம் பிருந்தாவன வாசம் என்று சொல்லியிருப்பது, இந்த ஜீவ-பிரம்ம ஐக்கிய தியரிக்குப் பொருந்தலையே?

இதே மாதிரி நிறைய மகான்களுடைய வரலாற்றைப் படிக்கும் போது கூட, இரண்டறக் கலப்பு என்பது ஒரு தியரி என்ற அளவிலேயே நின்று விடுகிறதே?

திவாண்ணா said...

அன்பின் கிருஷ்னமூர்த்தி,
தியரிதானே பாத்துகிட்டு இருக்கோம்? நாமோ எல்கேஜி லெவெல்லே இருக்கோம்! ஏதோ கொஞ்சம் ஆன்மீக நாட்டம் இருக்கு. அனுபவம் இன்னும் நிறையவே வரணும். நீங்க காட்டுகிற உதாரணத்தை பாருங்க.ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகள் எவ்வளொ பெரிய மகான். அவர் அனுபவத்திலே எவ்வளவு நமக்கு இருக்குன்னு பார்க்கிறப்ப எனக்கு அதை பத்தி பேச கூட தயக்கமா இருக்கு.

இருந்தாலும் பல மகான்கள் பல காலகட்டங்களிலே தாங்கள் அனுபவிச்சதை சொல்லி போயிருக்காங்க. தான் சரின்னு உணராததை , அனுபவிக்காததை சொல்லலை.
ராகவேந்திரர் சொன்னது த்வைதம்தானே? அவர் எப்படி பிரம்ம ஞானி ஆக முடியும்?
எந்தரோ மகானு பாவலு.நமக்கு மேலே அதிக ஆன்மீக முன்னேற்றம் கண்டவங்க.அவரவர் கண்ட நிலையில் இருந்து உண்மையாக கண்டதை சொல்லிட்டு போய் விட்டாங்க. ஆனா எல்லாருமே அத்வைதிகள் இல்லை; பிரம்ம ஞானிகள் இல்லை. அவர்கள் வழ் நாள் முடிவிலே அவர்களோட அபிமான ஈஸ்வரனின் லோகத்துக்கு போய் இருக்கலாம்; பிரலயம் வரை பொறுத்து திருப்பி பிறவி எடுக்கலாம். அல்லது அவரோட ஈஸ்வரனே அவரை ஏதேனும் சத் காரியங்கள் செய்யச்சொல்லி திருப்பி இங்கே அனுப்பி வைக்கலாம்.

இப்படி இருக்கிறவங்க பிரம்ம ஞானம் அடைஞ்சவங்க இல்லே. பிரம்ம ஞானம் அடைஞ்சவங்க - சென்றவர் மீளார். இதிலே அத்வைத நூல்களோ வேதாந்தமோ திடமாவே இருக்கு.

இந்த விஷயங்களிலே நிறையவே சிந்தனை செய்யவும் இடமிருக்கு. நம்மால் முடிஞ்சது அவ்வளோதான்.அனுபவம்? வரணும். அவன் அனுக்கிரகம் செய்யணும்.

கிருஷ்ண மூர்த்தி S said...

த்வைதி, அத்வைதி, விசிஷ்டாத்வைதி மூணு தரப்புமே ஒத்துக்கற, வ்யாஸ பகவானுடைய கதையிலேயே ஒரு திருஷ்டாந்தம் இருக்கே அண்ணா!

வ்யாசருடைய மகன் சுகர். சுகருக்கு, பிரம்மத்தைப் பத்தி உபதேசம் பண்ணினாராம் வியாசர். கேட்ட விஷயத்தைக் கற்பூரம் மாதிரி கப்புன்னு புடிச்சிண்டாராம் சுகர். ப்ரம்மத்தொடேயே ஒன்றினாராம், மகனைக் காணாமல், வியாசர், சுகா, எங்கே இருக்கேன்னு தேடித் தவிச்சப்ப, மரம், செடி, கொடி, ஊர்வன, பறப்பன, எல்லாமே "தந்தையே, நான் இங்கே தான் இருக்கேன்"னு பதில் சொல்லித்தாம்.

இந்தக் கதையை வச்சுப் பாத்தா, இரண்டறக் கலத்தல் என்பது திரும்பி வராத நிலைன்னு சொல்ல முடியலை.

இதே மாதிரி, ஒரு சமயம் ஒரு குளத்துப் பக்கம் வியாசர் நடந்து போகும் போது, குளிச்சிண்டிருந்த பெண்கள் எல்லாம் தலைப்பை மூடி மறைச்சு நின்னாளாம்; அதே நேரம் சுகப் பிரம்மம் அங்கே வந்த போது அதே பெண்கள் எல்லாம் இயல்பா இருந்தாளாம்.

இந்த கதையில் உணரப்படுவது, பிரம்ம நிலை என்பது விகற்பமற்ற நிலை தானே தவிர, அதைத் தவிர வேறெதுவும் இல்லாத நிலைன்னு சொல்ல முடியலையே!

அங்கே இங்கேன்னு சுத்தித் திரிஞ்ச நாட்களில், ஒரு அனுபவம் -அதில் தெரிஞ்சிண்டது என்னன்னா, ஜகத் சிருஷ்டி இந்த விளையாட்டிலே, தனியா ஒருத்தர் மட்டுமே அனுபவதீதம் பெற முடியாது, எல்லோருக்கும் அது கிடைக்கிற வரைக்கும், ஜீவன் முக்தரானாலும், இங்கே திரும்பி வந்து சில வேலைகளைச் செய்து தானாக வேண்டியிருக்கும். மற்றவர்களைக் கரை சேர்க்கும் பணியை, இவர்கள் செய்து வர, திரும்பிவருகிறார்கள் அப்படிங்கிற மாதிரி. சுவாமி விவேகானந்தர், புத்தர் இந்த இரண்டு பேர் சரித்திரத்தையும் படிச்சுப் பாக்கும் போதே, தனிப்பட தங்களுக்கு மட்டும் மோக்ஷம் என்பதை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளின கதையும் தெரிய வருமே!

அதே மாதிரி, முழுக்க முழுக்க த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம்னு கலப்பில்லாத அனுபவமே கிடையாதுன்னும் தோன்றுகிறதே? அத்வைத சித்தாந்தத்தை ஸ்தாபித்த ஆதி சங்கரர் கூட, அத்வைதம் ஒன்றில் மட்டுமே, முழு நம்பிக்கையோடு இருந்த மாதிரி தெரியவில்லையே?

ஒண்ணிலே, மத்த ஒண்ணும், இரண்டும் ஏதோ ஒரு நிலையில் கலந்திருப்பதைப் பெரியவர்கள், பல இடங்களிலே சொல்லிவைத்திருக்கிறார்களே, அண்ணா!

என்ன சொல்கிறீர்கள்?

திவாண்ணா said...

அன்பின் கிறுஷ்ணமூர்த்தி,
வியாசர்கிட்டெ சுகர் போய் உபதேச ச்ய்யச்சொன்னார். அவரும் பல விஷயங்களை சொல்ல இதெலாம் ஏர்கெனெவே தெரியுமே வேற சொல்லுங்கன்னார் சுகர். பாத்தார் வியாசர். உனக்கு சரியான ஆசாமி ஜனகர்தான். அவர்கிட்டே போன்னார். அங்கே போய் ஏழு நாள் அரண்மனை வெளியே காத்து இருந்தார் சுகர். அப்புறமா ஜனகர் அவரை கூப்பிட்டு அனுப்பி உபதேசம் செஞ்சார். அதன் பின் ஜீவன் முத்தராய் ஆயிரம் வருஷம் இருந்தார் சுகர்.
இது யோக வாசிட்டத்திலே வருது.
http://www.sacred-texts.com/hin/yvhf/yvhf05.htm

அல்லது http://tinyurl.com/pj4k39

....Thou hast known what shouldst be known, but still thou asketh me—although thy father has instructed thee aright. The enlightenment we have given to thee is the real one. Atma alone, is that which is everywhere, just as the ether pervades all space and atmosphere. Wisdom is bound by naught else but its own thought. Freeing thyself from sensual thoughts, is freeing thyself from bondage. Thou hast clearly realized the Atmic wisdom for thou hast given up all longing for sensual objects. Thou hast by thine own efforts, through the higher mind, reached the highest Brahmic State; thou hast become a Jivanmukta (the state of emancipated embodiment). But one thing thou hast yet to accomplish—that of giving up the delusion of the illusion which has arisen through doubt in thy mind. When thou hast accomplished this, then thou wilt be free.' King Janak thus initiated Rishi Suka into the Atmic mysteries,

p. 38

where he acquired the highest state of wisdom, and was freed from all misery, doubt, death and rebirth. He lived for 1000 years, then merged into that higher wisdom, which is Brahman.

திவாண்ணா said...

ki.muu
நீங்க எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் முழுக்க பதில் சொல்லலை. நேரம் இல்லை. நெரூருக்கு கிளம்ப்பிக்கொண்டு இருக்கேன். வர 4 நாளாகும். போஸ்ட் ஷெடூல் பண்ணியாச்சு. திங்கள் வந்துதான் மேற்கொண்டு.
:-)

மெளலி (மதுரையம்பதி) said...

கிருஷ்ணமூர்த்தி சார்,

ராகவேந்த்ர ஸ்வாமிகளும் அவரது ப்ராராப்த கர்மா (நல்ல கர்மாகள்) அதிகமாக இருப்பதால்தான் 700 வருஷங்களுக்கு பிருந்தாவனப் வாசம், அதன் காரணமாகவே இன்றும் அங்கு செய்யும் நியாயமான பிரார்த்தனைகளை அவர் தம் நல்ல கர்மாக்களைக் கொண்டு பக்தர்களுக்கு அனுக்ரஹிக்கிறார் என்று கூறிக் கேட்டிருக்கிறேன். அதாவது அவரது நல்ல கர்மாவின் பலன்களையும் துறப்பதற்காக பிருந்தாவனத்ஹ்தில் இன்ன்னும் ஜீவிதராக இருக்கிறார் என்கிறார்கள்.


//அதே மாதிரி, முழுக்க முழுக்க த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம்னு கலப்பில்லாத அனுபவமே கிடையாதுன்னும் தோன்றுகிறதே? அத்வைத சித்தாந்தத்தை ஸ்தாபித்த ஆதி சங்கரர் கூட, அத்வைதம் ஒன்றில் மட்டுமே, முழு நம்பிக்கையோடு இருந்த மாதிரி தெரியவில்லையே?//

ஆதி சங்கரர் என்னைப் போன்ற சாதாரணர்களுக்கு அத்வைத பாவம் ஏற்படும் வழிகளாக பல படிகளை ஏற்படுத்தியிருக்கிறார். அதன் காரணமாக அவர் அத்வைதத்தை மட்டும் நம்பிக்கையில்லாதவர் என்று தோன்றுகிறதோ என்னவோ?.

த்வைத/வசிஷ்டாத்வைத ஆசார்யார்களுக்கும் முந்தயவர் ஆதி சங்கரர். அப்படியிருக்கையில் அவருக்கு அத்வைதத்தில் சந்தேகம் இருந்திருப்பின் மற்ற இரு கோட்பாடுகளில் ஒன்றை திடமாக உபதேசித்திருக்கலாமே?, ஏன் அத்வைதத்தை மட்டுமே சொல்லிச் சென்றிருக்க வேண்டும்?.

ஏதோ எனக்கு தோன்றியதைச் சொல்லியிருக்கேன். தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

Kavinaya said...

உள்ளேன் ஐயா.

திவாண்ணா said...

அட்டென்டன்ஸ் லே மார்க் பண்ணிட்டேன்!
:-))